Leela Naadaga Sai
()
About this ebook
என்ன லீலா நாடகம் நடத்துகிறான் இந்த ஸாயி?
முகவுரை இல்லாமலே முதலிரு பதிப்புகள் வெளிவந்த நூலுக்கு இம்மூன்றாம் பதிப்பில் அப்படியொன்று எழுத வேண்டியிருப்பதே 'லீலா நாடக' என்ற அடைமொழியின் மெய்ம்மைக்குச் சான்றுதான். நிகழ் பதிப்புக் குறித்தே நடந்த அவனது விசித்திர விளையாடலைப் பற்றிய குறிப்பே இந்நூல்.
அந்த ப்ரேம ப்ரஸாதத்திற்குத்தான் இத்தனை லீலா நாடகம் அவன் போடுவதும்! அதனை அருந்தி, ஆனந்தத்தில் அவனோடு கண்ணனுடன் ராதையாக ஊஞ்சல் நாடகமாட வருக வருகவே!
Related to Leela Naadaga Sai
Related ebooks
Appavin Radio Rating: 0 out of 5 stars0 ratingsTheeratha Vilayattu Sai Rating: 0 out of 5 stars0 ratingsNaan Naanaga... Rating: 5 out of 5 stars5/5Irumbu Kuthiraigal Rating: 0 out of 5 stars0 ratingsKaaranamilla Kaariyangal Rating: 0 out of 5 stars0 ratingsMaha Periyavaal Virundhu Rating: 0 out of 5 stars0 ratingsSabash! Parvathi! Rating: 0 out of 5 stars0 ratingsGomathiyin Kaadhalan Rating: 0 out of 5 stars0 ratingsSeenupayal Rating: 0 out of 5 stars0 ratingsRangoon Periyappa Rating: 0 out of 5 stars0 ratingsUpasaram Rating: 5 out of 5 stars5/5Soundarya... Rating: 0 out of 5 stars0 ratingsAnjali Rating: 0 out of 5 stars0 ratingsYen? Rating: 5 out of 5 stars5/5Aasai Oonjal Rating: 0 out of 5 stars0 ratingsJayakanthan Munnuraigal Part - 1 Rating: 0 out of 5 stars0 ratingsBhagavan Baba Rating: 0 out of 5 stars0 ratingsCherryblossomum Innum Sila Pookkalum Rating: 0 out of 5 stars0 ratingsPaarkadal Rating: 0 out of 5 stars0 ratingsEnna Thavam Seitheno! Rating: 0 out of 5 stars0 ratingsTagore Darisanam Rating: 0 out of 5 stars0 ratingsSwami Part - 1 Rating: 0 out of 5 stars0 ratingsBharatha Dharisanam India Payanakathai Rating: 0 out of 5 stars0 ratingsArputham Arubathu Rating: 0 out of 5 stars0 ratings100 Vaarthai Kathaigal Rating: 0 out of 5 stars0 ratingsCelluloid Chozhan! Rating: 0 out of 5 stars0 ratingsChinmayanandarin Sirukathaigal Rating: 0 out of 5 stars0 ratingsShirdi Baba Rating: 0 out of 5 stars0 ratingsJagam Pugazhum Jagathguru Rating: 0 out of 5 stars0 ratingsMeendum Sankara Vijayam Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Leela Naadaga Sai
0 ratings0 reviews
Book preview
Leela Naadaga Sai - Ra. Ganapathy
https://www.pustaka.co.in
லீலா நாடக ஸாயி
Leela Naadaga Sai
Author:
ரா. கணபதி
Ra. Ganapathy
For more books
https://www.pustaka.co.in/home/author/ra-ganapathy
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
முகவுரை
என்ன லீலா நாடகம் நடத்துகிறான் இந்த ஸாயி?
முகவுரை இல்லாமலே முதலிரு பதிப்புகள் வெளிவந்த நூலுக்கு இம் மூன்றாம் பதிப்பில் அப்படியொன்று எழுத வேண்டியிருப்பதே 'லீலா நாடக' என்ற அடைமொழியின் மெய்ம்மைக்குச் சான்றுதான். நிகழ் பதிப்புக் குறித்தே நடந்த அவனது விசித்திர விளையாடலைக் குறிப்பிட்டு முகவுரை எழுதாமல் இருக்க முடியுமா?
சித்திரங்கள் தொடர்பாகவே முக்கியமாக இந்த விசித்திரம் நடந்திருக்கிறது.
'ஸாயிக் கண்ணன்' என்ற 11ம் அத்தியாயத்தின் முடிவுப் பகுதியில் அவரே அவரை நோக்கிக் கொள்வது போன்ற இரு படங்களை இசைத்த முகப்புச் சித்திரம் பற்றி நிறையச் சொல்லியிருக்கிறேன். முன் பதிப்புகளில் வெளியான அவ்விரு படங்களும், அதோடு மேலட்டைச் சித்திரமான ஜூலாவில் (ஊஞ்சலில்) அமர்ந்த பாபா படமும், இப்போது கிடைக்கவில்லை. ஸாயிக் கண்ணக் கள்ளனின் லீலைதான்! அவற்றுக்காகப் பெரு முயற்சிகள் செய்து வந்தோம். அவற்றிலும் ஜூலாப் படங்கள் பல உண்டாதலின் அவற்றிலொன்று சுலபமாகக் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில், தம்மைத் தாமே நோக்குவது போன்ற பிரமிப்பை ஊட்டும் இரு அபூர்வப் படங்களைப் பெறுவதிலேயே அதிகக் கவனம் செலுத்தி வேட்டை தொடங்கினோம். அப்போதுதான் திருப்திகரமானதொரு ஜூலோப் படம் கிடைப்பதுங்கூட அவ்வளவு சுலபமல்ல என்று தெரிந்து கொண்டோம்! எங்களை ஊசலாடவிட்டு நாடகத்தை இப்படி விஸ்தரிக்கிறானே என்று எண்ணியபடி ஊஞ்சல் பாபா படத்துக்காக என்னிடமுள்ள ஸாயி நூல்கள், நிழற்படத் தொகுப்பு ஆகியவற்றை மீள மீளப் புரட்டிக் கொண்டிருந்தோம். சலித்துப் போகுமளவுக்குச் சல்லடை போட்டுச் சலித்தோம். அப்போதுதான், 'போதும் அழ வைத்தது' என்று நாடக ஸூத்திரதாரி நினைத்திருக்கிறான்! 'தேடிய படம் கிடைத்து விட்டதாக்கும்!' என்கிறீர்களா? அப்படி ஆகியிருந்தால் அதில் விசித்ரம் என்ன இருக்கிறது? தேடாத படம்தான் கிடைத்தது! ஆம், நிகழ் பதிப்பின் முகப்புப் படமாகத் தம்மைத் தாமே நோக்கிக் கொள்ளும் இரு ஸாயிக் கோலங்களில் ஒன்றுதான் அது! ஆனால், மேலும் விசித்ரம் அது கிடைத்த அந்தச் சமயத்தில், 'தேடாமலே இப் புதையல் கிடைத்திருக்கிறதே!' என்பதும் தெரியவில்லை! தனிப்பட்ட முறையில் அந்தப் படம் கொள்ளையழகாக இருப்பதை மட்டும் வியந்து கொண்டு, அடுத்த புத்தகத்தைப் புரட்டினால், ஆஹா, அதிலேயே முன் படத்துக்கு அற்புதமாக ஸிமெட்ரிப் பொருத்தம் சேர்க்கும் இன்னொரு படம்! விஷம லீலைக்காரன் பிரேமை லீலைக்காரனாகி, அவ்விரு படங்களும் அருமையாக ஒன்று சேரும் என்று பளிச்சென அறிவில் தட்டச் செய்தார்! 'முற்பதிப்பின் இரு கோலப் படம் கிடைக்காவிட்டால் என்ன? அதே போல வேறோர் இணை கிடைத்துவிட்டதே!' என்ற ஆசுவாஸம் பெற்றோம். எதிர்பாராமல், 'அகஸ்மாத்தாக' எனுமாறு இப்படிக் கிடைத்ததில் நாடக நாதனிடம் நன்றியின்பம் பெருகியது. 'அதே போன்ற வேறோர் இணையா இது? இல்லை. அதை விடவும் சிறப்பானது' என்று பழைய புதிய ஜோடிகளைப் பார்ப்போர் மகிழுமாறு இணையிலா அருள் காட்டியிருக்கிறான்!
நூலின் பதினோராம் அத்தியாயத்தில் வரும் வர்ணனை முற்பதிப்பு இணைச் சித்திரங்கள் குறித்ததே.
ஆயினும் அதுவே நிகழ் பதிப்புப் படங்களுக்கும் மிகப் பெரும்பாலும் பொருத்தமாயிருக்கிறது. அதற்கும் இதற்கும் இடையேயுள்ள வித்தியாஸங்களோ வெகுவாக வரவேற்கத்தக்கவையாகவே உள்ளன. அப்போதைய இணையில் இடப்புறமுள்ளதிலேயே கோபால லக்ஷணம் முழுதும் இருந்ததை எழுதியிருக்கிறேன் (பக். 159). இப்போதோ இரு புறக் கோலங்களிலுமே அந்த லக்ஷணம் பொங்குகிறது. இரண்டிலுமே குறும்பு (mischief), ராஜகம்பீரம் (majesty) இரண்டும் இருந்தாலும் ஒன்றில் முன்னதும், மற்றதில் பின்னதும் தூக்கலாக இருப்பதாக 160ம் பக்கத்தில் காண்பது 'பூர்வ அவதாரம்' குறித்தது. 'புது அவதாரத்திலோ இரண்டிலுமே இரு பாங்கும் பொலிகின்றன! ஆயினும் முன்னிலும் அதிகக் கிருஷ்ணத்துவம் காட்டுவதாக இரு சித்திரங்களிலுமே குறும்புதான் தூக்கலாயிருக்கிறது. 'மஹாராஜ மஹத்துவம்', 'அழுத்தம் என்றெல்லாம் அப்போதிருந்ததை வைத்து எழுதியிருப்பதும் இப்போது குறைந்து, விநோதக் களியின் லேசு ஸௌக்கியமே அதிகம் கொழிக்கிறது. எங்களைத் திணற வைத்துவிட்டு, அப்புறம் எத்தனை லேசாக இந்த ஜோடிப் படங்களைக் காட்டிக் கொடுத்திருக்கிறான்!
விசித்திரம் தொடரவேண்டுமே! அதனால், ஜூலாப் படத்துக்கு ஒரு நிழற்பட நிலையத்தில் ஏற்பாடு செய்ய வைத்தான். ஏற்பாட்டை ஓரளவு பாடாக மாற்றினான்! அப்போது ஒரு ஸாயித் தம்பி ஏற்கெனவே நாங்கள் மூவர் சல்லடை போட்டுத் தேடிய ஒரு நூலிலிருந்தே அலாக்காக ஓர் அரிய ஜூலாப் படத்தை எடுத்துக் கொடுத்தார். அதற்குப் பின் ஸூத்திரதாரி நிழற்பட நிலையத்திலிருந்தும் படங்கள் கிடைக்கச் செய்தார். அவற்றைத் தேர்வு செய்யாமல், பல்லாண்டுகளாக என்னிடமே இருந்த புத்தகத்தில் கிடைத்த படத்துக்கே வோட்டுப் போடுவதற்காகத்தான்! நிகழ் பதிப்பின் மேலட்டையில் காணும் இப்படமும் முற்பதிப்புப் படத்தைவிடச் சிறப்பாக லீலையின்பத்தைப் பிரதிபலிக்கிறது. காலம் செல்லச் செல்ல நமக்குத் தனது லீலானந்தத்தை ஐயன் மேன்மேலும் சிறப்பாக ஊட்டப் போகிறான் என்பதற்கே இதை ஸங்கேதமாகக் கொள்கிறேன்.
***
லீலையில் படுத்தல் அம்சத்திற்குப் பின்பே (நமக்கும் புரிகிற விதத்தில்) பிரேமை வந்ததை மேலே கண்டோம். அது மட்டுமில்லை. தனது பிரேம லீலை மட்டுமே ஸ்வச்சமாகப் பொலியுமாறு, இந்நூலை உருவாக்கித் தந்திருப்பவர்களை அவன் அனுப்பி வைத்திருக்கிறான். அதைச் சொல்லவும் முகவுரை எழுதித்தானே ஆகவேண்டும்?
நூலில் தொடர்பு கொண்ட அனைவருக்கும் ஸ்வாமியே முகமன் கூறிப் பிரமுகராக்கிவிட்டதாகவும், அதன்பின் அவர்களைக் குறிப்பிட்டுக் காட்ட ஒரு முகவுரை தேவையில்லை என்றும் முதலத்தியாயத்தில் சொல்லியிருக்கிறேன். முதற்பதிப்பு குறித்து இவ்வாறு எழுதியதுதான் இப் பதிப்பிலும் இடம் பெறுகிறது. இப்போது தொடர்பு கொண்டோருக்கும் ஸ்வாமியின் அன்பு முகமன் நிச்சயமாக உண்டுதான். அதோடு, முன்பு நூலோடு தொடர்பு கொண்டிருந்தவர்கள் எனக்கும் நெருக்கமானவர்களாதலால் அவர்களைப் பிரித்து வைத்துப் பெயர் சொல்ல அவசியமில்லை என்றும் கண்டிருக்கிறேன். அதனாலேயே அப்போது நூலைப் பதிப்பித்து உதவிய 'கலைஞன்' நிறுவனத்தாரைப் பெயர் கூறாது விட்டேன். இப்போது பதிப்பினை மேற்கொண்டுள்ள திவ்ய வித்யா டிரஸ்டினரோ அவர்களைவிடவும் நெருக்கமானவர்கள். அவ்வாறிருந்தும் ஏன் முகவுரை எழுதிப் பெயர் குறிப்பிடுகிறேன் எனில், இந்த அறக்கட்டளையே ஸ்வாமியின் திருவுளப்படி அல்லவா அமைக்கப்பட்டது? அதைக் குறிப்பிட வேண்டாமா? அதற்காக முகவுரை வேண்டாமா?
வியாபார நோக்கமின்றி, முடிந்தமட்டும் குறைந்த விலையில், ஆத்ம ஸம்பந்தமான நூல்களை வெளியிடுவதற்கென்றே ஸ்வாமியின் பரிபூர்ண ஆசியுடன் 1990ல் 'திவ்ய வித்யா' தொடங்கப்பட்டது. அந்த ஆசிச் சக்திதான் என்னே? டிரஸ்ட் விஷயம் கேள்விப்பட்டவுடனே சுமார் ஐம்பது நல்லன்பர்கள் அவர்களில் பெரும்பாலோர் ஸாயி பக்தர்கள், இதயபூர்வமாக நன்கொடை அள்ளி அளித்து ஐயனது ஆசியை நடைமுறைக் காரியமாக்கித் தந்துவிட்டனர்! அதைக் குறிப்பிடாவிடில் நன்றி மறந்ததாக அன்றோ ஆகும்!
டிரஸ்ட் நிறுவப்பட்டதும் முதலில் என் 'ஸ்வாமி' நூலும், அதன் ஆங்கிலத் தழுவலான Baba: Satya Saiயும் பிரசுரிக்கப்பட்டன. இப்போது 1994 ஸ்வாமி ஜயந்தி சேர 'அன்பு அறுபது'ம், இந்த 'லீலா நாடக ஸாயி'யும் வெளியிடப்படுகின்றன. அன்று பணிபுரிந்த பெரியோர்களான அறங்காவலர்கள், இன்று பணிபுரியும் இளரத்தம் அதிகம் கொண்ட, அறங்காவல் குழுவினர் யாவரும் எவ்வித சுய ஆதாயமுமின்றி ஸ்வாமிக்கு ஸேவையாகவும், எனக்கு அன்புச் சகாயமாகவுமே சீரிய தொண்டாற்றுவதைக் குறிப்பிட ஒரு முகவுரை எழுதாது விடலாமா? குறிப்பாக, பெயர் சொல்லாவிடினும், அவர்களில் உறவில் என் 'ஒன்று விட்ட தம்பி' உணர்வில் நேர்த் தம்பியைவிட நெருக்கமாகி முழு மூச்சுடன் பதிப்புப் பொறுப்பை ஏற்று நடத்திக் கொண்டிருப்பதைச் சொல்லாதிருந்தால் என் அன்புக் கடமையில் தவறிவிட மாட்டேனா?
அச்சிட்டுக் கொடுப்பவர்கள் இப்படியுங்கூட உதவுவார்களா என்று வியக்கும்படிச் செய்துள்ள 'மாதவ சத்ரா' நிறுவனத்தினரிடமும் மனமார நன்றி பாராட்டி, கையார வாழ்த்தி எழுதாதிருக்கலாமா? பல்லாண்டுகளாக 'டயான்டி'ல் இருந்த நூலை இந்த 1994 ஜயந்தியின் போதுதான் அவஸர அவஸரமாகத் தயாரிக்க விஷம லீலைக் கை நிமிண்டியது! அதனால், 'பதினொன்றாவது மணியில்' என்பார்களே, அதைவிடவும் தாமதமாகப் பதினொன்றரையாவது மணியில்தான் மாதவமுத்திரா நிறுவனத்தினரிடம் அச்சிடும் பொறுப்பைக் கொடுத்தோம்! பிரேம லீலைக் கைதான் இவர்களுக்கு முத்திரை வைத்து எங்களிடம் கொண்டு விட்டிருக்கிறது! இல்லாவிடில் இத்தனை ஸாயிஸ் பீடில் பணி முடித்திருக்க முடியுமோ? காரியத் திறன் மட்டுந்தானா அவர்கள் காட்டியுள்ளனர்? அவர்களது தொண்டுப் பாங்கையும், அன்பு உள்ளத்தையுங்கூடக் காட்டியுள்ளனர். லாப நோக்கு இன்றி, தங்கள் சொந்தப் புத்தகத்தைப் போலல்லவா 'லௌகிக'த்தை லோக மட்டத்திலிருந்து ஒரு தூக்குத் தூக்கியிருக்கிறார்கள்?
அப்புறம், அந்த பிரேம லீலைக் கரத்தின் மற்றொரு கருவியான லேஸர் அச்சுக்கோப்பாளர்களைச் சொல்லுங்கள். முதலில் வேறோரிடத்தில் அச்சுக் கோத்ததை ரத்து செய்யும்படியாகி, அந்தப் பதினொன்றையாவது மணியில்தான் எல்.கே.எம். கம்ப்யூடர் பிரின்ட்ஸை அணுகினோம். 'பதினொன்றே முக்கால் மணிக்கு வந்தாலும் பணியைச் செவ்வனே முடித்துத் தந்திருப்பார்கள்' என்று பாராட்டுமாறு அவர்கள் எத்தனை பொறுப்புடனும் விச்வாஸத்துடனும் வியக்க வைக்கும் விரைவுடன், அதே போதில் செய் நேர்த்தியுடன், வேலையைப் பூர்த்தி செய்துவிட்டனர்? அதை முகவுரை எழுதிக் குறிப்பிடாதிருக்க இயலுமா?
படங்களை நல்ல முறையில் அமைத்துத் தந்தவர் மணியம் செல்வன் என்பதையும் குறிப்பிடாமலிருக்கலாமா?
***
நூல் தொடர்பான பிரேம லீலையைச் சொன்னேன். நூலாசிரியருக்கும் லீலா லோலன் அதை வெள்ளமாகப் பெருக்கிக் கொடுத்திருக்கிறான். அந்த வெள்ளத்தைத் துளியளவேனும் குறிப்பிடாமல் விடலாமோ? 441ம் பக்க அடிக் குறிப்பில் நான் அட்வான்ஸாகச் செய்துள்ள நமஸ்காரத்துக்கு அவன் மெய்யாலுமே பாத்திரனாகி, இன்று மாற்றார் என்றே யாருமில்லாமல் அன்பர் வட்டத்தை ஆக்கிக் கொடுத்திருக்கிறான். நூலில் கூறியுள்ள அன்பர்களோடு இந்தப் பன்னிரண்டு இடையாண்டுகளில் இன்னும் அநேக ஹ்ருதய பந்துக்களையும் பிரஸாதித்திருக்கிறான்.
***
அந்த ப்ரேம ப்ரஸாதத்திற்குத்தான் இத்தனை லீலா நாடகம் அவன் போடுவதும்! அதனை அருந்தி, ஆனந்தத்தில் அவனோடு கண்ணனுடன் ராதையாக ஊஞ்சல் நாடகமாட வருக வருகவே!
சென்னை
13.11.94
ரா. கணபதி
பொருளடக்கம்
1. எப்ப வந்தாச்சு?
2. உருவாய் அருவாய்... குருவாய் வருவாய்!
3. அம்புலி பாபா வா, வா!
4. பால் ஸாயி
5. பாபா ஒரு பாப்பா!
6. ஈச்வராம்பாஸுத, ஸ்ரீமந்!
7. பத்ரிநாதர் பாலகாண்டம்: பர்த்திநாதர் பகர்ந்தது
8. சிவ ஸாயி சங்கர போல்!
9. நாற்பத்து நாலு
10. ஸாயிராம்
11. ஸாயிக் கண்ணன்
12. ப்ரேமாவதாரி
13. கோபப் பிரஸாதம்
14. அளவைக்கு அடங்காத அருள் ஆழி
15. ஸாயி நல்ல கப்பல்காரன்
16. சிரித்துக் குலுங்கிடச் செய்திடுவான்
17. வைத்யநாதன்
18. போதை நீக்கும் போதகன்
19. காமம் அகற்றிய தூயன் அவன்
20. ஜீவாமுதுக்கே நோவா?
21. ஸாயி ஸஹாயி
22. அச்சம் தவிர்த்தாளும் அச்சன்
23. இடிதாங்கி
24. குடிதாங்கி
25. ரொம்ப ஸந்தோஷம்!
1. எப்ப வந்தாச்சு?
ஆனந்தமாயிருக்கிறது ஸ்வாமீ!
மறுபடியும் உன்னைப் பற்றி எழுதுகிறேன் உன் அநுமதியால், அநுக்ரஹத்தால்.
இதைவிட ஆனந்தம் என்ன உண்டு?
கன்றுக்குட்டி தாய்ப் பசுவிடம் வந்து உராய்ந்து நிற்கிறது. கன்றுக்கு மட்டுமா அதில் ஆனந்தம்? காமதேதுத் தாய் நீயும் உவகை கொள்கிறாய்.
வரிகுழல் ஆட, விரி நயனத்தில் பிரேமை வரியோட, வெற்றிலைவாய் திறந்து,
¹ உனக்கே உரிய, எப்ப வந்தாச்சு?
கேட்டு வரவேற்கிறாய்.
'சமர்த்தாக என்னிடம் வந்துவிட்டாயே!' என்கிற ஸந்தோஷமும் பாராட்டும் அந்த இரு வார்த்தைகளிலேயே தொனிக்கிறது.
அவ்வளவுதானா? எப்ப வந்தே?
என்னாமல் எப்ப வந்தாச்சு?
என்று ‘ஆச்சு' போடுவதில் தாயே குழந்தை மாதிரி ஆகிறாய்.
அந்த 'ஆச்சு'விலேயே பரம தாத்பரியமும் உள்ளிலகுகிறது. உன்னிடம் வந்தவுடனேயே நாங்கள் 'ஆகி' விடுகிறோம் அதாவது, அற்றுப் போய் உன் மயமாகி விடுகிறோம் என்றும் தொனிக்கிறது.
²ஸ்வாமி தாம்பூலம் தரித்து வந்த காலத்தில் எழுதியது.
ஆயினும் நீ மட்டும் தனியொன்றாய் நின்றால் லீலை ஏது? பிரேமையைப் பொழிவதற்கு இடமேது?
அதனால் தாய்ப் பசுவான உன்னிலிருந்து, உன் தன்மைகளோடேயே பிறந்த கன்றுகளாயினும் ஒரேயடியாக ஒன்றி விடாமல் ஒட்டி நிற்கிறோம். ஆனந்...தமாக உன் அனந்த லீலைகளை, அலகிலா விளையாடல்களை ஆர ரஸித்த வண்ணம்.
நீ புனையும் லீலா நாடகத்தில் ஏராள அங்கங்களைத் தொகுத்து ஸ்வாமி
என்ற உன் சரிதமாக, எங்கள் சரிதமாக, கருணையின் சரிதமாக மாலையாக்கி 1976 நவம்பர் தொடக்கத்தில் பூர்த்தி செய்து உனக்குச் சூட்டினேன்.
அதன்பின் 1979 ஜூலை வரை இரண்டரை ஆண்டு இடைவெளியில் நான் அறிய வந்த உனது புதிய பல லீலைகளைப் புகலுவதற்காக இப்போது உன் பக்கத்தே என்னை வருவித்துக் கொண்டிருக்கிறாய். உன் ஸங்கல்பத்தாலேயே உன்னிடம் வருவோரையும் தன்னால் வந்ததாக உயர்த்தி சிலாகிக்கும் சீலத்தால், எப்ப வந்தாச்சு?
கேட்பதுதானே உன் வழக்கம்? அவ்விதமே இப்போதும் வினவுகிறாய்.
வந்தது இருக்கட்டும். இனி என்றும் உன்னை நீங்காது தங்குவதாகட்டும்
என்று மனத்தில் பிரார்த்தித்துக் கொண்டே உள்மனத்தையும்தான் நீ அறிவாயே! இந்தப் பூக் குச்சத்தை உன்னிடம் ஸமர்ப்பிக்கிறேன்.
முன்னே ஸ்வாமி
யை நீண்ட நெடும் நிலமாலையாக உன் கேசாதிபாதம் சூட்டினேன். உன் லீலா நாடகங்களை ஏராளமானவர் அறிந்து உயர்வு பெற வேண்டும் என்ற கருணையால், இனி அவ்வளவு பெரிய நிலமாலையாக இன்றி ஒரு சில ஆண்டுகளுக்கு ஒரு முறை சிறிய மலர்க் குச்சங்களாக நூல்கள் எழுத வேண்டும் என்ற உன் திருவுளம் அறிந்து இப்போது இந்த திருவிளையாடற் கொத்தினை உனக்குக் காணிக்கை ஆக்குகிறேன்.
ஸ்வாமி
எழுதியதற்குப் பின் நீ புரிந்த புது லீலைகள் பலவற்றை நான் அறிந்தது மட்டுமல்ல; அதில் குறிப்பிட்டுள்ள விஷயங்களிலேயே கூடுதலாகவும், சற்றே மாறுதலாகவும் சில பல விவரங்களை அறியவும் அருளியிருக்கிறாய். இவற்றையும் இங்கு கூறப் புகுகிறேன்.
ஸ்வாமி
வெளியானது ஈராண்டுகளுக்கு முன் (1977) ஹோலி பூர்ணிமா தினத்திலாகும். இந்த லீலா நாடக ஸாயி
(1979) குரு பூர்ணிமா தினத்தில் தொடங்கப் பெறுகிறது.
³ உத்தேசித்துச் செய்யாத, 'தற்செயலானது' என்று தோன்றுகிற இப்படிப்பட்ட அற்புதப் பொருத்தங்கள் உன் அருளால் கூட்டுவிக்கப்படுவனவே!
'இதிலே என்ன அற்புதப் பொருத்தம்? பிரேமக் கண்ணன் வண்ண வண்ண நீரை அடித்து லீலா நாடகக் கொட்டமடித்த ஹோலியன்று ஸாயிக்கண்ணனின் நானா பாவத் திருவிளையாடல்களை வெளிப்படுத்தியதுதான் பொருத்தமேயன்றி, லீலையும், நாடகமும், கொட்டமும் ஓய்ந்து, வண்ணம் யாவும் ஞான வெண்மையாகிவிடுகிற மோன குருவுக்கான பூர்ணிமையில் இப்படி ஒரு நூல் எழுதத் தொடங்குவதில் என்ன பொருத்தம்?' என்று வாசகர்கள் கேட்கிறார்களா?
'அப்படியில்லை. ஒரு நாணயத்தின் இரு புறம் போல, மோன ஞானமாக ஒரு பக்கத்தில் இருக்கும் அதே ஸத்தியம்தான் லீலைப் பிரேமையாக மறுபக்கம் இருக்கிறது என்பதை ஸாயீ, நீ நிதரிசனமாக நிரூபிக்கிறாய்.
⁴1979 ஜூலைக்குப் பின், இந்த கைப்பிரதியை நான் சோதிக்கும் 1980 ஸெப்டெம்பர் வரையிலான பதிநான்கு மாத இடைக்காலத்திலேயே இன்னொரு சிறு நூல் படைப்பதற்கான மலர்கள் கிடைத்துள்ளன! 1979 ஜூலை 9ந் தேதி தொடங்கி இருபதே நாட்களில் இந்த நூலை முடித்தும் இத்தனை மாதங்களுக்குப் பின்பே இது அச்சகம் செல்வதும் சதாநாயகனின் ஒரு லீலா நாடகமே!
இரு பக்கங்கள் என்று பிரிப்பதுங்கூட ஸரியில்லை. வெள்ளை நீர் நீல அலையாகி அந்த நீல அலையில் வெள்ளை நுரை பூப்பதே போல, உன் சாந்த ஞான ஸாகரத்திலேயே பிரேமசக்தியின் லீலை அலைகள் வீச, அந்த லீலையிலும் முடிவாக அமைதி வெண்மையே கொழிக்கிறது.
மௌனத்திலேயே லீலை அடங்கும், ஞானத்திலேயே பிரேமை அடங்கும் என்பதைக் காட்டத்தான் போலும், சென்ற ஜூலை 9ல் எழுதியதை இந்த ஸெப்டெம்பர் 10ல் நான் ப்ரூப் பார்ப்பது மௌன பூர்ணரான பகவான் ஸ்ரீ ரமண மஹர்ஷிகளின் திவ்ய ஸந்நிதியில் நடக்கிறது; அசல ஞானம் அகிலப் பிரேமையாக விளங்கும் அருணாசலத்தில் நடக்கிறது.
இதனை உணர்த்தத்தானோ, பிரேமையின் வண்ணமான சிவப்பிலேயே ஆடையணியும் நீ லீலாலோலனாக ஊஞ்சலாடி டோலோத்ஸவம் கொள்கையில் ஞான அமைதியைக் காட்டும் வெள்ளாடை தரிப்பது?
நீ பிரேம காந்தனாகவும், லீலா பாலனாகவும், சாந்த ஞான குருவாகவும் ஒருங்கே இருக்கிறாய். குரு பூர்ணிமாவில் பூர்ண குருவான உன்னை வணங்கி உன் அமைதி வெண்ணிலவில் தோய வந்தால், அந்த நிலவிலேயே பிரேமாம்ருத பிந்துக்களையும் தெளித்து விளையாடுகிறாய். உன் குருத்வம் அதாவது கனம் எங்களை ஆழ்கடலின் அடிவாரமாக அழுத்தாதபடி அன்பினாலே எங்களைத் தூக்கி உன் லீலா விநோத அலை நுனியில் ஊஞ்சலாட்டுகிறாய்.
நாங்களும் மோன குருவான உன்னையே திருவிளையாடல் ஸரஸனாக எங்கள் இதய ஊஞ்சலில் ஆட அழைத்து, 'லீலா நாடக ஸாயி' பாடுகிறோம்.
லீலா நாடக ஸாயி, லாலி ராஸ விலோலி
(விளையாட்டுக் கூத்து ஸாயிஊஞ்
சலாடு குரவை விநோதா!)
சீலா ஹாடக ஸாயி, லாலஸ மாநஸ சாயி
(ஆடுக, ஆடகப் பொற்குணனே!
கொஞ்சு நெஞ்சு துஞ்சுவோனே!)
ஹாலாஹலதர ஸாயி, சூலி, கபாலி, பாலி
(ஆலகால மிடற்றானே!
காவாய், சூல கபாலா)
ஹாலாஸ்யாலய மாயி, பாலா பார்வதி பாஹி
(ஆலவாய் அருமை ஆயி,
பாலை, பார்வதி, பாராய்!)
ஊஞ்சல் 'பாடுகிறோம்' என்று இங்கே பன்மையில் வாசகர்களையும் சேர்த்துக்கொண்டு சொல்லியிருக்கிறேன். ஏனெனில் ஸ்வாமி
முகவுரையில் நான் தெரிவித்திருப்பது போல இந்த நூலும் ஊர்ஜிதமான ஸத்ய ஸாயி பக்தர்களுக்கென்றே எழுதப்பட்டதுதான்.
உனக்கு முகமன் கூறி மனமுகப்பில் ஊஞ்சலமர்த்திக் கொண்டபின், நாங்கள் இப்படி வரவேற்கு முன்பே எப்ப வந்தாச்சு?
என்று உன் இன்முகத்தால் கேட்டு எங்களை நீ பிரமுகராக்கிய பின் இந்த நூலுக்குத் தனியே முகவுரை தேவையில்லை. வாசகர்களையே பன்மையில் என்னோடு சேர்த்துக் கொண்டுவிட்டபின், இந்நூலுக்கு உதவி செய்து என்னில் மேலும் நெருங்கிச் சேர்ந்து விட்டவர்களைப் பெயர் சொல்லி நன்றி கூறுவதே அவர்களைப் பிரித்து வைப்பதாகத்தான் தோன்றுகிறது. இப்போது, இந்த நிமிஷத்தில் தோன்றும் இந்த ஆழ்ந்த உணர்ச்சிக்கு மதிப்புத் தந்துவிடுகிறேன்.
உன் ஆசி, அருள், அன்பு, அநுக்ரஹம் அத்தனையையும் அடக்கித்தான், எப்ப வந்தாச்சு?
என்ற அந்த இரண்டு வார்த்தைகளைச் சொல்லிவிட்டாயே! அதில் தெரியும் உன் குளிர்ந்த இதயத்தால் எங்களுக்குப் பன்னீர் தெளித்து, வார்த்தைக்கேற்ப விரியும் நேத்ரத்தின் கடாக்ஷத்தால் கிருஷ்ண சந்தனம் பூசி, வாக்கு சொல்லும் தாம்பூல வாய்த் தரிசனத்தாலேயே எங்கள் நெஞ்சு சிவக்க வெற்றிலை தந்து, வசன மதுரத்தால் கற்கண்டும் வழங்கி அபார வரவேற்புக் கொடுத்து உன் லீலா நாடக அரங்குக்குள் எங்களை அழைத்துக்கொண்டு விட்டாய்.
அரங்கா! அன்புச் சுரங்கமாம் உன் கூத்தரங்கின் எண்ணிலாக் காட்சிகளில் சில காண வந்தோம். உன் பாதாரவிந்தத்தில் வந்தனத்தோடு.
வந்தனித்த தந்தப் பாதங்களில் பூசிய சந்தனம், அதிலே பட்ட எங்கள் சிரங்களை உன்னோடேயே ஒட்டிக் கொள்ள வைக்கிறது. ஆம், இந்நூலில் விரியும் லீலைகள் பெரும்பாலும் உன்னை எங்களோடு கிட்டியும் ஒட்டியும் உறவாடும் அன்பனாகவே காட்டுமாறு செய்திருக்கிறாய். ஏனையரின் நூல்களிலும், என் ஸ்வாமி
யிலும்கூட, உன் மஹத்வமே அதிகமாக ஜ்வலிக்கும்படி வெளியான நீ, இச்சிறு நூலில் உன்னுடைய மதுரத்வமே சிறப்பாகப் பொலியும்படி அருள் கூர்ந்திருக்கிறாய்.
அந்த தெய்விக அருளை மதித்துக் கை குவிக்கும்போதே, அது வெளியிட ஸங்கற்பித்துள்ள மானுட இன்னியல்புடன் இசையக் கை கோத்துக் கொள்கிறோம். குரவைக்கூத்து எனும் ராஸ லீலையில் கண்ணன் கோபியரின் கைகளோடு தன் கை கோத்துத்தானே லீலா நாடகம் ஆடினான்?
ஆயினும், நீ எத்தனை அணுக்கமாக அன்பிலே பக்கம் வந்து நின்றாலும் உன் திவ்ய மகிமையை மறக்கக்கூடாது என்பதால் அப்படிப்பட்ட பேரனுபவ லீலையொன்றில் தொடங்குகிறோம்.
2. உருவாய் அருவாய்... குருவாய் வருவாய்!
முதலில் குரு வந்தனம் அமைய வேண்டுமென்றே குரு பூர்ணிமாவில் இந்த எழுத்துப் பணியைத் தொடக்கியிருக்கிறாய். ஈராண்டுகளுக்கு முன் (1977ல்) குரு பூர்ணிமையன்று அடியார் ஒருவருக்கு நீ அளித்த அநுபவத்தில் ஆரம்பிக்கிறேன்.
அவர் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்தவர். ஊரைச் சொன்னாலும் பேரைச் சொல்ல வேண்டாமெனக் கருதுபவர். போனால் போகிறது என்று D.W. என்ற தம் இனிஷியல்களை மாத்திரம் தெரிவித்துக் கொள்கிறார்.
வெளியே பூர்ண சந்திரனாம்; புட்டபர்த்தி பூர்ண சந்திர மன்றத்திலே நீயாம்! இருபதாயிரம் நெஞ்ச அலைகள் உனைக் கண்டு பொங்குகின்றன.
நீ குரு தத்வம் பற்றி உரையாற்றுகிறாய். உன் தெலுங்குப் பிரவாஹத்தை ஓரளவு வெற்றிகரமாக ஆங்கிலத்தில் கரை கட்டித் தருகிறார் டாக்டர் பகவந்தம்.
எனவே டி. டபிள்யூவும் அதைப் புரிந்து கொள்ளலாம். ஆயினும், அத்தனை மத குருமாரும் போதித்த தத்வங்கள் யாவற்றையும் தழுவி, அவற்றின் நிறைவான அத்வைத ஐக்கியத்தை நாட்டுவதே ஸநாதன தர்மமான ஸாயி மதம் என்று நீ சாற்றியதற்கு அதிகமாக அவர் உன் உரையில் உட்தோய்ந்து ஈடுபடவில்லை என்று தெரிகிறது.
ஆம், உன் உரையைவிட உருவிலேயேதான் அவர் ஊறியும் உருகியும் உவகிப்பவர்.
ஒளிக்காமல் சொல்லிவிடுகிறேன் நானுங்கூட அப்படித்தான். நீ சொல்லின் செல்வன், சிந்தனைச் சுரங்கம் என்பதெல்லாம் வாஸ்தவமேயாயினும் உன்னைப் போன்ற, உன்னையும் விஞ்சிய சொல்லின் செல்வர்கள், சிந்தனைச் சுரங்கங்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.
ஆனால் நீ நீயே அன்றோ? வேறெவர் அந்த 'நீ' ஆக முடியும்? உன் பிரஸங்கத்தைவிடப் பிரஸன்ன உருவிலேயே அந்த நிஜ 'நீ'யின் அழுத்தம் (அழுத்தாத மநோஹர லேசு) அதிகம் வெளியாகிறது. உன் ரூப தரிசனத்தை நாங்கள் நெடுநேரம் பெற வேண்டுமென்றேதான் நீ நீண்ட உபந்நியாஸம் நிகழ்த்துகிறாயோ என்றுகூட நான் நினைப்பதுண்டு.
'பாபா நீ ஸமாநமெவரு?' எனும்படித் தனித் தன்மை படைத்த உன் திருவுருவத்திலேயே டி. டபிள்யூயின் முழுக் கவனமும் குவிந்துள்ளது.
உன் லீலா நாடகத்தை ஆரம்பித்து விடுகிறாய்!
இருபதாயிரம் பேருக்கு ஒரு நாடகம் உபந்யாஸம் செய்கிற நாடகம்; அந்த நாடகத்தில் நடித்துக் கொண்டே, அதே சமயத்திலேயே, டி. டபிள்யூவுக்கு மட்டும் வேறொரு லீலா நாடகம் புரிகிறாய்! உன்னால்தான் முடியும்!
டி. டபிள்யூ பார்த்துக் கொண்டிருக்கும்போதே, உன் திவ்யத் தோற்றத்துக்குத் தனியானதொரு ஏற்றம் தரும் உன்னுடைய பம்பை மூடி மறைகிறது. சரியாக அக்கருங்குழலின் இடத்தில், அதே அளவைக்கு, ஓர் ஒளிப் படலம் காண்கிறது. தெய்வ ரூபங்களின் திருமுகத்தைச் சுற்றி ஜோதிப் பிரபை வரையப்படுவதுண்டல்லவா? அதுபோல் உன் முகத்தைச் சூழ்ந்த முடியே இப்போது ஜோதி வட்டமாகிறது!
இல்லை; உன் முகத்துக்கு அல்ல ஜோதி வட்டம். பிரபைக்குள் காண்பது 'ஸத்ய ஸாயி' என்ற ரூபத்தில் அமைந்த உன் வதனமல்ல.
உன் முடி ஒளிவட்டமானபின், அதற்குள்ளே உன் முகம் இருக்கவேண்டிய இடத்தில் இன்னொரு முடியும், அந்த முடிக்குள் மற்றொரு முகமும் டி. டபிள்யூவுக்குத் தெரிகின்றன.
முதலில் முடிதான் தெரிந்தது. அது பம்பையாகச் சிலும்பி நிற்கும் உன் குந்தளசுந்தரம் அல்ல. சற்றே நெளியிட்டு, பட்டாகக் காதோடிழைந்து தோளில் சரியும் தா சிகையாக மாறியிருக்கிறது!
அந்தச் சிகைக்குள் தெரிவது இயேசு நாதனின் நேச முகம்தான்!
இம்முகத்திலும் ஓர் அதிசய மாறுபாட்டை டி. டபிள்யூ காண்கிறார். இப்போது பெரும்பாலும் நாம் காணும் கிறிஸ்துவின் சித்திரங்கள் மத்திம கால இத்தாலிய ஓவியர்கள் தமது மனக்கண்ணால் கல்பித்துத் தீற்றிய தோற்றம்தான். அவர்கள் இயேசுவை இத்தாலிய உருவமைப்புப்படியே வரைந்து விட்டனர் என்றும், யூதராகப் பிறந்த அசல் கிறிஸ்து இப்படியின்றி, 'ஸெமிடிக்' தேக வாகு கொண்டவராகத்தான் இருந்திருப்பார் என்றும் அறிஞர்கள் கூறுவதுண்டு. ஸ்வாமி விவேகாநந்தரும் தாம் கண்ட இயேசு, படத்திலுள்ளதுபோல் கூர்மையான மூக்கோடு இல்லாமல், சற்றே தட்டையான நாசியுடன் விளங்கியதாகச் சொல்லியிருக்கிறார்.
தற்போது உன் முகத்துக்குள் டி. டபிள்யூ கண்ட இயேசுவின் இன்முகம் இப்படித்தான், சித்திரங்களில் உள்ள ரூபமாக இல்லாமல், வேறுவித அங்க அமைப்புடன் காணப்பட்டது. ஜட சித்திரமாக இன்றி, ஜீவ சக்தி தளும்பும் உண்மை வடிவாகவே காணப்பட்டது.
எதிர்பாராமல் இப்படி ஒரு காட்சியைக் கண்ட டி. டபிள்யூவுக்கு மத உணர்ச்சியைவிட ஆச்சரியக் கிளர்ச்சியே அதிகம் ஏற்பட்டது. வைத்த கண் வாங்காமல் அவர் பார்த்துக் கொண்டிருக்க இயேசுவின் முகம் மாறிற்று. மாறிய முகம் மீண்டும் மாறி வேறொரு ரூபம் கொண்டது. இவ்விரு முகங்களும் இன்னாருடையவை என்று அவருக்கு இனம் தெரியவில்லை. ஆயினும் இவை தமது மானஸிகப் புனைவு அல்ல என்று அவர் உறுதி பெறும் பொருட்டு நீ மறுபடியும் தெளிவாக அவ்விரு உருவுகளையும் காட்டினாயாம்!
இவற்றில் ஒன்று பார்ஸி மத ஸ்தாபகரான ஜோராஸ்தராகவும் மற்றது புத்தர் பெருமானாகவும் இருக்கலாம் என்று அவர் நினைக்கிறார்.
ஹிந்து மதம், கிறிஸ்துவம், பௌத்தம், பார்ஸி மதம், இஸ்லாம் ஆகிய ஐம்பெரு மதங்களின் அடையாளங்களையும் உனது ஸ்தாபன இலச்சினையாகக் கொண்டவனன்றோ? அவற்றில்தான் கிறிஸ்துவ, பௌத்த, பார்ஸிய ஸமய ஸ்தாபகர்களைக் காட்டியிருக்கிறாய். நபிகள் நாயகத்தின் ரூபத்தை நீ காட்டாதது உருவ வழிபாட்டை அறவே விலக்கும் முஸ்லீம் ஸோதரரின் உணர்ச்சியை மதித்துத்தானோ? இல்லாவிடில் ஷீர்டியவதாரத்தில் இஸ்லாமியர் என்றே பலரால் கருதப்பட்ட நீ முகமது முகத்தை மட்டும் ஏன் காட்டாதிருக்க வேண்டும்?
இதுவரை கண்ட மதகுருமார்களிடம் டி. டபிள்யூவுக்கு விசேஷப் பற்றுதல் ஏதும் இல்லை. இதயமார ஈடுபட்டிருந்த குரு வேறொருவர். ஸமீபத்தில் உன்னை வந்தடைந்த பின் அந்த குருவுக்குத் தாம் விசுவாஸத் துரோகம் செய்கிறோமோ என்று டி. டபிள்யூ கலங்கிக் கொண்டிருக்கிறார்.
என்ன ஆச்சரியம்! ஸாக்ஷாத் அந்த குருவின் திருமுகத்தையே உன் வதனத்துக்குப் பதிலாகக் கண்டு புளகாங்கிதமாகிறார் நமது ஆஸ்திரேலிய அன்பர். முகத்தை ஒட்டிய நரை கேசம்; பரந்து விரிந்த நெற்றி; கதிரவன் ஒளியிலேயே மதியத்தின் குளுமையும் கொட்டும் கண்கள்; தீர்க்கமான நாஸிகை; பரிவு பெருகும் அதரங்கள் ஆம், ஞானமும் கருணையும் பிறிதறக் கலந்தவரும், தம்மைத் தவறியும் குரு என்று கருதாமலே, D.W. போல் பாரெங்கும் பரவிய பல்லாயிரம் ஆத்ம விசார ஸாதகர்களுக்கு ஆசானாகிவிட்டவருமான பகவான் ரமண மஹர்ஷிகளின் திவ்ய முகத்தையே உன்னில் கண்டு உட்கனிகிறார் டி. டபிள்யூ.
‘இவரிடம் வந்தது அவருக்குத் துரோஹம் என்று குழம்பினோமே! எத்தகைய அறிவீனம்?' என்று தெளிகிறார்.
உனதே உனதான ஸத்யஸாயி ரூபத்தில் டி. டபிள்யூவுக்கு ஓர் அலாதிப் பற்று இருந்த போதிலும், எல்லா மஹா புருஷர் உருவும் உனதே என்று தெளிவிக்க அருள் கொண்டு நீ மற்ற ஆத்மிக சிரேஷ்டர்களின் தோற்றங்களையும் காட்டி, பேத உணர்வைக் களைந்தாய் என்று அவர் நிறைவு கொள்கிறார்.
ஆனால் ஞானம் புகட்டவே நீ நிகழ்த்திய இந்த லீலா நாடகத்தில் உனக்கு நிறைவு ஏற்படவில்லை. கொடுக்க ஆரம்பித்துவிட்டால் ஓயத் தெரியாதவனாச்சே!
ரமணர் மத அதீதமானவர். மதாதீதமான ஆத்மனிலேயே அடியாரை நிலைநாட்டுவதை முதலும் முடிவுமாகக் கொண்டவர். நீயும் அத்வைத ஆத்மனையே முடிவாகக் கொண்டவனாயினும், முதலில், இடையில், ஏன், அம்முடிவை எய்தியபின்னும்கூட ருசி விசித்திரத்துக்காக அவ்வப்போது, லீலா மயனாக இருந்து கொண்டு பல்வேறு காட்சிகள் தருபவன். அப்படித்தான் இன்று பற்பல மத ஸ்தாபகர்களை உன்னில் காட்டி மகிழ்வித்தாய், மகிழ்ந்தாய்.
இதிலே உனக்குத் திருப்தி ஏற்படாததால் போலும், மதாதீதரைக் காட்டியபின் அவரையுங்கூட பக்தியில் உருட்டிப் புரட்டிய ஹிந்து மத தெய்வ ரூபங்களை D.W.வுக்குத் தரிசிப்பிக்கத் திருவுளம் பற்றியிருக்கிறாய்.
அடித்தது அதிருஷ்டம் ஆஸ்திரேலிய அன்பருக்கு! திவ்ய தரிசனங்கள் மளமளவென்று ஒன்றையடுத்து ஒன்றாய் விரியலாயின!
ஆத்மா மானுடமானதே அல்ல என்ற அனவரத அநுபூதி பெற்ற ரமணர், 'ஆத்மாநம் மாநுஷம் மந்யே' என்று தன்னை மானுடமாகவே சொல்லிக் கொண்ட ராமபிரான் ஆனார்! அதுவும் நியாயந்தான். ஸ்ரீராமசந்திரனுக்கு அப்புறம் மானுட தர்மங்களைத் தன்னியல்பாகவே நொடி நொடியும் கொடுமுடியில் வாழ்ந்து காட்டியவரும் அன்றோ ‘ஸ்ரீ ரமணர்?'
மானுட அவதாரம், தெய்விக விஷ்ணு இருவரும் இறுகிய ராகவனைக் காட்டிய பின் திவ்ய ரூபங்களில் அக்ரஸ்தானம் பெறும் விக்ந விநாயகராக தரிசனம் தந்தாயாம்! ஆனைமுகம் என்பதால் இதில் விசித்ரம் அதிகம். டி. டபிள்யூவுக்கு ஐயமே எழலாகாதென்று மீளமீளத் துதிக்கையும் தந்தமும் கொண்ட கணபதி ராயனின் கருணாமுகத்தைக் காட்டினாயாமே!
அப்புறம் பூர்வாவதாரமான ஷீர்டி ஸாயி நாதனின் பரமகிருபாமுகம்.
பூர்ணசந்திர மன்றத்தில் ஏனையோர் ஸத்ய ஸாயியை மட்டுமே தரிசித்துக் கொண்டிருக்க, D.W.வுக்கு மட்டும் D.W.(DivineWonder) காட்டிய நீ இந்த ரூப விசித்ரம் படைப்பதில் மஹா ஸமர்த்தன்தான். முன்னொரு முறை தசராவின்போது உன்னை ஒருவர் ஸத்யஸாயியாகவே கண்டு புகைப்படமெடுக்க, அந்தப் படத்திலோ நீ ஸிம்மவாஹினியான துர்கா பரமேச்வரியாக உருக் கொண்டிருந்தாயே! இப்படிப்பட்ட தேவிரூப தர்சனம் தமக்குக்கிட்டுமா என டி. டபிள்யூ எண்ணினார்.
உடனுக்குடனே, 'இப்படிப்பட்டதுதானா? இதனினும் நெஞ்சை அள்ளும் மாதா வடிவு காட்டுவோம்' என நீ எண்ணியிருக்கிறாய். தேவதா ரூபங்களுக்குள்ளே ஸௌந்தரிய சிகரமாகவும், ஸௌம்ய ஸாகரமாகவும் பரமஹம்ஸாதியர் கண்டுணர்ந்துள்ள லலிதா திரிபுர எந்தரியின் முகாரவிந்தத்தை அவருக்கு தரிசிப்பித்திருக்கிறாய்!
புருஷ லக்ஷணம் பூர்ணமாக நிறைந்தவன் ஸ்ரீராமன், ஸ்திரீ லக்ஷணம் பூர்ணமாக நிறைந்தவள் லலிதை, இரு லக்ஷணங்களும் சேர்ந்து பூர்ணமானது கண்ணனின் அழகுரு என்பார்கள். மாயா ஜாலம், ஞானோபதேசம் இரண்டிலும் உனக்கு முன்னோடியான அக் கண்ணனை D.W. எண்ணியவுடன், சிந்தித்ததைத் தரும் சிந்தாமணி நீ நந்தர்குல மணியாக நலமுற நின்றாயாம்!
அவ்வப்போது ஸத்யஸாயி ரூபத்துக்கு அவர் அவாவுற்றபோது, அதையும் காட்டினாய். இதிலும் அவர் கேட்டதற்கு மேலே கொடை வள்ளல் கொடுத்தாயாம்! நிகழ்காலத்தில் பூர்ணசந்திர மன்றத்தில் பிரஸங்கித்த உன் தோற்றத்தை அல்லாமல் ஸத்ய நாராயண ராஜுவாக நீ அவதரித்ததிலிருந்து பாலப் பருவம், யௌவனம், மத்திம தசை இவற்றில் கொண்ட பல தோற்றங்களைக் காட்டினாயாமே!
நடுநடுவே அவயங்களில்லாத ஜ்யோதி ஸ்வரூபமாகவும் நின்றாயாம்! அடி முடியற்ற அருவப் பரம் பொருள் அருணாசல ஜ்யோதிஸ்ஸாகவே நின்றது. எனவே ஜ்யோதி ஸ்வரூபம் என்று சொன்னாலும், ரமண மார்க்கியான D.W. புரிந்து கொள்ளும்படி அரூப ஆன்மனையே இப்படிக் காட்டியிருக்கிறாய். அன்று குரு பூர்ணிமையாதலால், 'குரு' என்பதன் நேர் பொருளே 'இருள்நீக்கி' என்பதை ஒளியுருவால் காட்டியிருக்கிறாய்!
'இந்த நிகழ் நிமிஷ பாபா தெரியவேண்டும்' என்று அந்த பாக்யசாலி நினைத்தபோது, ஏனைய திவ்ய ரூபங்களுக்கு மேலே மூட்டமாகப் பதிப்பித்தாற்போல, அன்று உபந்நியஸிக்கும் அந்தத் திருக்கோலமும் காட்டினையாம்.
குருவே பிரம்மவிஷ்ணுமஹேச்வராதி தேவதையர், இத்தனை தெய்வமுமான பரப்ரஹ்மமும் குருதான் என குரு வந்தனத் துதி சொல்கிறது. எந்த குருவுக்கும் இதுவே லக்ஷணை என்பதால் அத்தனை குரவரும், அத்தனை தெய்வங்களும் ஒன்றே என்பதுதானே அர்த்தம்?
இந்த ஏக தத்வ அத்வைதத்தை நீ டி. டபிள்யூவுக்குப் பிரத்யக்ஷமாக அநேக(!) ரூபங்களில் நிரூபித்துக் காட்டியது போல் எங்கு காண?
சும்ப நிசும்ப வதம் முடித்த துர்காதேவியிடம் தேவர்கள் வியந்து கூறியது நினைவில் மிதந்து வருகிறது:
ரூபை: அநேகை: பஹுதா (ஆ)த்ம மூர்த்திம்
க்ருத்வா (அம்பிகே தத் ப்ரகரோதி கா (அ)ந்யா?
உன்னுருவையே பலவாக்கி நீ செய்ததுபோல், அம்மா, வேறெவர் செய்ய இயலும்?
3. அம்புலி பாபா வா, வா!
குரு பூர்ணிமையில் நனைந்து வருகிறோம்.
பூர்ணசந்திரனின் வெள்ளிப் பொழிவில் முழுகியவாறு, 'வெள்ளிப் பெயர் கொண்ட வெள்ளையர் ஸில்வர் கடற்கரையில் உலவிக் கொண்டிருந்தார், மனையாளோடு.
நம் ஊர்க் கடற்கரை அல்ல. ஹவாய் தேசத்தில் பஸிஃபிக் பீச்சில் உலவுகிறார்கள் வெஞ்சுராவைச் சேர்ந்த இத் தம்பதி.
அண்மையில் முடித்து வந்த இந்தியப் பயணம் பற்றியும் அதன் நடுநாயகமான ஸ்வாமி ஸ்ரீ ஸத்ய ஸாயி பாபா குறித்தும் பேசியபடி நடக்கும் ஸில்வர் அகஸ்மாத்தாக ஆகாயத்தே தெரியும் சந்திரனைப் பார்க்கிறார்.
குளுகுளுவென்று, குறுகுறுவென்று ஏதோ ஒன்று பாய்கிறது அவருக்குள்ளே!
அது நிலவு அல்ல.
பின்ன என்ன?
நிலவுலகுக்கெல்லாம் நலம் பாலிக்கும் புட்ட பர்த்தீசன் பூர்ண மதியத்துக்குள்ளிருந்து பொல்லெனப் பொலிந்து, ஜில்லெனக் குளிர்ந்து ஸில்வரை நோக்குகிறார்!
நிலவைக் கண்டவர் நிலைக் குத்திட்டார்.
சற்றுத் தெளிந்தவுடன் மனைவியிடம் சொன்னார். ஹனி! பாபா தரிசனம் தருகிறார்! என்னால் நனவுதானா என்று நம்ப முடியவில்லை.
எங்கே, எங்கே?
என்றாள் ஹனி. சந்திரனைச் சுட்டிக் காட்டினார் ஸில்வர்.
ஹனி பார்த்தாள்.
அவளுக்கும் 'ஹனி'யாக தரிசனம் தந்தார் தேமதுரத்தேவன்.
மை காட்!
என்று பிரமித்தாள் ஹனி.
அன்றோடு விடவில்லை இந்த விந்தையான 'ஹனிமூன்!’ அன்றாடக் காட்சி ஆயிற்று அந்த அதிருஷ்டத் தம்பதிக்கு.
தினந்தினமும் சந்திரனில் சந்தனமாகத் தெரிவார் ஸாயி பகவான்.
மதியம் தேய்வதையும் வளர்வதையும் ஒட்டி அவர் வடிவமும் வளரும், தேயும்.
கூத்துதான், லீலா நாடகந்தான்! வளர்ச்சியும் தேய்வும் இல்லாதவர் என்றே மறைகளால் போற்றப்படுபவர் இவர்தான்!
சில நாட்களில் காலை உதய காலத்தில் பூர்ண சந்திரன் அடி வானத்தில் தெரியும். அப்போது நேருக்கு நேர் தமது தெய்விக மாண்புடன் ஸ்வாமி அதனுள் விளங்குவது அத் தம்பதியருக்கு ஓர் அலாதி தரிசனமாக இருக்கும்.
நாளாவட்டத்தில் அற்புதமே ஸஹஜமாகி விட்டது. பரபரப்பில்லாமல் இவர்கள் பனிமதியத்துக்குள் இனியரைத் தரிசனம் செய்வார்கள். உடன் யாரேனும் பாபா பக்தர் இருந்தால் அவருக்கும் சந்திரனில் தெரியும் ஸுந்தரனைப் பற்றிப் பரபரப்பில்லாமலே சொல்வார்கள். என்ன, என்ன, எங்கே, எங்கே?
என்று அவர்கள் வியந்து கேட்டால், இப்படி வியக்க என்ன இருக்கிறது என்று இவர்கள் ஆச்சரியப்படுவார்களாம். அத்தனை ஸஹஜமாகி விட்டது!
இவர்கள் கூறியபின் மற்ற பக்தர்களும் வெள்ளி மதியில் தெள்ளத் தெளிய ஐயனின் திரு உருவைக் கண்டு உவகையுறுவார்கள்.
***
காயத்ரியாகப் பராசக்தியை வழிபடும் போது அத் தேவதை சூரியமண்டல மத்தியில் விளங்குகிறது. அமெரிக்கர் ஒருவருக்கு (காலிஃபோர்னியாவைச் சேர்ந்த பெண் என்று ஞாபகம்) பிரதி தினமும் உதயத்தின்போது சூரியனிலிருந்தே ஸ்வாமி இறங்கி வருவதாகத் தெரியுமாம்! கதிரவனிலிருந்து இறங்கி நேரே இவருக்கு முன்னே வந்து நிற்பாராம்.
சூரிய வம்ச ராமசந்திர மூர்த்தி என்றும் சொல்லலாம்.
பராசக்தியை லலிதாம்பிகையாக ஆராதிக்கும் போது அவளைச் சந்திர மண்டல மத்தியில் தியானம் செய்வது விசேஷம்.
ஸ்வாமி காயத்ரியாகவும், லலிதையாகவும் அந்தந்த அடியாருக்கு அருள்பவரல்லவா?
சந்திரனில் தெரிவது சந்திரவம்சக் கண்ணன் எனவும் சொல்லலாம்.
இதய ஆகாசத்தில் ஞான சூரியனாக ஆத்மா இருக்கிறது. சிரஸில் மனம் சந்திரனாக இருக்கிறது. சந்திரன் ஸ்வயம்பிரகாசனல்ல; சூரிய