Karthika Rajkumar Sirukathaigal: Thoguppu 1
()
About this ebook
வாழ்க்கைப் பாதைகள் மாறிய போது எதார்த்தத்தைப் புரிந்து கொண்டு புதிய சூழ்நிலையை ஒத்துக் கொள்வதுதான் புத்திசாலித்தனம் என்று வாழ்க்கை பற்றிய கண்ணோட்டத்தை இவர் புரியவைக்கின்றார் (மழைக்குப் பின்னும் பூக்கள்)
இவரின் இலக்கியச் சிந்தனை ஆங்காங்கே கதை மாந்தரின் உணர்வுகளையும், கதையையும் நகர்த்திச் செல்லப் பெரிதும் உதவுகின்றது.
'அன்புமிக்க அதிகாரிக்கு’ கதையில் வர்மன் சமீபத்தில் தான் படித்த ஆர். ராஜகோபாலனின் நீசர்கள் கவிதையைக் கடிதத்தில் எழுதி, அதிகாரியை நீசர் கூட்டத்தில் சேர்க்கின்றான். அவனது உணர்ச்சி வசப்பட்ட நிலையை அக்கவிதை எடுத்துக் காட்டுகின்றது.
காஃப்காவைப் படித்த ஸ்கிட்ஸோப்ரீனியா நோயாளியைச் 'சிதறல் கதையில் காட்டும் இவர், நனையத் தோன்றுகிறவர்கள் கதையில் மரங்கள் பற்றி ரோல் விகஸின் வரிகளைக் குறிக்கின்றார், சலனம் கதையில் பேராசிரியர் தன் மனத்தை அடக்கப் பட்டினத்தார் பாடலைத் துணைக்கொள்வதாகச் சொல்கின்றார். 'பயணம்' கதையில் மழைத்தாரைகளைப் பார்த்தவன் எண்ணத்தில் பாரதியின் கவிதைவரிகளை நிரப்புகின்றார்: 'திசைகளற்று முகங்களற்று' கதையில் தேவதேவனின் கவிதையைக் கொண்டு வருகின்றார், 'அப்பா' கதையில் பல கவிதைகளைத் தருகின்றார். ஆக்டோபஸ்' கதையில் மறக்க முடியாத கவிதை ஒன்றைப் படைக்கின்றார்.
பாத்திர வார்ப்புத்தான் வாசகர்களை ஈர்க்கும் மாபெரும் சக்தியாகும். இன்பதுன்பங்கள், ஏமாற்றங்கள், அவற்றைத் தாங்கும் மன உறுதிகள், நம்பிக்கைகள், வாழ்வின் ஏற்ற இறக்கங்கள், நட்பின் இறுக்கங்கள். இறைப் பற்று, அன்பு, அந்நியமாகத் தோன்றல், எரிச்சல், ஆத்திரம் இன்ன பிற உணர்வுகள், முகங்களை அவ்வப்போது மாற்றும் இயல்புகள். இயற்கை விருப்பு, இலக்கிய விருப்பு எனத் தொடரும் மனித உணர்வுகளையும், ஒழுகலாறுகளையும் கொண்டு இவரது பாத்திரங்கள் வார்க்கப் படுகின்றன.
பொருளாதார ஏற்றத்தாழ்வினால் நட்பின் இறுக்கம் இடைவெளிதர அந்நியனாய் உணரும் ஜெயசீலன் (மனது). தன் தம்பியின் தவறுக்காகத் தந்தையை அதிகாரி பழிவாங்கிய கொடுமையை எதிர்க்கும் வர்மன் (அன்பு மிக்க அதிகாரிக்கு), மருத்துவமனையில் படுத்திருக்கும் கணவனுக்கு அவன் நண்பன் பண உதவி புரிவான் என்று எதிர்பார்த்து ஏமாற்றம் தழுவும் எம்ஸி (இடைவெளி), தங்கையை முதல் பிரசவத்திற்காகச் சேர்த்துவிட்டு சிறு பருவத்து நினைவுகளில் இதம் கண்டு துக்கத்திலும், ஆனந்தத்திலும் கண்ணீர் விடும் எபி (பிறகு வெளிச்சம் வரும்), காலத்தின் வேகத்தில் இஞ்சினீயர் கனவு நொறுங்கி காண்டிராக்டர் வீட்டுத் தோட்டத்தைப் பார்த்துக் கொள்ளும் பணிக்குத் தள்ளப்படும் சிறுவன் எபி (பூக்களைப் பறிப்பது வருந்தத்தக்கது), பிறகுக்கு ஆறுதல் கூறத் தெரியாத போதும் தனக்கு ஆறுதல் தாயின் மடியே எனத் தெரிந்து, அவள் மடியில் முகம் பதித்தழும் ஒரு சிறுவன் (ஆறுதல்), தனக்குக் கிடைக்காவிட்டாலும் மற்றவர்களுக்காவது அந்த வேலை கிடைக்க வேண்டும் என்றெண்ணும் இளைஞன் யோனா (நாளை பொழுது விடியும்), தனக்கு விருப்பமான செயலைச் செய்யவிடாமல் தடுக்கும் நேயத்தை இயற்கைக்க முடிய சூழ்நிலையால் தன்னுள் பல்வேறு முகங்களை ஒட்ட வைக்கும் ஓர் இளைஞன் (மறுபடியும் ஓர் மறுபடியும்)
பார்வை பேச்சு கடிதம் போன்றவற்றிக்கு அப்பாற்பட்டது காதல் என்பதை உணர்த்தும் எல்ஸி (காதல்), நான் - நீ - அவன் எல்லாமே நான் தான் என்று தவிக்கும் ஸ்கிட்ஸோப்ரீனியா நோயாளி (சிதறல்), பசுமையோடு இணைத்துக் கொண்ட வாழ்க்கையை வண்ணத்தில் மட்டுமே பசுமையைப் பார்க்க முடியும் சூழலில் இணைத்துக் கொள்ள விரும்பாத ஓர் இயற்கை விரும்பி (நனையத் தோன்றுகிறவர்கள்), மனித நேயத்தைக் கவிதைகளில் காட்டுவதைவிட வாழ்க்கையில் காட்டுவதே அர்த்த முள்ளதென நினைக்கும் கவிஞன் இளங்கோ (நாளையைக் குறித்தான இன்று) , வாழ்க்கையை எளிதாகப் பார்க்கத் தெரியாமல் பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்து பொறுமை இழந்து தவிக்கும் ஓர் இளைஞன் (அதுவரை) பிறரது நம்பிக்கையைவிட நினைவுகளே அதிகம் இதம் தருவன என்பதைக் காட்டும் பேச்சிழந்த ஜோ (நிலை), தந்தையைத் தோழனாக எண்ணி
அவர் மேல் அளவு கடந்த அன்பு காட்டும் மகன்கள் (கிறிஸ்துமஸ்ஸிற்கு முந்தின் தினங்கள், அப்பா) , அன்பில் ஊறித்திளைத்து அன்பான முட்டாளாக அசட்டுக் குணத்தாளாக அன்னையை நினைக்கும் மகன்கள் (கிறிஸ்து மஸ்ஸிற்கு முந்தின் தினங்கள், அறியாதிருந்த முகங்கள்)
மொத்தத்தில் இவரது கதைகள் தனி மனிதன். குடும்பம், சமுதாயம் , எனப் பல்வேறு நிலைகளில் மனித உணர்வுகளைப் படிப்பவர் உள்ளத்தில் ஆழ்தடமாய்ப் பதித்திடும் இயல்பின. இவரின் ஆக்கங்கள் மென்மேலும் தொடர்ந்து சிறந்து, சிறுகதை வரலாற்றில் தனித்ததோர் உயர் இடத்தை இவருக்குத் தேடித் தரவேண்டும் என்று வாழ்த்துகிறேன்.
முனைவர் நா.இளங்கோவன்
Read more from Karthika Rajkumar
Bethlehemin Natchathiram Rating: 0 out of 5 stars0 ratingsVirinthathor Samrajyathil Rating: 0 out of 5 stars0 ratingsOru Christmas Thoothan Rating: 0 out of 5 stars0 ratingsKutty Ilavarasi Rating: 0 out of 5 stars0 ratingsAvan, Aval, Avargal Rating: 0 out of 5 stars0 ratingsManathul Manitham Rating: 0 out of 5 stars0 ratingsPookkalai Parippathu Varuntha Thakkathu Rating: 0 out of 5 stars0 ratingsKarthika Rajkumar Sirukathaigal: Thoguppu 2 Rating: 0 out of 5 stars0 ratings
Related to Karthika Rajkumar Sirukathaigal
Related ebooks
Karthika Rajkumar Sirukathaigal: Thoguppu 2 Rating: 0 out of 5 stars0 ratingsPookkalai Parippathu Varuntha Thakkathu Rating: 0 out of 5 stars0 ratingsPennodu Oru Kanavu Rating: 0 out of 5 stars0 ratingsNallathor Veenai Seithe… Rating: 2 out of 5 stars2/5Kanavugal Viriyum Rating: 0 out of 5 stars0 ratingsUdan Rating: 0 out of 5 stars0 ratingsIdukki Rating: 0 out of 5 stars0 ratingsOorkkolam Rating: 0 out of 5 stars0 ratingsMoongil Pookkal Rating: 1 out of 5 stars1/5Nee Mattum Rating: 0 out of 5 stars0 ratingsMulloduthan Muthangala? Rating: 0 out of 5 stars0 ratingsUyirukku Appaal Rating: 0 out of 5 stars0 ratingsPoiyil Pootha Nijam Rating: 0 out of 5 stars0 ratingsOru Aathmavin Kathai Rating: 0 out of 5 stars0 ratingsAval Chinna Penna? Rating: 0 out of 5 stars0 ratingsAndhi Nera Pookkal Rating: 0 out of 5 stars0 ratingsOru Kudumbathil Nadakkirathu! Rating: 0 out of 5 stars0 ratingsAvalukkendru Oru Manam Rating: 0 out of 5 stars0 ratingsVithaithal Vilaiyum! Rating: 5 out of 5 stars5/5Thazhthapatta Devathaigal Rating: 0 out of 5 stars0 ratingsUtharayanam Rating: 0 out of 5 stars0 ratingsOrey Urimai Rating: 0 out of 5 stars0 ratingsValiya Illai Bhoomiyil? Rating: 0 out of 5 stars0 ratingsOliyai Thedi... Rating: 0 out of 5 stars0 ratingsVellam Vadintha Piragu… Rating: 0 out of 5 stars0 ratingsOma Nathi Rating: 0 out of 5 stars0 ratingsMuttruperatha Manu Rating: 0 out of 5 stars0 ratingsVanthaanga Jeichaanga… Rating: 0 out of 5 stars0 ratingsKannadi Meengal Rating: 0 out of 5 stars0 ratingsAnjali Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Karthika Rajkumar Sirukathaigal
0 ratings0 reviews
Book preview
Karthika Rajkumar Sirukathaigal - Karthika Rajkumar
http://www.pustaka.co.in
கார்த்திகா ராஜ்குமார் சிறுகதைகள்: தொகுப்பு 1
Karthika Rajkumar Sirukathaigal: Thoguppu 1
Author:
கார்த்திகா ராஜ்குமார்
Karthika Rajkumar
For more books
http://www.pustaka.co.in/home/author/karthika-rajkumar
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
வாழ்த்துரை
மனது
அன்புமிக்க அதிகாரிக்கு....
பூக்களைப் பறிப்பது வருந்தத்தக்கது
ஆறுதல்
நாளை பொழுது விடியும்
மறுபடியும் ஒரு மறுபடியும்
புற்களின் நடுவே பூக்கள்
இடைவெளி
ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்!
பிறகு வெளிச்சம் வரும்
காதல்
இரண்டாவது ஸ்திதி
சிதறல்
நனையத் தோன்றுகிறவர்கள்
அப்பா
அறியாதிருந்த முகங்கள்
நாளையைக் குறித்தான இன்று
அது வரை
நிலை
கிறிஸ்துமஸ்ஸிற்கு முந்தின தினங்கள்
எதிர்பாராமல் கனவுகளில் பூத்த ஒரு பெரும் சந்தோஷமாய் இது அமைந்து விட்டது .என் தொகுப்பு கிடைக்க வாய்ப்பு இல்லையா என்று நண்பர்கள் கேட்கும் பொழுது தர்மசங்கடமான சிரிப்பைத் தவிர வேறில்லை என்னிடம் .சக்திதான் இந்த ஆலோசனையை சொன்னார் மின் புத்தகமாக வெளியிடலாம் என்று .
சொன்னது மட்டுமில்லாமல் செயலிலும் இறங்கினார் அவருடைய வேலைப் பளுவுக்கிடையிலும். பிறகு எல்லாக் காரியங்களையும் நம்ப முடியாத வேகத்தில் செய்தவர் கணேஷ் பாலா.அட்டைப் படத்திலிருந்து எல்லாவற்றையும் வடிவமைத்தவர் அவரே. இந்த இருவரும் தான் இந்த என் கனவை நனவாகினவர்கள் நனவாக்கினவர்கள். எந்த வார்த்தைகளில் எப்படி நன்றி சொல்லவதென்று தெரியவில்லை இந்த அன்பு நண்பர்களுக்கு .
இன்னொரு அருமை நண்பர் பா.ராகவன் அவர்களுக்கும் என் மனம் நிறைந்த நன்றிகள் அமேசான் ,கிண்டில் கதவை திறந்து வைத்தவர் அவரே.
எல்லாவற்றுக்கும் மேலாக என் அன்பின் தேவனுக்கு துதிகளையும், நன்றிகளையும் (,இவைகளை எல்லாம் சாத்தியமாக்கினதற்க்காக ) செலுத்துகிறேன் !!
மிக அன்புடன்
கார்த்திகா ராஜ்குமார்.
21 ஜனவரி ,2019.,
பனி மிகுந்த திங்கள் இரவு
வாழ்த்துரை
சிந்திக்க வைத்து மனிதனைச் செம்மைப்படுத்தும் ஆற்றல் சிறுகதைகளுக்கு உண்டு. சொல்லப்பட்டது கொஞ்சம் - சிந்தித்து உணரப்படுவது மிகுதி என்ற அடிப்படையில் அமையும் கதைகள் காலத்தை வென்றிடும் இயல்பின.
இயற்கை எழில் கொஞ்சும் உதகையை இருப்பிடமாக்கித் தொடர்ந்து பல்வேறு இதழ்களின் வாயிலாக நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகளைத் தந்து கொண்டிருப்பவர் கார்த்திகா ராஜ்குமார். பல பரிசுகளையும், சிறப்புகளையும் படைப்புக்கள் இவருக்குத் தேடித் தந்துள்ளன. இருபது ஆண்டுகளுக்கு முன் உதகை மலைச்சாரல் கவியரங்கத்தில் முதன் முதலாக இவரைச் சந்தித்தது முதல் இவரது கதைகளுடன் எனக்கு ஒரு தொடர்பு ஏற்பட்டது.
உதகை அரசு கலைக்கல்லூரியில் எனக்கு மேற்பார்வையாளராகக் கொண்டு இவரது கதைகள் எம்ஃபில் பட்ட ஆய்விற்கு எடுத்துக் கொள்ளப்பட்ட பின் இவர் கதைகளுக்கும் எனக்கும் இருந்த தொடர்பு வலுப்பட்டது.
பலராலும் அறியப்பட்ட, பாராட்டப்பட்ட ஒரு படைப்பாளியை இனம் காட்ட வேண்டிய தேவையில்லை. பல்வேறு நூல்களிலும் இதழ்களிலும் வெளிவந்த இவரது கதைகளுள் சில கார்த்திகா ராஜ்குமார் கதைகள் என்று ஒரே நூலில் தொகுத்து வெளியிடப்படுவது கண்டு நான் மகிழ்கின்றேன்.
வாழ்க்கை, இலக்கியம் பற்றிய சிந்தனை. இவை இரண்டுக்கும் இடையே உள்ள பிணைப்பு ஆகியவற்றை இவர் உற்று நோக்குகின்றார். வெறும் மிதப்புகள், சிந்தனைகள் உள்மனத் தர்க்கங்கள் என்று நினைப்புகளில் நிமிடங்களைக் கரைத்துக் கெண்டிருப்பவனையும், எதார்த்தத்தைத் தன் பேச்சு செயல் ஆகியவற்றில் மிகச் சாதாரணமாகக் காட்டும் பழ வண்டிக்காரனையும் அவனருகே உட்கார்ந்திருக்கும் கிழவியையும் காட்டி, வாழ்க்கை குறித்த இலகுவான பார்வை... தீர்மானங்கள்... தேவை என்பதைக் கார்த்திகா உணர்த்துகின்றார்.
ஏழைகளுக்கு மிகப்பெரிய சொத்து நம்பிக்கைகள் தாம். நாளை பொழுது விடியுமென்று நித்தம் உதிக்கும் புது நம்பிக்கைகள். நம்பிக்கைகள் தானே வாழ்வை அர்த்தப் படுத்துகின்றன?
என்ற கூற்றுகளால் வாழ்க்கையை நம்பிக்கையோடு எதிர்கொள்ளச் செய்கின்றார் இவர். நாளை பொழுது விடியும். பிறகு வெளிச்சம் வரும் என்றமையும் கதைத் தலைப்புக்களே தன்னம்பிக்கையும் தளரா உழைப்பும் நாளைய விடிவு நோக்கி மனிதரை இட்டுச் செல்லும் வாழ்வியல் உண்மைக்குச் சான்றுகள் ஆகின்றன.
வாழ்க்கைப் பாதைகள் மாறிய போது எதார்த்தத்தைப் புரிந்து கொண்டு புதிய சூழ்நிலையை ஒத்துக் கொள்வதுதான் புத்திசாலித்தனம் என்று வாழ்க்கை பற்றிய கண்ணோட்டத்தை இவர் புரியவைக்கின்றார் (மழைக்குப் பின்னும் பூக்கள்)
இவரின் இலக்கியச் சிந்தனை ஆங்காங்கே கதை மாந்தரின் உணர்வுகளையும், கதையையும் நகர்த்திச் செல்லப் பெரிதும் உதவுகின்றது.
'அன்புமிக்க அதிகாரிக்கு’ கதையில் வர்மன் சமீபத்தில் தான் படித்த ஆர். ராஜகோபாலனின் நீசர்கள் கவிதையைக் கடிதத்தில் எழுதி, அதிகாரியை நீசர் கூட்டத்தில் சேர்க்கின்றான். அவனது உணர்ச்சி வசப்பட்ட நிலையை அக்கவிதை எடுத்துக் காட்டுகின்றது.
அன்னைக்குப் பிடித்த ஏதேனும் ஒரு பொருளை வாங்கித் தரத் துடிக்கும் அன்பு உணர்ச்சி மிகுந்த மகன், நொந்து சுமந்து பெற்று நோவாமல் ஏந்தி முலை தந்து வளர்த்தெடுத்துத் தாழாமே அந்தி பகல் கையிலே கொண்டு எம்மைக் காப்பாற்றின ... அன்னைக்குப் பெருமை சேர்க்க கவிதையைத் துணைக் கொள்கின்றான். (இரண்டாவது ஸ்திதி)
காஃப்காவைப் படித்த ஸ்கிட்ஸோப்ரீனியா நோயாளியைச் 'சிதறல் கதையில் காட்டும் இவர், நனையத் தோன்றுகிறவர்கள் கதையில் மரங்கள் பற்றி ரோல் விகஸின் வரிகளைக் குறிக்கின்றார், சலனம் கதையில் பேராசிரியர் தன் மனத்தை அடக்கப் பட்டினத்தார் பாடலைத் துணைக்கொள்வதாகச் சொல்கின்றார். 'பயணம்' கதையில் மழைத்தாரைகளைப் பார்த்தவன் எண்ணத்தில் பாரதியின் கவிதைவரிகளை நிரப்புகின்றார்: 'திசைகளற்று முகங்களற்று' கதையில் தேவதேவனின் கவிதையைக் கொண்டு வருகின்றார், 'அப்பா' கதையில் பல கவிதைகளைத் தருகின்றார். ஆக்டோபஸ்' கதையில் மறக்க முடியாத கவிதை ஒன்றைப் படைக்கின்றார்.
பாத்திர வார்ப்புத்தான் வாசகர்களை ஈர்க்கும் மாபெரும் சக்தியாகும். இன்பதுன்பங்கள், ஏமாற்றங்கள், அவற்றைத் தாங்கும் மன உறுதிகள், நம்பிக்கைகள், வாழ்வின் ஏற்ற இறக்கங்கள், நட்பின் இறுக்கங்கள். இறைப் பற்று, அன்பு, அந்நியமாகத் தோன்றல், எரிச்சல், ஆத்திரம் இன்ன பிற உணர்வுகள், முகங்களை அவ்வப்போது மாற்றும் இயல்புகள். இயற்கை விருப்பு, இலக்கிய விருப்பு எனத் தொடரும் மனித உணர்வுகளையும், ஒழுகலாறுகளையும் கொண்டு இவரது பாத்திரங்கள் வார்க்கப் படுகின்றன.
பொருளாதார ஏற்றத்தாழ்வினால் நட்பின் இறுக்கம் இடைவெளிதர அந்நியனாய் உணரும் ஜெயசீலன் (மனது). தன் தம்பியின் தவறுக்காகத் தந்தையை அதிகாரி பழிவாங்கிய கொடுமையை எதிர்க்கும் வர்மன் (அன்பு மிக்க அதிகாரிக்கு), மருத்துவமனையில் படுத்திருக்கும் கணவனுக்கு அவன் நண்பன் பண உதவி புரிவான் என்று எதிர்பார்த்து ஏமாற்றம் தழுவும் எம்ஸி (இடைவெளி), தங்கையை முதல் பிரசவத்திற்காகச் சேர்த்துவிட்டு சிறு பருவத்து நினைவுகளில் இதம் கண்டு துக்கத்திலும், ஆனந்தத்திலும் கண்ணீர் விடும் எபி (பிறகு வெளிச்சம் வரும்), காலத்தின் வேகத்தில் இஞ்சினீயர் கனவு நொறுங்கி காண்டிராக்டர் வீட்டுத் தோட்டத்தைப் பார்த்துக் கொள்ளும் பணிக்குத் தள்ளப்படும் சிறுவன் எபி (பூக்களைப் பறிப்பது வருந்தத்தக்கது), பிறகுக்கு ஆறுதல் கூறத் தெரியாத போதும் தனக்கு ஆறுதல் தாயின் மடியே எனத் தெரிந்து, அவள் மடியில் முகம் பதித்தழும் ஒரு சிறுவன் (ஆறுதல்), தனக்குக் கிடைக்காவிட்டாலும் மற்றவர்களுக்காவது அந்த வேலை கிடைக்க வேண்டும் என்றெண்ணும் இளைஞன் யோனா (நாளை பொழுது விடியும்), தனக்கு விருப்பமான செயலைச் செய்யவிடாமல் தடுக்கும் நேயத்தை இயற்கைக்க முடிய சூழ்நிலையால் தன்னுள் பல்வேறு முகங்களை ஒட்ட வைக்கும் ஓர் இளைஞன் (மறுபடியும் ஓர் மறுபடியும்)
பார்வை பேச்சு கடிதம் போன்றவற்றிக்கு அப்பாற்பட்டது காதல் என்பதை உணர்த்தும் எல்ஸி (காதல்), நான் - நீ - அவன் எல்லாமே நான் தான் என்று தவிக்கும் ஸ்கிட்ஸோப்ரீனியா நோயாளி (சிதறல்), பசுமையோடு இணைத்துக் கொண்ட வாழ்க்கையை வண்ணத்தில் மட்டுமே பசுமையைப் பார்க்க முடியும் சூழலில் இணைத்துக் கொள்ள விரும்பாத ஓர் இயற்கை விரும்பி (நனையத் தோன்றுகிறவர்கள்), மனித நேயத்தைக் கவிதைகளில் காட்டுவதைவிட வாழ்க்கையில் காட்டுவதே அர்த்த முள்ளதென நினைக்கும் கவிஞன் இளங்கோ (நாளையைக் குறித்தான இன்று) , வாழ்க்கையை எளிதாகப் பார்க்கத் தெரியாமல் பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்து பொறுமை இழந்து தவிக்கும் ஓர் இளைஞன் (அதுவரை) பிறரது நம்பிக்கையைவிட நினைவுகளே அதிகம் இதம் தருவன என்பதைக் காட்டும் பேச்சிழந்த ஜோ (நிலை), தந்தையைத் தோழனாக எண்ணி
அவர் மேல் அளவு கடந்த அன்பு காட்டும் மகன்கள் (கிறிஸ்துமஸ்ஸிற்கு முந்தின் தினங்கள், அப்பா) , அன்பில் ஊறித்திளைத்து அன்பான முட்டாளாக அசட்டுக் குணத்தாளாக அன்னையை நினைக்கும் மகன்கள் (கிறிஸ்து மஸ்ஸிற்கு முந்தின் தினங்கள், அறியாதிருந்த முகங்கள்)
மொத்தத்தில் இவரது கதைகள் தனி மனிதன். குடும்பம், சமுதாயம் , எனப் பல்வேறு நிலைகளில் மனித உணர்வுகளைப் படிப்பவர் உள்ளத்தில் ஆழ்தடமாய்ப் பதித்திடும் இயல்பின. இவரின் ஆக்கங்கள் மென்மேலும் தொடர்ந்து சிறந்து, சிறுகதை வரலாற்றில் தனித்ததோர் உயர் இடத்தை இவருக்குத் தேடித் தரவேண்டும் என்று வாழ்த்துகிறேன்.
முனைவர் நா.இளங்கோவன்
M.Phil., Ph.D., Dip. in Ling. Cert. in Malayalam., D.G.T.
Reader in Tamil, Government Arts College,
Melur - 625 106.
மனது
பாப்பு தான் சொன்னாள், கண்ணனிடம் போய்க் கேட்கும்படி
மதிய வெய்யிலில் ஆளற்றுப் போயிருந்த தெருவை ஜன்னலின் வழிவெறித்தபடி நின்றிருந்தான் ஜெயசீலன். சோர்வும், களைப்பும் முகத்தில் வியர்வையுடன் கசகசத்திருந்தது. பால் போட்டிராத காப்பியை அவனிடம் நீட்டியபடி, கண்ணனிடம் கேட்கிற விதம் பற்றிக்கூட சொல்ல ஆரம்பித்தாள் பாப்பு. மோர் வகையறாக்கள் அவனுக்குப் பிடிக்காது. அதனால்தான் காப்பி. இன்னமும் வேறு எதுவும் சாப்பிடவில்லை. பால் போட்ட காப்பி வீட்டில் குடித்துக் கூட நாட்களாகி விட்டன. சிக்கன நடவடிக்கையாகப் பால் வாங்குவதில்லை. தினம் ஒரே வேளைதான் ஏதோ சாப்பிட முடிகிற பொழுது... வேறு என்ன செய்ய...?
மழை பொய்த்து வந்த பவர்கட் ஜெயசீலன் வேலை செய்யும் பவுண்டரியை அதிகமாய் பாதித்து, அதில் சமீபத்தில்தான் சேர்ந்திருந்த அவனையும் கோரமாகப் பாதித்திருந்தது. நாள் முழுக்க வேறு வேறு இடங்களில் தின ஜீவியத்திற்காய் அலைச்சல்கள் தான். போன வாரத்தில் வேலை கிடைக்காத அலுப்பும் பசியுமாய் ஜெயசீலன் பஸ் ஸ்டாப்பிங்கில் நின்றிருந்த பொழுது அவனை உரசுகிறமாதிரி ஒரு ஸ்கூட்டர் வந்து நின்றது. அதன்மேல் இருந்தவன் இறங்கி, இவன் கைகளை இறுகப் பிடித்துக் கொள்ள, ஜெயசீலனுக்கு அவன் யாரென்று தெரியவில்லை. திகைத்து, முழிக்க அவன் படீரென்று ஜெயசீலனின்' முதுகில் அடித்து
என்னடா முழிக்கிறே? பாவி தெரியல என்னை? கண்ணன்டா
என்றதும், உடனே இவன் மறதித் திரை விலகிற்று.
கண்ணன்! பள்ளி நாட்களின் பிரிய சிநேகிதன். கண்ணன். ஜெயசீலனின் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு அருகிலிருந்த ஹோட்டலுக்குள் நுழைந்தான். சரளமாய்ப் பேச ஆரம்பித்தான். ஜெயசீலனுக்கு பிரமிப்பாகவும், சந்தோஷமாகவும், அதே நேரம் சங்கடமாகவும் இருந்தது. ஸீட் பிடித்து உட்கார்ந்தார்கள். தன் மடிப்புக் கலையாத ஷர்ட்டை நாசுக்காக மடக்கி விட்டுக்கொண்டு, டையைத் தளர்த்திக் கொண்டு. ஹெல்மெட்டை டேபிளின் ஓரமாக வைத்து விட்டு, தன் கண்ணாடியைக் கழற்றித் துடைத்தபடி சிரித்தான். ஜெயசீலனுக்குத் தன் அழுக்கு உடைகள் உறுத்தின.
மூணு மாசத்துக்கு முந்திதான் இந்த ஊர் வந்தண்டா. மாமனாரோட ஒரு கம்பெனியைத்தான் பார்த்துக்கிறேன். சிட்டி எக்ஸ்டன்ஸன்ல வீடு. HIG ப்ளாட்ஸ். உனக்கு கல்யாணமாயிருச்சா? என்ன பண்றே நீ?
ஜெயசீலன் இயல்பாய்ப் பேசத் தடுமாறினான். மழுப்பினான். தன் தற்போதைய நிலைமையைச் சொல்ல அதிக வெட்கமாய் இருந்தது அவனுக்கு. சர்வர் வர, 'ரெண்டு குலாப் ஜாமூன், ரெண்டு வெங்காய ஊத்தப்பம்.' என்றான் கண்ணன். சரேலென நிமிர்ந்து எச்சிலை விழுங்கிக் கொண்டு கண்ணனைப் பார்த்தான் ஜெயசீலன். மனசு நெகிழ்ந்து போயிற்று. ஆர்டர் செய்யப்பட்டவைகள்
அவனுக்கு மிகவும் பிடித்தவை. எத்தனை முறை பள்ளி நாட்களில் அவனும் கண்ணனும் அன்ன பூர்ணாவிற்குப் போய் இதைச் சாப்பிட்டிருக்கிறார்கள். அப்போதெல்லாம் பெரும்பாலும் அவன் தான் பில்லைக் கொடுத்திருக்கிறான். காசும் கையில் நிறையப் புரளும். எந்த விசேஷமென்றாலும் இந்த அயிட்டங்கள் தான்.
என்னடா ஜெய் அப்படிப் பார்க்கறே? உனக்குப் பிடிச்சதெல்லாம் இன்னும் ஞாபகம் வச்சுருக்கேன்னா? முட்டாள்! நாம் சாதாரணமாவா பழகினோம். லெட்டர் தொடர்பு இல்லாம போயிடுச்சுதான். ஆனாலும் இதெல்லாம் மறந்திடுமா என்ன? சரி, உன்னைப் பத்தி ஏண்டா எதையுமே சொல்ல மாட்டேங்கிறே?
அதெல்லாமில்லை கண்ணா. கல்யாணம் ஆயிடுச்சு. பாப்புன்னு அவபேர். ஒரு பவுண்டரிலதான் வேலைக்கு சேர்ந்திருக்கேன்
என்றான் ஜெயசீலன்.
ஏனோ தான் வேலையில் இல்லாமல் தற்போது இருப்பதைச் சொல்ல வேண்டாமென்று தோன்றியது.
வரும் முன் அதிகம் பசி இருந்தது உண்மைதான். ஆனாலும் ஜெயசீலனுக்கு சாப்பிட முடியவில்லை. பாப்பு அங்கே வீட்டில் சரியாகச் சாப்பிட்டு பல நாட்களாகி இருக்க, இங்கு இப்படி தான் ஸ்வீட் சாப்பிடுவது ஒரு குற்ற உணர்வாய் உறுத்தியது. என்றாலும் பிரிய , மனதிற்குகந்த சிநேகிதங்களின் எதிர்பாராத சந்திப்புகள் எப்பொழுதுமே. எல்லோருக்குமே, எந்தச் சூழ்நிலையிலேயும் அபரிமிதமான சந்தோஷத்தைத் தந்து விடுகின்றன. ஜெயசீலனும் மனதில் சந்தோஷத்தின் இதத்தை உணர்ந்தான்.
அவனையும், பாப்புவையும் வீட்டிற்கு வரச் சொல்லி அழைத்துவிட்டு, வழி. போன் நெம்பர் எல்லாவற்றையும் சொல்லிவிட்டுப் போனான் கண்ணன். அன்று அந்த நிறைவிலேயே வந்து - பாப்புவிடம் நடந்தவைகளை, பள்ளி நாட்களின் இனிய நினைவுகளை எல்லாம் சொல்லி மகிழ்ந்து பூரித்திருந்தான் ஜெயசீலன்.
கண்ணனின் வீடு, ஜெயசீலன் மனதிற்குள் கற்பனை செய்திருந்ததைக் காட்டிலும் பெரிதாய் இருந்தது. தான் வரப்போவதாய் ஏற்கனவே போன் மூலம் தெரிவித்திருந்தான் ஜெயசீலன். ஆனால் உதவி கேட்கப் போகிறோம் என்கிற நினைப்பு நெருடலாய் இனிய சிநேகிதனைச் சந்திக்கப் போகிற மகிழ்ச்சியைப் பாதித்திருந்தது.
காலிங் பெல்லை அழுத்தினான். மென்மையான மணி ஒலித்த சில நிமிஷங்களில் கதவு திறந்தது. அழகுடன் இருந்த அவள் கண்ணனின் மனைவியாக இருக்குமோ என்று நினைத்தபடி " ஏங்க மேடம், கண்ணன் இருக்காருங்களா? நான் ஜெயசீலன். இன்னிக்கு வர்றதா சொல்லி... ஜெயசீலன் தயக்கமாய் சொல்லி முடிக்கும் முன், அவள் இவன் வருகையை எதிர்பார்த்துக் காத்திருந்ததைப் போல,
முகம் மலர இயல்பாய் சிரித்து... வாங்க... வாங்க அவர் வந்துடுவார். இதோ புறப்பட்டுட்டேன் வந்தா உட்கார வைன்னு போன் பண்ணினார். நேத்து ராத்திரி முழுக்க உங்க புராணம்தான்.
என்றபடி ‘எக்ஸ்கியூஸ்மி' யுடன் உள்ளே போனாள். அவள் அப்படிச் சொன்னது இவனுக்குப் பெருமையாக இருந்தது. சின்னதாய் சிரித்துக் கொண்டான்.
வீட்டின் வளமை அவனைப் பிரமிக்க வைத்தது. மொசைக் பளபளக்கும் அழகான ஹால். உட்கார புதைந்து போக வைக்கிற மென்மைமிகு சோபாக்கள், டி.வி. பிரமாண்ட ஸ்டீரியோ, வண்ண வண்ண போஸ்டர்கள் என்று நவீன யுகத்தின் சகலமும் இருந்தன. எதிரிலிருந்த டீபாயின் மேல் கிடந்த புத்தகம் ஒன்றை எடுத்துப் புரட்ட ஆரம்பித்தான்.
உங்களுக்கே தெரியும்தான். இருந்தாலும் நான் சொல்றதில் தப்பில்லங்க. அவரைப் பார்த்ததும் உடனே கேட்காதீங்க. நிதானமா பேசிட்டிருக்கப்ப கேட்கலாம். நீங்க சொன்னதை வச்சுப் பார்த்தா அவர் பழசை மறக்கலேன்னுதான் தோணுது. கஷ்டத்தில் உதவறது தானுங்க சிநேகமெல்லாம். இதில் நீங்க கேக்காம அவருக்கு உங்க நிலைமை தெரியுங்களா? நாம் பிச்சை கேட்கலையே, வெறும் உதவிதானே. அவரு கண்டிப்பா செய்வாருங்க.
ஜெயசீலனின் மனதில் பாப்பு சொன்னது ஒலித்துக் கொண்டிருக்கும் பொழுதே, கண்ணன் வேகமாய் உள்ளே வந்தான். வெடுக்கென்று ஜெயசீலன் பார்த்துக் கொண்டிருந்த புத்தகத்தைப் பிடுங்கிவிட்டுச் சிரித்து, ஸாரிம்மா லேட் ஆயிடுச்சு. காக்க வச்சுட்டனா? நீ வர்றப்ப நான் இல்லாமப் போயிட்டனேடா" என்றான்.
அதனால என்ன கண்ணா ?
என்றான் ஜெயசீலன். கண்ணன் அப்படிச் சொன்னது மிகுந்த திருப்தியைக் கொடுத்தது. அவனின் இந்த மாறாத அந்நியோன்னியம் அவனின் உன்னதமான மனதைக் காட்டுவதாக நினைத்தான். அதற்குள் அவள் லெமன் ஜூஸுடன் வர, டேய். நீ பார்த்துட்ட. இருந்தாலும் அறிமுகப்படுத்தனுமில்லையா, இவள் இந்திராணி. என் எஜமானி
என்றபடி அவளைப் பொய் பவ்யத்துடன் கண்ணன் வணங்க, அவள் அழகாகச் சிரித்தாள். அவர்கள் அப்படி நடந்து கொண்டது ஜெயசீலனுக்கு சந்தோஷத்தைக் கொடுத்தது. குடித்ததும், அவனைக் கூட்டிக் கொண்டுபோய் வீட்டைச் சுற்றிக் காட்டினான்.
தங்களின் பெட்ரூமிற்கு அழைத்துப் போய், ஜெயசீலனை உட்காரச் சொன்ன பொழுது, அந்தப் பெரிய, அழகான கட்டிலில் உட்காரத் தயங்கியபடி, டிரஸ்ஸிங் டேபிளின் எதிரில் இருந்த சின்ன ஸ்டூலை இழுத்துப் போட்டு உட்கார்ந்தான். உடனே கண்ணன் கோபமாய் முறைத்தான்.
'டேய், மரியாதையா இங்கே வாடா" என்ற திட்டலுடன் அவனே எம்பி, ஜெயசீலனின் கையைப் பற்றி இழுக்க, தொம்' மென கட்டிலில் வந்து விழுந்தான். ஃபோர்ம் பெட் அழுந்தி மெல்ல அசைந்தது. அதன் மென்மையில் ஆச்சர்யப்பட்டான்.
ஏண்டா அப்படி ஒதுங்கறே? ப்ரீயா இரேன்
என்றபடி கண்ணன். 'டேப்'பை ஆன் செய்ய, மறைந்திருந்த ஸ்பீக்கர்களின் வழியே வெகு துல்லியமாய் அந்தப் பாட்டு வழிந்தது இனிமையாக, மிக இனிமையாக,
சலத்தே. சலத்தே. மேரே தில்லு மே...
அதிர்ந்து விட்டதைப் போல ஜெயசீலன் பதட்டமாய் எழுந்து உட்கார்ந்தான்.
என்ன ஜெய், ஆச்சர்யமா இருக்கா? நேத்தைக்கே எப்படியோ இந்த கேசட்டைத் தேடிப் புடிச்சு ரெடியா செட் பண்ணி வச்சிட்டேன். நீ வந்ததும் போடணும்னு தான்.
ஜெயசீலனுக்கு அழுகை வரும் போலிருந்தது. வெகு அபூர்வமான மகாமுக்கிய விருந்தாளியை நடத்துவதைப் போல் தன்னை நடத்துவது, வெகு விசித்திரமான வகையில் மனதில் ஏதோ பாரமாய் அழுத்தியது. அவனின் இப்படியான ஒவ்வொரு செயலும். தன்னை அதிகம் பாதிப்பதாய்க்கூட உணர்ந்தான். ஆனால் இந்த பாதிப்பு எந்த வகையிலானது என்று புரியவில்லை.
S.S.L.C. பிரிவு உபசார தினத்தன்று எல்லாம் முடிந்த பிறகும் கூட, அவனும், கண்ணனும் பிரிய மனமில்லாமல் சுற்றிக் கொண்டிருந்தார்கள். அன்றிரவு ஜெயசீலன் கண்ணனை ஹோட்டல் கேசினோவிற்குக் கூட்டிப் போனான். அங்கு 'ஜூக் பாக்ஸ்' வைத்திருந்தார்கள். அதில் காசைப் போட்டு இந்த 'சலத்தே சலத்தே' யைத்தான் வைத்தான். 'கண்ணா இது என்ன அருமையான பாட்டு தெரியுமா? பிரிவு பத்தி அருமையா சொல்ற பாட்டாம். எங்க அண்ணா அர்த்தம் சொன்னார் என்று அதிகம் உணர்ச்சி வசப்பட்டவனாய் தனக்குச் சொல்லப் பட்டவைகளை எல்லாம் சொன்னான் ஜெயசீலன். அதன் பிறகு அந்தப் பாட்டை எங்கே, எப்போது கேட்கும் பொழுதும். இந்த சம்பவமும், தான் சொன்னதும் கண்கலங்கி அழும் நிலைக்கு அன்று போய்விட்ட கண்ணனின் முகமும் மனதுள் வந்து போகும்.
ஆனால் இப்போது ஜெயசீலனுக்குக் கண் கலங்கி இருந்தது. பேச வார்த்தைகளற்றுப் போனதைப் போல, உதட்டைக் கடித்துக் கொண்டு, கண்ணனின் கைகளை மெல்லப் பற்றி அழுத்தினான் ஜெயசீலன். அந்த அழுத்தத்திலேயே அவனின் மன உணர்வுகளைப் புரிந்து கொண்டவன் போல மெல்லப் புன்னகைத்தான் கண்ணன்.
சமயம் பார்த்து சாதாரணமாக் கேளுங்க. கேக்கறப்ப மனசுக்குள்ள நீங்களாவே சுணங்கிக்காதீங்க
என்று சொல்லியிருந்தாள் பாப்பு.
ஜெயசீலன் எதையும் கேட்கவில்லை. அந்த உன்னதமான மெளன நிமிஷங்கள் எதாலும் கலைக்கப்படாமலிருக்க வேண்டும் என்கிற மாதிரி, கண்ணனையே பார்த்துக் கொண்டிருந்தான். இந்த மகத்தான , மறதி தீண்டியிராத அன்பைத் தன்னால் தாங்க முடியாது என்று விநோதமாக உணர்ந்தான். அவன் வேறு எந்த மாதிரி (அது எந்த விதமாக என்றும் தெரியவில்லை) நடந்து கொண்டால் தன்னால் இயல்பாய் இருந்திருக்க முடியுமென்று நினைத்துக் குழம்பினான்.
இந்து, நாங்க ஸ்கூல் படிக்கிறப்ப ஜெயசீலன் தான் அநேகமா தினம் என்னை ஓட்டலுக்குக் கூட்டிப் போவான். காபி ஹவுஸ்ல இட்லி வடை அட்டகாசமா இருக்கும். அதான் தினத்துக்கும். அப்பல்லாம் நிறையக் காசு வச்சிருப்பான். நான் பல தடவை நெனைச்சிருக்கேன், நான் எப்பதான் இவனுக்கு இப்படி வாங்கித் தரப்போறோமோன்னு...
டைனிங் டேபிளில், அவனுக்கும், கண்ணனுக்கும், இந்திராணி பரிமாறிக் கொண்டிருக்க கண்ணன் சொல்லிக் கொண்டிருந்தான். ஜெயசீலன் ஒரு புன்னகையை உதடுகளில் தக்க வைத்துக் கொண்டிருக்க வெகுசிரமப்பட்டுக் கொண்டிருந்தான். தாழ்வு மனப் பான்மை மனதை அரிக்க ஆரம்பித்திருந்தது. அதனுடன் ஏக்கமும், லேசான பொறாமையும், ஆற்றாமையும் கூட சேர்ந்திருக்கிறதோவென்று ரகசியமாய் பயந்தான்.
இது போதாதென்று ...
அவர் கண்டிப்பா செய்வார்ன்னு தோணுதுங்க. ஆனா நீங்க கேக்கறதைப் பொறுத்துதான் எல்லாமே
என்றாள் பாப்பு மனதுள். ஆனால் இத்தனை நேரமாகியும் இன்னும் கேட்கவில்லை.
"டேய் ஜெய் சாப்பிடுறா. அப்படி என்ன யோசனை?