நாரத பக்தி சூத்திரம்
()
About this ebook
'நாரதர் என்றால் பக்தியின் உருவம்' 'பக்தி என்றால் நாரதர்' என்பது காலம் காலமாக வழக்கத்தில் இருந்து வருகிறது. அன்பின் சிகரம் ஆனந்தத்தின் சிகரம் மௌனத்தின் சிகரம், நகைச்சுவையின் சிகரம் மற்றும் ஞானத்தின் சிகரமாகிய சத்குரு ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் அவர்கள் அருளிய நாரத பக்தி சூத்திரங்கள். (அன்பின் மணிமொழிகள்)
Related to நாரத பக்தி சூத்திரம்
Related ebooks
Sree Matha Rating: 5 out of 5 stars5/5Thiruppavai Rating: 0 out of 5 stars0 ratingsஸ்ரீ விஜயேந்திர வாணி Rating: 0 out of 5 stars0 ratingsSankarar Endra Sangeetham Rating: 0 out of 5 stars0 ratingsDeiveega Ragasiyangal! Rating: 0 out of 5 stars0 ratingsSri Kanchi Mahanin Padhugai Mahimaigal Rating: 0 out of 5 stars0 ratingsSwami Part - 1 Rating: 0 out of 5 stars0 ratingsSwamy Ramatheethar Aathma Anubavam Rating: 0 out of 5 stars0 ratingsVazhvil Vetri Pera Chinmayanatharin Bathilgal! Rating: 0 out of 5 stars0 ratingsAadhi Sankararin Aanma Bodham Rating: 0 out of 5 stars0 ratingsSri Mahavishnu Mahatmyam Rating: 0 out of 5 stars0 ratingsPurana Thuligal Part - 1 Rating: 0 out of 5 stars0 ratingsOru Mahaanin Avatharam Rating: 0 out of 5 stars0 ratingsSri Annaiyin Vazhviyal Vazhikattuthal Rating: 0 out of 5 stars0 ratingsDeivathin Kural – Vol 1 Rating: 0 out of 5 stars0 ratingsVainavathin Perumaiyum Adiyargal Magimaiyum! Rating: 0 out of 5 stars0 ratingsDeivathin Kural – Vol 6 Rating: 0 out of 5 stars0 ratingsKural Selvam Rating: 0 out of 5 stars0 ratingsChinna Chinna Kathaigal 100 Rating: 0 out of 5 stars0 ratingsSri Kanchi Mahanin Karunai Alaigal Rating: 0 out of 5 stars0 ratingsAbirami Andhadhi Rating: 0 out of 5 stars0 ratingsMaha Periyavaa - Part 1 Rating: 0 out of 5 stars0 ratingsAzhagu Muruganin Aalayangal Rating: 0 out of 5 stars0 ratingsDeivathin Kural - Part 2 Rating: 0 out of 5 stars0 ratingsPandaripurathu Mahaangal Rating: 0 out of 5 stars0 ratingsDeivathin Kural Part - 5 Rating: 0 out of 5 stars0 ratingsMaha Periyavaa - Part 9 Rating: 0 out of 5 stars0 ratingsVaazhathane Vazhkkai Rating: 0 out of 5 stars0 ratingsMagizhchiyaga Vaazhungal Rating: 1 out of 5 stars1/5Maha Periyavaa - Part 2 Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for நாரத பக்தி சூத்திரம்
0 ratings0 reviews
Book preview
நாரத பக்தி சூத்திரம் - பூஜ்ய. ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்
ச.
தெய்வீகத்திற்கு ஒரு பாலம்
லேக் தாஹோ, அமெரிக்கா
9 ஜூலை 2001
ஓம் நமோ பகவதே வாசுதேவாய
ஓம் நமோ பகவதே வாசுதேவாய
ஓம் நமோ பகவதே வாசுதேவாய
வாழ்க்கை அன்பிலிருந்து உருவாகிறது. அன்புதான் மூலம். வாழ்க்கை அன்பைத் தேடுகிறது. வாழ்க்கையின் இலக்கும் அன்புதான். இடையிலும் வாழ்க்கையை அன்புதான் தாங்குகிறது. இப்பூமியில் அன்பே தெரியாத அல்லது அன்பே இல்லாத பிராணியோ அல்லது வாழ்ந்துகொண்டு இருக்கும் ஜீவனோ ஒன்றுகூட இல்லை. ஆனாலும் அன்பு அதன் பல சிதைவுகளால், வாழ்க்கையில் மிக அதிகமான துயரங்களைக் கொண்டு வருகிறது.
அன்பை மூன்று பண்புகளாக உணர்ந்து கொள்ளலாம்.
- கனிவு அல்லது கருணை.
- தோழமை அல்லது நட்பு.
- மரியாதை அல்லது உயர்மதிப்பு
நாம் அன்பு என்னும் பொருளால் செய்யப்பட்டு இருந்தால், நாம் ஏன் அன்பை அனுபவிப்பதில்லை? ஏன் இவ்வளவு அதிகமான துயரங்கள் இருக்கின்றன? படைப்பின் ஒவ்வொரு இடத்திலும் அன்பு இருந்தால், அன்பைத் தேடுதல், ஏன் இன்னும் இருக்கின்றது? நாம் ஏன் அன்பைத் தேடுகிறோம்? இந்தக் கேள்விகள் மனிதனின் மனதைத் தொல்லைப் படுத்த ஆரம்பித்துவிட்டால், அப்போதே அவனுடைய ஆன்மீகப் பயணம் ஆரம்பித்து விடுகிறது. அன்பு என்றால் என்ன? நாரத முனிவர் இந்த பக்தி சூத்திரங்களை - அன்பின் நீதி மொழிகளை நமக்கு அளித்திருக்கிறார்.
முதல் சூத்திரத்தில் அவர் கூறுவது -
அதாதோ - 'பக்தி' என்றால் என்ன? தெய்வீக ஈடுபாடு என்றால் என்ன? - என்பதைப் பற்றி நான் தெளிவாகக் கூறுகிறேன்.
அதாதோ பக்திம் வ்யாக்யாஸ்யாமஹா
குறையில்லாத அன்பு என்றால் என்ன? எல்லா அன்பிற்கும் மகுடமாகயிருக்கும் அன்பு, என்றால் என்ன? அன்பின் அனைத்து வகைகளையும் தன்னுள் பொதிந்து வைத்திருக்கும் அன்பு எது? அப்படிப்பட்ட மிக உன்னதமான அன்புதான், கடவுள் பக்தி. அந்த அன்பு என்ன என்பதைத் தெளிவாக கூறுகிறேன். அந்த அன்பு என்ன? எவ்விதமான உணர்வுகளாக இருந்தாலும் சரி, உணர்வுகளை விவரிப்பது மிகவும் கடிமான செயல். உணர்வுகளை வார்த்தைகளில் தெரிவிப்பது, அல்லது உணர்வுகள் என்ன என்பதை அறிவுபூர்வமாக ஒருவரைப் புரிந்துகொள்ளச் செய்வது எளிதான காரியம் இல்லை. மிகப்பெரிய செயல்.
நாரதர் துணிகரமாகச் செயலாற்றியிருக்கிறார் - நாரதர் ஒருவரால்தான் துணிகரமாகச் செயல்பட முடியும். யார் ஒருவர் மிகுந்த கடவுள் பக்தியுடன் வாழ்ந்து இருக்கிறாரோ அவரால்தான் துணிகரமாக அதை விவரிக்க முடியும், முதல் சூத்திரத்தில் நாரதர் கூறுகிறார் -
அதாதோ - இப்பொழுது அன்பு என்பதைத் தெளிவாகக் கூறுகிறேன். எவர் ஒருவர் அன்பைத் தேடுபவராக இல்லையோ அல்லது, வாழ்க்கையின் பல அங்கங்களைப் புரிந்து கொள்ளவில்லையோ, அவரால் நாரதர் கூறுவதை கிரஹித்துக் கொள்ள இயலாது. 'நான் துயரத்திலிருந்து விடுபட்ட அன்பைப் பற்றியும், பற்றுதலில்லாத அன்பைப் பற்றியும், சிக்கலிலிருந்து விடுபட்ட அன்பைப் பற்றியும் எல்லாவிதமான பந்தங்களிலிருந்து விடுபட்ட அன்பைப் பற்றியும், புரிந்துக்கொள்ள வேண்டும்' என்ற உந்துதல் ஒருவருக்கு வரவேண்டும். அத்தகைய ஆழமான உந்துதல் மனதில் எழ ஆரம்பித்துவிட்டால் அப்போது குரு, ரிஷி, முனிவர்களின் ஞான வார்த்தைகள், மனிதர்களுடைய
இதயத்தில் ஆழ்ந்து உணரும்படியாக இருக்கும். அதைப்போன்ற தேடும் வேட்கை உடையவருக்கே நாரதர், நான் இப்போது இறைபக்தியைப் பற்றித் தெளிவாகச் சொல்கிறேன்
என்று கூறுகிறார்.
'நாரதர்' என்ற வார்த்தையே அழகானது. அது ஒரு சக்கரத்தின் வளைவான வெளிபாகத்தை மத்திய பாகத்தோடு இணைக்கும் ஆரக்கம்பி. உங்களை நடுநிலையில் பிடித்துவைத்து இருப்பவர் நாரதர். அடிக்கடி அன்பு உங்களை நடுநிலையில் இருந்து விலகச்செய்கிறது. சமநிலையில் இருந்து தடுமாறச் செய்கிறது. அன்பு, உங்களை உணர்ச்சியளவிலும். உடலளவிலும் பலஹீனம் அடையச் செய்கிறது. இந்தப் பூமியில் அன்பு மிகுந்த வலிமை வாய்ந்ததாக இருந்த போதிலும், விவேகமில்லாவிட்டால் அது உங்களை பலஹீனம் அடையச் செய்கிறது, இல்லையா? நாரதர் உங்களை நடுநிலையில் நிறுத்தி, உங்கள் வாழ்க்கையை அன்பெனும் சிகரத்தின் உச்சிக்கு உயர்த்துகிறார். அவர் கூறுவது -
ஸா த்வஸ்மின் பரம் ப்ரேம ரூபா
கடவுள் பக்திதான் அன்பின் உன்னத நிலை. அதுவே அன்பின் சிகரம். மானிட அன்பு அடிக்கடி வெறுப்பாகவும், கோபமாகவும், தாழ்வுணர்ச்சிகளாகவும் மாறுகிறது. ஆனால் தெய்வத்திடம் செலுத்தும் அன்பு மாறுவதில்லை. அடுத்த சூத்திரம் கூறுகிறது -
அம்ருத ஸ்வரூபா ச
அன்பு அழிவில்லாதது, இறப்பில்லாதது, ஏனெனில் அது நிபந்தனைகளற்றது. அது கட்டுப்பாடுகளைக் கடந்தது. நீங்கள் ஒருவரிடம் அன்பு செலுத்தும் போது, அவர் உங்களுக்கு என்ன செய்கிறார், எப்படி நடந்துகொள்கிறார் என்றல்லாம் கவலைப்படுவதில்லை. நீங்கள் அவர்களை உண்மையாக நேசிக்கிறீர்கள். தாய் குழந்தை உறவிலும் கூட, குழந்தைகள் தாயிடம் கனிவாக நடந்துக்கொள்ளாமல் இருந்தாலும், தாய் எப்போதும் கனிவாக இருக்கும் உதாரணங்களைக் கண்டிருப்பீர்கள்
நான் இரயிலில் நடந்த ஒரு சம்பவத்தைப் பற்றிக் கேள்விப்பட்டேன். அங்கு ஒரு மகனுக்குத் தன்னுடைய வயதானதாயிடம் வாக்குவாதம் ஏற்பட்டது. மகன் தாயை அடித்துவிட்டான். தாய் அதனால் பல இடங்களில் காயப்படுத்தப்பட்டாள். ஆனால் காவல்துறை அதிகாரி மகனைப் பிடித்துக்கொண்டு போக அங்கு வந்தபோது, அந்தத்தாய் அவரிடம், வேண்டாம், வேண்டாம் என் மகனை ஒன்றும் செய்யாதீர்கள்
என்றாள். தன்னிடம் கொடூரமாக நடந்துக்கொண்ட தன் மகனை, அவர் பிடித்துக் கொண்டு போவதைத் தடுத்து, கோபத்துடன் பரவாயில்லை , அவன் எனது மகன்
என்று கூறுகிறாள். காவலர் மகனைக் கண்டிக்க முயன்றபோதும் அந்தத்தாய் அதை விரும்பவில்லை.
அன்பு நிபந்தனையற்றது. அப்படிப்பட்ட நிபந்தனையற்ற அன்புதான், அமிர்த ஸ்வரூபம் - அழிவில்லாதது. அது உங்களை அழிவில்லாதவராகச் செய்கிறது. அது ஒருநாள் நீங்கள் அன்பு வசப்படுவது, அடுத்த நாள் அதிலிருந்து வெளிவருவது என்பதைப் போன்றதல்ல. கடவுள் பக்தி அப்படிப்பட்டது அல்ல. நீங்கள் அனுதினமும் உணராவிட்டாலும், அது உங்கள் உள்ளத்தில் ஆழ்ந்து இருக்கிறது. பெரும்பாலும் மக்கள் ஒருநாள் மிகுந்த பக்தியை உணருவார்கள்; அதையே மறுபடியும் உணர்வதற்கும் பயிற்சிகளைத் திரும்பத் திரும்பச் செய்வார்கள். ஆனால் அது நடப்பதில்லை. ஆயினும் அது அழியாமல் இருந்துக்கொண்டு இருக்கிறது. ஒருவர் அன்பின் சிகரத்தை ருசித்துவிட்டால் அதை ஒரு பொழுதும் மறக்க இயலாது; அதை விடவும் முடியாது. அதனால் அத்தகைய அன்பு என்பது எப்போதும் அழியாது.
யல்லபத்வா புமான் ஸித்தோ பவதி
அம்ருதோபவதி த்ருப்தோ பவதி
அத்தகைய அன்பை உணர்ந்தவுடன், மனிதனின் வாழ்க்கை முழுமை அடைகிறது. அதன்பின் உங்களிடம் ஏதும் இல்லை என்று நீங்கள் உணர்வதில்லை. அத்தகைய குறைகளற்ற முழுமை உங்கள் வாழ்க்கையில் உதயமாகிறது.
சித்தோ பவதி அமிர்தோ பவதி -
உங்கள் உள்ளத்தின் ஆழத்தில் என்றுமே முதுமை அடையாத, அழியாத ஏதோ ஒன்று இருக்கிறது என்பதை நீங்கள் உணர்ந்து கொள்கிறீர்கள்.
த்ருப்தோ பவதி -
அது அப்படிப்பட்ட நிறைந்த திருப்தியைத் தருகிறது. அன்பு அப்படிப்பட்ட முழுத்திருப்தியை வாழ்க்கையில் அளிக்கிறது.
யத் ப்ராப்ய ந கிஞ்சித் வாஞ்சதி ந ஷோசதி,
ந த்வேஷ்டி, ந ரமதே, ந உத்ஸாஹி பவதி.
அதை உணர்ந்தவுடன் உங்களுக்கு வேறு ஆசைகளோ, விருப்பங்களோ இருப்பதில்லை.
ந ஷோசதி - நீங்கள் எதற்கும் உட்கார்ந்து கொண்டு அழுவதில்லை. அங்கு துக்கம் இருப்பதில்லை.
ந த்வேஷ்டி - எதையும் வெறுப்பதில்லை
ந ரமதே - இதைவிட, களிப்பு அடைவதற்கு வேறு எதுவும் இல்லை. எதுவும் உங்களை சமநிலையில் இருந்து இழுப்பதில்லை; கவர்ச்சியாகவும் இருப்பதில்லை.
ந உத்ஸாஹி பவதி - எந்த உணர்ச்சியும், தூண்டுதலும் உங்களை ஆகாயத்தில் எழும்பிக் குதிக்கச் செய்வதில்லை. அதனால் நீங்கள் உற்சாகம் சிறிதும் இல்லாதவராய் இருப்பிர்கள் என்று அர்த்தம் இல்லை.
ந உத்ஸாஹி பவதி - நீங்கள் எதைப்பற்றியும் அளவுக்கதிகமாக உற்சாகமும், கிளர்ச்சியும் அடைவது இல்லை .
யத் ஞாத்வ மத்தோ பவதி, ஸ்தப்தோ பவதி, ஆத்மாராமோ பவதி.
மத்தோ பவதி - இதை உணர்ந்த நீங்கள் பரமானந்த நிலையடைவீர்கள்.
ஸ்தப்தோ பவதி, - அமைதியோடு தன்னுள் ஆழ்ந்து மோனநிலையில் இருப்பீர்கள்.
ஆத்மாராமோ பவதி - நீங்கள் உங்களுக்குள்ளேயே சுகமாக இளைப்பாறுகிறீர்கள். அன்புதான் உங்களை அப்படி உள்ளாழ்ந்து ஓய்வு எடுக்கச்செய்யும். அன்புதான் உங்களை அமைதிப்படுத்தும்.
மத்தோ பவதி - அன்புதான் உங்களை பரமானந்த நிலையை அடையச் செய்யும். பல தரப்பட்ட ஆனந்த நிலைகள் உள்ளன. ஆனால் அன்பிலிருந்து வரும் பேரானந்த நிலை மிக உன்னதமானது. நீங்கள் பிரமிப்படைகிறீர்கள், வியப்படைகிறீர்கள். இது திகைப்பானது!
ஆத்மாராமோ பவதி - அது உங்களைத் தன்னுள் ஆழ்ந்து அமைதியடையச் செய்கிறது.
நாரத முனிவர் நம் வாழ்வின் மூன்று நிலைகளைப் பற்றியும் இங்கு விவரிக்கிறார். நீங்கள் உணர்ச்சி பூர்வமாக ஆனந்த நிலையை அடைவது, அறிவு பூர்வமாக பிரமிப்பு நிலையை அடைவது, மற்றும் நீங்கள் உங்கள் ஆத்மாவுடன் ஒன்றி அமைதியில் ஆழ்வது. நம் வாழ்வில் ஆத்மா, அறிவு உணர்ச்சி என்று மூன்று நிலைகள் உள்ளன. இந்த மூன்று நிலைகள் மீதும் எப்படி அன்பிற்கு இவ்வளவு ஆழமான தாக்கம் இருக்கிறது? ஏக்கங்கள், ஆசைகள், வெறுப்புகள் ஆகியவை, இதயத்தில் எழுகின்றன. அறிந்துகொள்ளும் ஆவல், ஆர்வம், ஆராய்வு இவை மூன்றும் அறிவு நிலையில் இருக்கின்றன. மனக்கிளர்ச்சியினால் இன்பம் உண்டாகிறது. அதனால்தான் மனிதர்கள் பெரும்பாலும் பத்திரிகைகளைப் படிக்கும்போதும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்க்கும் போதும், இன்பம் அடைகிறார்கள். அல்லது மேலும் பார்க்க வேண்டுமென்று ஆசைப்படுகிறார்கள். இவை அனைத்தும் அறிவாற்றலை அமைதிப்படுத்துவதற்கும் 'தெரிந்துகொள்ள வேண்டும்' என்ற அறிவின் உந்துதலைத் திருப்தி படுத்துவதற்கும்தான். ஆனால் ஆழ்ந்த பக்தியைப் போன்று ஆச்சரியப்படத்தக்கது, உன்னதமானது வேறு ஒன்றும் இல்லை .
ஸ்தப்தோ பவதி ஆத்மாராமோ பவதி
இது ஒரு உணர்ச்சிபூர்வமான பயிற்சியா? அல்லது இது நம்மை உன்னதமான, 'தன்னை உணர்தல்' என்ற உண்மைக்கு அழைத்துப் போகுமா? அதற்கு முனிவர், அது தன்னை உணர்தல் என்ற நிலைக்கு அழைத்துச் செல்கிறது
என்று கூறுகிறார். ஏனெனில் பக்தியும், அன்பும் அத்தகைய திறம் வாய்ந்தவை.
லேக் தாஹோ, அமெரிக்கா
10 ஜூலை 2001
ஓம் நமோ பகவதே வாசுதேவாய
ஓம் நமோ பகவதே வாசுதேவாய
ஓம் நமோ பகவதே வாசுதேவாய
யத் ஞாத்வா மத்தோ பவதி,
ஸ்தப்தோ பவதி,
ஆத்மாராமோ பவதி.
இதை உணர்ந்துகொண்டவுடன் உங்களுக்குத் தன்னை மறந்த ஆனந்தநிலை உண்டாகிறது. அத்துடன் மந்திரத்தால் கட்டுண்டது போன்ற நிலையெய்தி தன்னுள்ளே, சுகமாக அமைதியில் ஆழ்ந்து போவதும் நிகழ்கிறது. அன்பைப் போல் ஆனந்தம் தருவது, களிப்பூட்டுவது வேறு ஒன்றும் இல்லை. மனிதர்கள் உபயோகிக்கும் அனைத்து வகையான கேளிக்கை மற்றும் எல்லாவிதமான போதை சாதனங்களும் அன்பில் திளைக்கவும், அன்பைத் தேடுவதற்காகவும்தான். ஆனால் அவர்கள் அன்பைத் தவறான இடத்தில் தேடுகிறார்கள். ஏமாற்றத்தாலும், நிறைவு அடைய இயலாமையாலும், போதையூட்டும் பதார்த்தங்களை நாடிப் போகிறார்கள். இல்லையா? நீங்கள் ஆனந்த மயக்கத்தில் இருக்கும்போது, என்ன நடக்கிறது? 'இரண்டு' என்பது காணாமல் போகிறது; 'மற்றது' என்பது மறைந்துவிடுகிறது. 'மற்றது' என்பது மறைந்தால் நீங்கள் மிகவும் ஓய்வாக இருப்பீர்கள். அன்புதான் அத்தகைய ஓய்வையும், சுகத்தையும் தருகிறது.
தெய்வீக அன்பு உங்களை ஆனந்த போதையில் ஆழ்த்துகிறது. தெய்வீக அன்பை அறிந்தவுடன் நீங்கள் ஆனந்தமடைகிறீர்கள். மந்திரத்தால் கட்டுண்டவர்களாகிவிடுகிறீர்கள். பிரமித்துவிடுகிறீர்கள்.
நாம் துயரம் அடையும்போது அநேக கேள்விகள் கேட்கிறோம். என்ன இது
ஏன் இது
? இந்தக் கேள்விகள் ஆச்சர்யங்களாக மாறும்போது அன்பு எழுகிறது. அன்பு அதிகக் கேள்விகள் எழுவதற்கு இடமளிக்காது. அதுவே எல்லா கேள்விகளுக்கும் விடையாக விளங்குகிறது.
அன்பு உண்மையில் ஒரு பாதையல்ல. அதுவே நமது இல்லம். அன்பு உங்களை, உங்களது உள்ளமாகிய இல்லத்திற்குள் திரும்ப அழைத்துப் போகிறது. அன்பு ஒரு செய்கை அல்லது செயல் அல்ல. அது ஒரு பலன். அடுத்து, அதை எப்படி அடைவது? அதுதான் எனக்கு வேண்டும்.
என்ற கேள்வி எழுகிறது. ஆமாம், நீங்கள் சொல்வது சரி. அதை எப்படி அடைவது? அது எனக்கு வேண்டும். நான் அதை அடைய விரும்புகிறேன்
என்ற கேள்விகள் எழுகின்றன. அப்போது முனிவர் கூறுவது -
ஸா ந காம்யமாநா, நிரோத ரூபத்வாத்
அது (அன்பு) விரும்பும் பொருளாக இருக்க முடியாது. ஆசை அழிந்துவிட்டால் அன்பை உணரமுடியும், அனுபவிக்கவும் இயலும். அன்பை ஆசைப்படும் பொருளாகக் கருதாதீர்கள். ஆசை என்றால் என்ன? இப்போழுது இங்கு இருப்பதில் விருப்பமில்லை , 'அது, பிறகு மற்றும் எதிர்காலத்தில் கிட்டும் வேறொன்று', என்பதுதான் ஆசை. ஆசை ஜுரவேகத்தை மனதில் உண்டு பண்ணுகிறது. ஆனால் அன்பு குளிர்ச்சியான விளைவுகளைத் தருகின்றது.
ஸ ந காம்யமானா - அன்பை ஆசையின் பொருளாகக் கருதாதீர்கள், ஆசை குறையுமானால் இங்கேயே இப்பொழுதே நீங்கள் அன்பு நிறைந்திருப்பதைத் தெளிவாக உணருவீர்கள். அதனால்தான் புத்தர் ஆசைகள்தான் துயரத்திற்கும், துக்கத்திற்கும் காரணம்
என்றார். அன்புதான் அனைத்து ஆசைகளின் இலக்கு. அதை அடையாவிட்டாலும், அனுபவிக்காவிட்டாலும், கோபமும், வெறுப்பும் வருகின்றன. அன்பிற்காக வரும் ஆசைகள் அனைத்து விதமான குறைபாடுகளையும் கொண்டு வருகின்றன. உதாரணத்திற்கு, ஏமாற்றங்கள். நிறைவேறுகிறதோ, இல்லையோ, ஆசைகள் விரக்தியைக் கொண்டு வருகின்றன. இதுதான் ஆசையின் தன்மை. அன்பை ஆசைப்பட்டால் மட்டுமே அடைய முடியாது. ஏனெனில் அனைத்து ஆசைகளின் நோக்கமும் அன்புதான். அன்புதான் அனைத்து ஆசைகளுக்கும் மூலம். அதுவே அவற்றின் முடிவான இலக்குமாகும்.
ஸ ந காம்யாமனா - ஆசைகளின் முடிவு என்றால் என்ன? ஒருவர் அதை எவ்வாறு நிறுத்த முடியும்?
நிரோதஸ்து லோக வேத வ்யாபாரந்யாஸஹ
அன்பு எல்லாவித செயல்பாடுகளில் இருந்தும் விடுபட்டு இருக்கிறது. உலக நடவடிக்கைகளோ அல்லது ஆன்மீக நடவடிக்கைகளோ, மத சம்பந்தமானதோ, அல்லது பொருட்கள் சம்பந்தபட்டதோ, எதிலும் சேராமல் அன்பு நடுநிலையில் நிற்கிறது.
நிரோதஸ்து - ஏதாவது ஒன்றைச் செய்ய, ஏதாவது ஒன்றை அடைய உத்வேகம் ஏற்படுகிறது. எனக்குப் பொருட் செல்வம் ஏதும் தேவையில்லை.
என்று நீங்கள் சொல்கிறீர்கள். ஆனால் சொர்க்கம், ஆன்மீகத்தில் உயர்ந்தநிலை, பேரின்பநிலை, இறைஉணர்வில் ஒன்றிய நிலை, இவைகளை அடைய வேண்டும் என்று, ஆசைகள் திசை திரும்பும். அதனால் நீங்கள் ஆசையையும் அதற்கான செயல்களையும் இன்னும் பற்றிக்கொண்டுதான் இருப்பீர்கள். ஆனால், அது இந்த லெளகீக உலகத்தில் இருந்து ஆன்மீக உலகிற்கு மாறுகிறது. நம் மனது மிகவும் தந்திரமானது!
லோக வேத வ்யாபாரந்யாஸஹ - நீங்கள் எந்தக் காரியத்தையும் செய்யாமல் சும்மா இருத்தல் இயலாத ஒன்று. அப்படியானால் என்ன செய்யலாம்? நீங்கள் ஒரு செயலில் முழுவதுமாக, நூறு சதவீதம் ஆழ்ந்து வேலை செய்தால் அந்தச் செயலிலிருந்து விடுபடுகிறீர்கள். அந்தக் செயலிலிருந்து ஓய்வு எடுத்துக்கொள்ள முடிகிறது. இதைத்தான் நாம் செய்வதில்லை. நூறு சதவீதம் செயலில் மூழ்கியிருத்தல், உங்களை 'சமநிலையில்' நிறுத்துகிறது. அந்நிலையில் ஆசைகள் எழுவதில்லை . நீங்கள் லாஸ் ஏஞ்சலஸ் போக வேண்டும் என்றால், உங்கள் ஊர்தியை ஓட்டிக்கொண்டு செல்லுங்கள். ஆனால் உட்கார்ந்துக்கொண்டு அதையே நினைத்துக்கொண்டு இருந்தால், அது உங்களுக்குள் ஒரு அழுத்தத்தை உண்டாக்குகிறது. இதுதான் ஆசை. ஆசை என்பது ஒரு பதார்த்தத்தை வாயில் போட்டுகொண்டு மென்று, சுவைத்து, விழுங்குவது போன்றது அல்ல. செயல்படாமலிருப்பது. எந்த வேலைகளைச் செய்ய வேண்டுமோ, அதைச் செய்துவிட்டு ஓய்வெடுங்கள். எதைச் செய்யத் தேவையில்லையோ அதை விட்டுவிட்டுச் சுகமாக இருங்கள்.
ந்யாஸஹ - 'சமநிலையில் இருப்பது', 'விட்டுவிடுவது' - எவ்வளவு முக்கியமான வேலையாக இருந்தாலும், ஒரு நொடிப்பொழுது அதையெல்லாம் விட்டுவிட்டு உங்களால் இருக்க முடியுமா? அப்போது அச்செயல் உங்கள் மனதைத் தொந்தரவு செய்யாததையும், உங்களைப் பாதிக்காததையும், உங்கள் செயல் திறமை அதிகரிப்பதையும் பார்ப்பீர்கள். ஒரு வேலையில் அது ஆன்மீகமாக இருந்தாலும் சரி, அல்லது உலகியல் சார்ந்ததாக இருந்தாலும் சரி, நீங்கள் அதன்மீது மிகவும் சார்ந்து, பற்றிக்கொண்டிருந்தால், உங்கள் பற்றே அந்த வேலையைக் குலைத்துவிடும். வேலை செய்ய வேண்டும் என்ற தீவிர எண்ணம் அவ்வேலையில் இருந்து சற்றும் ஓய்வு எடுக்க இயலாமை, மனதைச் சாந்தமாக வைத்துக்கொள்ள இயலாமை, இவைகள்தான் உங்களுக்கு ஏமாற்றத்தை உண்டு பண்ணுகின்றன. எந்த ஒரு வேலையையும் நூறு சதவீதம் ஆழ்ந்து செய்வீர்களானால் ஏமாற்றத்தை மிக எளிதாகத் தவிர்க்கலாம். அதன் பலனாய் விட்டுவிடும் தன்மையும் உங்களுக்கு எளிதாக வருகிறது. நீங்கள் விரக்தி அடையும்போது இயல்பாக எல்லாவற்றையும் விட்டுவிடுகிறீர்கள். நீங்கள் விரக்தி அடையாமல் இருக்கும்போதும், ஒரு நொடிப்பொழுது எல்லாவற்றையும் விட்டுவிலகி இருக்க இயன்றால் 'யோகம்' நிகழ்கிறது.
நீங்கள் உங்கள் மனதின் ஆழத்திற்குள் செல்கிறீர்கள். நீங்கள் பொருட்களின் மீதும், செய்யும் செயல்கள் மீதும் பற்றுதல் வைத்து, அதைப் பிடித்துக்கொண்டு இருந்தால், அந்தப் பிடிப்பு உங்களுக்கு, ஏமாற்றத்தையும் தாபத்தையும் தருகிறது. இதுதான் ஆசையின் செயல்!
ஆசை என்பது கைப்பிடிக்குள் காற்றைப் பிடிக்க முயற்சி செய்வதற்கு ஒப்பானது. உங்களால் கைப்படிக்குள் எவ்வளவு காற்றைப் பிடித்து வைக்க முடியும்? கைப்பிடியை அதிகம் இறுக்கினால், குறைந்த அளவு காற்றையே பிடிக்க முடியும், அன்பு என்பது பரந்த ஆகாயம் போன்றது. ஆகாயத்தைக் கைப்பிடியில் பிடித்து வைக்க முடியாது. நீங்கள் உங்கள் உள்ளங் கையைத் திறக்க வேண்டும். அதுதான் நிரோதா.