Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Hitech Dhadhakkal
Hitech Dhadhakkal
Hitech Dhadhakkal
Ebook499 pages3 hours

Hitech Dhadhakkal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

சேர, சோழ, பாண்டியர்களின் காலத்தில் மின்சாரம் இல்லை. 1700-களில் பெஞ்சமின் ப்ராங்க்ளின் மின்சாரத்தைக் கண்டுபிடித்தார். அதன் பிறகு தாமஸ் ஆல்வா எடிசன் மின்சார சக்தியை உபயோகித்து பல்புகளை எரிய வைத்து, இரவுகளைப் பகல்களாக மாற்றினார். அந்த மின்சக்தி நாளுக்கு நாள் வளர்ந்து விஸ்வரூபமெடுத்து, இந்த 2023-ன் காலகட்டத்தில் பல விஞ்ஞான அற்புதங்களை செய்யும் வல்லமை பெற்றுவிட்டது.

நமக்குக் கிடைத்த விஞ்ஞான வரங்கள் எல்லாமே இந்த பிரபஞ்ச சக்தியால் கிடைத்தவை. இந்த வரங்களையெல்லாம் இன்றைய மனிதகுலம் சாபங்களாக மாற்றிக் கொண்டு வருகிறது. அதன் விளைவு? மனிதன் எந்திரமாக மாறுகிறான். எந்திரம் மனிதனாக மாறுகிறது. எப்படி? இந்த 'ஹைடெக் தாதாக்கள்' பத்தி பத்தியாய் உங்களுக்கு சொல்லப் போகிறார்கள்.

மிக்க அன்புடன்

ராஜேஷ்குமார்

Languageதமிழ்
Release dateJul 8, 2023
ISBN6580100410036
Hitech Dhadhakkal

Read more from Rajeshkumar

Related to Hitech Dhadhakkal

Related ebooks

Reviews for Hitech Dhadhakkal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Hitech Dhadhakkal - Rajeshkumar

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    ஹைடெக் தாதாக்கள்

    (எதிர்கால விஞ்ஞானத்தின் விபரீதங்கள்)

    Hitech Dhadhakkal

    Author:

    ராஜேஷ்குமார்

    Rajeshkumar

    For more books

    https://www.pustaka.co.in/home/author/rajesh-kumar-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    1. நியூட்ரிNO

    2 மரணத்தின் மரணம்

    3. உஷ்...! ரகசியம்

    4. மூளையின் ஒரு மூலையில்...

    5. இரவல் உறவுகள்

    6. நாளைய நரகாசுரன்

    7. மாயா பஜார்

    8. முதுமையும் இனிமையே!

    9. மேற்கில் உதிக்கும் சூரியன்

    10. ரத்தத்தின் சத்தம்!

    11. செயற்கை உறக்கம்

    12. ஒரு கதவு தட்டப்பட்ட போது...

    13. மூன்றாவது காது

    14. பெட்ரோலின் விலை லிட்டருக்கு 14 ரூபாய்

    15. ரெஜினோ பைகள்

    16. நாசா என்னும் ஒரு தேசம்

    17. இனிக்கும் கடல்

    18. இனிதாக வாழ ஒரு கனி

    19. எங்கிருந்தோ ஒரு குரல்...!

    20. உயிரின் உயிர்

    21. இங்கே விபரீதங்கள் விற்கப்படும்

    22. ஆரம்பத்திலிருந்து ஆரம்பம் வரை

    23. இதயமே...! இதயமே...!

    24. மருந்துக்கு ஒரு மருந்து!

    25 விண்வெளிப் பயணமா? வீண்வெளிப் பயணமா?

    26. தண்ணீரின் கண்ணீர்

    27. காலடியில் ஒரு சொர்க்கம்

    28. தாய்மையில் கயமை

    29. கொஞ்சம் திரில்... கொஞ்சம் திகில்

    30. நிழல் போர்

    31. ஹைடெக் தாதாக்கள்

    32. ஒரு வெற்றியின் தோல்வி

    33. காயாகாத கனிகள்

    34. காரணமின்றி காடுகள் எரிவதில்லை

    35. அமானுஷ்யமா? அறிவியலா?

    36. அபாயமா... உபாயமா?

    37. ஒரு புகையின் பகை

    38. ஓசையில்லாத ஒலி

    39. மூளைப் போர்

    40. மர்ம நிலா

    41. அன்புள்ள எதிரி

    42. விலை உயர்ந்த குற்றம்

    43. பூமிக்கு கீழே ஒரு பூமி

    44. வானத்தில் ஒரு வேலி

    45. கண்ணிலே இருப்பதென்ன?

    46. ஹைஃபை குப்பை

    47. செயற்கை சீற்றம்

    48. பயங்கரத்தின் இன்னொரு பெயர்

    49. இனி இல்லை... இன்சுலின்

    50. எங்கே போகும் இந்த டிஜிட்டல் பாதை?

    51. ரசாயனப் பந்தல்

    52. என்னுடைய நான்

    53. சித்தர்கள் பித்தர்கள் அல்ல

    54. உத்தரவின்றி உள்ளே வா!

    55. பூமியின் நெருப்பு வளையம்

    56. சீனாவின் தானம்

    57. நீயா... இல்லை... நானா...?

    58. வட துருவம் தென் துருவம் தலைகீழாய் மாறுமா?

    59. தெரிந்த வார்த்தை, தெரியாத உண்மை

    60. ஒரு நட்சத்திரத்தின் மரணம்

    61. ஆஹா...! அனஸ்தீஷியா!

    62. மூலிகை பள்ளத்தாக்கு

    இந்த புத்தகத்தில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள் வாரமலர் இதழில் "வரமா... சாபமா?’ என்னும் தலைப்பில் 2019-2020 வெளிவந்தவை.

    சேர, சோழ, பாண்டியர்களின் காலத்தில் மின்சாரம் இல்லை. 1700களில் பெஞ்சமின் ப்ராங்க்ளின் மின்சாரத்தைக் கண்டுபிடித்தார். அதன் பிறகு தாமஸ் ஆல்வா எடிசன் மின்சார சக்தியை உபயோகித்து பல்புகளை எரிய வைத்து, இரவுகளைப் பகல்களாக மாற்றினார். அந்த மின்சக்தி நாளுக்கு நாள் வளர்ந்து விஸ்வரூபமெடுத்து, இந்த 2023-ன் காலகட்டத்தில் பல விஞ்ஞான அற்புதங்களை செய்யும் வல்லமை பெற்றுவிட்டது.

    நமக்குக் கிடைத்த விஞ்ஞான வரங்கள் எல்லாமே இந்த பிரபஞ்ச சக்தியால் கிடைத்தவை.

    இந்த வரங்களையெல்லாம் இன்றைய மனிதகுலம் சாபங்களாக மாற்றிக் கொண்டு வருகிறது.

    அதன் விளைவு?

    மனிதன் எந்திரமாக மாறுகிறான்.

    எந்திரம் மனிதனாக மாறுகிறது.

    எப்படி?

    இந்த ‘ஹைடெக் தாதாக்கள்' பத்தி பத்தியாய் உங்களுக்கு சொல்லப் போகிறார்கள்.

    மிக்க அன்புடன்

    ராஜேஷ்குமார்

    1. நியூட்ரிNO

    நீங்கள், நான், விராட்கோலி, நயன்தாரா, டிஸ்போசல் அட்டை டம்ளர், ஒரு சாக்லேட், கரித்துண்டு, இப்படி யாராகவும், எதுவாகவும் இருந்தாலும் சரி எல்லாமே அணுக்களால் ஆனது என்கிற அறிவியல் சூட்சமம், படித்தவர்களுக்கு மட்டும் அல்ல, பாமரர்களுக்கும் தெரிந்த ஒரு பிரபஞ்ச உண்மை.

    ஓர் அணு என்பதே சக்திவாய்ந்த மைக்ராஸ்கோப்பின் கண்களுக்கு மட்டுமே புலப்படும் ஒரு நுண்துகள். அந்த துகளுக்குள் எலக்ட்ரான், புரோட்டான், நியூட்ரான் போன்ற மிக, மிக, மிக நுண்ணிய துணுக்குகள் குடித்தனம் நடத்திக் கொண்டு இருக்கின்றன என்கிற நிஜம் தெரிய வரும்போது அணு ஆராய்ச்சியாளர்கள் அதிர்ந்துதான் போனார்கள்.

    இப்படிப்பட்ட உயிரோட்டமான அணுக்களால்தான், இந்தப் பிரபஞ்சத்தில் உள்ள எந்த ஒரு பொருளானாலும் சரி, ஆற்றலானாலும் சரி, புதிதாக உருவாவதும் இல்லை, இருக்கின்ற ஆற்றலும் அழிவதும் இல்லை என்கிற அறிவியல் உண்மை உருவானது. அது இயற்பியல் விதியாகவும் நிர்ணயம் செய்யப்பட்டது. 1930ம் ஆண்டுவரை ஓர் அணுவின் கதை இதுதான்.

    1930ஆம் ஆண்டு பாலி (PAULI) என்ற ஆஸ்திரிய நாட்டு விஞ்ஞானி அணுவை மேலும் ஆராய்ந்து பார்த்ததில் பீட்டா அழிவு (BETA DECAY) குறித்த ஒரு ஆய்வு கொடுத்த அறிக்கையைப் பார்த்து சற்றே கலக்கமானார். அவருடைய கலக்கத்துக்கு காரணம், ஆய்வின் தொடக்கத்தில் இருந்த அணுக்கருவின் ஆற்றலும், இயங்குவிசையும் ஆய்வின் முடிவில் சற்றே குறைந்து போயிருந்ததுதான். அது பிரபஞ்ச ஆற்றல்கள் அழியாததுக்கு எதிரானது. ஒரு ஆற்றல், இன்னொரு ஆற்றலாக மாறுமே தவிர அழியாது. உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமென்றால், வெப்ப ஆற்றல் மின்சக்தி கொண்ட ஆற்றலாக மாறலாம். அதே மின்சக்தி, ஒளிரும் சக்தியாக உருமாறலாம். இதுவே ஆற்றலின் அழியா விதி. இப்படிப்பட்ட ஒரு அழியா விதி மாறுவதற்குக் காரணம், அணுவில் உள்ள இதுவரை கண்டறியப்படாத புதிய அணு உள்துகள் ஒன்று இருப்பதை அணு ஆராய்ச்சியாளர்களுக்கு தெரியப்படுத்தினார் விஞ்ஞானி பாலி.

    இந்தப் புதிய நுண்துகளுக்குள் எந்த ஒரு மின்னோட்டமும் இல்லை என்பதையும், அணுக்குள் இருக்கும் புரோட்டானின் எடையில் ஒரு சதவீத எடை மட்டுமே அந்தப் புதியபொருளுக்கு இருந்தது என்பதையும் (எடை என்றால் ஒரு மில்லிகிராமில் கோடியில் 1 சதவீத எடை) மேலும், அந்தத்துகள் ஒளியின் வேகத்தில் அதாவது விநாடிக்கு 3 லட்சம் கிலோ மீட்டர் வேகத்தில் செல்லவல்லது எனக் கூறினார். இந்தப் புதிய நுண்துகளுக்கு அவர் இட்ட பெயர்தான் நியூட்ரினோ (NEUTRINO). இந்த நியூட்ரினோ நுண்துகள் சூரியனில் இருந்து வெளிப்படும் காஸ்மிக் கதிர்களில் இருந்து உருவாகி பூமியை வந்து அடைகிறது. பூமியில் உள்ள எல்லா உயிரினங்கள் மீதும் ஒரு நொடி கூட தவறாமல் கண்களுக்குப் புலப்படாமல் பெருமழை போல் பொழிந்து கொண்டே இருக்கிறது.

    இது கடினமான பாறைகளையும் எப்படிப்பட்ட தனிமங்களையும் ஊடுருவிச் செல்லக்கூடிய தன்மை கொண்டதாக உள்ளது. அவ்வாறு ஊடுருவிச் செல்லும்போது, அது தன்வேகத்தில் குறைவதே இல்லை என்பதுதான் அதன் சிறப்பம்சம்.

    இந்த நியூட்ரினோக்கள் பூமியில் உள்ள எந்த ஒரு பொருளுக்கும் உயிரினத்திற்கும் பாதிப்பை உண்டாக்குவது இல்லை என்று சொல்லப்பட்டாலும், இதன் மேல் நடத்தப்படும் சோதனைகள் ஆபத்தில் போய் முடியலாம் என்ற இயற்கை ஆர்வலர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். தமிழ்நாட்டில் தேனி அருகே உள்ள பொட்டிபுரம் கிராமத்தையட்டியுள்ள அம்பரப்பர் மலையை நியூட்ரினோ சோதனைக்கூடமாக மாற்ற ஆய்வாளர்கள் முடிவு செய்து அதற்கான வேலைகளையும் தொடங்கிவிட்டார்கள். மலையைச் சுற்றியுள்ள 5 கிலோ மீட்டர் தூரத்தை வேலிகள் அமைத்து ஒரு பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வந்து இருப்பதற்கான காரணம் என்னவென்று கேட்டால் அரசு ஆய்வாளர்களிடம் இருந்து மனதுக்கு நிறைவான பதில்கள் வருவது இல்லை.

    சரி, இந்திய திருநாட்டில் எத்தனையோ மாநிலங்களில் எவ்வளவு மலைகள் இருக்க, நம் தமிழ்நாட்டைச் சேர்ந்த அம்பரப்பர் மலையை நியூட்ரினோ ஆய்வுக்கு தேர்ந்து எடுக்க என்ன காரணம்?

    அந்த மலையில் உள்ள அடுக்கடுக்கான பவளப் பாறைகள்தான் காரணம். இமயமலையைக் கூட ஊடுருவிச் சென்றுவிடும் நியூட்ரினோக்களால் அம்பரப்பர் மலையை ஊடுருவ முடியாமல் முனை மழுங்கிப் போன அம்புகளாய் மாறி வழுவிழந்துவிடுவதுதான். இந்த அம்பரப்பர் மலைக்கு பழமையான இன்னொரு பெயரும் உண்டு. அதுதான் உடையா மலை. அந்தக் காலத்தில் வாழ்ந்த சித்தர்களும் மகான்களும் இந்த மலையின் உறுதித்தன்மையையும், கடினத் தன்மையையும் உணர்ந்துதான் உடையாமலை என்று பெயர் சூட்டியுள்ளார்கள்.

    அம்பரப்பர் மலையில் நியூட்ரினோ சோதனைகள் கூடாது என்று எதிர்ப்பாளர்கள், கீழ்கண்ட காரணங்களை அடுக்கடுக்காய் சொல்கிறார்கள். உலகத்தில் உள்ள 5 வல்லரசு நாடுகள் மட்டுமே இந்த நியூட்ரினோ ஆய்வை மேற்கொண்டுள்ளன. இத்தாலியில் ‘க்ரேன் சாசோ’ (GRAN SASSO) ஆய்வுக்கூடம், தென் துருவத்தில் அமெரிக்காவின் ஐஸ்க்யூப் நியூட்ரினோ அப்ஸர்வேடரி (ICECUBE NEUTRINO OBSERVATORY) சிக்காக்கோவில் உள்ள ஃபெர்மி லேப் (FERMILAB), கனடாவின் ஸ்நோ லேப் (SNOW LAB), பிரான்சின் அண்ட்ராஸ் (ANTARES), ஜப்பானின் சூப்பர் காமியோகண்டே (SUPER KAMIOKANDE) போன்ற திட்டங்கள் எல்லாம் கடலுக்கடியிலும், துருவப் பிரதேசங்களிலும், எந்த உயிரினமும் வாழாத சூழ்நிலைகளிலும் அமைந்துள்ளன. ஆனால், நம்நாட்டில் மட்டும் மனிதர்களும் மற்ற உயிரினங்களும் வாழும் நிலப்பகுதியில் அதுவும் ஒரு மலையைக் குடைந்து 1500 கோடி ரூபாய் செலவில் நியூட்ரினோ ஆராய்ச்சிக்கூடம் நிறுவ ஆராய்ச்சியாளர்கள் திட்டமிட்டு செயலாற்ற இருக்கிறார்கள்.

    மலையின் உச்சியில் இருந்து 1500 அடி ஆழத்தில், 132 அடி நீளத்தில் 26 மீட்டர் அகலத்தில் 20 மீட்டர் உயரத்தில் ஒரு குகை அமைக்கப்பட்டு, உலகத்திலேயே மிகப்பெரிய கனமுள்ள காந்தமைப்படுத்தப்பட்ட இரும்புத் துண்டு வைக்கப்படும். இந்த காந்தம் நியூட்ரினோ துகள்களைக் கவரும்போது, சுற்றுப்புறச் சூழ்நிலை பாதிக்கப்பட்டு மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள காடுகளுக்கு பேரழிவு ஏற்படும்.

    விவசாயம், தண்ணீர், வன விலங்குகளுக்கு பாதிப்பு ஏற்படும். மனிதர்களுக்கு ஆரோக்கிய குறைபாடுகள் உண்டாகும். ஆகவே நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்கும் திட்டத்தை செயல்படுத்த தடை விதிக்க வேண்டும் என்று அறிவியலார் விஜயசங்கர் என்பவர் வலியுறுத்தியுள்ளார். அவர் அந்த ‘நியூட்ரினோ’ துகள் பற்றி ஒரு புத்தகம் எழுதி, அந்த புத்தகத்திற்கு ‘பிசாசுத் துகள்’ என்று தலைப்பு வைத்துள்ளார். அந்தப் புத்தகத்தில் அவர் மேலும் சில எதிர்மறையான செய்திகளை பதிவு செய்துள்ளார்.

    மற்ற அணுத்துகள்களைப் போல் நியூட்ரினோவை அவ்வளவு எளிதில் கண்டுபிடிக்க முடியாது என்பதையும், அதிநவீன கருவிகளைக் கொண்டு ஆராய்ச்சிகள் நடத்தப்பட்டாலும், மிகக் குறைந்த அளவிலான நியூட்ரினோவை மட்டுமே பதிவு செய்ய முடியும் என்பதையும் அவர் வலியுறுத்தி வருகிறார். ஆனால் இந்த திட்டத்தை ஆதரிப்பவர்கள் சொல்லும் காரணம் வேறு மாதிரி உள்ளது.

    இது ஒரு தேவையில்லாத அச்சம். படித்தவர்களே இந்தத் திட்டத்தை தவறாக புரிந்து கொண்டுள்ளார்கள். அதாவது நியூட்ரானையும், நியூட்ரினோவையும் தேவையில்லாமல் குழப்பிக் கொள்கிறார்கள். நியூட்ரினோவில் ரேடியாஆக்டிவிட்டி என்பதும் சிறிதும் இல்லை. அதே போல், இந்த ஆய்வுக்கு பெருமளவு நிலத்தடிநீர் தேவை என்பதும் உண்மை சிறிதும் இல்லாத செய்தி. மேலும், இந்த குகையின் ஒரு பகுதிக்குள் அணுக்கழிவை கொட்ட இருக்கிறார்கள் என்பதும் ஒரு வடிகட்டின வதந்தி. நாங்கள் அங்கே பணி செய்ய இருக்கிறோம். பணி செய்யும் அதே இடத்தில் யாராவது அணுக்கழிவைக் கொட்டுவார்களா? என்று நியூட்ரினோ ஆதரவு ஆராய்ச்சியாளர்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.

    ஆனால், ஹை குவேக் (HI QUAKE) என்ற ஓர் அமைப்பு சமீபத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் உள்ள ஓர் அதிர்ச்சியான விஷயம், கடந்த 150 ஆண்டுகளில் 700க்கும் மேற்பட்ட பூகம்பங்களை மனிதர்கள் செய்த விபரீத ஆராய்ச்சிகளால் தூண்டப்பட்டவை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இப்போது நியூட்ரினோ ஆராய்ச்சிக்கூடம் அமைய உள்ள பகுதி ஏற்கனவே அணைகளால் அழுத்தம் உண்டான பகுதியாகும். அந்த இடத்தில் 10 லட்சம் டன் முதல் 12 லட்சம் டன் வரை மலையைப் பிளந்து பாறைகளை உடைக்கப் போகிறார்கள். இதற்கு 6 லட்சம் கிலோ வெடிமருந்து பயன்படுத்தப் போகிறார்கள். அதனால், நிச்சயமாக பெரிய அளவில் பூகம்பம் ஏற்பட்டு பேரழிவை உண்டாக்கும் என்று அந்த அமைப்பு எச்சிரித்துள்ளது.

    இந்த எச்சரிக்கையையும் மீறி இந்திய விஞ்ஞானிகள் பொட்டிபுரத்தில் நியூட்ரினோ ஆய்வுக்கூடம் அமைக்க முழு அளவில் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

    சரி... இப்போது என்ன நிலவரம்?

    1. நியூட்ரினோ ஆய்வு மையத்திற்கு நிரந்தர தடை விதிக்க வேண்டும்; விவசாயிகள் ஆவேசம்.

    2. நியூட்ரினோ திட்டத்திற்கு இடைக்கால தடை விதித்தது தேசிய பசுமை தீர்ப்பாயம்.

    3. நியூட்ரினோ ஆய்வுத் திட்டத்திற்கு தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் இதுவரை அனுமதி வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    2. மரணத்தின் மரணம்

    நூறு ஆண்டுகளுக்கு முன்பு, மனிதனின் சராசரி ஆயுள் 45 வயதில் இருந்து 50 வயதாக இருந்தது. ஆனால், இன்றைக்கு மனிதனின் சராசரி ஆயுள் 80 வயதிலிருந்து 85 வயது என்று அமெரிக்காவின் புகழ்மிக்க மின்னிசோட்டா மருத்துவ பல்கலைக்கழகம், பல ஆராய்ச்சிகள் மூலம் நிரூபித்துள்ளது. ஒரு மனிதனின் வயது 50, 60, 70 என்று உயரும்போது முதுமை அவனை நெருங்குகிறது. உண்மையில் முதுமை என்பதும் ஒரு வகை நோயே. அந்த நோயை மனிதனால் வெல்ல முடியும் என்று இன்றைய மருத்துவம் உறுதிபடச் சொல்கிறது. அதற்கான ‘ஆன்டி-ஏஜிங்’ (ANTI-AGEING) மருந்துகளையும் தயாரிக்க ஆரம்பித்துவிட்டது.

    மகாபாரத காவியத்தில், பீஷ்மர் ஓர் அற்புதமனிதராக உருவாக்கப்பட்டு இருப்பார். பீஷ்மரை யாராலும் வெல்ல முடியாது. காரணம் அவருக்கு மரணம் கிடையாது. மரணமில்லா வாழ்க்கை என்பது அவருக்கு கிடைத்த வரம். பீஷ்மரே விரும்பி ‘நான் இனி வாழ்ந்தது போதும்’ என்று மனப்பூர்வமாக நினைத்தால் மட்டுமே பீஷ்மரால் இறக்க முடியும். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த சித்தர்கள் கூட ஆயிரம் ஆண்டு வரை வாழ்ந்து விட்டு ‘இனி போதும்’ என்ற எண்ணம் வரும்போது அவர்களாகவே விரும்பிப் போய் பூமிக்குள் பள்ளம் தோண்டி ஜீவசமாதி அடைந்து விடுவார்கள். அன்றைக்கு சித்தர்கள் வாழ்ந்த மரணமில்லா அந்த வாழ்க்கையைப் பெற இன்றைய விஞ்ஞானம் முயற்சித்துக் கொண்டு இருக்கிறது.

    உலகிலேயே சிறந்த சோதனைக்கூடம், நமது உடம்பு மட்டுமே என்று உறுதியாக சொல்லலாம். ஒரு குழந்தை தாய்க்குத் தெரியாமலேயே கருவாகி, உருவாகி, உடலில் இருந்தே உணவு கிடைத்து, ஒவ்வொரு உறுப்பாய் வளர்ந்து குழந்தையாய் பிறக்கிறது. நமது உடலின் அறிவுத் திறன் வியப்புக்குரியது அளப்பரியது. ஒரு விஞ்ஞானியால் ஒரு குழந்தையை உருவாக்க முடியாது.

    அதேபோல் உயிர் என்பது என்ன என்கிற கேள்விக்கும் எந்த ஒரு உயிரியல் விஞ்ஞானியிடம் இருந்து சரியான தெளிவான பதில் இல்லை. உயிர் என்னும் காந்தசக்தி, நம் உடம்புக்குள் சுழன்று கொண்டு இருக்கும் ஒரு மகாசக்தி. இதுவே ஆரா (AURA) அல்லது ஆஸ்ட்ரல் பாடி (ASTRAL BODY) எனப்படுவது. உயிர் என்னும் காந்த சக்தியின் தீவிரம் குறையும்போது, அது உடம்பின் ஆரோக்கியத்தைப் பாதிக்கிறது. ஆரோக்கிய குறைபாடு காரணமாக, சேதம் அடைந்த உயிரணுக்கள் உடலின் எந்தப் பகுதியில் இருந்தாலும், உயிராற்றல் என்னும் சக்தி உடனே அதற்கு ஈடு செய்கிறது. ஒருவேளை உயிராற்றல் அதை ஈடு செய்யவில்லை என்றால் நோய் உண்டாகிறது. நோய் குணமாகவில்லை என்றால் உயிராற்றல் தன்னைத்தானே உடைத்துக் கொள்கிறது. இதனையே நாம் இறப்பு என்கிறோம். வோல்டேஜ் மிக அதிகமாகும்போது பல்ப்பின் செயலிழப்பு போன்றது இது.

    உடம்பு இயங்குவதற்கு மிக முக்கியமாக உயிர் தேவை. உயிர் என்று மூச்சுக்கு முன்னூறு தடவை சொல்கிறோமே அந்த உயிர் என்றால் என்ன... அது உடம்பின் எந்தப் பகுதியில் இருக்கிறது, எப்படி இருக்கிறது என்று யாருக்காவது தெரியுமா?

    உயிர் என்பது ஒரு உறுப்பு அல்ல... உண்மையில் சொல்லப் போனால் உயிர் என்பது நம்முடைய உடம்புக்குள் ஒரே ஒரு பகுதிக்குள்ளே உட்கார்ந்து இருக்கிற வஸ்து அல்ல. சித்தர்கள் உயிரை சத்தம் என்றார்கள். ஒலி என்னும் நாதம் என்றும் சொன்னார்கள். சரி... உயிர் என்பது எப்படித்தான் இருக்கும்? அதற்கு முதலில் உடம்பில் உள்ள உயிரணுக்களைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்.

    ஆண்டுகள் செல்லச் செல்ல நமது உடலின் அமைப்பு மாறிக் கொண்டே வருகிறது. இப்படி மாறிக்கொண்டே வருவதற்குக் காரணம் ரத்தத்தின் சிவப்பு அணுக்கள் 120 நாட்களுக்கு ஒரு முறையும், வெள்ளை அணுக்கள் 13 நாட்களுக்கு ஒருமுறையும், டி.என்.ஏ. மரபணு 2 மாதங்களுக்கு ஒருமுறையும், அதேபோல் தோலின் மேற்பரப்பு மாதம் ஒருமுறையும், கல்லீரல் ஆறு வாரத்திற்கு ஒருமுறையும், நுரையீரல் ஆண்டுக்கு ஒருமுறையும் புதுப்பிக்கப்படுவதுதான்.

    அக்னியும் வாயுவும் இல்லாவிட்டால், உடம்பில், உயிர் என்பதே இருக்காது. வாயுவின் அழுத்தத்தால் இயங்கும் குடல் 32 முழம் நீளமுடையது. இது 9 மடிப்பாக மடித்து மடித்து வைக்கப்பட்டு உள்ளது. இதன் கடைசிப் பகுதியில் 3 முழ நீளத்திற்கு சுக்கிலப்பை ஒன்று உள்ளது. இந்தக் குடலில் எரிக்கப்படுகிற உணவு, சதையாய், எலும்பாய், ரத்தமாய் மாறி பஞ்சபூதங்களோடு வினை புரிவதால்தான், மனிதன் உயிரோடு இருக்கிறான் என்று சித்தர் பாடல்கள் தெளிவுபடுத்துகின்றன.

    அந்தக்காலத்து சித்தர்கள், நமது உடம்பை ஓர் ஆன்மீக சக்தியாய் பார்த்தார்கள். ஆனால், இன்றைய மருத்துவம் அதை ஒரு விஞ்ஞான அதிசயமாகப் பார்க்கிறது. மருத்துவ வல்லுநர்களின் கூற்றுப்படி உண்மையில், நம் உடம்பு என்பது பல்வகை கட்டமைப்பால் இணைந்த உருவாக்கப்பட்ட ஒரு பொருளே தவிர வேறு ஒன்றும் இல்லை. ஒரு சக்திவாய்ந்த மைக்ராஸ்கோப்பால் நம் உடலைப் பார்க்க நேர்ந்தால் கோடிக்கணக்கான உயிரணுக்களை மட்டுமே பார்ப்போம். நமது உடம்பில் அறுபதுபில்லியன் உயிரணுக்கள் உள்ளன. ஆனால், ஒவ்வொரு உடம்பின் கட்டமைப்பும் மாறுபடுகிறது. ஓர் உயிரணுவை அதிநவீன மைக்ராஸ்கோப் வழியாகப் பார்த்தால் அதில் கீழ்காணும் பகுதிகள் தெரியும்.

    1. உயிரணு ஜவ்வு

    2. சைட்டோ ப்ளாஸம்

    3. ப்ரோட்டோ ப்ளாஸம்

    4. நியூக்ளியஸ்

    இந்த நியூக்ளியஸ் என்னும் கருவில் 23 ஜோடி குரோமோசோம்கள் இருக்கும். ஆண்களுக்கான 23வது குரோமோசோம் ‘எக்ஸ்,ஒய்’ (XY) ஆகவும், பெண்களுக்கான குரோமோசோம் ‘எக்ஸ், எக்ஸ்’ (XX) ஆகவும் இருக்கும்.

    இந்த குரோமோசோம்கள்தான் ஒரு மனிதன் முதுமை அடைவதற்கும், அவன் நீண்ட காலம் வாழ்வதற்கும், மரணம் அடைவதற்கும் காரணமாய் இருக்கின்றன என்பதை இப்போதைய மருத்துவ விஞ்ஞானம் கண்டுபிடித்துவிட்டது. அதாவது ஒரு செல் இரண்டாக பிரிந்து உடம்பின் வளர்ச்சியில் நிர்ணயம் செய்கிறது. அப்படி செல்கள் இரண்டாக பிரியும்போது, அதில் உள்ள குரோமோசோம்களின் மாறாத குணங்கள் பிரிந்த அந்த இரண்டு செல்களிலும் இருக்கும். ஒவ்வொரு குரோமோசோமின் வால்பகுதியும் டெலோமியர் (TELOMERE) என்ற பெயரால் அழைக்கப்படுகிறது.

    ஒரு மனிதன் பிறந்ததில் இருந்து 40 வயது வரைக்கும் இளமையோடு இருக்கிறான். அதற்கு பிறகு அவனுடைய உடல் தளர்ச்சி அடைய ஆரம்பிக்கிறது. இந்தத் தளர்ச்சிக்குக் காரணம் குரோமோசோம்களில் இருக்கும் டெலோமியர் வால்பகுதியின் நீளம், சிறிதுசிறிதாய் குறைந்து கொண்டு போவதுதான். இந்த டெலோமியரின் நீளம், ஒரு மனிதனின் நாற்பது வயதில் இருந்ததுபோலவே இருந்துவிட்டால், அவனை முதுமை நெருங்காது என்கிற சூட்சுமம், இப்போது உயிரியல் விஞ்ஞானிகளுக்கு பிடிபட்டுவிட்டது. இந்த டெலோமியர் எப்படி இயங்குவது என்னென்ன செய்கிறது என்பதைத் துல்லியமாக ஆராய்ந்த போது, இதிலுள்ள என்சைம்தான் குரோமோசோம்களின் டெலோமியர் நீளத்திற்கு காரணகர்த்தா என்பதைக் கண்டுபிடித்து, அந்த என்சைமுக்கு டெலோமிரஸ் (TELOMERES) என்று பெயரிட்டுள்ளார்கள்.

    குரோமோசோம்களின் டெலோமியரின் நீளத்தைக் குறையாமல் பார்த்துக்கொண்டால்,மனிதனின் முதுமையைத் தள்ளிப்போட்டு 500 ஆண்டுவரைக்கும் அவனுடைய ஆயுளை நீட்டிக்க முடியும் என்று அமெரிக்காவின் பாஸ்டனில் உள்ள ஹார்வர்ட் மருத்துவப் பல்கலைக்கழகம் ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளது. இதிலுள்ள ஒரே பிரச்னை, ஒவ்வொரு மனிதனின் உடம்பிலும் நல்ல செல்களும் கேன்சர் வருவதற்கான மோசமான செல்களும் கலந்தே இருக்கும். இந்த செல்களில், நல்ல செல்கள் பிரியும்போது மட்டுமே, டெலோமியரின் வால் நீளம் வயதாக வயதாக குறைகிறது. ஆனால் கேன்சர் செல்கள் பிரியும்போது அவைகளில் உள்ள டெலோமியர்களின் வால்நீளம் சிறிதும் குறைவது இல்லை. அவைகள் வீரியத்தோடு இருக்கின்றன. எந்தவகையான மருத்துவத்திற்கும் கட்டுப்படாமல் கேன்சர் செல்கள் வளர்ச்சியடைய காரணம் அவைகளின் டெலோமியர் வால்களின் நீளம் அப்படியே இருப்பதுதான். கேன்சர் செல்களின் டெலோமியர் நீளத்தை குறைத்தால் கேன்சர் நோயை ஒழித்துவிடலாம். அதேபோல், நீளத்தை அதிகரித்தால் மனிதனின் முதுமையை தள்ளி வைத்து விரும்புகிற வயது வரை இளமையோடும் ஆரோக்கியத்தோடும் இருக்கலாம்.

    ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிப்பதுபோல், கேன்சர் நோயைக் குணப்படுத்தவும், மனிதனின் இளமையை நீட்டிக்கவும் இந்த டெலோமியர் ஆராய்ச்சியை கையில் எடுத்துள்ளார்கள் உயிரியல் விஞ்ஞானிகள். உலகில் உள்ள குணப்படுத்த முடியாத நோய்களில் பெரும்பாலான நோய்களுக்கு டெலோமியரின் வால்நீளமே காரணமாய் இருக்கலாம் என்று ஜேக் ஸாஸ்டெக், காரல் கிரைடர், எலிசபெத் போன்ற ஆராய்ச்சியாளர்கள் தங்களின் ஆய்வு மூலம் கண்டுபிடித்துள்ளார்கள். இவர்களின் இந்த அரிய கண்டுபிடிப்புக்காக இப்போது நோபல் பரிசு கொடுக்கப்பட்டு இருக்கிறது.

    ஒரு மனிதனின் உடம்பில் உள்ள செல்கள் இயற்கையான முறையில் பிரிந்து வளர்சிதைமாற்றம் அடைந்து கொண்டிருக்கும்போது அதன் குரோமோசோம்களின் உள்ள டெலோமியர் வால் பகுதியை, நாம் நம் விருப்பம் போல் கூட்டவோ, குறைக்கவோ முயன்றால் எதிர்கால மனித குலம் ஆரோக்கியசீர்க்கேட்டை சந்திக்க நேரிடும் என்று ஒரு சில ஆராய்ச்சியாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள்.

    ‘மரணத்தை வெல்ல முடியுமா முடியாதா?’

    பதில் சொல்ல காலம் காத்திருக்கிறது.

    3. உஷ்...! ரகசியம்

    அண்மையில் டாக்டர் நண்பர் ஒருவரைப் பார்க்கப் போய் இருந்தேன். வெளிநோயாளிகள் அதிகம் இல்லை.

    ஒரு பேஷண்ட் டாக்டரின் அறைக்குள் இருந்ததால், நான் 10 நிமிட நேரம் காத்திருந்து, பின் உள்ளே போனேன். டாக்டர் என்னைப் பார்த்ததும் ஒரு சிறிய புன்னகையுடன் சொன்னார்.

    வாங்க ராஜேஷ்குமார்...!!! சரியான நேரத்துக்குத்தான் வந்திருக்கீங்க?

    நான் புரியாமல் அவரைப் பார்க்க, அவர் என்னை உட்காரச் சொல்லிவிட்டு மெல்ல பேச்சை ஆரம்பித்தார்.

    இப்ப நீங்க உள்ளே வரும்போது ஒரு பேஷண்ட் வெளியே போனாரு... பார்த்தீங்களா?

    சரியா பார்க்கலை

    அவர் ஒரு தொழிலதிபர்... பேர் சங்கரன்... நிறைய பிசினஸ் பண்ணிட்டிருக்கார்.

    நான் கேட்டேன். அவரோட உடம்புக்கு என்ன?

    அவரோட உடம்புக்கு ஒரு பிரச்னையும் இல்லை. ஆனா மனசுக்குள்ளே ஒரு பிரச்னையோடு வந்து இருக்கார்

    நான் புரியாமல் டாக்டரைப் பார்க்க, அவர் புன்சிரிப்போடு தொடர்ந்தார்.

    அவர் சொன்ன பிரச்னையை வெச்சு நீங்க ஒரு நாவலே எழுதலாம். அப்படியொரு பிரச்னை

    அது என்னன்னு சொல்லலாமே?

    இதோ விஷயத்துக்கு வந்துட்டேன். இப்ப வந்த அந்த தொழிலதிபர் சங்கரனுக்கு 58 வயசு. ஒரு மகன், ஒரு மகள். ரெண்டு பேருக்குமே நல்ல இடத்துல கல்யாண முடிஞ்சு பேரன், பேத்திகளோடு இருக்கார். அவரோட மனம் கோணாத அளவுக்கு நல்ல முறையில் நடந்துக்குற மனைவி. இப்படி எல்லாமே நல்ல விஷயங்களாய் இருந்தாலும் அவர் சந்தோஷமாய் இல்லை. காரணம் மரண பயம்

    நான் வியப்பில் டாக்டரைப் பார்த்தேன்.

    "மரண பயமா?’

    ஆமாங்க ராஜேஷ்குமார்...! அவர் இன்னும் ரெண்டு வருஷம்தான் உயிரோட இருப்பாராம். 60 வயசை நெருங்கும்போது இறந்துவிடுவாராம்

    எதை வெச்சு அப்படி சொல்றார்?

    பரம்பரையாம்... அதாவது அவரோட அப்பா, தாத்தா, தாத்தாவோட அப்பா இப்படி எல்லாருமே 60 வயதை நெருங்கும்போது திடீர்ன்னு ஹார்ட் அட்டாக் வந்து இறந்து போயிடுவாங்களாம்...

    ஆச்சர்யமாய் இருக்கே?

    உங்களுக்கும் எனக்கும் ஆச்சர்யம். ஆனா உள்ளுக்குள்ளே அவர் பயந்து நடுங்கிட்டு இருக்காரே

    தாத்தா, அப்பா மாதிரி தானும் இறந்துருவோம்ன்னு பயப்படறாரா?

    அதேதான்...

    அப்படி நடக்க வாய்ப்பு இருக்கா டாக்டர்?

    வாய்ப்பு இருக்கு... ஆனா அப்படி நடக்கக்கூடிய சாத்தியம் 50 சதவீதம் மட்டுமே... மீதி 50 சதவீதத்தில் அவர் 90 வயசு வரை ஆரோக்கியத்தோடு வாழ அவரோட ஜீன் மேப்பைப் பார்த்து மரபணு (டி.என்.ஏ.)வில் மாற்றம் செய்தால் 60 வயதுக்குள் வருகிற ஹார்ட் அட்டாக்கை கடந்து 70, 80, 90 வயது வரை வாழலாம்

    டி.என்.ஏ. மாற்றம், ஜீன் மேப் இதெல்லாம் இன்றைக்கு சாத்தியமா டாக்டர்?

    இன்னிக்கு இருக்கிற மருத்துவ உலகத்துல எல்லாமே சாத்தியம்தான். இப்போ புதுசா ஃபீட்டல் டி.என்.ஏ. பரிசோதனை (FOETAL DNA TEST) என்கிற முறை வந்தாயிற்று. அதாவது கர்ப்பிணியின் ரத்தத்தில் காணப்படும் குழந்தையின் டி.என்.ஏக்களை பரிசோதனை செய்து பார்த்து டவுன் சிண்ட்ரோம், டிரைசோமி போன்ற குரோமோசோம் கோளாறுகள் பிற்காலத்தில் ஏற்படுமா... ஏற்படாதா? என்பதைப் பற்றி தெரிந்து கொள்ளலாம்

    இதெல்லாம் நம்பறதுக்கு கொஞ்சம் கஷ்டமாய் இருக்கே டாக்டர்?

    ஒரு மனிதன் தன்னுடைய எதிர்காலம் எப்படியிருக்கும், நல்ல வேலை கிடைக்குமா? திருமணம் நல்லபடியாய் நடக்குமா, எதிர்காலத்தில் எது மாதிரியான பிரச்னைகளை வரும். அப்படி பிரச்னைகள் வந்தால் அவைகளை சமாளிக்க எதுமாதிரியான பரிகாரங்களைச் செய்ய வேண்டும் என்று தெரிந்துக் கொள்ள ஜோதிடர்களை நோக்கி போறாங்களா இல்லையா...?

    ஆமா...போறாங்க...!

    டாக்டர் சிரித்தார் "ஜோதிடம் உண்மையோ பொய்யோ எனக்குத் தெரியாது. ஆனால் டி.என்.ஏ. ஜோதிடம் உண்மை. ஜோதிடத்தில் கஷ்டம் தீரணும்னா ஜோதிடர் பரிகாரம் சொல்வார். ஆனா, மரபணு மருத்துவர்களான வாஷிங்டன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் செரிகாவா மற்றும் மரபணு சிகிச்சையில் நிபுணரான ப்ரைட்மேன் இருவரும், ஒரு நபரின் செல்லில் உள்ள டி.என்.ஏவின் குறைபாட்டை வேறு ஒரு மரபணு மூலம் சரிசெய்து உடம்பின் ஆரோக்கியத்தை சீர்படுத்தமுடியும்னு சொல்றாங்க.

    இந்த மரபணு மாற்றத்துக்கு பெயர்தான் ஜீன்தெரபி. இப்போ அமெரிக்காவில் டி.என்.ஏ. ஆராய்ச்சியில் 2 மருத்துவ நிறுவனங்கள் புகழ் பெற்று விளங்குகின்றன. ஒன்றின் பெயர் 23 AND ME, மற்றொன்று ANCESTRY DNA. ஒருவரின் உமிழ்நீரிலிருந்து அவர்களுடைய முன்னோர்கள் யார், அல்லது பூர்வீகம், மரபியல் அடிப்படையில் உலகின் எந்தப் பகுதியில் வாழ்கிற மக்களோடு ஒத்துப் போகிறது போன்ற விபரங்களை துல்லியமாக சொல்லிவிடுகின்றன. இதற்கான கட்டணம் இந்திய ரூபாய் மதிப்பில் 10 லட்சம்"

    நான் சிரித்தேன்... ரொம்பவும் காஸ்ட்லி

    எஸ்... வசதிபடைத்த நபர்களால் மட்டுமே இதுபோன்ற சோதனைகளை செய்து கொள்ள முடியும். இப்போது அமெரிக்காவில் 75 லட்சம் பேர் இந்த ‘ஜீன் மேப்பிங்’ மூலம் தங்களுடைய மூத்த தாத்தா பாட்டிகளைப் பற்றியும், அவர்கள் எது மாதிரியான நோய்களில் பாதிக்கப்பட்டு இருந்தார்கள் என்பதையும் தெரிந்து வைத்து இருக்கிறார்கள்

    டாக்டர் மேலும் பேசுவதற்குள் நான் குறுக்கிட்டு கேட்டேன்.

    மரபணுக்களை மாற்றம் செய்து கொள்வதின் மூலமாய் ஏதாவது பக்க விளைவுகள் ஏற்பட வாய்ப்பு இருக்கா டாக்டர்?

    இயற்கையை நாம ஜெயிக்க நினைச்சாலே உடம்பு பிரச்னை பண்ணத்தான் செய்யும். அதுக்குக் காரணம், உயிரணுக்களில் இருக்கும் டி.என்.ஏ., நம்மைப் பற்றின ரகசியங்களை ஒளித்து வைத்து இருக்கும்முறை ஒரு சங்கேதகுறியீடு மாதிரியானது. எண்ணற்ற ரகசிய தகவல்களை ஒளித்து வைத்து இருக்கிற ஒரு இருட்டறை என்று டி.என்.ஏவைச் சொல்லலாம். ஒரு டி.என்.ஏ.வுக்குள் 300 கோடி வேதியியல் எழுத்துக்கள் இருக்கிறது என்கிறது மரபியல். இது தவிர 20 ஆயிரம் மரபணுக்கள் இருப்பதாக பல ஆய்வுகள் உறுதிபடச் சொல்லியுள்ளன.

    மரபணு மாற்றம் செய்தால் எதுமாதிரியான பக்கவிளைவுகள் உண்டாகும் டாக்டர்?

    முதன்முதலில் 1980ல்தான் மியூட்டேஷன் (MUTATION) எனப்படும் மரபணு மாற்றமடைந்த டி.என்.ஏக்கள், சற்றே குழப்பமடைந்து, தவறான புரோட்டீன்களை உற்பத்தி செய்து, உடம்பின் ஆரோக்கியத்தைப் பதம் பார்த்து, இரண்டு புதுவிதமான நோய்களை உண்டாக்கியது. அவைகள் மஸ்குலார் டிஸ்ட்ரோபி (MUSCULAR DYSTROPHY), சிஸ்டிக் ஃபைப்ரோஸிஸ் (CYSTIC FIBROSIS) என்று அழைக்கப்பட்டு ஆபத்தான நோய்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டது. இருந்தாலும், மரபணு மாற்றம் குறித்த ஆராய்ச்சிகள் தொடர்ந்து செய்யப்பட்டு 2003ம் ஆண்டு ஒரு அரிதான ப்ராஜக்ட் உருவாக்கப்பட்டது. இந்த ப்ராஜக்ட்டின் பெயர் ஹ்யூமன் ஜீனோம் (HUMAN GENOME). இந்த ப்ராஜக்ட்டில் மட்டும் லட்சக்கணக்கான மக்கள் தங்களை மரபணு மாற்றத்துக்கு உட்படுத்திக் கொண்டு தங்களின் சந்ததிகளின் குணாதிசயங்கள் பற்றியும், நோய்கள் பற்றியும் தெரிந்து ஒரு ஜீன் மேப்பை தயாரித்து வைத்துக் கொண்டு அதற்கு ஏற்றபடி தங்களின் வாழ்க்கை நடைமுறைகளை மாற்றி அமைத்துக் கொண்டார்கள்.

    டாக்டர் பேசிக் கொண்டிருக்கும்போதே நான் கேட்டேன்.

    எனக்கு இன்னொரு சந்தேகம் டாக்டர்?

    என்ன?

    ஒரு மரபணுவை எப்படி மாற்றுவார்கள்?

    ஒரு வீட்டில் சுவரில் ஒரு செங்கல் மட்டும் உடைபட்டு இருந்தால் அதை எடுத்துவிட்டு ஒரு நல்ல உறுதியான செங்கலை வைப்பது போலத்தான்

    செங்கல் நம் கண்ணுக்குத் தெரிகிறது. அதனால் அதை மாற்றுகிறோம். ஆனால் கண்களுக்கு புலப்படாத மரபணுவை எந்த வகையில் மாற்றி வைக்கிறார்கள்?

    டாக்டர் ஒரு புன்சிரிப்போடு பேச ஆரம்பித்தார்.

    "நீங்கள் கேட்ட கேள்வி சரிதான். ஆனால் இந்த விஞ்ஞான

    Enjoying the preview?
    Page 1 of 1