Gandha Mul
()
About this ebook
நல்ல படைப்பு என்பதற்கு எப்படி விளக்கம் தருவீர்கள்? என்று கேட்டபொழுது, திரு.வி.க அவர்கள், "படிப்பவர் காலத்தை மறந்துவிட வேண்டும். அப்படி காலத்தை மறக்கடிக்கிற படைப்புதான் மிகச்சிறந்த படைப்பு" என்றார்.
"கூப்பிட்டால் படித்துக்கொண்டு இருப்பவர் சட்டென்று திரும்பிப் பார்க்கக்கூடாது. அதாவது நாம் கூப்பிடுவது அவர் காதில் விழவே கூடாது. கிட்டத்தட்ட மெய்மறந்த நிலை. அப்படிப்பட்ட நிலையை எந்தப் படைப்பு உருவாக்குகிறதோ, அதுதான் மிகச்சிறந்த படைப்பாகும்" என்றார் வி.சி.காண்டேகர்.
சரித்திரக் கதையில் செங்காந்தள் மலரின் வாசம் வீசும் விஷ்வக்ஸேனனின் மொழிநடை... இந்தக் 'காந்த முள்' என்கிற சமூகக் கதைத் தளத்தில் உலகியல் மாந்தர்களின் பேச்சு மொழியைத் தனதாக்கிக்கொண்டு சரசரவென்று பயணிக்கிறது.
Related to Gandha Mul
Related ebooks
Vellam Kavar Kalvan Rating: 0 out of 5 stars0 ratingsKai Illatha Bommai Rating: 0 out of 5 stars0 ratingsMattroru Naal Rating: 4 out of 5 stars4/5Odi Va, Omana...! Rating: 0 out of 5 stars0 ratingsShimla Ramya Rating: 5 out of 5 stars5/5Avan Aval Theevu Rating: 0 out of 5 stars0 ratingsNee Thaney En Pon Vasantham Rating: 0 out of 5 stars0 ratingsUyir Urugum Sattham Rating: 0 out of 5 stars0 ratingsIngeyum Sila Pookkal Malarum Rating: 0 out of 5 stars0 ratingsParappatharkku Oru Vaanam Vendum Rating: 0 out of 5 stars0 ratingsNee Indri Naan Illaye! Rating: 0 out of 5 stars0 ratingsIdhayam Varai Nanaigirathey! Rating: 0 out of 5 stars0 ratingsManaththai Mayakkum Mandhiramey! Rating: 4 out of 5 stars4/5Karuppu Udai Devathai! Rating: 5 out of 5 stars5/5kaikuttaikkul Vaanam Rating: 0 out of 5 stars0 ratingsVivek Thotrathillai Rating: 5 out of 5 stars5/5Kichu Kichu Rating: 0 out of 5 stars0 ratingsAruge Vandhu Pazhagu Rating: 0 out of 5 stars0 ratingsNenjirukkum Varai!!! Rating: 4 out of 5 stars4/5Sathiyai Santhippom! Rating: 5 out of 5 stars5/5Irakkam Enna Vilai? Rating: 0 out of 5 stars0 ratingsKaruppu Rattham Rating: 5 out of 5 stars5/5Mugamatra Nizhalgal Rating: 0 out of 5 stars0 ratingsKattrai Kaithu Sei Rating: 0 out of 5 stars0 ratingsKanavugal Ingey! Rating: 0 out of 5 stars0 ratingsSappendru Oru Arai Rating: 0 out of 5 stars0 ratingsKannadi Kanavugal Rating: 0 out of 5 stars0 ratingsNee En Vasantha Kaalam Rating: 0 out of 5 stars0 ratingsஉனக்கே உயிரானேன்! Rating: 0 out of 5 stars0 ratingsUnakke Uyiraanen Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Gandha Mul
0 ratings0 reviews
Book preview
Gandha Mul - Vishwak Senan
https://www.pustaka.co.in
காந்த முள்
Gandha Mul
Author:
விஷ்வக்ஸேனன்
Vishwak Senan
For more books
https://www.pustaka.co.in/home/author/vishwak-senan
பொருளடக்கம்
முன்னுரை
1. உற்சாக புருஷன்
2. நல்லவர்களின் கோபம்
3. விக்கிரமாதித்தன் லிப்ட்
4. அபராதம்
5. ஃபிளாஷ் பேக்
6. ராஜனுக்கு விழுந்த அறை
7. நன்றி மறந்த உலகம்
8. ஞானபூமி சென்னை
9. அரம், அரம் கிண்ணரம்
10. வாரடை ஆயிரம்
11. போலீஸ் உபசாரம்
12. தேசிகன் விஜயம்
13. தேடுதல் வேட்டை
14. இப்பவே, இப்பவே
15. குடைக்கு ஏது வாசல்?
16. தோழர்
17. ராஜன் கடத்தல்
18. மிஷன் இம்பாஸிபிள்
19. சிவப்பு மாருதி
20. ரெய்ட்
21. மகாநாடு
22. அபயக்குரல்
23. ஸ்கேல் செய்த மாயம்
24. பந்த்
25. கல்யாணமே வைபோகமே
26. அப்பன், ஒப்பிலியப்பன்
முன்னுரை
ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையும் அவன் மனதில் தோன்றும் ஆசைகளால், லட்சியங்களால், வேட்கைகளால் செலுத்தப்படுகிறது. சிலருக்கு பணம், சிலருக்கு பதவி, சிலருக்குப் புகழ், சிலருக்கு பிரபலமாயிருப்பது, சிலருக்குக் காதல், சிலருக்கு அமெரிக்கா, ஏதோ ஒரு வெளிநாட்டு வாழ்க்கை என்று மனதை இழுக்கும் காந்தம் ஒவ்வொருவருக்கும் வேறுவேறாகத்தான் இருக்கிறது. இதில் பணம் என்னும் காந்தமும், அது தரும் வசதிகளும், உலகம் அதற்குத்தரும் மதிப்பும் சற்று அதிகம் தான்.
பணம் வாழ்க்கைக்குத் தேவைதான். தேவைகள் நிறைவேறிய பின்பும் பணம் என்னும் காந்தம் மனதை திருப்தி அடைய விடுவதேயில்லை. இன்னும், இன்னும் என்று மேலும் கழுத்தைப் பிடித்துத் தள்ளி, வாழ்வின் முக்கிய விஷயங்களைக்கூட கவனிக்கவிடாமல் செய்து, வாழ்வின் திசையை மாற்றிவிடுகிறது.
வாழ்க்கையில் நான் பார்த்த, பழகிய, சந்தித்த, பாதித்த மனிதர்களிடம் இருந்த காந்தங்களை, சுபாவங்களை மட்டும் எடுத்துக் கொண்டு குணசித்திரங்களாக வடித்து புனையப்பட்டதுதான் இந்த காந்தமுள். இதன் கதாபாத்திரங்கள் நாம் வாழ்வில் சந்திக்கக்கூடிய மனிதர்கள்தாம். வீட்டில், செல்லும் வழிகளில், அலுவலகங்களில், கடைகளில், சற்று கவனித்துப் பார்த்தால், இந்த குணச்சித்திரங்கள் உங்கள் பார்வையில் எளிதாக புலப்படுவார்கள்.
ஆசைகளும், தேவைகளும் நிறைவேறிய பிறகும் அந்த காந்தம் காட்டும் திசையிலேயே ஓடிக் கொண்டிருக்காமல், வாழ்வில் அமைதியையும், நிம்மதியையும் நாடவும், பிறருக்கு முடிந்தவரை உதவவும் முயற்சி செய்யுங்கள் என்று வேண்டுகோள் விடுப்பதே இந்த காந்தமுள்ளின் நோக்கம். முடிந்தவரை என் வேண்டுகோளை சுவாரசியமாகக் கொடுக்க முயற்சி செய்திருக்கிறேன். எனது சரித்திர நாவல்களுக்கு அளித்த ஆதரவை இந்த சமூக நாவலுக்கும் அளிக்க வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன்.
பதிப்புலக நண்பர் திரு ராஜேந்திரன் அவர்களிடமும் ஒரு காந்தம் இருக்கிறது. அது படைப்பாளிகளின் எழுத்துகளை காந்தமாக இழுத்து நூலாக வெளியிட்டு வாசகர்களையும், படைப்பாளிகளையும் வளர்க்கவும், மகிழவும் செய்கிறது. அவருக்கு எனது மனமார்ந்த நன்றியும் வாழ்த்துகளும்.
விஷ்வக்ஸேனன்.
1. உற்சாக புருஷன்
அதிர்ஷ்ட தேவதைக்கு கண்ணு மின்னல்தான் நாயரே. என்ன சொல்றிங்க?
கேட்டபடியே திரும்பிய ராஜன் என்னைப் பார்த்ததும் ஹாய் மாமா, எப்ப வந்தீங்க, டீக்கடைல சைலன்டா வந்து நிக்கறீங்க. ஏதாச்சும் கியூ பிராஞ்ச்ல சேர்ந்துட்டிங்களா, இல்ல சிபிசிஐடியா?
என்றான் உற்சாகமாய்.
இப்பத்தாண்டா வர்றேன். அதென்னடா தேவதை, மின்னல்?
வடிவேலு பொண்ணு பாக்கப் போனாரே, அந்த மின்னல் மாமா. இது திருட்டு லாட்டரி நம்பர். அதிர்ஷடம் என்னைப் பாக்குதுன்னு நெனைச்சா, நாலு நம்பர் தள்ளிப் பாத்திருக்கு, பத்தாயிரம் போச்சு. சரி, அதென்ன ஆபீசுக்கே வந்துட்டீங்க, காப்பி சாப்பிடறீங்களா?
என்றவன் திரும்பி நாயரே, அடிச்சதும் பிளாட் ஆறமாதிரி ஒரு காப்பி போடு
என்றான்.
திரும்பி என் பின்னால் என்னவோ தேடினான்.
என்னடா தேடறே?
நம்ம விஜிக்குப் பொண்ணு பாக்கறேன்னிங்களே, அதான், கூட்டிட்டு வரலியா? ஊர்ல குல்ஃபி யாரும் கெடைக்கலியா?
அதென்ன குல்ஃபி?
என்ன மாமா நீங்க, குல்ஃபி தெரியாதா? எப்படித்தான் உருப்படப் போறிங்களோ. குல்ஃபின்னா, ஃபிகர், பட்சி, ஜிம்பர ஜிம்பா, யங்ஸ்டர், மேரேஜுக்கு ரெடியா இருக்கற பொண்ணு. டவுட் இருந்தா அபிதான சிந்தாமணி பாருங்க.
அவன்தான் கல்யாணமே வேண்டாம்கறானேடா.
வேணாம்னா உடுங்க, வேஸ்ட்டாவா போவுது? நான் பண்ணிக்கறேன்.
உனக்குத்தான் ஆயிடிச்சே ஏற்கெனவே.
ஒரு வாட்டித்தானே மாமா ஆச்சி, இது பாட்டு கெடக்கட்டும்.
அடி செருப்பால... இரு, வீட்ல வந்து சொல்றேன், சரி விஜி எங்க?
மொதல்ல காப்பி சாப்பிடுங்க, அப்பறம் சுயநினைவோட இருந்தா கேளுங்க சொல்றேன்.
சாப்பிட்டேன்.சரி எங்கே அவன்?
வாங்க
என்றவன் திரும்பி ஆபிஸ் வாசலை நோக்கி நடந்தான். பின் தொடர்ந்தேன்.
நந்தனம் சிக்னல் பக்கத்தில் இருந்தது அந்த ஆபீஸ். ஏதோ காட்ஸில்லா துரத்திக் கொண்டு வருவது போல் கார், பைக், பஸ்கள் அதிவேகத்தில் அலறிக் கொண்டு ஓடிப்பிடிக்க, மவுண்டரோட்டின் அலறல் எப்போதும் ஏ.ஆர். ரகுமான் ரேஞ்சில் பின்னணி அமைக்க, ஆபிசின் வாசல் டீக்கடைக்குப் பக்கத்தில் இருந்தது. உள்ளே நுழைந்து லிப்ட்டைப் புறக்கணித்து படிகளில் ஏறினான் ராஜன். முதல் மாடிக்கு வந்ததும் திகைத்தேன். என்ன ஆபீஸ் இது! எங்கு பார்த்தாலும் ஆட்கள், ஆண்களும் பெண்களுமாக, கும்பல் கும்பலாக, பேப்பர் துண்டுகளில் என்னவோ எழுதி எதிலோ ஒட்டிக் கொண்டு, பெரிய பெரிய நோட்டு புத்தகங்களோடு வரிசைகளில் நின்று கொண்டு...
என்ன ஆபிஸ்டா இது? ஏன் இவ்ளோ கும்பல்?
இருநூத்திப்பத்து கவர்மென்ட் ஆபிசுங்களுக்கு படியளக்கிறோம் மாமா. கொஞ்சம் குபாராத்தான் இருக்கும், உள்ள வாங்க.
ரயில்வே புக்கிங் ஆபீஸ் மாதிரி வரிசையாய் கவுண்டர்கள். இரண்டாவதில் போய் உட்கார்ந்தான் ராஜன். எதிரில் அவசரமாய் வரிசை கட்டினார்கள். பக்கத்தில் இருந்த உயரமான ஸ்டுலில் என்னையும் உட்காரச் சொன்னான்.
ஏண்டா, குபாரா இருக்கும்னியே, அப்படின்னா என்ன?
அப்பறமா சொல்றேன் மாமா. கொஞ்சம் இருங்க. இவங்களை அனுப்பிட்டு வந்துடறேன்
என்றவன் கவுண்டருக்கு வெளியில் நின்ற பெண்ணைப் பார்த்து ஐயோ, என்ன பத்மா, கன்னத்தில் என்ன சிவப்பா?
என்றான்.
அந்தப் பெண் சகஜமாக பரு சார், கிள்ளிட்டேன்
என்றாள்.
சொன்னா நாங்க ஹெல்ப் பண்ண மாட்டமா? சரி பில்லைக் கொடு
என்றான். அவள் நீட்டிய பேப்பர் கட்டுகளை வாங்கி அடுக்கி, இவன் பக்கத்தில் வைத்து அதிலிருந்த நெம்பர்களை வரிசைப்படுத்தி, பக்கத்திலிருந்த காசோலைக் கட்டைப் பிரித்து அதே நம்பர்களைத் தேர்ந்தெடுத்து எதிரிலிருந்த ரிஜிஸ்டரில் எழுத ஆரம்பித்தான். எழுத்து என்னவோ மணிமணியாகத்தான் இருந்தது. கை பழகின வேகத்தில் பரபரவென்று ஓடியது. அந்த வாய் மட்டும் ஓயவில்லை.
அநியாயத்துக்கு உற்சாக புருஷன். சாதாரண உற்சாகமில்லை, சுற்றியிருப்பவர்களையும் வேகமாகத் தொற்றிக் கொள்ளும் உற்சாகம். உம்மணாமூஞ்சிகளுக்கும் சிரிப்பை அறிமுகப்படுத்திவிடும் உற்சாகம். பேச்சும் கிண்டலும் கேலியும், எதிரில் வரிசையில் நின்றவர்களை, காத்திருக்கும் அசதி தெரியாமல் அடித்துக் கொண்டிருந்தன.
ராஜன், விஜி எங்கேடா?
ஒரு பத்து நிமிஷம் இருங்க மாமா, வந்துடுவான்
என்றவன் திரும்பிப் பார்த்தான்.மாமா, சூப்பிரண்டு வர்றாங்க. நான் பேசிக்கறேன். நீங்க கம்முன்னு இருங்க
என்றான் ரகசியமாய்.
பக்கத்தில் ஒரு உயரமான பெண்மணி வந்து நின்றாள். கடுகடுவென்று இருப்பதே அவள் வாழ்க்கையின் லட்சியமாக இருக்க வேண்டும்.
பரபர என்று வேலை ஓடிக் கொண்டிருந்த அந்த இடத்துக்கும் டிபார்ட் மெண்ட் கும்பல்களுக்கும் மத்தியில் என் போன நூற்றாண்டு வேஷம், கட்டுக் குடுமியும் பட்டைத் திருமண்ணும், பஞ்சகச்சமும் அந்தப் பெண்மணியின் கண்களுக்கு விரோதமாகத் தெரிய, ‘வல்லரசை யோசிக்கிற இந்தக் காலத்திலேயும் இப்படியும் சில ஜந்துக்கள் இருக்கா!’ என்ற ஆச்சரியமும் தெரிந்தது. என்னை ஏதோ காக்காய் கொண்டு வந்து போட்ட வஸ்து போலப் பார்த்தாள். முகத்திலிருந்த கடுப்பு இன்னும் சில டிகிரிகள் ஏறியது.
ராஜன், வெளி ஆட்களை கேஷ் செக்ஷன்ல உள்ளே விடக்கூடாதுன்னு தெரியாதா உனக்கு?
என்றாள் அந்தப் பெண்மணி.
ராஜன் திரும்பக்கூட இல்லை. எழுதியபடியே சொன்னான்.
இவர் வெளி ஆள் இல்லை மேடம்.
நம்ம டிபார்ட்மெண்டா, மப்ஸலா?
ம்ஹும், இவருக்கேத்த மாதிரி நம்ம டிபார்ட்மெண்ட்ல போஸ்டே கெடையாது மேடம்.
வெளி ஆபீசா?
இல்ல மேடம், இவர் என் மாமா.
உன் மாமாவா?
அவள் கடுப்பு இன்னும் ஏறியது.
யெஸ் மேடம், இவர் பொண்ணைத்தான் நான் கட்டிக்கப் போறேன். வர்ற ஞாயித்திக்கிழமை பாம்குரோவ்ல ரிசப்ஷன் வெச்சிருக்கேன். கண்டிப்பா வந்துடணும். வாங்க
என்றான் படு சீரியஸாக.
அந்தப் பெண்மணிக்கு அவன் கிண்டல் புரிய கோ டு ஹெல்
என்றபடி வேகமாக உள்ளே போனாள்.
மாமா, சூப்பு நம்மளை மறுபடி டீக்கடைக்கே போவச் சொல்லிட்டாங்க
என்றான் ராஜன். சிரித்தபடியே திரும்பியவன் மாமா, இதோ விஜி வந்துட்டான் பாருங்க
என்றான்.
விஜயராகவன் வேகமாக வந்து கொண்டிருந்தான். விறுவிறுவென்று ஒரு வேக நடை. கறுப்பு நிறம்தான், ஆனால் முகத்தில் ஒரு களை இருந்தது. சாதாரண உயரம், கண்கள் மட்டும் அக்னித் துண்டுகள் மாதிரி ஜிகுஜிகு என்றிருந்தன.
என்னைப் பார்த்ததும் எப்ப மாமா வந்தீங்க? என்ன, ரூமுக்கு வராம நேர ஆபீசுக்கு வந்துட்டீங்க?
என்றான். என்னைப் பார்த்ததும் அத்தனை சந்தோஷம் என்பது தெளிவாகவே தெரிந்தது. எதையும் மறைக்காத முகம்.
பஸ் லேட்டாயிடிச்சிடா விஜி. எப்படி இருக்கே? சரி, சாவி கொடு. ரூமுக்குப் போறேன், நீ அப்பறம் வா
என்றேன்.
ராஜன், மாமாவை ரூமுக்கு கூட்டிட்டுப் போக...
என்றான் விஜி.
இருடா. தோ கூப்பிடறேன். ராம்... தாஸ்
எதிரே நின்ற கும்பலைப் பார்த்து குரல் கொடுத்தான் ராஜன்.
சொல்லுங்க சார்
உள்ளே வந்து நின்ற ராமதாஸ் ஆறரையடி உயரத்தில் மூணடி அகலத்தில் அடக்கமாக நின்றான். தலை சம்மர்கட்டாக இருந்தது.
மாமாவைக் கொண்டு போய் விஜி ரூம்ல போட்டுட்டு வந்துடு
என்றான் ராஜன்.
யெஸ்ஸ்ஸ்... ஸார்
என்றது ஆறரையடி.
போங்க மாமா, நான் மத்யானம் வர்றேன்
என்றான் விஜி.
படிகளில் இறங்கி வெளியே வந்தேன். ஏதோ சுனாமி துரத்திக் கொண்டு வருவது போல் கார்களும் பஸ்களும் பைக்குகளும் மவுண்ட்ரோட்டில் அலறிக்கொண்டு ஓடின. இரண்டாவது நிமிஷம் என்னை உரசிக்கொண்டு வந்து மூன்று அங்குலம் முன்னால் நின்றது ஒரு காவல் ஜீப்.
மாமா சார், ஏறுங்க...
உள்ளே ராமதாஸ்.
ஏறினதும் கிளம்பின ஜீப் மிதந்தது. கார்களுக்கும் பஸ்களுக்கும் நடுவே புகுந்து புகுந்து இதோ தொட்டுவிடும் என்று நினைக்கிற துாரத்தில் விலகி, அநியாய வேகத்தில் போனாலும், ஒரு குலுக்கல், திடீர் பிரேக்கூட இல்லாமல் பத்தாவது நிமிஷம் ராயப்பேட்டை மருத்துவமனையைத் தாண்டி அந்த லாட்ஜ் முன்னால் வந்து நின்றது.
ரூம் வரை வந்து கதவைத் திறந்து உள்ளே என் கைப்பையை வைத்த ராமதாஸ், வெத்தல சீவல் ஏதாச்சும் வோணுமா சார்? வெஸ்ட் மாம்பலம் சுருட்டு பாய் கடையில் வெள்ளைக்கொடி வெத்தலை கிடைக்கும் சார்.
வேண்டாம்பா, நிறைய இருக்கு.
சார்... நீங்க விஜி சாரோட மாமாதானே சார்? நெறைய உங்களைப்பத்தி பேசுவார் சார்.
அப்படியா?
ஆமா சார். தங்கமான ஆள் சார். ஆனாக்கா, அநியாயத்துக்கு கோவம் வருது சார். எங்களுக்கு அவரண்ட சொல்ல தைரியம் கெடையாதுங்க. நீங்க கொஞ்சம் சொல்லுங்க மாமா சார். வரேன் சார்
விறைப்பாக நின்று ஒரு சல்யூட் அடித்துவிட்டு வெளியேறினான் அந்த ராமதாஸ்.
கட்டிலில் சாய்ந்து ஆசுவாசப்படுத்திக் கொண்டேன். கும்பகோணம் கருப்பூர் வெற்றிலையும் சீவலும், பன்னீர் புகையிலையும் சேர்ந்து மணம் பரப்பின. பத்து நிமிஷமிருக்கும், கதவை நாசூக்காகத் தட்டிவிட்டு உள்ளே நுழைந்தார் ஒருவர்.
அரை ஏக்கரா விரிந்த நெற்றியில் அதீத படிப்பாளி என்பது எழுதி ஒட்டியிருக்க, சபாரி சூட்டில் நாகரிகமாக நின்றார்.
விஜயராகவன் வரலியா?
என்றார் ஆக்ஸ்போர்டு சுத்தத்தில்.
வந்துடுவான்
என்றேன் சுத்தமான தமிழில்.
நீங்க யாருன்னு தெரிஞ்சுக்கலாமா? உங்களுக்கு ஆட்சேபணையில்லைன்னா...
என்றார் மறுபடி. கண்ணில் விஜியைத் தேடி வருபவர்களைத் தெரிந்து கொள்ளும் ஆவல்.
விஜியோட மாமா.
ஓ... உங்களைச் சந்தித்ததில் மகிழ்ச்சி.
நெருங்கி மெத்தென்று கைகுலுக்கினார்.நான் ஹாஜி பீர் அலி, நியூ காலேஜில் புரபசராயிருக்கேன். விஜிகிட்ட ஒரு டவுட் கேக்கலாம்னு வந்தேன். வந்தார்னா சொல்லுங்க
என்றார்.
வம்பிழுக்கத் தோன்றியது எனக்கு.புரபசர்ங்கறீங்க, விஜி கிட்டப்போய் டவுட் கேக்கணுங்கறீங்க. அவன் டிகிரியே ஒழுங்கா முடிக்காத பயலாச்சே.
மீசைக்கும் வளைந்து இணைத்த குறுந்தாடிக்கும் இடையே பளிச்சென்று சிரித்தார். கண்களில் மட்டும் கொஞ்சம் கோபம் தெரிந்தது. பதிலும் சூடாக வந்தது. மாணவர்களுடன் பேசிப்பழகிய வித்தை என்பது புரிந்தது எனக்கு.
உங்க ஒப்பீனியன் தவறு சார். என்னன்னு நெனைச்சீங்க விஜியை, ம்...? வெறும் கவர்மென்ட் ஆபிஸ் கிளார்க் என்றா? நோ... அது அவருக்கு சரியான இடமேயில்லை. என்ன டாபிக் வேணா கேளுங்க அவர்கிட்ட. அக்குவேற ஆணிவேற அலசிடுவார். டிகிரியை முடிக்காதது அவரோட தப்பில்லை. அனாலிஸிஸ் அண்ட் காம்ப்ளக்ஸ் வேரியபில்ஸ் யூனிவர்சிட்டி சிலபஸ்லேருந்தே நைன்டீன் செவன்டி பைவ்லயே எடுத்தாச்சி. மறுபடி எல்லாத்தையும் எழுதணும்கறதால் விட்டுட்டார், அவ்ளோதான். அதுவுமில்லாம... அவர் வீட்டு சூழ்நிலை எழுத முடியலை. அவரோட வாப்பா வேற பிராப்ளம் குடுத்தாரு
ஆக்ஸ்போர்டு படபடவென்று பொரிந்துவிட்டு கொஞ்சம் நிதானப்பட்டது.
கையைக் காட்டி நிறுத்தினேன்.
கொஞ்சம் மூளை இருக்குங்கறீங்க...
கொஞ்சமா? ஜீனி சார் அவர். நான் டாக்டரேட்டுக்கு தீஸிஸ் எழுதிட்டிருக்கேன். அவர் கிட்ட டவுட் கேக்கறதுக்கு எனக்கு வெக்கமே கெடையாது. சச்ய ஸ்காலர் ஹி ஈஸ். வேணும்னா திரும்பிப் பாருங்க, அந்த ரேக் பூரா அவர் படிக்கிற புக்ஸ் தான்
என்றவரின் வேகம் சட்டென்று குறைந்தது.
சிரித்தபடியே என்னைப் பார்த்தவர், உங்களுக்கே தெரியும், யெஸ், ஐ ரிமெம்பர், உங்களைப் பத்தி சொல்லியிருக்கார். விஜியப்பத்தி மத்தவங்க வாயால கேக்கணும்னு ஆசை உங்களுக்கு. அதானே...?
நான் சிரித்தேன். அதற்குள் யாரோ பின்னாலிருந்து அழைத்தார்கள்.எக்ஸ்யூஸ் மி, பிறகு உங்களைச் சந்திக்கிறேன் சார்
என்று வெளியேறினார் அவர்.
அவர் போனபின் திரும்பிப் பார்த்தேன். சுவரோடு பதித்த அலமாரியின் கதவைத் திறந்ததும் திகைப்பாக இருந்தது.
ஃபிராய்ட், ஷேக்ஸ்பியர், மில்லர்ஸ், ஷெல்டன், பிரடரிக் போர்சித், ஜவஹர்லால் நேரு, இன்னும் யார் யாரோ. மேலே தமிழ், ராஜாஜி, கம்பன், திருமூலர், ஜெயங்கொண்டார், மீ.ப.சோமு, லாசரா, ஜெயகாந்தன், சுஜாதா, சாண்டில்யன், கல்கி, கோ.வி.மணிசேகரன், விக்கிரமன், நா.பா., கி.ரா, லஷ்மி, தேவன், எஸ்ஏபி, தி.ஜானகி ராமன், கோமகள்... இன்னும்... அடுத்த தலைமுறை எழுத்தாளர்கள்.
அடப்பாவி, வாங்கற சம்பளத்தை புஸ்தகம் வாங்கியே தீர்க்கறானா? நானும் புத்தகப்புழு தான். அதுக்காக இப்படியா? கட்டில் மேலே ஏறி நாலைந்து புத்தகங்களை எடுத்து வைத்தேன், ஊரில் பொழுது போவதற்கு.
கட்டிலின் கீழேயிருந்து யாரோ கெக்கெக்கெக்கே...
என்று சிரித்தது போல இருந்தது.
அதுதான் விதி என்பது அப்போது எனக்குத் தெரியவில்லை.
2. நல்லவர்களின் கோபம்
கும்பகோணத்து வெற்றிலை சீவலும், புகையிலையும் மணம் பரப்ப யோசித்தேன்.
‘இந்த விஜியிடமும், இவன் அண்ணா தேவாவிடமும் எனக்கு எப்படி இத்தனை பிடிப்பு வந்தது? எனக்கென்று குழந்தை குட்டி என்று இல்லாததாலா? இவர்களின் அப்பன் ராமதேசிகன்தான் எனக்கு பால்ய சினேகிதம். ஒரு கட்டத்தில் அவன் போக்கு பிடிக்காமல் ஒதுங்கினேன் என்றாலும், மாமா, மாமா
என்று ஒட்டிக் கொண்ட இந்தப் பயல்களிடம் அக்கறையும் பாசமும் வளர்ந்து போனது. அவர்களும் இத்தனை வருஷமானாலும் என்னிடம் காட்டிய மரியாதையும், பாசமும், என் வார்த்தைக்கு மதிப்பு கொடுக்கிற விதமும் என்னை இவர்களிடம் இன்னும் ஒட்ட வைத்துவிட்டன. ஆனால் போன ஒரு வருஷமாக எனக்கு வரமுடியவில்லை... என் வீட்டில் சோகம். ஆனால் இந்த முறை நான் வந்திருப்பது ராமதேசிகன் எழுதிய கடிதத்தால் தான் என்பது இவர்களுக்கு இப்போதைக்கு தெரிய வேண்டாம்.’
என் நினைப்பு சட்டென்று நின்றது. கதவை யாரோ தட்டினார்கள்.
தெறந்துதான் இருக்கு, உள்ளார வாங்க
என்றேன்.
உள்ளே வந்தவர் ஒரு இன்ஸ்பெக்டர். சுவாதீனமாக எதிர்க்கட்டிலில் உட்கார்ந்து வியர்வையைத் துடைத்துக் கொண்டபடியே ஸ்ரீதரன் நாயர் இல்லையா?
என்றார்.
யாரு ஸ்ரீதரன் நாயர்?
வழுக்கைத்தலையைத் துடைத்தபடியே தொப்பியைப் பக்கத்தில் வைத்துவிட்டு அப்போதுதான் என்னை கவனித்தவர் கொஞ்சம் விழித்தார்.
நீங்க...?
சொன்னேன்.
நான் வெங்கடபதி. நான் கேட்ட ஸ்ரீதரன் எங்க க்யூ பிராஞ்ச் டிஜிபி கேம்ப் கிளார்க். விஜியோட ரூம்மேட். விஜி இந்நேரம் வந்திருக்கணுமே?
என்றார்.
மத்யானம் வர்றதாதான் சொன்னான். வந்துடுவான். சரி, விஜி நல்ல பழக்கமா?
கேட்டேன்.
ரொம்ப குளோஸ் மாமா சார். அவர் ஆபீசில்தான் எங்க டிபார்ட்மென்டுக்கு சம்பளம், லோன், சகலமும்... எப்படித்தான் விஜி அங்க குப்பை கொட்டராரோ...
சலித்துக்கொண்டார்.
ஏன்? விஜி அங்க வேலை பண்றதுக்கு என்ன?
எந்தப் பக்கம் திரும்பினாலும் நீட்டின கையாவே இருக்கும் மாமா சார். விஜிலென்ஸ் ஆளுங்க கிட்டயே துட்டு வாங்கற ஆபீஸ். அப்படியே பழகிட்டாங்க. டிபார்ட்மெண்டு ஆளுங்களுக்கும் வேலை ஆவணுமே...
விஜி வாங்க மாட்டானா?
நெருங்க முடியாது சார். அதான் பிரச்னையே. கோவம் வந்துடும். கிழிச்சி நார் நாராக்கிடுவார்... ஆனா, அந்தக் கோவம்தான் எங்களை சேத்து வெச்சது.
கோவம் மனுஷங்களைப் பிரிக்கும்னு கேள்விப்பட்டிருக்கேன்...
"அப்படியில்ல சார். எங்களைச் சேர்த்து வெச்சது அவரோட கோவம்தான். நான் சாதாரணமா அவர் ஆபீசுக்குப் போறதில்லை. அதுக்குன்னு ஆட்கள் இருக்காங்க. ஒரு தரம் திருலோக்சந்தர்னு ஒரு ஏ.சி டிரான்ஸ்பர் ஆகி வந்தாரு. பழைய ஆபீஸ்லருந்து எல்பிசின்னு ஒரு பேப்பர் வராம ரெண்டுமாசமா சம்பளமே வாங்க முடியலை. வந்தப்பறம் பில் போட்டுக் கொடுத்தோம். விஜிசார் தான் பாக்கறாரு. ஏ.சி என்னைப் போய்ப் பார்க்கச் சொன்னார்னு இவர் ஆபீசுக்கு