Ninaivil Sumanthapadi...
()
About this ebook
நினைவுகளில் கரைந்து வாழ்வதுதான் நம் வாழ்க்கை. நம் வாழ்வில் நாம் அசைபோடும் நினைவுகள் பல உள்ளன. அவற்றை நினைத்து, சுவைக்கும் அந்த நொடிகள் நம்முள் இனம்புரியாத பல மாற்றங்களை உருவாக்கும். இந்த சிறுகதை தொகுப்பிலும் இதே மாதிரியான பல சுவாரஸ்யம் கலந்த பல நினைவுகள் உள்ளன. ஒவ்வொரு கதையிலும் பல நிகழ்வுகள் இடம் பெறுகின்றன. அவற்றை படிக்கும்போதே நாமும் பல நினைவுகளை அசைபோட்டுக் கொள்ள முடியும். வாசிப்போம் கமலா நாகராஜனின் சிறுகதை நினைவுகளை...!
Related to Ninaivil Sumanthapadi...
Related ebooks
Athu Oru Kana Kaalam Rating: 0 out of 5 stars0 ratingsUn Perai Sollum Pothae Rating: 2 out of 5 stars2/5Pillai Prayathiley Rating: 0 out of 5 stars0 ratingsEzhavathu Jenmam Rating: 4 out of 5 stars4/5Oru Kurangu Ammavagirathu Rating: 0 out of 5 stars0 ratingsDeivam Thantha Poove! Rating: 0 out of 5 stars0 ratingsDeivam Thantha Poove Rating: 5 out of 5 stars5/5‘Gopu’win Sirapana Kathaigal Collection 1 Rating: 0 out of 5 stars0 ratingsKannamochi Yenada? Rating: 0 out of 5 stars0 ratingsAval Rating: 0 out of 5 stars0 ratingsHema! Hema! Hema! Rating: 0 out of 5 stars0 ratingsUnaithean Ena Naan Ninaithean... Rating: 4 out of 5 stars4/5Kaadhalukku Karuppu Kodi Rating: 5 out of 5 stars5/5Kumari Penne! Kuyilaale! Rating: 0 out of 5 stars0 ratingsGnanakulam Rating: 0 out of 5 stars0 ratingsVerillatha Marangal Rating: 5 out of 5 stars5/5Andhi Varum Neram Rating: 5 out of 5 stars5/5Venthu Thaniyum Venjinangal Rating: 0 out of 5 stars0 ratingsAagayam Kaanatha Natchathiram Rating: 0 out of 5 stars0 ratingsVelli Nilavey... Rating: 0 out of 5 stars0 ratingsKadavulai Kanda Mahangalin Kathai Rating: 0 out of 5 stars0 ratingsAthu Sari Appuram? Rating: 0 out of 5 stars0 ratingsAppalakacheri Rating: 2 out of 5 stars2/5Raajiyin Pillai Rating: 0 out of 5 stars0 ratingsSuriyan Theyumo? Rating: 0 out of 5 stars0 ratingsNyabagam Varuthe... Nyabagam Varuthe... Rating: 0 out of 5 stars0 ratingsTagore Darisanam Rating: 0 out of 5 stars0 ratingsMythili Rating: 0 out of 5 stars0 ratingsPallakku Payanam Rating: 0 out of 5 stars0 ratingsVazhithunai Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Ninaivil Sumanthapadi...
0 ratings0 reviews
Book preview
Ninaivil Sumanthapadi... - Kamala Nagarajan
https://www.pustaka.co.in
நினைவில் சுமந்தபடி…
Ninaivil Sumanthapadi...
Author:
கமலா நாகராஜன்
Kamala Nagarajan
For more books
https://www.pustaka.co.in/home/author/kamala-nagarajan
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
1. நினைவில் சுமந்தபடி...
2. அன்புள்ள அக்கா…
3. மீனாட்சி கல்யாணம்
4. மருத்துவத்தின் பிடியிலே...
5. தெய்வீகமானது...
6. பாசப் பிணைப்புகள்
7. அரவணைப்பு
8. பாட்டி வீடு
9. பெண்ணின் பெருமை
10. பிரியமுள்ள தம்பி
11. செல்லி
12. பூங்கொடி
13. சிந்தாமணி
14. மழைத் துளி
15. நிலக்கடலை
16. கனவு பலித்தது
17. கழிந்த நினைவுகள் கண்ணயர...
18. குடத்திற்குள் விளக்கு
19. கண்டேன் கண்ணனை
20. அன்புத் தொல்லை
21. பந்தம்
22. கற்பக விருக்ஷம்
23. முன்னேற்றப் பாதையிலே...
24. பூங்கோதை
25. மனப் பக்குவம்
26. மன்னிப்பு
27. மனமொன்றி மயங்கி விட்டால்...
28. வெற்றிச் செல்வன்
29. காசி
30. விடியலை நோக்கி...
31. கறவை மாடு
32. குற்றமே கூறிவிடும் சிறுமை
33. ஒளி பிறந்தது
34. துணிவே துணை
35. அன்பின் எல்லையிலே...
36. சுயகௌரவம்
37. ஊமைக் கனவு
1
நினைவில் சுமந்தபடி...
தோளில் பையும் சூட்கேசும் கையுமாக பஸ்ஸை விட்டு இறங்கினாள் கோதை. நாற்பது வருடங்களுக்குப் பிறகு தான் பிறந்த அந்த மண்ணில் காலை வைக்கும் பொழுது ‘நகரிப்புரம்’ என்ற அந்த ஊரின் பெயர் தாங்கிய பலகையை படித்து ரசித்துக் கொண்டிருந்தாள் அவள். காலை மணி பத்தாகியும் வெய்யில் இன்னும் உறைக்கத் தொடங்கவில்லை. மப்பும் மந்தாரமுமாக சில்லென்று காற்று முகத்தில் வந்து வீசியது. மனதிற்கு இதமாக இருந்தது.
அந்த செம்மண் சாலையில் கோதையும் அவள் கணவனும் மெல்ல நடக்கத் தொடங்கியிருந்தார்கள். இன்னும் ஒரு கிலோ மீட்டர் நடக்க வேண்டும். பிறந்ததிலிருந்து ஒன்பதே வருடம் வரை வாழ்ந்த தன் கிராம வாழ்க்கை பனி மூட்டமாகத்தான் நினைவிற்கு வந்தது. சற்று தூரம் நடந்தால் ஒரு அரசமரம் இருந்ததாக ஞாபகம். பறவைகளின் இனிய ஒலிகளுக்கிடையே அரசமரத்தின் இலைகள் அசையும் ஒலியும் அதனூடே நினைவிற்கு வந்து அதை அடையாளமாகத் தேடி நடக்கலானார்கள். அவர்கள் நடக்கும் பொழுதே தான் வாழ்ந்த அந்த ஊரையும் அந்த வீட்டையும் அந்த வீட்டின் திண்ணையிலே அம்மாவின் புடவைத் தலைப்பினுள்ளே ஒளிந்து கொண்டு முகம் புதைத்தபடி, அம்மாவின் புடவை வாசனையே ஞாபகமாய். அதனின்று மீள மனம் இல்லாதவளாக மெல்ல நடந்தாள் கோதை. தன் கணவனிடம் ஒன்றும் பேசத் தோன்றவில்லை அவளுக்கு.
அம்மா! அம்மா தான் எவ்வளவு அழகு. அம்மாவிற்கே உரித்தான ரோஜாப்பூநிறம். மலர்ந்த முகம். அகலமான நெற்றி. அகலமான கண்களல்ல. சிறு சிறு ஆழமான கண்கள். அழகாக விளங்கும் நாசி. சும்மா இருந்தாலும் சிரித்துக் கொண்டிருப்பது போல தோன்றும் உதடுகள். அம்மாவை நினைக்கவே பெருமையாக இருந்தது கோதைக்கு. இந்த சிறு கிராமத்தில் அம்மா தன்னந்தனியாக தன் மூன்று குழந்தைகளை வைத்துக்கொண்டு வாழ்ந்திருக்கிறாள். அம்மாவிற்கு கல்யாணம் ஆகும்போது பதிமூன்று வயது. தாத்தா பதிமூன்று வயதில் அம்மாவை இந்த கிராமத்தில் அப்பாவிடம் விட்டு விட்டு சென்றார். அம்மாவின் ஞாபகத்திலேயே ஆழ்ந்து அந்த கிராமத்தின் அடையாளமாகக் கொண்ட அரச மரத்தைத் தேடி தூரத்தில் தெரிகிறதா என்று பார்த்து பார்த்து நெஞ்சுக்குழி அடைக்க பேசும் திறன் இழந்து நடை வேகமே குறைந்து, இப்பொழுது அம்மா இல்லையே என்ற ஞாபகம் வர, அம்மா, நீ ரொம்ப பெரிய ஆள்தான் அம்மா, எவ்வளவு பெரிய பெரிய காரியத்தையெல்லாம் நீ சாதித்திருக்கிறாய் - என்று அம்மாவைக் கட்டிக்கொண்டு அழ வேண்டும் போல் இருந்தது கோதைக்கு.
‘நீ, ருக்மணி பெண் கோதை தானே’ என்று யாரோ கேட்கும் குரல் கேட்டு தன் நினைவினின்று மீண்டவளாகி திடுக்கிட்டு திரும்பி பார்த்தாள். அறுபது வயது மதிப்பிடும் ஒரு மனிதர் ‘இங்கே பாரு. இதுதான் நீங்க இருந்த வீடு, என்று ஒரு இடத்தைக் காண்பித்தார். வீடா அது? வெறும் மண். அந்த இடத்தில் வீடே இல்லை. மண் தான் இருந்தது. ‘உங்க அம்மா இந்த வீட்டையும் நிலத்தையும் அப்பவே விற்று விட்டாள்.’
தன் அம்மாவோடு வாழ்ந்த வீட்டையும், வீட்டு வாசலில். மாமரத்தடியில் தான் பாண்டி விளையாடிய இடத்தையும், கண்ணாமூச்சி விளையாடிய ரேழியையும், ‘நமசிவாய’ சொல்ல தாத்தா கூப்பிடும் பொழுது வர மறுத்து ஒளிந்து கொள்ளும் நெல்லு வைக்கும் பத்தாயமும், அம்மா ஸ்லோகம் சொல்லிக் கொண்டே பால் நிவேத்தியம் செய்யும் சுவாமி உள்ளும், எல்லோருமாக போட்டிபோட்டுக் கொண்டு சாப்பிடும் அடுக்களையையும், இனி பார்க்கவே முடியாது என்று நினைத்தவுடன் கோதைக்கு தாங்க முடியாத ஏமாற்றமும் வருத்தமும் ஏற்பட அந்த அழகிய அரசமரம் எங்கே என்று தேடினாள். ‘இங்கே ஒரு பெரிய அரசமரம் இருக்குமே, அது இப்போ எங்கே?’ என்று கேட்டாள். அந்த மனிதர் பேச்சை வேறு திக்கிற்கு எடுத்துச்சென்று ‘வாங்கோ. குளித்து சாப்பிடலாம்’ என்று கூறி அழைத்துச் சென்று விட்டார். ‘இங்கே மாமரம் இருக்குமே. அதற்கு ‘சக்கரக்குடம்’ என்று கூட பேர் உண்டே. ‘கடுக்காமூச்சி’ மாமரம் எங்கே? என்றெல்லாம் கேள்வி மேல் கேள்வி கேட்ட கோதை படி இறங்கியபடியே அவர் பின்னால் சென்று கொண்டிருந்தாள்.
சூடாகக் காப்பி குடித்து விட்டு தான் ஊரை விட்டு வரும்பொழுது அப்போதுதான் நீச்சல் கற்றுக்கொண்டு குளத்தை விட்டு வர மனம் இல்லாமல் அம்மாவிடம் திட்டு வாங்கி கதவு பின்னால் அழுது கொண்டு உட்கார்ந்திருந்தது ஞாபகத்திற்கு வர ‘இங்கே ஒரு குளம் உண்டே, அது இங்கேதானே இருந்தது’ என்று வினவ, சற்று தூரத்தில் இருந்த ஒரு குளத்தைக் காண்பித்தார் அந்த மனிதர். படிக்கட்டினூடே தெளிந்த நீரோடு காட்சி அளித்த குளமும், தோய்த்த துணிகளை சுமந்தபடி கரையில் குளிக்கும் அம்மாவின் வரவை எதிர் நோக்கியபடி நின்றிருந்த ஞாபகம் தான் வந்தது. ‘மாமா. இங்கே ‘அஞ்சாங்க்லாஸ்’ வரைக்கும் இருக்கிற ஒரு ‘எலிமென்டரி’ ஸ்கூல் இருக்குமே.’ தான் படித்த ஸ்கூலை பார்க்கும் ஆவல் மேலோங்க கோதை அந்த மனிதரைக் கேட்டாள். ‘இங்கே போற வழியிலேதான் இருக்கு.’ ‘பகவதி காவுக்கு போகணும்ணு சொன்னியே. போகிற வழியிலே காட்டறேன்’னு சொன்னார்.
குளித்து முடித்தவுடன் ‘பகவதிகாவுக்கு’ எல்லோருமாக ஆட்டோவில் ஏறி கிளம்பினார்கள். அந்த காலத்திலே ‘காவுக்கு போறதானா ஆட்டோவெல்லாம் கிடையாது. நடந்துதான் போகணும். கார்த்தாலேயே டிபன் ஏதாவது சாப்பிட்டுப் போனால் கோவில்லேருந்து வர ஒரு மணி ஆகும். வயல் எல்லாம் கடந்து சின்ன சின்ன ஓடையெல்லாம் கடந்து போகணும். அப்படி ஒரு தடவை போகும்பொழுது பெரிய மழை பிடிச்சிண்டு தன் இரண்டு வயது தம்பியை இடுப்பிலே தூக்க முடியாம தூக்கிண்டு வழியிலே ஒரு ஓடையிலே விழுந்து விட யாரோ எடுத்துக் காப்பாற்றினார்கள். தங்களோடு கோவிலுக்கு வராத அம்மா வீட்டிலேயே தங்கப்போய் இதைக் கேள்விப் பட்டு அடிச்சு பிடிச்சு ஓலக்குடையை எடுத்துண்டு மழையிலே ஓடி வந்தாளாம். அம்மா சொல்லியிருக்கா.
அந்த ஓடை இருக்கான்னு அந்த மாமாவைக் கேட்க அந்த மாமாவிற்கு ரொம்ப சிரிப்பு வந்தது. ‘கோதை. நீயே இப்போ குழந்தையாயிட்டே போல இருக்கே’ன்னு சொல்லி சிரித்தார். ‘இங்கே பாரு. இது தான் அந்த ஸ்கூல்’ என்ற குரலைக் கேட்டு தன் நினைவு வந்தவளாக கோதை அவர் காட்டிய அந்த திக்கை பார்த்தாள். நாற்பத்தைந்து வருடத்திற்கு முன் தான் படித்த ஸ்கூல் கொஞ்சங்கூட மாற்றமே இல்லாமல் அப்படியே இருந்தது. ‘ப’வடிவத்தில் ஓடு வேய்ந்த அதே ஸ்கூல். தாழங்குடையை அந்த வராண்டாவில்தான் வரிசையாக வைப்பார்கள். கேரளாவில் எப்பொழுதும் மழை பெய்யும். கொட்டு கொட்டுன்னு கொட்டும். குடை இல்லாமல் எங்குமே போக முடியாது. கோதையின் அப்பா கூட எப்பொழுதாவது மதராஸிலேர்ந்து வந்தா ‘கோதை, ஸ்கூலுக்கு போக குடை வெச்சிருக்கியோன்னு’ தான் கேட்பார். புஸ்தகம், ஸ்லேட்டெல்லாம் அப்புறம் தான்.
மறுபடியும் ஸ்கூலை ஆவலோடு எட்டிப்பார்த்த கோதை ‘அங்கே ஒரு ஸ்டேஜ் இருக்கும். ஸ்கூல்டே அன்னிக்கு டான்ஸ் ஆடியது. பாட்டு பாடியது. ஒரு தடவை கிருஷ்ணர் வேஷம் போட்டு ஓடக்குழல் வைத்து. மஞ்சள் வேஷ்டி கட்டி தலையிலே மயில்பீலி வைத்து டான்ஸ் ஆடியது இன்னும் தனக்கு ஞாபகத்திற்கு வர ஆட்டோவிலேர்ந்து இறங்கி ஸ்கூலை ஒரு முறை சுற்றி வந்து பார்த்தாள். இனம் தெரியாத உணர்ச்சிகளுக்கு அடிமையாகி, காவிற்கு போய் கூட்டு பாயஸம் வைத்து வீட்டிற்குத் திரும்பி வந்தார்கள்.
வந்தவுடன் சூடான புழுங்கலரிசி சாதம். மோர்க்கூட்டான். பூசனிக்காய் ஓலன். வாழைத்தண்டுப் பச்சடி இப்படி அந்த வீட்டு அம்மாள் உபசரித்து எல்லோரையும் சாப்பிட வைத்தாள். அங்கே வாழைத்தண்டிலே சமைத்தால் அவ்வளவு ருசியாக இருக்கும் என்பது ஞாபகத்திற்கு வர தன் அம்மா தோட்டத்திலேர்ந்து அன்னன்னைக்கு பறித்து சமையல் செய்ததையும் தோட்டத்திலே பயிராக்குவது என்றால் அம்மாவிற்கு கொள்ளைப்பிரியம் என்பதும் நினைவிற்கு வர கண்ணில் நீர் முட்டியது கோதைக்கு. தோட்டத்திலேர்ந்து கீரையைப் பறித்து வந்து வேக வைத்து தேங்காயுடன் ஜீரகம் சேர்த்து அரைத்து ஒரு குழம்பு செய்வாள். மலையாளத்தில் கீரை மொளக்கூட்டல் என்று சொல்வார்கள். புழுங்கலரிசி சாதத்துடன் அந்தக் குழம்பை சேர்த்து சாப்பிட்டால் அதன் வாசனை மனதை விட்டுப்போகவே போகாது. ‘தன் அம்மா மாதிரி கீரை மொளக்கூட்டல் யாருமே வெக்க முடியாது’ என்று பெருமையுடன் சொன்னாள் கோதை. ‘அம்மா, என் அம்மா. நீ இருக்கும் போதே இந்த ஊருக்கு வராமல் போய் விட்டேனே’ என்று நினைத்து நினைத்து அம்மாவின் நினைவிலேயே ஆழ்ந்து போனாள்.
சிறிது ஓய்வெடுத்துக் கொண்டு மாலை நான்கு மணிக்கு முகம் கை கால்களை கழுவி, தலை வாரி பொட்டு வைத்துக் கொண்டு பக்கத்தில் இருக்கும் கிருஷ்ணன் கோவிலைப் பார்க்க புறப்பட்டார்கள். வீட்டுப் பக்கத்திலேயே இருக்கிற அந்த கிருஷ்ணன் கோவிலை மறக்கவே முடியாது. கோயிலில் நவராத்திரி ஒன்பது நாளும் விசேஷமாகக் கொண்டாடுவார்கள். ஒவ்வொரு நாளும் அந்த கிராமத்தில் இருக்கிற ஒவ்வொரு வீட்டிலேர்ந்தும் ஏதாவது நிவேத்தியம், சுண்டல், வெல்லம் சேர்த்த அவல் இப்படி ஏதாவது செய்து கொடுப்பார்கள். கிருஷ்ணனுக்கு நிவேத்தியம் முடித்து ஊர்க்குழந்தைகளை வரிசையாக உட்கார வைத்து பிரசாதத்தை வினியோகிப்பார்கள்.
அந்தக் கோவிலில் குழந்தைகள் உட்காருவதற்கென்றே ஒரு பெரிய ஹால் இருக்கும். நவராத்திரி ஒன்பது நாட்களும் ஸ்கூல்லேர்ந்து சாயந்திரம் ஒரு பிரியட் பர்மிஷன் வாங்கிக் கொண்டு வீட்டிற்கு வந்து புதுப்பாவாடை கட்டி தலை வாரி பொட்டு வைத்துக்கொண்டு கோவிலுக்குப் போய் கும்மாளமடிப்பார்கள். ராத்திரி எட்டு மணிக்குத்தான் சுண்டலை விநியோகிப்பார்கள். அதற்கு நான்கு மணிக்கே வீட்டிலேர்ந்து ஒரு பாத்திரத்தை சுண்டலுக்காக எடுத்துக் கொண்டு போய் கோவிலில் ஒரு மூலையில் வைத்து விட்டு விளையாடிக் கொண்டிருக்க ஏழு மணிக்கு நிவேத்தியம் அடங்கிய பெரிய பாத்திரத்தை கோவிலுக்கு உள்ளே எடுத்துச் செல்வார்கள். குழந்தைகள் விளையாட்டை நிறுத்தி வரிசையில் போய் உட்காருவார்கள். தான் தனது இரண்டு வயது தம்பியையும் கூடவே உட்கார வைத்துக் கொண்டு தன் ‘டர்ன்’ வரும் போது ‘என் தம்பிக்கு’ என்று இரண்டு கோட்டா வாங்கியது அனைத்தும் நினைவில் சுமந்தபடி கிருஷ்ணன் கோவிலை அடைந்தார்கள்.
கோவிலை ஒட்டிய குளத்தில் நிறைய பேர் குளித்துக் கொண்டிருந்தனர். அங்கேயே ஒரு பிள்ளையார் கோவில். அங்கேதான் சிதறுகாய் உடைப்பார்கள். பிள்ளையாரை வணங்கி கிருஷ்ணரைப் பார்த்த கோதைக்கு சிரித்தபடி நிற்கும் எம்பெருமானை பார்த்தவுடன் கண்களின் நீர் பொங்க ‘ஒன்பது வயதில் உன்னை பார்த்தது. இத்தனை ஆண்டுகள் கழித்து உன்னை தரிசனம் செய்யும் பாக்கியத்தை எனக்களித்திருக்கிறாய். என்னை இந்த நல்ல நிலைமைக்கு கொண்டு வந்து உன்னை பார்க்கும் பாக்கியத்தை அளித்த உனக்கு நன்றி சொல்ல கடமைப் பட்டிருக்கிறேன் இறைவா. உன் கருணையே கருணை’ என்று உளம் கனிந்து நிற்க ‘கிருஷ்ணருக்கு புஷ்பாஞ்சலி செய்யட்டுமா?’ என்ற குரல் கேட்டு தன் நினைவிற்கு வருகிறாள் கோதை.
‘என்னை ஞாபகம் இருக்கோ? நாங்க எல்லாம் வெங்கிட்டு வாத்தியாரோட புள்ளைகளாக்கும். நீங்கள் எல்லாம் அப்போ சின்ன சின்ன குழந்தைகள். இத்தனை வருஷம் கழித்து வந்திருக்கியே. நடுவிலே ஒரு தடவை கூட வரலியே. வரவேண்டாமோ? என்றெல்லாம் கேள்வி மேலே கேள்வி கேட்டார் அந்த முதியவர். அதற்கு பதில் எதுவும் சொல்ல முடியாமல் கிருஷ்ணருக்கு புஷ்பாஞ்சலி செலுத்தி அவ்விடம்விட்டு அகல மனம் இல்லாமல் வீட்டிற்கு திரும்பி வந்தார்கள். இரவு சாப்பிட்டு விட்டு உறங்கி காலை முதல் பஸ்ஸைப் பிடித்து பாலக்காட்டிற்கு வந்து ரயிலேறி சென்னை வந்தடைந்தனர்.
சென்னை சென்ட்ரலில் -- காலை வைத்தவுடன் ‘பாட்டி, வந்துட்டியா? என்று தன் காலைக் கட்டிக் கொண்ட பேத்தியைப் பார்த்து கோதைக்கு வாழ்க்கையில் எவ்வளவு தூரம் பயணித்து வந்து விட்டோம் என்பதை அறிந்து இனியும் பயணித்துத்தானே ஆக வேண்டும் என்ற நிஜத்தை உணர்ந்தவளாக தன் பேத்தியை வாரி முத்தமிட்டு இடுப்பில் தூக்கிக் கொண்டு நிகழ் காலத்தை நோக்கி நடக்கலானாள்.’
2
அன்புள்ள அக்கா…
‘காத்தாடி விடாதேடா’ன்னு உங்களுக்கெல்லாம் எத்தனை தரம் சொல்றது? நாள் பூரா இதுதான் வேலை. பள்ளிக்கூடம் லீவ் விட்டா மாஞ்சா போடறது, காத்தாடி போட்டியிலே சேர்ந்துக்கறது, யார் வீட்டிலேயாவது காத்தாடி விழுந்தால் சண்டைக்குப் போறது, ஒருத்தன் முன்னால் ஓட அவன் பின்னால் பத்து பேர் ஓட பசி தாகமே இல்லாம மூஞ்சியெல்லாம் வெய்யிலே ஓடி வியர்வை வழிய எப்படித்தான் ஒடறாங்களோ?
‘டேய் பாலு, உள்ளே வாடா. இந்த தோசையை தின்னுட்டுப் போ.’ அக்கா மீனாதான் வாசலிலிருந்து கத்தினாள். கத்தி கத்தி தொண்டை தண்ணி வத்த உள்ளே போய் விட்டாள்.
பாலு எதுக்கோ வீட்டினுள் வந்தான். அவன் சட்டையை இழுத்துப் பிடித்தாள் அக்கா. ஆனாலும் அவன் ஓடி விட்டான். ஒரு நூல்கண்டை எடுத்துக் கொண்டு மாஞ்சா போட்ட கையாலேயே அழுக்கு கூட தெரியாம தண்ணீரை மடக் மடக்கென்று குடித்து விட்டு டம்ப்ளரை டொக்கென்று வைத்தான். தோசையை எடுத்துக் கொண்டு அவன் பின்னாலேயே அக்கா ஓடினாள். ‘எட்டு மணிக்கு பாட்டுக் கிளாஸ் போகனுமேடா.’ மீனா ஞாபகப்படுத்தவே ‘இதோ வந்துட்டேன் அக்கா. பாட்டு நோட்டை எடுத்து வை.’
பத்து நிமிடம் போல பாலு திரும்பி வந்து ஜன்னல் இடுக்கு வழியாக தோசையை ஒரே வாயாக அள்ளிப் போட்டுக் கொண்டான். பாலுவிற்கு காப்பி என்றால் உயிர். டம்ப்ளரில் வழிய வழிய இருக்க வேண்டும். மீனாதான் தன் தம்பிக்கு என்ன பிடிக்குமோ அதை எல்லாம் பார்த்து பார்த்து செய்வாள். டம்ப்ளர் நிறைய காப்பியைக் கொண்டு வந்து நீட்டினாள். அக்கா மீனாதான் அவன் வாயில் தோசையை திணித்து ஜன்னல் இடுக்கு வழியாகவே தலையைவாரி விட சட்டை நிஜாரை ஒரு தட்டு தட்டிக் கொண்டு பாட்டுக் கிளாசுக்கு ஓடி விட்டான் பாலு.
பாலுவுக்கு என்னதான் விளையாடினாலும் பாட்டுக் கிளாஸ் போக மட்டும் பிரியம். நல்ல சாரீரம் என்று பாட்டுக் கிளாஸ் டீச்சர் கூட சொல்லியிருக்கிறாள். சென்ற வருடம் ஸ்கூலில் கூட ‘பாரத சமுதாயம் வாழ்கவே’, ‘ஜயதி ஜயதி பாரத மாதா’ பாட்டுக்களைப் பாடி பரிசு வாங்கி விட்டான். பாட்டு டீச்சரும் அவனை நல்ல வார்த்தைகளால் சொல்லி பாட வைத்து விடுவாள்.
பாலு பாட்டுக்கிளாஸ் போனவுடன் தங்கையின் பாவாடையை தைக்க உட்கார்ந்தாள் அக்கா மீனா. அந்த வீட்டில் அக்கா மீனாதான் மிகுந்த சுறுசுறுப்பு. தம்பி தங்கைகளுக்கெல்லாம் வேண்டிய உதவிகள் செய்வது, சாப்பிடவைப்பது, பென்சில் பேனா நோட்டுப் புத்தகங்கள் தேடித்தருவது, ஸ்கூல் பாட சந்தேகங்களை சொல்லித் தருவது எல்லாமே மீனாதான். அந்த வீட்டில் அம்மா அப்பாவிலிருந்து எல்லோருமே மீனாவை கேட்காமல் எதுவும் செய்ய மாட்டார்கள். ப்ளஸ் டூ முடித்த கையோடு வீட்டிலேயே உட்கார்ந்து விட வீட்டு மனிதர்களை பாசத்தோடும் அதிகாரத்தோடும் பார்த்துக் கொள்ளும் அக்காவைக் கட்டிக் கொண்டுதான் பாலு தூங்குவான். ‘அக்கா உனக்கு பயமா இருந்தா என்னைக் கட்டிக்கோ’ என்று தமாஷ் பண்ணுவான்.
பாலு அடிக்கடி மொட்டை மாடியில் போய் காற்றாடி விடுவது மீனாவிற்கு கட்டோடு பிடிக்காது. அவன் நண்பர்கள் வந்தால் கூட விரட்டி விடுவாள் போய் வேறு விளையாட்டு விளையாடுங்கள் என்று. ஆனால் பாலு மாடியில் போய், இந்தத் தெருவிற்கும் அந்த தெருவிற்கும் உள்ள பையன்களோடு போட்டி போடுவது, சண்டை போடுவது, வீட்டில் எங்கு பார்த்தாலும் காற்றாடி, நூல் என்று கலைத்துப் போடுவது - இது எல்லோருக்கும் இடைஞ்சலாக இருந்தது. அக்கா மீனா எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் அவன் கேட்காமல் இருப்பது அவளுக்கு கஷ்டத்தைத் தான் கொடுத்தது.
அன்று ஞாயிற்றுக்கிழமை. பாலுவும் நண்பர்களும் காற்றாடி நூலிற்கு மாஞ்சா போடுவது என்று தீர்மானித்து மொட்டை மாடியில் எல்லா சாமான்களையும் வைத்துக் கொண்டு இங்கேயும் அங்கேயும் நூலாகக் கட்டி, கண்ணாடித்தூள், சாயம் என்று நடந்தால் கால்களில் குத்தும் அளவிற்கு பரப்பி வைத்திருந்தனர். மாடிக்கு வந்த பாலுவிற்கு புத்தி சொல்ல ஆரம்பித்தாள் அக்கா. பின்னால் சிறு குச்சியை எடுத்துக் கொண்டு அடிப்பது போல் பாசாங்கு செய்ய அவன் இங்கும் அங்கும் ஓட மீனாவும் பின்னால் துரத்தக் கால்களில் கண்ணாடி குத்தி மீனா காலில் ரத்தம் வர பாலு அதிர்ந்து போனான். காலில் ரத்தம் வந்தாலும் அதை பொருட்படுத்தாது மீனா காற்றாடி விடுவதை தடுத்து நிறுத்தினாள். ‘டேய் பாலு, வேணான்டா, இந்த காற்றாடி விளையாட்டை விட்டுடு. போன வருஷம் ஏதோ பசங்க மாடியிலே காற்றாடி விட மாஞ்சா போட்ட நூல் தெருவின் நடுவில் குறுக்காக தொங்கிக் கொண்டிருப்பது தெரியாமல் ஒரு மோட்டார் சைக்கிள் வேகமாக வர அதை ஓட்டி வந்தவன் கழுத்து அறுபட்டு செத்துபோய் விட்டான். அதிலிருந்து சர்க்கார் காற்றாடி விட தடை விதிச்சிருக்காங்க. வேணான்டா பாலு. வா. வீட்டிற்கு போகலாம்.’ ‘இல்லேக்கா, இதான் கடைசி. இனிமே காத்தாடி சமாசாரத்துக்கே போக மாட்டேன். ப்ளீஸ் அக்கா, இன்னிக்கு மட்டும்.’ அந்த ப்ளீஸும், கெஞ்சும் தம்பியின் பால் வடியும் முகத்தையும் பார்த்தவள் ‘சரி, சீக்கிரம் வா. உனக்கு பிடிச்ச பால் பாயசம் பண்ணி வெச்சிருக்கா, அம்மா.’
‘சரிக்கா, சீக்கிரம் வந்துடறேன்.’
அக்கா மீனாவிற்கு குடும்பத்திலே இருக்கிற எல்லோர்கிட்டேயும் பாசம் அதிகம் இருந்தாலும் தன் தம்பி பாலுவிடம் தனி பாசம். அவன் குறும்புத்தனமான பேச்சும் செய்கைகளும் அவளுக்கு பெருமையைக் கூட கொடுக்கும். ஒரு மாதம் முன்னால் அவன் செய்த ஒரு வேடிக்கையான நிகழ்ச்சி அவள் கண் முன் இப்பொழுதும் வந்து நின்றது.
ஒரு நாள் குளித்து முடித்து விட்டு திறந்த வெளியில் சோப்பை வைக்க காக்காய் தூக்கிக் கொண்டு தன் கூட்டிற்குள் வைத்துக் கொண்டது. அம்மா, சோப்பு, சோப்பு என்று கத்தவே பாலு வேப்பமரத்தின் மேல் ஏறி கூட்டிற்குள் கை விட்டு சோப்பை எடுத்துக் கொண்டு வந்து விட்டான்.
சோப்பு கிடைத்தாலும் காக்காய் பாலு மேல் கரம் வைத்து அவன் எங்கு சென்றாலும் வேகமாக பறந்து வந்து அவன் தலையில் கொத்தி விடும். பாலு காக்காய்க்கு பயந்து எப்பொழுதும், வெய்யிலாக இருந்தாலும், மழையாக இருந்தாலும் குடையை பிடித்துக் கொண்டுதான் ரோடில் நடந்து போவான். எல்லோரும் கேட்கிற கேள்விகளுக்கு அலுத்துப் போய் பதில் சொல்வான். இப்படியாக அவன் குறும்புச் செய்கைகளுக்கு கணக்கே இல்லை. இதை நினைத்து தனக்குத் தானே சிரித்துக் கொண்டாள் மீனா.
பாலுவின் நிஜார் பாக்கெட்டில் எப்பொழுதும் ஒரு நூல்கண்டு, உண்டிவில், சணல் கயிறு, எல்லாம் வைத்திருப்பான். நூல்கண்டு காத்தாடி விடுவதற்கு, சணல் கயிறு அவர்கள் வீட்டு நாயின் வாலில் தகரடப்பாவைக் கட்டி, அது ஓடும் பொழுது நண்பர்கள் எல்லோரும் வேடிக்கை பார்க்க, உண்டிவில் மாங்காய், கொய்யாப்பழம் அடிப்பதற்கு. பாலுவும் அவன் நண்பர்களும் பட்டாம்பூச்சி, தும்பி இவைகளை கையில் பிடித்து விடுவார்கள். மற்ற உயிர்களை துன்புறுத்தும் இந்த வேடிக்கை விளையாட்டுகளை செய்யக் கூடாது என புத்திமதி சொல்வாள் மீனா. பாலுவும் அக்கா சொல்படியே நடக்கும் நல்ல பிள்ளையாகி விட்டான். ஆனால் இந்த காத்தாடி விளையாட்டை எப்படி நிறுத்த வைப்பது? புத்தி சொல்லி மீனா அலுத்து விட்டாள்.
எல்லா பையன்களும் காத்தாடி போட்டிக்கு வேணுங்கற சாமான்களை சேர்க்க ஆரம்பித்தனர். அடுத்த நாள் இந்தத் தெரு சிறுவர்களுக்கும் அடுத்த தெரு சிறுவர்களுக்கும் போட்டி.
போட்டி பலமாக இருந்தது. மஞ்சள் காத்தாடி பச்சைக் காத்தாடியை நெருங்கினால் சிறுவர்கள் கத்தி ஆரவாரம் செய்யும் சத்தம் அதிகமாக இருக்கும். மற்றவர்களும் அப்படியே. இப்படியாக மஞ்சள் ஜெயிக்கப் போகிறதா, பச்சை ஜெயிக்கப் போகிறதா என்று அறிய எல்லோரும் ஆவலாக இருந்தனர்.
ஏன், மீனா, பாலுவின் அப்பா, அம்மா. தங்கை எல்லோரும் பொட்டை மாடிக்கு போட்டியைப் பார்க்க வந்து விட்டனர். பாலுவை ஊக்குவித்துக் கொண்டிருந்தது நண்பர்கள் கூட்டம். இறுதியில் பாலு சீனுவின் காத்தாடியை ஒரே வெட்டாக வெட்டினான். அது பறந்து எங்கேயோ போய் விட்டது. பாலு காத்தாடியை மெது மெதுவாக இறக்கும் போது அது பக்கத்து வீட்டு புளியமரத்தில் சிக்கிக் கொண்டது. இதைப் பார்த்த அக்கா மீனாதான் ஆவலுடன் காத்தாடியை எடுக்க ஓடினாள். மாடிப்படியை ஒரே தாவாகத் தாவி ஒடிக் கொண்டே இருந்தவளை பின்னால் எல்லோரும் துரத்திக் கொண்டே ஓடினர்.
பாலு, அக்கா, அக்கா என்று கத்திக் கொண்டே பின்னால் ஓடினான். காத்தாடியை எடுத்து வந்த எல்லோருமே சிரித்து ஆரவாரம் செய்தனர், ஆனால் பாலு அக்காவைக் கட்டிக் கொண்டு, ‘இனிமே காத்தாடி விட மாட்டேன் அக்கா. இந்த தடவை ஜெயிச்சதே எனக்கு போதும். நீ சொல்றபடிதான் நான் கேட்பேன்’ என்று கூற, தம்பியை கட்டி முத்தமிட்டாள் மீனா.
3
மீனாட்சி கல்யாணம்
மாலை மணி மூன்றாகி விட்டது. சேரன் தெரு எட்டாம் நம்பர் வீடு திமிலோகப் பட்டது. சமையல் உள்ளிலிருந்து பஜ்ஜி, சொஜ்ஜி, ஏலக்காய், முந்திரி, திராட்சை, நெய் இப்படிப்பட்ட வாசனைகள் பசி எடுக்காத வயிற்றில் கூட பசியைத் தூண்டி நாக்கில் வெள்ளம் ஊற வைத்தது. மல்லி, முல்லை, ரோஜாப்பூக்களின் வாசனையும், வெற்றிலை பாக்கு தட்டு தட்டாக இறைந்து கிடப்பதையும், வாசலில் மாக்கோலம், செம்மண், அதுவும் படிக்கோலம் போட்டு, அந்த வீட்டில் உள்ள ஜனங்கள் அங்கேயும் இங்கேயும் முகத்தில் மகிழ்ச்சி பொங்க ஓடுவதையும் பார்த்தால் நிச்சயம் அங்கு ஏதோ விசேஷம் நடந்து கொண்டிருப்பதாக தெரிந்தது. சந்தேகமே இல்லை.
தாத்தா மகாதேவனின் பேத்தி மீனாட்சியை யாரோ பெண் பார்க்க வருகிறார்கள். தாத்தா கூடத்து ஊஞ்சலில் உட்கார்ந்து கொண்டு எல்லோரையும் அதிகாரம் செய்து கொண்டிருந்தார். அவர் முகத்தில் மகிழ்ச்சியும் பெருமையும் பொங்கி வழிந்து கொண்டிருந்தது.
சமையல் அறைக்குப் பக்கத்தில் இருக்கும் படுக்கையறையில் மீனாட்சியை உட்கார வைத்து, அவள் அத்தைதான் அலங்காரம் செய்து