Netri Velicham
()
About this ebook
புதுக்கோட்டை மாவட்டத்தைப் பூர்வீகமாகக் கொண்டவரான இவரின் இயற்பெயர் ஆ.ஜெயச்சந்தர். எல்.ஐ.சி-யில் கோட்ட மேலாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்று முழுநேர எழுத்தாளராகப் பணிபுரிகிறார்.
இதுவரை இவர் “வேட்கை” என்கிற சிறுகதைத் தொகுப்பையும், “சுருதியின் சேதிகள்” என்கிற இசைப்பாடல் தொகுப்பையும் வெளியிட்டுள்ளார். வேட்கை, சலங்கைச் சத்தம், குழம்புச்சோறு, நாய்கள் ராஜ்ஜியம் ஆகிய சிறுகதைகள் பரிசுகள், பாரட்டுதல்களைப் பெற்றுள்ளன.
இசைப்பாடல்களை எழுதி இசையமைத்து நூற்றுக்கணக்கான மேடைகளில் பாடியிருக்கிறார். தொடர்ந்து இயக்கப்பணி செய்து வருகிறார்.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம், அறிவியல் இயக்கம், அறிவொளி இயக்கங்கள் மற்றும் சமூக பணியில் 25 ஆண்டுகளுக்கு மேல் பங்களிப்பு செய்து வருகிறார்.
Related to Netri Velicham
Related ebooks
Kattu Nerinji Rating: 0 out of 5 stars0 ratingsKuzhalaagi Naan… Rating: 0 out of 5 stars0 ratingsNandhavana Poo Rating: 0 out of 5 stars0 ratingsKaalam Rating: 0 out of 5 stars0 ratingsIdukki Rating: 0 out of 5 stars0 ratingsEzhuthapadatha Theerpugal Rating: 0 out of 5 stars0 ratingsKilai Nila Rating: 0 out of 5 stars0 ratingsVeril Pazhutha Palaa Rating: 0 out of 5 stars0 ratingsKanaiyazhi - October 2021 Rating: 0 out of 5 stars0 ratingsNilavai Kothum Paravai Rating: 0 out of 5 stars0 ratingsPattini Thadagathu Pasamalargal Rating: 0 out of 5 stars0 ratingsSirukathaigal Patriya Sinthanai Chitharalgal Rating: 0 out of 5 stars0 ratingsIntha Sippikkul Rating: 5 out of 5 stars5/5Vidhaikkul Virutcham Rating: 0 out of 5 stars0 ratingsTheekkul Viralai Vaithal Rating: 0 out of 5 stars0 ratingsPon Vilangu Rating: 0 out of 5 stars0 ratingsPonveedhi Rating: 0 out of 5 stars0 ratingsIravin Katharal Rating: 0 out of 5 stars0 ratingsIndia Ilainane! Un Kadamaigal Ivai!! Rating: 0 out of 5 stars0 ratingsNinaivin Aazhiyil Alaiyum Kayalkal Rating: 0 out of 5 stars0 ratingsEngey En Mazhai Kaadugal? Rating: 0 out of 5 stars0 ratingsChithirame…. Senthen Mazhaiye Rating: 0 out of 5 stars0 ratingsKannathil Muthamittal Rating: 0 out of 5 stars0 ratingsVizhigalai Thira... Rating: 0 out of 5 stars0 ratingsKottaipurathu Veedu Rating: 5 out of 5 stars5/5Muttruperatha Manu Rating: 0 out of 5 stars0 ratingsPeyar Theriya Poovin Vaasam Rating: 0 out of 5 stars0 ratingsEngey Sendrullathu Andha Pattampoochi...? Rating: 0 out of 5 stars0 ratingsInnoru Suthandira Por Rating: 0 out of 5 stars0 ratingsAlaiyadum Ninaivugal Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Netri Velicham
0 ratings0 reviews
Book preview
Netri Velicham - Vetri Nilavan
http://www.pustaka.co.in
நெற்றி வெளிச்சம்
Netri Velicham
Author:
வெற்றி நிலவன்
Vetri Nilavan
For more books
http://www.pustaka.co.in/home/author/vetri-nilavan
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
அணிந்துரை
தமிழிலக்கியத்தில் சிறுகதைகள் அமோக விளைச்சல் காணுகிற காலம், இது. விமர்சனத்துறையிலும், கவிதைத்துறையிலும் மிகப்பொரும் தேக்கம் ஏற்பட்டிருக்கிற இந்த நாளில் நாவல் படைப்புகளும் கூட குறிப்பிடத்தக்க அளவுக்கு வராமல் இருக்கும் இந்த நாளில்…
சிறுகதை இலக்கியம் மட்டும் வளர்முக திசையில் இருக்கிறது. எல்லா மாவட்டங்களிலும் - மட்டங்களிலும் - சிறுகதைகள் நிறைய படைக்கப்படுகின்றன.
சிறுகதை என்பது கவிதைக்கு மிகவும் நெருக்கமான வடிவம். இன்னும் சொல்லப்போனால்…ஜெயகாந்தன் சொல்கிற மாதிரி… சிறுகதை என்பதே உரைநடையில் எழுதப்படுகிற கவிதைதான்.
ஓர் உணர்வின் பொறித்தெறிப்பாக கவிதை வெளிப்பாடு கொள்கிறது. ஓர் உணர்வோட்டத்தின் சிறு பயணமாக சிறுகதை வெளிப்பாடு கொள்கிறது. அந்த உணர்வோட்டத்தின் சிறு பயணத்தில்தான் ஒரு கதை வருகிறது. ஓர் அனுபவம் தெறிக்கிறது. அந்த அனுபவத்தைப் பரிமாறுகிற விதத்தில் அந்தத் தனிமனித அனுபவமே ஒரு சமுதாய அனுபவமாகப் பரிமாணம் கொள்கிறது.
கவிதைக்கும் சிறுகதைக்குமான ஒற்றுமைகள் நிறைய்ய்ய. அர்த்த அடர்த்திமிக்க வார்த்தைச் செறிவு, விரிக்க விரிக்க உள்ளே மலர்ந்து கொண்டே போகிற பன்முகப் பரிமாணச் சொற் பிரயோகம், விளைவிக்கிற மனோபாவ மாற்றம் வாசித்து முடித்த வாசகளை வேறொரு மனிதனாக மாற்றிவிடுகிற உணர்வு மாற்றம்.
இவையெல்லாம் ஒற்றுமைகள்.
வேற்றுமை என்றால்… அது ஒன்றிரண்டுதான். அதில் முக்கியமானது கதை. மனித நடமாட்டம். மனித உணர்வுகளின் ஒரு சின்ன மோதல்.
கருத்தும் அனுபவமும் பின்னிப் பிணைந்த உணர்வுத்தெறிப்பாக கவிதை இருக்கும். ஒரு சம்பவ விஸ்தரிப்பில் காட்சி விரிவில் - அனுபவமும் உணர்வும் இழையோடி… ஒரு கருத்தை படியவைக்கிறது சிறுகதை.
கவிதையில் வெற்றி கண்ட ஒரு படைப்பாளியால் சிறுகதையிலும் வெற்றிகண்டுவிட முடிகிறது. சிறுகதையில் வெற்றி கண்ட ஒரு படைப்பாளியால் கவிதையில் அவ்வளவாக வெற்றி காண்பதில்லை.
கவிஞர் கந்தர்வன். முத்துநிலவன், வெற்றி நிலவன் ஆகியோர் முன்னதற்கான நிரூபணங்கள். பின்னதற்கான நிரூபணமாக என்னையே கூடச் சொல்லலாம்.
இப்படி நிலைமையிருந்தும் கூட… சிறுகதைத்துறை அமோகமாக வெற்றியடைந்து வருவதும், கவிதைத்துறை ஒரு தேகத்தில் திகைத்து நிற்பதுவும் ஏன்? இது ஆய்வுக்குரிய ஒரு கேள்வி.
புதுகை வெற்றிநிலவனை எனக்கு நன்றாகத் தெரியும். நான் பார்த்துப் பிரமிக்கிற – ஆச்சர்யப்படுகிற – மனிதர்களில் வெற்றிநிலவனும் ஒருவர்.
ஆழகாகக் கவிதை எழுதுவார். கவித்துவமான இசைப்பாடல்களை இயற்றுவார். கணீர்க் குரலில் மேடையேறி அற்பதமாகப் பாடுவார். மேடை நாடகங்களிலும் நடிப்பார்.
எப்படி முடிகிறது, இத்தனையும் ஒரு மனிதருக்கு?
சிறுகதை, நாவல் தவிர ஓர் இழவும் தெரியமாட்டேன் என்கிறது எனக்கு. நான் எழுதும் கட்டுரைகள் கூட, ஆழ்ந்து அடங்கி அமைதியான ஆய்வுத் தன்மை மிக்கதானதில்லை. நான் விளையாட்டுத்தனமாக செய்த சேட்டைகளில் ஒன்றிரண்டு கவிதைகள் எழுதியிருக்கிறேன். அதுவும் கவிதைதானா என்பது ஆய்வுக்குரிய விஷயம்.
சிறுகதை, நாவல் தவிர வேறு எதற்கும் லாயக்கில்லாமல் நானிருக்க… வெற்றிநிலவனால் மட்டும் எப்படி இத்தனையும் சாதிக்க முடிகிறது? நிமிர்த்தமுடியாமல் பிரமிக்க வைக்கிற கேள்வி, இது.
ஆனால் மகிழ்ச்சியான பிரமிப்பு. ஆனந்தமான ஆச்சரியம்.
பிரமிப்பு உச்சமாகி, மூச்சுத்திணறலாக மாற்றுகிள சாதனையாக… இதோ… சிறுகதைத் துறையிலும் வெற்றி காண்கிறார், வெற்றி நிலவன்.
பதினாறு கதைகள் கொண்ட தொகுப்போடு உங்களைச் சந்திக்கிறார். பல பரிசுகளைப் பெற்ற கதைகளும் இவற்றுள் அடக்கம். வாழ்க்கையையும், சமுதாய அமைப்பையும் ரசாயனச் சலவை செய்து புதிதாகப் படைக்க விரும்புகிற மனோபாவத்தில் விளைந்த கதைகள்.
சமுதாயத்தில் இன்றைக்கு எரியும் பிரச்னைகளாக கொழுந்துவிட்டெரிகிற பிரச்னைகளாக – உள்ளவற்றை கருவாகக் கொண்டு, கலையமைதியுடன் வெளிப்பாடு கொண்டிருக்கிற கதைகள்.
நிலவன், சிறுகதையிலும் திலகமிட்டு வருகிறார், வெற்றிப் புன்னகையோடு.
இத்தனையிலும் வெற்றிகரமாக சாதிக்க இவரால் எப்படி இயல்கிறது?
கவிஞர் ஜீவி, முத்துநிலவன், ‘ஹைக்கூ’ வில் முத்திரை பதிக்கும் மு. முருகேஷ், புதுகை பூவண்ணன், ஜனநேசன், தங்கம் மூர்த்தி. இளங்கோ, ஆர்.நீலா என்று பெரும் இலக்கியப் பட்டாளத்தையே வார்த்தளித்திருக்கும் புதுக்கோட்டை மாவட்டத்தின் இலக்கிய வளமைதான், வெற்றிநிலவனின் வெற்றிக்குக் காரணமா? தோழனாய் தோளில் கைபோட்டு, தந்தையாய் பாசத்தைப் பொழிந்து அரவணைத்த கவிஞர் கந்தவர்னின் அந்நியோன்யமா? தாயார் தழுவி நிற்கும் த.மு.எ.ச எனும் மாபெரும் அமைப்பின் அன்பா?
ஆமாம். நிஜந்தான். இவை எல்லாம்தான், ஆனால் இவை மட்டுமல்ல.
கனிந்த மனசும், நேர்மைக் குணமும் பொருந்திய தனி மனிதனாய் வெற்றி நிலவன். அந்தத் தனி மனிதனை சமூக மனிதனாக வார்த்து மறுபடைப்பு செய்து வழங்கியிருக்கிற ஒரு தத்துவம்.
மக்களை நேசிக்கக் கற்றுக் கொடுத்த தத்துவம். மக்களை ஆசான்களாக மதித்து, அவர்களிடமிருந்து கற்றுக்கொண்டு, அவர்களுக்கே கற்றுத் தருவது எவ்வாறு என்பதை கற்றுத் தந்திருக்கிற தத்துவம். வாழ்க்கையை – அதன் மாறுதல்களை – வரலாற்றை – அதன் விதிகளை – சமுதாய வளர்ச்சியின் நுட்ப சரித்திரத்தை எல்லாம் கற்றுத்தந்து, ஓர் ஆரோக்கியமான சமுதாய நோக்கை வழங்கியிருக்கிற தத்துவம். ‘ஒடுக்கப்பட்ட மக்களின் ஒற்றுமையிலும் போராட்டத்திலும் தான் பொன்னுலகத்தின் புன்னகை மலரும்’ என்பதை அவருக்கு உணர்த்தியிருக்கிற தத்துவம். ‘துன்பப்படும் ஏழை எளியமக்களின் ஏக்கப் பெருமூச்சுகளை – கனல் மூச்சுகளாக மாற்றுவதற்கே இலக்கியம்’ என்கிற இலக்கியக்கோட்பாடாக அவரை மாற்றியிருக்கிற தத்துவம்.
அந்தத் தத்துவத்தின் வெற்றிப் புன்னகையை போலந்திலும், ருஷ்யாவிலும் பார்த்துக் கொண்டிருக்கிறோம், இதோ… வெற்றிநிலவனின் வெற்றிகளிலும் பார்க்கிறோம்.
உங்களிடம் வெற்றிநிலவனின் சிறுகதைகள் நூலாக வடிவம் கொண்டு உலா வருகின்றன, அவற்றை அங்கீகரித்து. அரவணைத்து, அன்பு காட்டுவீர்கள் என்கிற நம்பிக்கையில்.
எனக்கும் அதே நம்பிக்கை வலுவாக இருக்கிறது.
அன்பு நிறைந்த நெஞ்சின் தோழமை வாழ்த்துகளுடன்,
என்றும் உங்கள்
மேலாண்மை பொன்னுச்சாமி
சாகித்ய அகாதமி பரிசுபெற்ற எழுத்தாளர்
மேலாண் மறைநாடு
626127
காமராசர் மாவட்டம்.
ஆசிரியர் உரை
எனதன்பினிய தமிழ்வாசக நெஞ்சங்களுக்கு,
என் இதயம் கனிந்த வணக்கங்கள். நெற்றி வெளிச்சம் சிறுகதைத் தொகுப்பின் மூலம் தங்களைச் சந்திப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி.
கலாச்சாரச் சீரழிவை ஏற்படுத்தும் நச்சுக்கலை இலக்கியங்களை அப்புறப்படுத்திவிட்டு, மக்களின் பிரச்சனைகளை மண்ணின் வாசனையோடும் கலாபூர்வமாகவும் படைத்தளிக்கும் தமிழ்நாடு முற்போக்க எழுத்தாளர் சங்க பாசறையில் இருந்து இதனை வழங்குவதில் எனக்குப் பெருமையிலும் பெருமை!
பதினைந்து ஆண்டுகளாக பாடல்களை எழுதி, இசையமைத்து ‘சுருதியின் சேதி’ களோடு மேடைகளில் பாடிக்கொண்டிருந்த எனக்கு சிறுகதைகளைப் படிப்பதல் ஆர்வம் வந்தது. பிறகு எழுத ஆசை வந்தது.
தடம் பதித்த தமிழிச் சிறுகதைகளைத் தரும் ‘செம்மலர்’ இலக்கிய மாத இதழ் ஒரு ஆசானாய் நின்று என்னை ஆர்வப்படுத்தியது.
புதுமைப்பித்தன். ஜெயகாந்தன், பிரபஞ்சன், மேலாண்மை பொன்னுசாமி. சு.சமுத்தரம். கந்தர்வன், ச.தமிழ்ச்செல்வன், இன்னும் முன்னோடிப் படைப்பாளிகளின் கதாபாத்திரங்கள் உயிரோவியமாய் என் நெஞ்சுக்குள் உலவி வருகிறார்கள்.
என் வாழ்நாளில் நான் சந்தித்த கதாபாத்தரங்களுக்கு முழுச் சுதந்திரம் கொடுத்து அவர்கள் வாயாற, காலாறப்பவனி வருவதற்கான ஏற்பாடுகள் தாம் இந்தச் சிறுகதைகள். நாவல்கள், வானொலி நாடகங்கள் என்று நான் பரந்து விரியும் தளங்கள்.
தலைசிறந்த மனிதநேயப் படைப்பாளிகளில் திரு மேலாண்மை அவர்கள் மிகவும் குறிப்பிடத்தக்கவர். சிறுகதைகளில், நாவல்களில் அவர் பெற்றள்ள பரிசுகள் ஏராளம். பதித்துள்ள முத்திரைகள் ஏராளம்.ஒரு மிகச்சிறந்த புகைப்படக் கலைஞர்போல் அவர்தம் அணிந்துரை மூலம் சிறுகதை எழுத்தாளர்கள் வரிசையில் என்னையும் நிற்க சிறுகதை எழுத்தாளர்கள் வரிசையில் என்னையும் நிற்க வைத்து ‘கிளிக்’ செய்திருக்கிறார். அவர் கூறுவது போல் எல்லாமும் எனக்கு வாய்த்ததினாலேதான் இதுவெல்லாம் சாத்தியமாகிறது. உளியும். சுத்தியலுமாக இருக்கிற சிற்பிகளைப் போல் ஒரு தாகத்தோடும் வேகத்தோடும் திரிகிற ஒரு பெரும் படைப்பாளிப் பட்டாளத்துக்கு நடுவே நான் எவ்வளவு நாள் வெறும் கல்லாகவே இருந்த விடமுடியும்.
இத்தொகுப்பில் வேட்கை, குழம்புச் சோறு, தொண்ணூறு நாள் கனவுகள், நாய்கள் ராஜ்ஜியம், சலங்கைச் சத்தம் ஆகியவை பரிசுகளையும் பாராட்டுதல்களையும் பெற்றுத் தந்தவை.
நெற்றி வெளிச்சம்
தொகுப்பை புஸ்தக டிஜிட்டல் மீடியா (Pustaka Digital Media) மூலம் வெளியிட்டு பெருமைப்படுத்தும் அதன் உரிமையாளர் திரு.சு.பத்மநாபன் அவர்களுக்கு என் இதயங்கனிந்த நன்றிகள்.
இத்தொகுப்பு பற்றிய விமர்சனங்களை என் இனிய வாசக நெஞ்சங்கள் வழங்குமாறு என் இதயக்கதவை திறந்து வைத்து காத்திருக்கும்…
என்றும் உங்கள்
வெற்றி நிலவன்
திருச்சி
11.03.2017
நெற்றி வெளிச்சம்
(சிறுகதைகள்)
உள்ளடக்கம்
1. வேட்கை
2. சலங்கைச் சத்தம்
3. நாய்கள் ராஜ்ஜியம்
4. அருகம்புல் வேராய் ...
5. யார் அந்த அழகுக்குழந்தை?
6. குழம்புச் சோறு
7. தொண்ணூறு நாள் கனவுகள்
8. தேதி தெரியாத பயணங்கள்
9. எலிவலையானாலும்
10. அழகு கூடும் முகங்கள்
11. புரோட்டா மாஸ்டர்
12. கண்ணு பார்க்க வருமா
13. வேறிடம் வாய்க்கா வேர் …
14. ஆடுகளோடு ஆடாய்... ..
15. கந்த(ல)ப்பன்
16. நெற்றி வெளிச்சம்
நெற்றி வெளிச்சம்
(சிறுகதைகள்)
வெற்றி நிலவன்
நூலாசிரியர் பற்றிய குறிப்பு
இயற்பெயர் ஆ.ஜெயச்சந்தர், புதுக்கோட்டை மாவட்டத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர். ஆறுமுகம், பெரியநாயகி தம்பதியர்க்கு 07.11.1955-ல் பிறந்தவர். தற்போது திருச்சியில் மனைவி பிள்ளைகளுடன் வசிக்கிறார்.
எல்.ஐ.சி-யில் கோட்ட மேலாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்று முழுநேர எழுத்தாளராகப் பணிபுரிகிறார். வேட்கை
சிறுகதைத் தொகுப்பையும், சுருதியின் சேதிகள்
இசைப்பாடல் தொகுப்பையும் வெளியிட்டுள்ளார்.
வேட்கை, சலங்கைச் சத்தம், குழம்புச்சோறு, நாய்கள் ராஜ்ஜியம் ஆகிய சிறுகதைகள் பரிசுகள், பாரட்டுதல்களைப் பெற்றுள்ளன.
இசைப்பாடல்களை எழுதி இசையமைத்து நூற்றுக்கணக்கான மேடைகளில் பாடியிருக்கிறார். தொடர்ந்து இயக்கப்பணி செய்து வருகிறார்.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம், அறிவியல் இயக்கம், அறிவொளி இயக்கங்கள் மற்றும் சமூக பணியில் 25 ஆண்டுகளுக்கு மேல் பங்களிப்பு செய்து வருகிறார்.
தொடர்புக்கு:
Email Id. jcr.vp2s@gmail.com
Mobile No.: 09443262565
1. வேட்கை
(சிறுகதை)
மனிதத்தை மதிக்கட்டும் மதங்கள்
வெற்றி நிலவன்
ஆடிக்காற்றடித்து அடுக்கடுக்காய் படிந்து கிடக்கிற ஆற்றுமணல் மாதிரி மேகச் சிதறல்கள் நடுவானில் பரவிக்கிடந்தன.
அதன் நடுவில் வெள்ளிக்காசைப் போல் மின்னியது முழு நிலவு. மொட்டைமாடியில் நின்றான் தாஸ். அந்த முழு நிலவையே நீண்ட நேரம் வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான். மேகச் சிதறல்கள் குறுகின. இருண்டன... நிலவை மூடின.
குழந்தை கோலமாவைக் கொட்டிவிட்ட மாதிரி வான்வெளி முழுதும் நட்சத்திரச் சிதறல்கள் அந்த நடுநிசியில் மௌனம் குடிகொண்டிருந்தது.
"அப்பா தாஸ்... ஆ... ஆவ்...’’
காமாட்சியம்மாள் வாந்தியெடுத்தாள் அந்த சத்தம் தாஸை உலுக்கியது. தடதடவென படிகளில் இறங்கிக் கீழே வந்தான். பார்த்தான். பதறினான்.
படுக்கையை விட்டெழுந்து... வாசல் படிவரை உருண்டு வலி தாங்க முடியாமல் புழுவாய் நெளிந்தாள் காமாட்சியம்மாள்.
ஒரு அவுன்ஸ் அளவுக்கு இரத்தம் சிதறிக்கிடந்தது. "அம்மா’’ என்ற தாஸ் வெட்டிக்கிடந்த கிளையைத் தூக்குவது போல் காமாட்சியம்மாளைத் தூக்கி தனது மடியில் கிடத்தினான். வாயிலிருந்த இரத்தத்தைத் துடைத்துவிட்டான்.
"அம்மா... என்னம்மா செய்யுது... ?’’ என்று படபடத்தான்.
"நான்... நான் போகக்... கூடிய நேரம் வந்திருச்சுப்பா...’’
"அ... ம்... மா...’’
"இதில் பயப்படறதுக்கு என்னப்பா இருக்கு. சாவு... சாவு கட்டா... யமா நடக்க வேண்டிய ஒரு நிகழ்ச்சிதானே...’’
"அம்மா’’ தொண்டையை அடைத்தது தாஸுக்கு. வாய்... உடம்பில் இருந்த இரத்தத்தை துடைத்து விட்டான் மீண்டும்.
காமாட்சியம்மாள் கண்கள் சொருகிக் கொண்டிருந்தன. வாய் குழற ஆரம்பித்தது. ஆனாலும் முயற்சி செய்து பேசினாள். எழுபது வயதிருக்கும். பாதிப் பற்கள் கொட்டிவிட்டன. கடைசிவரை தெம்பாகத்தான் இருந்தாள்.
ஒரு மாதத்திற்கு முன்பு ஆரம்பித்த அந்த இரத்த வாந்தி காமாட்சியம்மாளை வெற்றிலைச்சருகு மாதிரி சுருட்டிப் போட்டு விட்டது. எல்லாப் பரிசோதனைகளும் செய்தாகிவிட்டன. என்ன காரணத்தால் இப்படி ஆகிறது என்று யாரும் தெளிவாகச் சொல்லவில்லை. இப்போது வரும் நோய்களின் பெயர்களைக் கண்டுபிடிப்பதே கடினமாகவுள்ளது என்று மருத்துவத் தரப்பிலேயே கூறப்படுகிறது. காமாட்சியம்மாளுக்கு சூடுதான். வயிறெல்லாம் புண்ணாகியிருக்கிறது. சரியாகப் போய்விடும் என்று தான் கூறுகிறார்கள். ஆனாலும் தாஸுக்கு நம்பிக்கையில்லாமல் இருந்தது.
தாஸ் மடியில் கிடந்த காமாட்சியம்மாள் மெதுவாகக் கண் மலர்ந்தாள்:
"எங்கண்ணு மகனே... நீ நல்லா இருப்பா... எங்க என் பேரன்...’’