Thagappan Kodi
()
About this ebook
அழகிய பெரியவன் நவீன தமிழ் இலக்கியத்தின் தனித்துவமிக்க எழுத்தாளர். வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டை பிறப்பிடமாகக் கொண்டிருக்கிறார். இயற்பெயர் சி. அரவிந்தன்.
தொண்ணூறுகளில் எழுதவந்த அழகிய பெரியவன், தனது முதல் சிறுகதைத் தொகுப்பான, ‘தீட்டு’ மூலம் மிகவும் பரவலான கவனத்தை ஈர்த்தார். சிறுகதை, நாவல், கவிதை, கட்டுரை என பல தளங்களில் எழுதிவருகிற இவர், மனித உரிமை சார்ந்த வெகுமக்கள் போராட்டங்களிலும் களச்செயல்பாடுகளிலும் ஈடுபட்டு வருகிறார். இதுவரை எழுபதிற்கும் மேற்பட்ட சிறுகதைகளையும், சில குறுநாவல்களையும் எழுதியிருக்கிறார். அவை அய்ந்து தொகுதிகளாக வெளி வந்துள்ளன. தகப்பன் கொடி, வல்லிசை ஆகியவை இவரின் பிற நாவல்கள். கவிதைகள் நான்கு தொகுதிகளாகவும் கட்டுரைகள் ஆறு தொகுதிகளாகவும் வெளிவந்துள்ளன.
தகப்பன் கொடி நாவலுக்கும் உனக்கும் எனக்குமான சொல் கவிதை நூலுக்கும் தமிழக அரசின் பரிசைப் பெற்றிருக்கிறார். இந்தியா டுடே விருது, சிற்பி கவிதை விருது, சு.சமுத்திரம் இலக்கிய விருது, தந்தைப் பெரியார் விருது என பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றிருக்கிறார். இவரின் ஆக்கங்கள் பல்வேறு கல்லூரிகளில் பாடமாக வைக்கப்பட்டுள்ளன. பட்ட மேற்படிப்பு ஆய்வுகளை பலர் மேற்கொண்டுள்ளனர். ஆங்கிலம், வங்காளம், மலையாளம், கன்னடம், உருது, தெலுகு, செக் ஆகிய மொழிகளில் இவருடைய படைப்புகள் பலவும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
Read more from Azhagiya Periyavan
Niramatru Vadiyum Vali Rating: 0 out of 5 stars0 ratingsArooba Nanju Rating: 0 out of 5 stars0 ratingsNee Nigazhntha Poothu Rating: 0 out of 5 stars0 ratingsNyabaga Vilangu Rating: 0 out of 5 stars0 ratings
Related to Thagappan Kodi
Related ebooks
Maanikka Naagam Rating: 5 out of 5 stars5/5Visaranai Commission Rating: 3 out of 5 stars3/5Ettuthikkum Madhayaanai Rating: 0 out of 5 stars0 ratingsMaayamaga Pogirargal Rating: 0 out of 5 stars0 ratingsAbaya Vanam Rating: 0 out of 5 stars0 ratingsAdimaiyin Kaadhal Rating: 5 out of 5 stars5/5Maaya Nilavu Rating: 5 out of 5 stars5/5Antha Onbathu Per Rating: 5 out of 5 stars5/5Naane Varuvean Rating: 0 out of 5 stars0 ratingsHanumanin Kathaiye Rating: 0 out of 5 stars0 ratingsTherkku Vaasal Mohini Rating: 0 out of 5 stars0 ratingsKulire! Kulire! Kollathey! Rating: 5 out of 5 stars5/5Manalin Kathai Rating: 0 out of 5 stars0 ratingsPadagu Veedu Rating: 0 out of 5 stars0 ratingsAnbulla Dr. Marx Rating: 0 out of 5 stars0 ratingsPathilukku Pathil Rating: 3 out of 5 stars3/5Aaru Mani Nerangal Rating: 5 out of 5 stars5/5Murintha Ambugal Rating: 0 out of 5 stars0 ratingsIrunda Veedu Rating: 3 out of 5 stars3/5Karuppu Vaanvavil Rating: 0 out of 5 stars0 ratingsSowbarnika Rating: 0 out of 5 stars0 ratingsGnabagangal Rating: 0 out of 5 stars0 ratingsMangalathevan Magal Rating: 0 out of 5 stars0 ratingsOru Koodai Nila Rating: 0 out of 5 stars0 ratingsBrahmaratshas Rating: 0 out of 5 stars0 ratingsNalliravu Natpudan... Rating: 4 out of 5 stars4/5Mamanar Kathaigal Rating: 5 out of 5 stars5/5Oru Renduzhuthu Nadigaiyin Kathai Rating: 0 out of 5 stars0 ratingsArjunan Ambu Rating: 5 out of 5 stars5/5Enna Mathiriyana Kaalathil Vazhgirom Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Thagappan Kodi
0 ratings0 reviews
Book preview
Thagappan Kodi - Azhagiya Periyavan
http://www.pustaka.co.in
தகப்பன் கொடி
Thagappan Kodi
Author:
அழகிய பெரியவன்
Azhagiya Periyavan
For more books
http://www.pustaka.co.in/home/author/azhagiya-periyavan
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
பாகம் ஒன்று
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
அத்தியாயம் 16
அத்தியாயம் 17
அத்தியாயம் 18
பாகம் இரண்டு
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
அத்தியாயம் 16
அத்தியாயம் 17
அத்தியாயம் 18
அத்தியாயம் 19
அத்தியாயம் 20
அத்தியாயம் 21
அத்தியாயம் 22
அத்தியாயம் 23
அத்தியாயம் 24
பாகம் மூன்று
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அழகிய பெரியவன் நவீன தமிழ் இலக்கியத்தின் தனித்துவமிக்க எழுத்தாளர். வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டை பிறப்பிடமாகக் கொண்டிருக்கிறார். இயற்பெயர் சி. அரவிந்தன்.
தொண்ணூறுகளில் எழுதவந்த அழகிய பெரியவன், தனது முதல் சிறுகதைத் தொகுப்பான, ‘தீட்டு’ மூலம் மிகவும் பரவலான கவனத்தை ஈர்த்தார். சிறுகதை, நாவல், கவிதை, கட்டுரை என பல தளங்களில் எழுதிவருகிற இவர், மனித உரிமை சார்ந்த வெகுமக்கள் போராட்டங்களிலும் களச்செயல்பாடுகளிலும் ஈடுபட்டு வருகிறார். இதுவரை எழுபதிற்கும் மேற்பட்ட சிறுகதைகளையும், சில குறுநாவல்களையும் எழுதியிருக்கிறார். அவை அய்ந்து தொகுதிகளாக வெளி வந்துள்ளன. தகப்பன் கொடி, வல்லிசை ஆகியவை இவரின் பிற நாவல்கள். கவிதைகள் நான்கு தொகுதிகளாகவும் கட்டுரைகள் ஆறு தொகுதிகளாகவும் வெளிவந்துள்ளன.
தகப்பன் கொடி நாவலுக்கும் உனக்கும் எனக்குமான சொல் கவிதை நூலுக்கும் தமிழக அரசின் பரிசைப் பெற்றிருக்கிறார். இந்தியா டுடே விருது, சிற்பி கவிதை விருது, சு. சமுத்திரம் இலக்கிய விருது, தந்தைப் பெரியார் விருது என பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றிருக்கிறார். இவரின் ஆக்கங்கள் பல்வேறு கல்லூரிகளில் பாடமாக வைக்கப்பட்டுள்ளன. பட்ட மேற்படிப்பு ஆய்வுகளை பலர் மேற்கொண்டுள்ளனர். ஆங்கிலம், வங்காளம், மலையாளம், கன்னடம், உருது, தெலுகு, செக் ஆகிய மொழிகளில் இவருடைய படைப்புகள் பலவும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
*****
பாகம் ஒன்று
உயிரைவிட்டு நடித்தார்கள் வேஷதாரிகள். புராணிகர்களாய் உருமாறிய வேஷதாரிகளை மக்களின் விழிகள் விழுங்கிக்கொண்டன. பதினெட்டாம் போரில் கூத்தர்களின் ஆட்டம் துடிப்பாய் இருந்தது. கோபமும், சூழ்ச்சியும் தந்திரமும், வீரமும் கொண்ட துரியோதனன் நயமானவன். பீமனோ முரடன் கடும் மோதலில் விழுகின்றன பிணங்கள். துரியோதனன் பிணங்களின் நடுவே நெஞ்சு தேய ஊர்ந்தூர்ந்து மறைகிறான். பீமன் விடவில்லை. கண்ணன் மூலம் அவனது உயிர்நிலையை அறிந்து கொண்டு அடித்து வீழ்த்த அலைகிறான்.
*****
அத்தியாயம் 1
தெளிவான வானம். மேகத் துணிக்கைகளோ, ஒளிக்கிறுக்கல்களோ இல்லை. பயிர் பச்சைகளும், செடி செட்டுகளும், மரம் மட்டுகளும் அசையவில்லை. எல்லாம் எதற்கோ காத்திருப்பதுபோல மௌனம் சாதித்திருந்தன. நிலத்தின் மேல் தகித்துக்கொண்டிருந்த சினமுடைய சூரியனின் ஒளி தணிந்து குழைந்தது.
திடீரென கிழக்குத் திக்கிலிருந்து மேற்கு நோக்கி அவை பறந்து போயின. அண்டரண்டப் பட்சிகள். பெருங் கூட்டமாய் இணைந்து பறக்கும் அவற்றின் நிழல், மெல்லிய பழம்புடவையின் விரிப்பைப் போல் மண்ணை நெட்டி முறித்தது. தாழ்ந்து உயரும் வானமாய் அவற்றின் சிறகடிப்பு தோன்றியது. இறக்கைகள் காற்றை அளையும் ஓசை பெரும் சப்தமாய் தலைக்கு மேலாக நிலைத்து சன்னமாக இழைந்து மறைந்தது.
விழித்துக் கொண்ட ஊற்றுக்கண்களால் வழிந்தது பூமி. எங்கும் அலைவு. நெகிழ்ச்சி. ஆர்ப்பரிப்பு. பெரும் உசுப்பல்.
அம்மாசியின் தூக்கம் கலைந்துவிட்டது. அடித்துப் பிடித்து எழுந்து உட்கார்ந்துகொண்டான். நிஜ ராவாய் இருக்குமோ என்று தோன்றியது. வெளியே வந்து பார்த்தான். ஊரைச் சுற்றியிருக்கிற தென்னந் தோப்புகளுடன் இரவு இறுக்கமாய் பிணைந்து கருத்திருந்தது. மேல்வானம் அவன் பார்வைக்கு சுக்கைகளைக் காட்டிச் சிரித்தது. இலேசான காற்றில் மலை அசைவது போல தென்னந்தோப்பு அசைந்தது. சுற்றிலும் கிர்ரென்ற இரவுப் பூச்சிகளின் கூப்பாடு. உள்ளே வந்துவிட்டான்.
பீடியைப் பற்ற வைத்துக்கொண்ட பிறகு இன்னும் கொஞ்சம் தெளிவு வந்தது போலிருந்தது. மார்பிலும், கால்களிலும் மண்ணில் இழுபட்டுக் கீறிக்கொண்ட சிராய்ப்புகள் வேதனையை கராய்த்துக் கொண்டிருந்தன. ஆழமான காயங்களில் பொக்குக்கட்டி சதை இழுபடும் வேதனை.
அபரஞ்சி இரண்டு பிள்ளைகளையும் பக்கத்துக்கொன்றாகப் போட்டுக்கொண்டு, உறக்கத்தின் ஆழத்தில் கிடந்தாள். அவர்களைப் பார்க்கவும் அம்மாசியின் அடிமனது கரைந்து நிரம்பியது. யோசனைகள் அவனை அலைக்கழித்தன. மேல்தெருவின் கோடியிலிருந்து சேவலொன்று முதல் குரலால் இரவை விசாரித்தது. அப்பனின் குறட்டை மாட்டுக் கொட்டகையிலிருந்து சீராகக் கேட்ட வண்ணமிருந்தது. எல்லா நினைவுகளையும் மீறிய மௌனம் அவனுள்ளே பரவிக் குமைந்தது. கொஞ்சம் நாட்களாய் அம்மாசி அனாதரவானவனாகத் தன்னை நினைத்துத் தவித்தபடியிருந்தான்.
எப்பேர்க்கொத்த கனவு! அவன் உடம்பு சிலிர்த்தது. தும்பியின் இறக்கைகளாய் அடித்துக்கொண்டது மனம். பாட்டி சொல்லியிருக்கிறாள். இப்போதும் பாட்டிதான் வந்து சொன்னாளோ என்னமோ? அவளேதான் வந்து சொல்லியிருப்பாள். பாட்டியை நினைத்துக்கொண்டவனாய் அம்மாசி சுவரில் சாய்ந்து கால்களை நீட்டிக்கொண்டான். தாத்தனும், பாட்டியும் சொல்லி அவன் பல முறை கேட்டிருக்கிறான். கடும் பஞ்சகாலம், தாதுவருசப் பஞ்சமாம். பாட்டி சொல்லும் போது அவளின் ஒடுங்கிய மார்பிலிருந்து வார்த்தைகள் மூச்சுக் கற்றைகளைப் போல மேலெழுந்து கிளம்பும்.
‘அப்பிடி ஒரு கருப்புக்காலமாண்டா அம்மாசி. மக்க மனுசரெல்லாம் மந்த மந்தயா சாய்ஞ்சிட்டாங்களாம். மாடுகண்ணுங்க மடிஞ்சிச்சாம். ஒரு பொட்டு மளையில்ல. பூமி அப்பிடியே காஞ்சி வெடிச்சிக்கீது. தத்தி முத்தி இருந்ததுங்க ஆப்டதெல்லாத்தியும் சாப்புட்டு காலங்களிச்சதுங்களாம். கத்தாளக்கெழங்கு, தேவதாரி எல, பாலக்கீர. ஒன்ன உட்டு வெக்கிலியாம்.’
‘இப்பிடியே ஒரு வருசம் களிஞ்சிச்சாம். பகவான் கண்ணு தொறந்தானாம். ஒருநாளு திடீர்னு பாத்தா கௌக்குப் பக்கத்திலேந்து மானம் ரொப்பி போகுதாம் பாத்துக்க. கும்புகும்பா மேக்க பாத்த மாதிரி அண்டரண்டப் பச்சிங்க. வளி முட்டுக்கும் பந்துலு போட்ட மாதிரி நெழலு உளுந்துச்சாம் அதுங்க கீள, பாத்துக்க.’
‘என்னா போட்டுணு போச்சுங்குளோ தெரியிலே. அதுங்க போனப்புறம், மளன்னா மள அப்பிடி ஒரு மளயாம். சொழட்டி சொழட்டி அடிக்கிதாம். பூமி குளுந்து, பயிரு பச்சயெல்லாம் களகளன்னு பச்ச புடிச்சிணு, நாடே சேம்பரமாயி போச்சாம்.’
அந்த வருசம் பார்ரா எப்பா, ஒரு போகத்துக்கு மூணு அறுப்பாமுடா. நீயி எங்கியானா கேள்விப்பட்டுகீறியா? அப்பிடி ஒரு வெள்ளாமையாண்டா சாமி.’
அம்மாசியின் உசுப்பலில் துள்ளித்துடித்து எழுந்துகொண்டாள் அபரஞ்சி. கலவரத்துடன் அவனைப் பார்த்தாள்.
செரியான கெனாக்கண்டேன் அபரஞ்சி. எம் பாட்டிதான் வந்துக்கீறா. டேய் அம்மாசி, ஊரவுட்டு போடான்றா. நாம அங்க, நம்ம ஊருக்குப் போயிட்டலாம். நீயும் அப்போத்திலிருந்தே சொல்லிணுகிற. போயிறலாம். நீயி எல்லாத்தியும் இப்பம் புடிச்சே ஏறக் கட்டிக்கோ. நானு போயி வண்டிக்காரனுங்க எவனையாவது கண்டு சொல்லி வெச்சிர்றேன். நாள மக்யா நாள்ல போயிடுவோம்.
அபரஞ்சி அவனை வினோதமாய்ப் பார்த்துக்கொண்டு கொட்டாவி விட்டு தலையாட்டினாள். அவள் வாயின் இரண்டு பக்கமும் மீசைமாதிரி வெள்ளையாய் கோட்டுவாய் கட்டியிருந்தது.
விடிந்து கொண்டு வந்தது. கோழிக்கூவல்கள் அதிகமாகக் கேட்டன. காகங்களின் இறக்கை அடிப்புகள் விசுக்விசுக்கென குடிசையின் மேலே கடந்தன. பாட்டிதான் அவள் என்று முடிவுகட்டி விட்டிருந்தான் அம்மாசி. இந்த ஊரைவிட்டுப் போய்விட வேண்டியதுதான். பட்சிகள் கனவில் பறந்து போனது கூட போய்விடு என்று சொல்லத்தான். போய்விடலாம். போகுமிடத்தில் சேம்பரமான காலம் காத்திருக்கிறது. பட்சிகளை நினைக்க நினைக்க சிலிர்த்தது அவனுக்கு.
*****
அத்தியாயம் 2
முன்பு சாவிலிருந்து காப்பாற்றிய பட்சிகள். அப்பனும் அம்மாவும் அவனுக்குப் பெண் தேடிக்கொண்டிருந்த காலம். அம்மாசிக்குக் கழுத்தில் இடது பக்கமாக பெரிய கட்டி ஒன்று வந்துவிட்டிருந்தது. இருந்த மாதிரியே இருந்து வலியெடுக்கத் தொடங்கி கொஞ்ச நாட்களுக்குள் அது வீங்கிவிட்டது. ஒரு பக்க முகமும் உதடுகளும் வீங்கி, பார்க்கவே விகாரமாகிவிட்டான். அக்குளில் நெரி கட்டிக்கொண்டு உயிர்போகும் வலி. காய்ச்சலும், நோவும் ஒரு வழி செய்தன.
நல்லானும் கிளியம்மாவும் எல்லா பண்டுவமும் செய்தார்கள். பூண்டு நசுக்கி கட்டு. எருக்கம்பால் அடிப்பு. உத்தாமணி இலையில் பற்று. வெற்றிலைப் பற்று. அம்மாசிக்கே வெறுத்துப் போனது. இரண்டு மூன்று வாரத்திற்குள் அம்மாசி ஒடுங்கிவிட்டான். சோறு தண்ணி இறக்கமில்லை. விழுங்கினால் வலி பிய்த்தது. ஊரிலே இருக்கிற பொன்னு வைத்தியன் முதற்கொண்டு சுற்றுப் பக்கமிருக்கிற எல்லா வைத்தியர்களிடமும் போய் குளிச்சம், மந்திரம், தீட்டுக்கழிப்பு எல்லாமே பார்த்தாகிவிட்டது.
ஒருநாள் அம்மாசி திடீரென்று நினைத்துக்கொண்டவனாய் எழுந்துவிட்டான். வீட்டிலே யாருக்கும் சொல்லவில்லை. எங்காவது செத்து உடம்பு கிடைத்தால் எடுத்துப் போடட்டும். அபிராமபுரம் தாண்டி சாலைக்கு வந்ததும், குடியாத்தம் போகும் திசை பார்த்து அவன் நடை இருந்தது. வழிநெடுக மனதில் தோன்றிய சாமிகளையெல்லாம் சபித்துக்கொண்டேயிருந்தான். காறித்துப்புவதும் வாய்விட்டுத் திட்டுவதுமாக அவன் நடந்தான்.
செம்பேடு நால்வழிக் கூடலைத் தாண்டும் போது அம்மாசிக்கு கால்கள் சவுட்டின. வழியோரம் ஒரு கல்லின் மேல் உட்கார்ந்து கொண்டான். கண்கள் இருண்டு வந்தன. அரைகுறை நினைவில் கீழே சாயும் போது கிழக்குப் பக்கமிருந்து பறவையொன்று அவனைப் பார்த்தமாதிரி பறந்து வருவது தெரிந்தது. அது அவன் கழுத்தை அடித்துப் பறக்கவும், அவன் சரியவும் சரியாயிருந்தது. அம்மாசிக்கு நினைவு தட்டியபோது வழியோரத்துக் குடிசையொன்றில் கிடந்தான். அவன் அருகில் முதியவன் ஒருவன் இருந்தான். இப்போது வலியோ, பாரமோ இல்லை. கழுத்தும் முகமும் சப்பிப்போயிருந்தன.
அந்தக் கிழவன் பச்சிலை வைத்துக் கட்டுப் போட்டிருந்தான் வளத்தூர் சந்தைக்குப் போகும் போதும், குடியாத்தம் போகும் போதும் எத்தனையோ முறை அந்தக் குடிசையையும் கிழவனையும் அம்மாசி தேடியிருக்கிறான். அதற்குப்பின் கண்டதில்லை. தேசாந்திரி என்று நினைத்துக் கொள்வதுண்டு.
*****
அத்தியாயம் 3
கூடப்பிறந்தவர்களெல்லாம் ஊரைவிட்டு, அவரவர் பெண்டாட்டிகளின் வீடுகளுக்குப் போய்விட்டார்கள். யார் இருக்கிறார்கள் இன்னும் இங்கே இருப்பதற்கு? அம்மாசிக்குத் தொண்டையை அடைத்தது அழுகை. அம்மா இதே இடத்தில்தான் நாறிச் செத்தாள். வேண்டாத சாமியையெல்லாம் வேண்டி மூன்று வருடமாய் தவமிருந்து பெற்ற தலைச்சன் துள்ளத் துடிக்கப் போனான். இருந்த கையளவு நிலமும் பறிபோனது. சதி செய்து, வலுக்கட்டாயமாய் பிடுங்கிக்கொண்டார்கள். கரித்துக்கொண்டு வந்தது. எழுந்து நின்று எறவானத்துக்காய்த் தலைநீட்டி காறித்துப்பிவிட்டு உட்கார்ந்து கொண்டான். பங்கும் பங்காளிகளை நம்பி எந்தப் பிரியோசனமும் இல்லை. எவ்வளவு காலத்துக்குத் தொண்டூழியம் செய்து வயிற்றைக் கழுவுவது? பிள்ளையும் ஆச்சி ஆச்சி என்று வந்துவிட்டான். இங்கே கிடந்து என்ன செய்வது? ஒட்டுத் திண்ணை நித்திரைக்குக் கேடு. மக்க மனுசர்களைப் பார்த்துப் போவோம்.
பலபலவென்று விடிந்து பொழுது இறங்கி இருந்தது. கிழக்குப் பார்த்த மாதிரி இருக்கிற திருமலய்யன் தோப்பில், வெள்ளி வானத்தின் மேல் கம்புகளை நாட்டியதுபோலத் தென்னைகள் தெரிந்தன. பண்ணையின் சுற்றுச் சுவர் இருளடர்ந்திருந்தது. இந்தப் பக்கங்களில் இல்லாத மாதிரி தன் பண்ணையத்தின் முன்புறத்தில் கொஞ்ச நீளத்துக்கு ஆளுயரச் சுவர் எழுப்பி இரும்புக்கதவுகள் போட்டிருந்தான் திருமலய்யன். அதன் உள்ளே நுழைவது கோட்டையினுள் பிரவேசிப்பது போலிருக்கும். காவல்காரன் குடிசைக்குள்தான் இருப்பான். ஒரே சத்தத்துக்கு எழுந்துவிடுவான். நேரே போய் ஆண்டச்சியம்மாளிடம் இனிமேல் வேலைக்கு வரவில்லை என்று சொல்லி விடலாம். ஒரு பழைய நினைவிலேயே அவனுள்ளே யோசனை எழும்பியதும் அவனுக்குள்ளே வன்மம் நிரம்பி உடல் நடுங்கியது.
அடுப்புக்கட்டையில் சாய்த்து வைத்திருந்த நீச்சத்தண்ணி சட்டியிலிருந்து மொந்தையில் கொஞ்சம் இறுத்து தண்ணீரூற்றி விளவிக்கொண்டான். கல்லுப்பை குத்து அள்ளி அதில் போட்டுக்கொண்டு குடிசையைவிட்டு வெளியே வந்தவன் காறித் துப்பி விட்டு, நடுவாசலில் நின்று திமிர்விட்டு உடம்பை முறித்துக் கொண்டான். மடமடவென நீச்சத் தண்ணியைக் குடித்தான்.
போங்கடா... . நீங்களும் ஒங்க மகிசியும்... .
என்னாடாது சாமீ... .
மாட்டுக்கொட்டகையுள்ளிருந்து நல்லானின் விசாரிப்பு வந்தது. சேங்கன்றின் மூச்சு முறைப்புடன் கேட்டது.
ஒன்னுமில்ல எப்பா.
மசமசவென்றிருந்த பொழுதில், நாய்க்குட்டிகளைப் போல நெருக்கிப் படுத்திருந்த குடிசைகளின் நடுவாகப் புகுந்து மேல் தெருவுக்குள் நுழைந்தான் அம்மாசி. இலேசாய் குளிரடிப்பது போல் வெறும் உடம்பை காற்று பிடித்து சீண்டியது. கழுத்தில் சுற்றியிருந்த சோமத்தை இழுத்துப் போர்த்திக்கொண்டான்.
மேல் தெருவுக்குள் அவன் கால்கள் சடாரெனப் பதியாமல் அனிச்சையாய் தயங்கின. தெருவில் நடமாட்டம் பார்த்தான். கொஞ்சம் நிதானித்து செருப்புச் சத்தம் வராத மாதிரிப் பம்மி நடந்தான். ஒற்றையடிப் பாதையாய் நீண்டிருந்த அந்தத் தெருவில் மேற்குப் பார்த்த மாதிரி நடந்து, குளிரில் விறைத்திருந்த அரசமர வண்டிப்பாதையில் திரும்பித் தெற்காகப் போனான்.
பெத்துக்கவுண்டன் நிலத்தில் கம்பங்கதிர்கள் பால் பிடித்து ஆடிக் கொண்டிருந்தன. பயிர்கள் ஊட்டமாய் வளர்ந்திருந்தன. வழியோரங்களில் வெளிக்கிருக்கும் பெண்கள் சிலர், அவன் தாண்டிப் போகும் வரை எழுந்து நின்றார்கள். வழியிலே ஒரு ஏத்தக்கால் மதகில் வாய்க்கொப்பளித்து முகம் கழுவினான். கொண்டையைப் பிரித்து முடியை அடித்துச் சுருட்டி மீண்டும் கொண்டை போட்டுக்கொண்டு மீசையை நீவினான்.
ஊரை விட்டுக் கிளம்புவது ஏதோ தப்பு செய்வது போல மனசுக்குள்ளே ஒரு பக்கத்தில் எழுந்து எழுந்து அடங்கிக் கொண்டிருந்தது. போகப் போகிற இடம் அன்னியமானதில்லை. அபரஞ்சியின் தாய்வீடுதான். மைத்துனன்களும், அத்தையும், மாமனும் தாங்குவார்கள். இந்த ஊரைவிட்டு எந்தக் காலத்திலோ போய்விட்ட பெரியப்பா வகையறாவின் குடும்பங்கள் ஒரு ஊரளவுக்கு அங்கே ஆகிவிட்டிருக்கின்றன. போன பயணத்தின் போதே கூட அத்தையும் மாமாவும் கூப்பிட்டார்கள்.
ஒரு ஆத்தர அவுசரத்துக்குப் புள்ளிங்க மூஞ்சியையும் ஒங்களையும் பாக்கணுமின்னாகூட எம்புட்டு தொலவு நடந்து வர்றது? இங்கியே வந்துருங்க சாமி. அந்தக் குப்பக்காட்டுல என்னா பொளச்சி சாதிக்கப் போறீங்க?
தெம்பாய் இருந்தது அம்மாசிக்கு. நடையை வீசிப் போட்டான். தென்னந்தோப்புகளின் வழியாகவே நடந்து ரயில் பாதையை அடைந்தான். கிழக்கின் வெளிச்சத்தில் ரயிலடி பிரகாசித்தது. மஞ்சள் சாயம் பூசப்பட்டிருந்த நிலையத்தின் சுவர்கள் மங்கி வெளுத்துத் தூங்கி வழிந்தன. நன்றாக விடிந்த பிறகு இந்தப் பக்கமாக ஒரு ரயில் போகும். அது இன்னும் போயிருக்காது. அந்த வண்டியில்தான் பெரியபட்டியிலிருந்து, மதராஸ் பட்டிணம் போய் தோல் வியாபாரம் செய்துவரும் சாய்புகள் போவார்கள். அந்த ஊரின் பெரும் பணக்கார சாயபு ஒருவர் வருகிறார் என்றால், ரயிலே காத்திருந்து ஏற்றிக்கொண்டு போகுமாம். பெரியபட்டியிலிருந்து கிளம்பி இங்கே வந்து ரயில் ஏறுவதற்கு அவர்கள் மாட்டுவண்டிகளை வைத்திருந்தார்கள். பணக்கார முதலாளிகளுக்குக் குதிரை வண்டிகளும் உண்டு. சொந்தமாகவே குதிரையும், குதிரை வண்டியையும் வைத்துக்கொள்ள எவ்வளவு துட்டு தேவைப்படும் என்று அம்மாசிக்கு மலைப்பாக இருந்தது.
அந்தக் காலம் மாறிப்போனதாக நினைத்துக்கொண்டான். என்னவோ கரண்டாம். அதன் மூலமாகவே விளக்கு எரிகிறதாம். குடியாத்தத்திற்கு சினிமா ஆட்டம் கூட வந்துவிட்டதாம். இந்த ரயில்கூட முதலில் அம்மாசிக்கு பிரமிப்பாகவும், ஆச்சரியமாகவும் இருந்தது. இரண்டு மூன்று சுருணை வடக்கயிறு நீளத்துக்கு பெட்டிகளை அது இழுத்துக்கொண்டு புகை கக்கியபடி பாம்பு மாதிரி போகிறது. பெரிய ஜீவன் மாதிரி மூச்சுவேறு விடுகிறது.
சின்ன வயதில் அம்மாசி அடிக்கடி வந்து ரயில் பாதையில் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருப்பான். அவன் தாத்தாவும், பாட்டியும் தங்களின் வயசிலே இந்த இருப்புப்பாதையைப் போடும் வேலை செய்ததாக அவன் கேள்விப்பட்டிருக்கிறான். சின்னப் பாப்பா மகன் ரங்கப்பனும், அவனும் ஒருமுறை அந்தப் பாம்பு வண்டியை திமாக்குப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். தொலைவில் வண்டி மெதுவாக அசைந்து வந்துகொண்டிருந்தது. ரங்கப்பன் சிரித்துக் கொண்டே ஓடிப்போய் இருப்புப் பாதையின் குறுக்கே ஏறினான். தலைவேறு, முண்டம் வேறாக கொஞ்சம் தூரத்திலிருந்து அவனைத் தேடி எடுத்துவந்தார்கள். அன்றிலிருந்து ரயில் பாதைக்கு அருகில் போனால் அம்மாசியின் கால்கள் தன் போக்கிலே நடுங்கும்.
சல்லிக்கற்கள் ஓரமாகவே நடந்து நிலையத்தை நெருங்கினான். சாயபுகளை ஏற்றி வந்த வண்டிகள் சரக்கு மூட்டைகளுடன் திரும்பிப் போகும். ஏதாவது ஒரு வண்டி கிடைக்கும். அபரஞ்சியையும் பிள்ளைகளையும் அதில் ஏற்றிவிடலாம். அவ்வளவு தூரத்திற்கு அவர்களை நடக்க வைக்க முடியாது. அப்பனும் கோலூன்றுகிறவன்.
குடியாத்தத்திலிருந்து, ஆம்பூருக்கு பெரியபட்டி வழியாக இப்போது கரிவண்டி ஒன்றுகூடப் போய் வருவதாக யாரோ சொல்லிக் கேட்டிருந்தான். மூக்கு வைத்து ஏதோ காட்டு மிருகம் போல ஒடுகிறதாம் அது. குருவிக்காரன் வண்டி என்கிறார்கள். குருவிக்காரன் என்று பெயர்கொண்ட சாயபு ஒருவர்தான் அந்த வண்டியை வாங்கி ஓட விட்டிருக்கிறாராம். கால்துட்டாம் அதிலே போவதற்கு. ஏறி உட்கார்ந்தால் தூக்கிக்கொண்டு போய், சொல்கிற இடத்திலே விட்டுவிடுமாம். இந்தப் பக்கத்துக்குத்தான் இன்னும் யாரும் அப்படி ஒரு வண்டியை விடவில்லை. இன்னும் நடைதான். ரயிலுக்கு மணி அடிக்கும் இடத்தில் கருத்த இரும்புத்துண்டு ஒன்றைத் தொங்கவிட்டிருந்தார்கள். தண்ணீர்ப் பானை பக்கத்தில் சிறு மல்லிக் கொடியொன்று படர்ந்து பந்தலிட்டிருந்தது. விளக்குக் கம்பங்களில் விளக்குகள் அழுது மங்கிக் கொண்டிருந்தன.
ரயில் வருகிற நேரம் ஆகிவிட்டது. விளக்குக் காட்டுகிறவனும் சிலரும் பேசிக்கொண்டு நின்றிருந்தார்கள். சாயபுகள் அங்கங்கே உட்கார்ந்து பேசியபடி இருந்தனர். ரயிலடிப் பக்கமாக அம்மாசி வரும்போதெல்லாம் அங்கே இருக்கும் மர நாற்காலிகளை ஆச்சரியமாய்ப் பார்ப்பான். நீளமான மரப்பலகைகளை இரும்புப் பட்டைகள்