Ajaatha Shathru Kadhai
By Sairenu
()
About this ebook
மந்திரவாதி மணிசுந்தரனின் மாபெரும் லட்சியம் நிறைவேறியதா? மகரிஷி த்ரிகுணாத்மர் தான் எண்ணிய வண்ணம் ஓர் சீடனை அடைந்தாரா? நாககன்னி பதுமவல்லி தன் பழியைத் தீர்த்துக் கொண்டானா? சனத்குமாரன் தான் எண்ணியபடி தாய்நாட்டினைக் காக்கும் வீரனாக உருவெடுத்தானா? மேகலாவால் தன் சகோதரர்களைக் காக்க இயன்றதா?
பதில்களை அஜாதசத்ரு கதையில் காணுங்கள்!
தர்ம இலக்கியம் என்ற வகைக் கதையிது. மக்கள், மகளிர், சிறார்கள் ஆகிய எல்லோருக்கும் அஜாதசத்ருவைப் பிடிக்கும் என்று நம்புகிறோம்.
Related to Ajaatha Shathru Kadhai
Related ebooks
Veeramum Vivekamum Niraindha Vikramaadithyan Kathaikal Rating: 5 out of 5 stars5/5Sithargal Raajyam Rating: 5 out of 5 stars5/5Nurse Madhavi Rating: 0 out of 5 stars0 ratingsChinna Chinna Kathaigal 100 Rating: 0 out of 5 stars0 ratingsMaya Poigai Rating: 0 out of 5 stars0 ratingsTharisanam Rating: 0 out of 5 stars0 ratingsSinthanaiyai Thoondum Siruvar Kathaikal Rating: 0 out of 5 stars0 ratingsமதியின் மாதவன்!: இரு தேசத்தின் நாடி! Rating: 0 out of 5 stars0 ratingsMaanikka Naagam Rating: 5 out of 5 stars5/5Uyire Uyire Rating: 0 out of 5 stars0 ratingsKandavar Vindilar! Vindavar Kandilar!! Rating: 0 out of 5 stars0 ratingsChandhira Sekaram! Rating: 0 out of 5 stars0 ratingsNalam Tharum Naayagiyin Naamangal Rating: 0 out of 5 stars0 ratingsUnnodu Irukkum Ponnaana Nimidangal Rating: 0 out of 5 stars0 ratingsSorna Jaalam Rating: 5 out of 5 stars5/5Pudhumaipithan Short Stories - Part 6 Rating: 0 out of 5 stars0 ratingsMoondravathu Kan! Rating: 5 out of 5 stars5/5Suvadikal Sonnathillai Rating: 0 out of 5 stars0 ratingsNeeyum Pommai Naanum Pommai Rating: 1 out of 5 stars1/5Maaya Nilavu Rating: 5 out of 5 stars5/5Sundara Kaandam Rating: 0 out of 5 stars0 ratingsMahangalin Vaazhvil... Rating: 0 out of 5 stars0 ratingsParakkum Yanai Rating: 0 out of 5 stars0 ratingsMeendum Thulasi Rating: 4 out of 5 stars4/5Nadu Nisi Neram Rating: 0 out of 5 stars0 ratingsSakthi Rating: 5 out of 5 stars5/5Vanathil Oru Maan Rating: 4 out of 5 stars4/5Manasai Thaadi Mani Kuiyile...! Rating: 3 out of 5 stars3/5Pudhumaipithan Short Stories - Part 1 Rating: 0 out of 5 stars0 ratingsVallathu Ilavarasi Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Ajaatha Shathru Kadhai
0 ratings0 reviews
Book preview
Ajaatha Shathru Kadhai - Sairenu
http://www.pustaka.co.in
அஜாதசத்ரு கதை
Ajaatha Shathru Kadhai
Author:
சாய்ரேணு
Sairenu
For more books
http://www.pustaka.co.in/home/author/sairenu-novels
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
1. மந்திரவாதி மணிசுந்தரனின் மகத்தான லட்சியம்
2. வைகைக்கரையில்
3. த்ரிகுணாத்மர்
4. இரட்டைக் குழந்தைகள்
5. மகரிஷியின் ஓலை
6. இரு சந்திப்புகள்
7. அந்தநாள் வந்தது
8. யார்? யார்? (பகுதி 1)
9. யார்? யார்? (பகுதி 2)
10. யார்? யார் அந்த மணி?
11. உருவங்கள் மாறுகின்றன!
12. போர் ஆயத்தங்கள்
13. ஆலோசனையும் அதைக் கேட்ட ஒற்றனும்
14. கருடனின் நிழல்! (பகுதி 1)
15. கருடனின் நிழல்! (பகுதி 2)
16. நிழல் நீங்குகிறது!
17. நாக சக்தியா? மந்திர சக்தியா?
18. தீபங்கள் சுடரட்டும் (பகுதி 1)!
19. தீபங்கள் சுடரட்டும் (பகுதி - 2)
20. வீரமே அரசலட்சணம்! உறுதியே தகுதி!
21. புன்னகைச் சுடர்கள்
22. மூன்று நாககுமாரர்கள்
23. முற்பிறவி முடிவு
24. பாண்டிய மன்னர் வாழ்க!
25. மேகலாவா, யார் அது?
26. வருக, அஜாதசத்ரு!
27. தர்மமும் மடிந்ததோ?
28. அகோர பத்ரகாளி அருள்வாக்கு
29. பிராணசக்தி துலங்கட்டும்!
30. முடிதுறந்தான்!
நிறைவு - சுபம், மங்களம்!
1. மந்திரவாதி மணிசுந்தரனின் மகத்தான லட்சியம்
பயக்ருத் பயநாசன:
– இறைவனே பயத்தை உண்டாக்குகிறான், அவனே அதைப் போக்கவும் செய்கிறான் – என்ற ஐந்தாம் வேதத்தின் வாக்கை நிலைநிறுத்துவதே போல் கோர பயங்கர ரூபிணியாய்க் காட்சி தந்தாள் அன்னை பத்ரகாளி.
அது சேரநாட்டில் ஒரு சிற்றூர். ஒரு காலத்தில் நலமும் வளமும் நிறைந்து விளங்கியது. நம் கதை துவங்கும் காலத்தில் பாழடைந்து கிடந்தது.
ஊர் எல்லையில் உள்ள அன்னை அகோர பத்ரகாளி கோவிலில், மனதை அடக்கி, சுவாசத்தைக் கட்டுப்படுத்தி, தீவிர தியானத்தில் ஈடுபட்டு, அன்னையை நேரடியாகத் தரிசிக்கும் முயற்சியில் இருந்தான் மந்திரவாதி மணிசுந்தரன் நம்பூதிரி.
அவன் தியானத்தில் இருக்கும் போதே அவனைப் பற்றி நாம் அறிந்து கொண்டு விடலாம்.
***
சேரநாட்டின் தலைசிறந்த அதர்வண மந்திரவாதி என்று அக்காலத்தில் புகழ் பெற்றவன் மணிசுந்தரன் நம்பூதிரி. பலவிதமான சாதனைகளாலும், கடுமையான தவத்தாலும் உயர்ந்த பல சித்திகளை அடைந்தவன் என்றாலும், தன் சக்திகளை சுயநலத்திற்காகவும், தீயவழிகளிலுமே அவன் பயன்படுத்தி வந்ததால், சேரநாடே அவனைக் கண்டு பயந்து நடுங்கியது.
அவனுடைய கோர கிருத்யங்களால் வெறுப்படைந்த ஊர்மக்கள் முதலில் அவனை அடக்கவும், அது சரிப்படாததால் அவனை ஒழிக்கவும் பலவிதத்தில் முயன்று பார்த்தார்கள். மணிசுந்தரனின் சக்திக்கு முன்னால் அவர்கள் முயற்சிகள் படுதோல்வி அடைந்தன.
தன் வெற்றியில் கர்வம் கொண்ட மணிசுந்தரனின் அக்கிரமங்கள் அதிகரித்துக் கொண்டே போயின. ஒரு கட்டத்தில் தங்கள் செல்வம், நிலபுலன், ஆடுமாடுகள், மற்றும் பலவிதமான சொத்துக்கள் எல்லவற்றையும் அப்படியே விட்டுவிட்டு ஒருநாள் நள்ளிரவில் அவ்வூர் மக்கள் அனைவரும் ஊரைவிட்டே போய்விட்டார்கள்.
இதன்பிறகு மணிசுந்தரன் நம்பூதிரியைக் கேட்பார் யாரும் இல்லாமல் போனது. சேரநாட்டு அரசாங்கமே அவனைக் கண்டு பயப்படுவதாக மக்கள் பேசிக் கொண்டார்கள்.
மணிசுந்தரன் நினைத்திருந்தால் அந்த ஊரைப் போல் பல ஊர்களைப் பாழ் செய்திருக்க முடியும். ஏன், நாட்டின் ஆட்சியையே கூட அடைந்திருக்க முடியும். ஆனால் அவன் அதையெல்லாம் விரும்பவில்லை. மிகப் பெரிய லட்சியம் ஒன்றினை அடையவே எண்ணம் கொண்டு, தன் சிந்தனை செயல் அனைத்தும் அதற்காகவே அர்ப்பணித்திருந்தான். அதற்காகவே காளியை நோக்கிக் கடும் தவம் இயற்றிக் கொண்டிருந்தான்.
மணிசுந்தரன் நம்பூதிரியைக் குறித்து வேண்டிய அளவு தெரிந்து கொண்டு விட்டோம். இனி நாம் கோயிலுக்குத் திரும்பலாம்.
***
இதோ, நம் கதையை ஆரம்பித்து வைத்து, அதில் மிக முக்கியமான பாத்திரங்களில் ஒன்றையும் ஏற்றிருக்கும் மணிசுந்தரன் நம்பூதிரியை இப்போது பார்க்கிறீர்கள். மந்திர உட்சாடனம் செய்யும் அவன் குரலையும் கேட்கிறீர்கள்.
மந்திரவாதி தன் பெயருக்கேற்றபடி சுந்தரனாக இல்லை; அவன் குரலிலும் மணியின் இனிமை இல்லை! அநேக கோர கிருத்யங்களால் அவன் முகமும் கொடூரமாக மாறியிருந்தது, குரலும் ஆந்தை போலக் கடூரமாக இருந்தது.
திடீரென அரையிருளில் மூழ்கியிருந்த கோயில் முழுவதும் திவ்ய ஒளி பரவிற்று. பாழடைந்த அப்பூமியில் தெய்வீக மணம் வீசியது.
அன்னை பத்ரகாளி ஆயிரம் கரங்களுடனும், முண்ட மாலையுடனும், கோரைப் பற்களுடனும், இவை எல்லாம் கடந்த திவ்ய சௌந்தர்யத்துடனும், கோபத்தோடே கருணையும் இழையோடிய திருவிழிகளுடனும் மணிசுந்தரன் முன் பிரசன்னமானாள்.
வந்துவிட்டேன், மந்திரவாதி!
என்று அருள்வாக்குப் பகர்ந்தாள்.
பக்தியுடன் கண்விழித்து எழுந்து நின்ற மந்திரவாதியின் முகத்தில் மகிழ்வு தெரிந்ததேயன்றி, வியப்போ விதிர்விதிர்ப்போ காணோம். அதிலிருந்து, இது அவனுக்குப் பழகிப் போன ஒரு காட்சி என்று ஊகிக்கலாம்.
மாதா, வருக! ஆயிரம் கோடி நமஸ்காரம். என் பிரார்த்தனையைத் தேவி ஏற்றதால் நான் தன்யனானேன்
என்று அவன் வாய் கூறியதே தவிர, முகம் ஏதோ ஒரு தீவிரத்தைக் காட்டியது.
காளி சிரித்தாள். நல்லது, மந்திரவாதி! அழைத்த நோக்கமென்ன?
என்றாள் சுருக்கமாய்.
உபசார வார்த்தைகளைத் தேவி விரும்பவில்லை என்பதை உணர்ந்தான் மந்திரவாதி.
எண்ணம் ஈடேற வேண்டும், அதற்கே இமயவள் அருள் வேண்டும்.
யாசிப்பதைச் சொல்லேன், கேட்போம்! எனை நேசிப்பவர்க்கு என்னைத் தருவேன், எனைப் பூசிப்பவர்க்கு எதையும் தருவேன்
தேவி புன்னகைத்தாள்.
தாயே, என் மனம் நீ அறியாததா? அல்லும் பகலும் நான் எந்த லட்சியத்தைத் தேடுகிறேன் என்பது தேவிக்குப் புரியாததா? அல்லது பக்தன் வேண்டுவதை அருள்வது பகவதிக்கு முடியாததா?
சர்வலோகாதிபத்யமும் சாகாவரமும் சகல குணமும் பொருந்தியவனே அடைய வேண்டும் என்பது சாஸ்திர விதியாயிற்றே, மந்திரவாதி!
"குணம்! எதைக் குணம் என்கிறாய், தேவி? உன் அண்ணன் சர்வ குண சம்பன்னன் என்று துவாபர யுகத்திலே ஒருவனிடம் ராஜ்யாதிகாரத்தையும் சாச்வத வாழ்வையும் அள்ளிக் கொடுத்தான். அவன் தானும் சுகிக்கவில்லை, பிறரையும் சுகமாயிருக்க விடவில்லை. குணமுமாயிற்று, தர்மமுமாயிற்று, போ!
இவ்வுலகில் சக்தியே பெரிது. அதைப் பராசக்திக்கா நான் அறிவிக்க வேண்டும்? மகான்களும் அறியாத மந்திர தந்திர சூட்சுமங்களை உன் அருளால் பெற்றேன். பாரோர் நடுங்கும் பிரபாவத்தை அடைந்தேன். இன்னும் மண்ணோரை ஆளும் மாண்பு தனை நான் அடைய உபாயம் என்ன, தேவீ? உபதேசித்தருள்வாய்
என்று மந்திரவாதி கேட்டுக் கொண்டான்.
தர்மத்தைப் பழிக்கிறாய், தர்மமே உருவெடுத்த தர்மராஜனைப் பழிக்கிறாய், தர்மத்தின் தலைவனான மாலவனையும் பகைக்கிறாய். தன்னை அறியும் தர்ம மார்க்கத்தில் செல்வாரைக் கண்டு நகைக்கிறாய்! எச்சரிக்கிறேன், வினையை விதைக்கிறாய்! இதோ பார், உன் உய்வுக்கு வழி சொல்லும் உபன்னியாசம் கேட்டுப் பரிகாசமாய் முகம் சுழிக்கிறாய்! உன் உயர்வுக்கு வழி சொல்லும் உபதேசமே வேண்டும் உனக்கு, இல்லையா? நல்லது, உபாயம் சொல்வேன்
காளியன்னை சற்று நிறுத்தினாள்.
சொல் தேவி, சொல்
என்று அவசரப்பட்டான் மந்திரவாதி.
நல்லது. நீ கேட்ட மிக உயர்ந்த நிலையை வேண்டும் சாதகனானவன் ஆத்ம பலி கொடுத்தால் கேட்டதை மறு பிறவியில் அடையலாம் …
ஆ… என்னைக் கொல்லவோ நினைத்தாய்!
மந்திரவாதி அலறினான்.
ஜாக்கிரதை, மந்திரவாதி! தாயிடம் வந்து தகாத மொழியுரைக்காதே!
அம்பிகை சீறினாள்.
மன்னித்துவிடு தேவி
என்று அன்னையின் பாதத்தைப் பிடித்து மன்றாடினான் மந்திரவாதி.
சரி சரி, பிழைத்துப் போ
என்றாள் அம்பிகை.
சிறிது நேரம் மௌனம் குடிகொண்டிருந்த்தது.
சொல் தேவீ, வேறு உபாயம் இல்லையா?
மந்திரவாதி மெல்லக் கேட்டான்.
உபாயம் உண்டு. இப்பிறவியிலேயே சர்வலோகாதிபத்யம் பெற விரும்புபவன் 56 தேசங்களுக்கும் ஏகச் சக்ரவர்த்தியாக விளங்கும் ஒருவனையோ, அல்லது, ஆசைகளைக் கடந்து, இறைவனையே தாய் தந்தையாய்க் கொண்டு, வானமே கூரை, வையமே வீடு என எண்ணி, பிரபஞ்சம் முழுவதையும் தன் உடன்பிறப்பாகக் கருதும் யோகி ஒருவனையோ, எனக்குப் பலியிட வேண்டும். அப்படிச் செய்தால் உன் விருப்பம் நிறைவேறும்.
மந்திரவாதி அயர்ந்து போனான். அம்மே, கேலி செய்கிறாயா என்ன? இன்று சக்ரவர்த்திகளுக்கு நான் எங்கே போவது, தாயே? எங்கே பார்த்தாலும் உள்ளங்கை அளவு நாடும், ஊசிமுனை நிலமும் உடையவர்களாக அல்லவா மன்னர்கள் இருக்கிறார்கள்? இல்லாவிட்டால் யோகியைக் கொண்டு வா என்கிறாய். இந்தக் கலியில் நீ குறிப்பிடும் அளவுக்கு உத்தம யோகீச்வரர்களும் உண்டா? புத்திரனை இப்படி எல்லாம் சோதிக்காது, உன் மனம் விரும்பும் பலி யாது என்று நீயே எனக்குக் காட்டித் தா, தேவீ!
காளியன்னை புன்னகைத்தாள். நல்லது, உடனே கிளம்பு, பாண்டிய மண்டலத்திற்கு. அங்கே வைகைக் கரையில் உள்ள கோவிலில் என்னை எல்லைக் காளியாக வழிபடுகிறார்கள். அங்கே வந்து என்னைச் சந்திப்பாயாக! உன் கேள்விக்கு விடை அங்கே கிடைக்கும்.
மறுபேச்சுப் பேசாமல் இதோ கிளம்புகிறேன்
என்று ஒப்புக் கொண்டான் மந்திரவாதி. காளியன்னை மறைந்தாள்.
***
அதே நேரத்தில், மதுரையில் மீனாட்சியம்மனுக்கும் சொக்கநாதருக்கும் திருக்கல்யாண உற்சவம் நிறைவடைந்தது. ஸ்வாமி அம்பாள் திருவதனத்தில் புதியதாய் ஒரு அருட்சோதி நிரம்பித் துளும்புவதைக் கண்டு பக்தர்கள் பரமானந்தம் அடைந்தார்கள்.
அழகர் வைகையாற்றில் இறங்கும் வைபவத்திற்காக வைகைக்கரை திருவிழாக் கோலம் பூண ஆரம்பித்தது. அழகர்மலை அமுதனின் பார்வை அகிலத்தையே மயக்கியது.
வைகைக்கரைக் காளியின் திருவதனத்தில் புன்னகை தாண்டவமாடியது.
2. வைகைக்கரையில்
முடிந்தவரை எங்கும் நிற்காமல் பிரயாணம் செய்து, பாண்டிய நாடு வந்தடைந்தான் மந்திரவாதி மணிசுந்தரன் நம்பூதிரி. அவன் காளிதேவியுடன் பேசிய மறுநாள் மாலை மதுரை சேர்ந்து, வைகைக்கரையை அடைந்தான்.
மதுரை அவனுக்குப் புதிதல்ல. இப்போதுள்ள பாண்டிய மன்னனுக்கு முந்தைய ஜீவகப் பாண்டியனின் ஆட்சிக் காலத்தில் வந்திருக்கிறான். வைகைக்கரைக் காளி கோவிலுக்கும் சென்றிருக்கிறான். அப்போது அமைதி பூத்திருந்தது அந்த இடம். ஆனால் இப்போது அவன் கண்ட காட்சி!
வையை கடலில் கலக்கும் இடம் இதுதானோ என ஐயுறும் அளவிற்கு அங்கே நதிக்கரையில் ஒரு கடல் உருவாகியிருந்தது. அது மக்கள் கடல்!
பெருவியப்புற்ற மந்திரவாதி சற்றே ஆழ நோக்கிய போது, அங்கே ஒரு திருவிழாவிற்கான ஏற்பாடுகள் நடப்பதை உணர்ந்தான். அருகில் சென்று உற்று நோக்கிய போது, பலர் மும்முரமாக வேலை செய்து வருவதையும், ஒரு இளைஞன் அவர்களை வழிநடத்துவதையும், அதோடு நின்ற இடத்தில் நில்லாது சுறுசுறுப்பாகவும் உற்சாகமாகவும் வேலை செய்வதையும் கண்டான்.
ஒரு பார்வையிலேயே அந்த இளைஞன் பெரிய இடத்துப் பிள்ளை என்று கண்டுகொண்டான் மந்திரவாதி.
எந்தவிடத்துக்குச் சென்றாலும் அங்குள்ள பெரியவர்களோடும் தலைவர்களோடும் மட்டுமே நேரடியாகப் பேசும் வழக்கம் உடையவன் ஆதலால், இந்தாப்பா, இங்கே வா, இங்கே என்ன விசேஷம்?
என்று அவ்விளைஞனை அதிகாரத்தோடு அழைத்தான்.
அவ்விளைஞனோடு இன்னும் பலரும் அவனைத் திரும்பிப் பார்த்தார்கள். இப்போது அவன் முகத்தை நன்றாகப் பார்த்த மந்திரவாதி, ஆச்சரியத்தில் தன்னையே மறந்து விட்டான். அதனால் பலர் அவனை வியப்போடு பார்த்த்தை அவன் கவனிக்கவேயில்லை.
இளைஞன் உடனே மந்திரவாதியை நெருங்கி வந்தான். வணக்கம், ஐயா! இங்கே இன்னும் சிறிது நேரத்தில் அழகர் ஆற்றில் இறங்கும் உற்சவம் துவங்கப் போகிறது. அதற்கே ஏற்பாடுகள் நடக்கின்றன. தாங்கள் நெடுந்தூரப் பிரயாணம் செய்து களைத்தவர் போலத் தோன்றுகிறீர்கள். சற்று இப்படி அமர்ந்து ஆசுவாசம் செய்துகொள்ளுங்கள், பேசலாம்
என்று அருகில் இருந்த ஒரு மர ஆசனத்தைக் காட்டினான்.
உன் பெயர் என்ன அப்பா?
என்று கேட்டான் மந்திரவாதி, அவன் காட்டிய ஆசனத்தைக் கவனிக்காமலே.
என் பெயர் அஜாதசத்ரு
என்று பணிவோடு உரைத்தான் அந்தப் பிள்ளை.
எத்தனை திவ்யமான பெயர்! அவனைப் பணிவோடு நோக்கிக் கொண்டிருந்த கண்களிலே தான் என்ன ஒளி! திருத்தமான அந்த முகத்திலே தான் என்ன ஞான தேஜஸ்!
அமருங்கள் ஸ்வாமி! களைத்திருக்கிறீர்களே!
என்றான் அந்தப் பிள்ளை மறுபடியும்.
ம்... மேலே சூரியன் சுட்டெரிக்கிறான். அகத்திலே தான் ஒளியைக் காணோம்
என்றான் மந்திரவாதி பெருமூச்செறிந்தவாறே.
கதிரவன் கண்களை விட்டு மறைகிறதேயன்றி நிஜத்தில் மறைவதேயில்லை, அல்லவா? அகவொளியும் பகலவனைப் போன்றதே, ஸ்வாமி. அதனை மறைப்பது கவலை என்னும் கார்மேகமல்லவா! கவலையகற்றி களிப்பெனும் ஒளி மலர எவ்வித உதவி வேண்டுமானாலும் இச்சிறியேனைக் கேளுங்கள். இப்போது நான் தங்களுக்கு என்ன செய்யக் கூடும்?
மந்திரவாதி அயர்ந்து போயிருந்தான் என்று சொல்லத் தேவையில்லை.
இந்தப் பிள்ளை தான் யார்? ஒவ்வொரு வாக்கிலும் ஞானம் மின்னுகிறதே! ஆனால் அதில் கண்களைக் கூசச் செய்யும் அஹங்காரத்தைக் காணோம். மிகத் தண்மையான அடக்கமே விளங்குகிறது.
பெருமுயற்சி செய்து, தன் வியப்பை மறைத்து, இயல்பான முகத் தோற்றம் காட்டினான் மந்திரவாதி. நல்ல வாசாலகனாக இருக்கிறாயே! இப்போது எனக்குச் சற்றுத் தாகமாக இருக்கிறது. அருந்தச் சிறிதளவு நீர் தந்தால், அதுவே நீ எனக்குச் செய்யக்கூடிய பெரிய உதவி.
அஜாதசத்ரு புன்னகைத்தான். அப்படியே, ஸ்வாமி. இதோ நீர் தருகிறேன்.
பலர் அவன் கட்டளைக்குக் காத்திருப்பதைப் பொருட்படுத்தாது தானே சென்று சுவையான நீர் கொணர்ந்தான்.
உண்மையிலேயே இடைவிடாத பயணத்தால் சற்று களைத்திருந்த மந்திரவாதி, அந்நீரை நன்றியுடன் வாங்கிப் பருகினான்.
ஸ்வாமி, தங்கள் சிரமபரிகாரத்திற்கு ஏற்பாடு செய்யட்டுமா? இங்கே நல்ல...
என்று ஆரம்பித்த அஜாதசத்ருவை இடைவெட்டினான் மந்திரவாதி.
இல்லை குழந்தாய், நன்றி. நான் காளி கோயிலுக்குச் சென்றுகொண்டிருக்கிறேன். இடையில் எங்கும் தங்க விரும்பவில்லை. உன்னைப் பின்னர் சந்திக்கிறேன்.
நல்லது ஸ்வாமி, தங்கள் சித்தம்
என்றான் அஜாதசத்ரு, புன்னகை மாறாமல். அவனுடைய வழிகாட்டுதலை எதிர்பார்த்துக் காத்திருந்தவர்கள் இப்போது அருகில் வந்து கேள்விகளை எழுப்பவாரம்பித்தார்கள். அவர்களுக்குப் பதிலளித்துக் கொண்டும், தானே பல்வேறு வேலைகளைப் புரிந்துகொண்டும் சில நிமிடங்களிலேயே திருவிழா வேலைகளில் மூழ்கிப் போனான் அஜாதசத்ரு.
***
நேரே காளிகோயிலுக்குச் செல்லப் போவதாகச் சொன்னாலும் மந்திரவாதி அங்கிருந்து உடனே கிளம்பிவிடவில்லை. மெதுவாக அந்தக் கூட்டத்திலேயே சுற்றி வந்துகொண்டிருந்தான்.
அங்கே அஜாதசத்ருவைச் சுற்றிய கூட்டத்திலிருந்த ஒரு இளைஞனை அவனுடைய கூர்மையான பார்வை கவனித்தது. அனைவரும் அஜாதசத்ருவை அன்போடும் பெருமையோடும் நோக்கிக் கொண்டிருக்க, இந்த இளைஞனுடைய பார்வையில் கோபமும் பொறாமையும் கலந்திருந்ததை மந்திரவாதியின் நுண்ணிய பார்வையால் மட்டுமே அறிய முடிந்தது.
மெதுவாக அவனை நோக்கிச் சென்றான். பிள்ளாய், நீ சொக்கர் அமரலிங்கனாருக்கு ஏதேனும் உறவா?
என்று மெதுவாகக் கேட்டான்.
அந்த இளைஞன் அதிர்ந்து திரும்பினான். ஆம், நான் அவருடைய புதல்வன். தங்களுக்கு என் தந்தையைத் தெரியுமா?
என்று வியப்புடன் கேட்டான்.
ஆம் குழந்தாய். அவர் என் நண்பர். பல்லாண்டுகளுக்கு முன் நான் மதுரை வந்திருந்தபோது உங்கள் இல்லத்தில்தான் தங்கினேன்
என்று பதிலளித்தான் மந்திரவாதி.
தந்தையார் இப்போது காலமாகிவிட்டார்
என்று தெரிவித்தான் அவ்விளைஞன்.
காலம் வந்தால் எல்லோருக்கும் அதுதான், தம்பி! உன் தந்தை நல்லவர், உயர்ந்த உள்ளங்கொண்டவர்...
ஆம், அதனால்தான் பெயரைச் சம்பாதித்த அளவிற்குப் பொருளைச் சம்பாதிக்கவில்லை. என்னையும் சம்பாதிக்க விடவில்லை
என்று வெறுப்புடன் கூறினான் இளைஞன்.
பொருள் சம்பாதிப்பது மிகச் சுலபம், தம்பி! பெயரெடுப்பது தான் கடினம். நீ என் நண்பரின் மகன். உன் எதிரிகளை வென்று நீ பெரும்பொருளீட்ட நானே உனக்கு வழிகாட்ட முடியும்.
உண்மையாகவா ஸ்வாமி?
என்று கேட்டான் பத்ரன். தான் ஒரு மந்திரவாதியிடம் பேசிக் கொண்டிருக்கிறோம் என்பதை அவன் இதற்குள் உணர்ந்திருக்க வேண்டும்.
ஆம். சரி, உன் பெயரை அறியாமலே பேசிக் கொண்டிருக்கிறேன்.
பத்ரன், ஸ்வாமி
என்றான் இளைஞன். அவன் கண்களில் மெதுவே பேராசைக் கனல் வீசுவதை மந்திரவாதி கவனித்தான்.
நல்லது பத்ரா! நான் இப்போது காளி கோயிலுக்குச் சென்றுகொண்டிருக்கிறேன். அங்கிருந்து நகருக்கு வந்ததும் உன்னைச் சந்திக்கிறேன். காசுக்கடைப் பெருவணிகர் வீதியில்தானே உங்கள் இல்லம்?
ஆம் ஸ்வாமி
என்று பதிலளித்தான் பத்ரன்.
மந்திரவாதி பத்ரனிடமிருந்து விலகி நடந்தான்.
***
ஸ்வாமிகளுக்கு எந்த ஊரோ?
என்ற குரல்கேட்டுத் திரும்பினான். செல்வர் போன்று உடையணிந்திருந்த பெரியவர் ஒருவர் அங்கு நின்றிருந்தார். அதிகாரம் செய்து பழகியவர் என்று அவர் குரல் காட்டிற்று.
எமக்குச் சேரநாடு ஐயா
என்றான் சுருக்கமாக.
பார்த்தாலே தெரிகிறதே நம்பூதிரிகள் என்று! இங்கு யார் வீட்டிற்கு ஸ்வாமிகள் வருகையோ?
என்று மேலும் கேட்டார் பெரியவர்.
மன்னிக்கவும், எனக்கு இங்கு யாரையும் தெரியாது. காளிகோயிலுக்கு வந்திருக்கிறேன்
என்றான் மந்திரவாதி.
சொக்கர் அமரலிங்கரைத் தெரியும் என்று ஸ்வாமிகள் சொன்னதாகக் காதில் விழுந்தது
என்றார் அந்த மனிதர். குரலில் லேசாகக் கேலி இழையோடியது.
நாங்கள் பழைய நண்பர்கள்
என்றான் மந்திரவாதி எரிச்சலாய்.
அப்படியானால் அமரலிங்கனார் அமரராகிவிட்டது ஸ்வாமிகளுக்குத் தெரிந்திருக்காது
என்றார் பெரியவர், தனக்குத் தானே பேசிக்கொள்ளும் பாவனையில்.
கேள்விப்பட்டேன்
என்றான் மந்திரவாதி.
அப்போது ஸ்வாமிகளுக்கு இங்கு அறிந்தவர்கள் யாருமில்லை என்று சொல்லுங்கள். அடியேன் ஏதேனும் உதவமுடியுமானால் செய்கிறேன்.
உதவ முன்வந்த உயர்ந்த உள்ளத்திற்கு நன்றி. தற்போது ஏதும் தேவையில்லை
என்ற மந்திரவாதி, திடீரென்று நினைத்துக் கொண்டவன் போல ஐயா, தங்களுக்கு அந்த இளைஞன் யாரென்று தெரியுமா? அடியேனுக்குக் கூற முடியுமா?
என்று அஜாதசத்ருவைச் சுட்டிக்காட்டிக் கேட்டான்.
ஓ, அவரா!
என்று இழுத்தார் அந்தப் பெரியவர் அவரைத் தெரியாதா தங்களுக்கு?
தெரியாததால் தானே கேட்கிறேன்! இவ்வூரில் எனக்குத் தெரிந்தவர்கள் யாருமில்லை என்று சொன்னேனே! அதுவும் இளைஞர்களை நிச்சயம் தெரியாது!
மந்திரவாதியின் குரல் ஆத்திரத்தில் சற்றே உயர்ந்தது.
அப்படியா! பத்ரனோடு தாங்கள் பேசிக் கொண்டிருந்ததைக் கண்டேனே!
ஆம், அவன் என் நண்பரின் மகன். அதனால் சற்று உரையாடினேன். ஆனால் நான் கேட்டது அவனைக் குறித்தல்ல.
ஆம், தாங்கள் கேட்டது அங்கு மின்னல் வேகத்தோடு செயல் புரிந்துகொண்டிருக்கிறாரே, அவரைப் பற்றியல்லவா? தாங்கள் யாரென்று அறியாதபோதும் தங்களோடு மிகுந்த அன்போடு பேசினாரே, அவரைப் பற்றியல்லவா? தாகம் என்று கூறியவுடனே வாழ்வளிக்கும் வைகை நீரைத் தன் வளமிகு கரங்களால் அளித்தாரே, அவரைப் பற்றியல்லவா? எந்த முகத்தைக் கண்டால் நம் தாபமெல்லாம் தணியுமோ, பசிதாகம் தோன்றாதோ, அந்த மதிமுகத்தை உடையாரைக் குறித்தல்லவா?
பெரியவர் உணர்ச்சிபொங்கக் கேட்டார்.
ஆம்
என்றான் மந்திரவாதி, அவர் வேகத்தைக் கண்டு சற்று அயர்ந்து.
இப்போது அவர் யாரென்று தெரிந்துகொள்ளுங்கள். அவர்தாம் பாண்டிய மன்னர்! அன்னை அங்கையற்கண்ணி அருளால் பாண்டிய மண்டலம் பெற்ற பெறும்பேறு. வைகை போன்றே இந்தப் பாண்டிய நாட்டை வாழ்விக்கப் பாய்கின்ற பொன்னாறு. தானத்தில் கர்ணனை விஞ்சியவர். ஞானத்திலோ ஜனகனை நிகர்த்தவர். பக்தியில் உத்தவர். சக்தியில் அருச்சுனர். எங்கள் ஜீவகப் பாண்டியன் பெற்ற தவப்புதல்வர், தர்மராஜாதிராஜர், ஸ்ரீ அஜாதசத்ரு பாண்டியர்.
***
கதிரொளியும் உள்நுழைய அஞ்சும் அடர்ந்த கானகம்.
ஆசிரமத்திலெங்கும் அமைதி சூழ்ந்திருந்தது.
ஓமகுண்டத்தின் முன்னமர்ந்து ஆழ்ந்த தியானத்தில் ஈடுபட்டிருந்தனர் முனிவரும் அவர்தம் சீடனும்.
திடீரெனக் கர்ணகடூரமாகக் கூகை அலறியது. வானில் மழை வரும் எவ்வித அறிகுறியுமின்றி இடி முழங்கியது. நரிகள் ஊளையிட்டன.
ஓமகுண்டத்து அக்னியில் புகை மண்டியது. நெருப்பு இடஞ்சுழித்துக் கொண்டது.
முனிவரும் சீடனும் விலுக்கென்று தியானத்திலிருந்து விடுபட்டனர்.
முனிவரின் முகத்தில் வியர்வை துளிர்த்தது. சீடனின் கரம் தன்னையறியாமல் அருகே வைத்திருந்த வாளைப் பற்றியது.
சீடனே, பாண்டிய அரியணைக்கு ஆபத்து நெருங்குகிறது
என்றார் முனிவர் கவலையுடன்.
3. த்ரிகுணாத்மர்
மணிசுந்தரா! உன் கேள்விக்கு விடை தெரிந்ததா?
காளியன்னை புன்னகையுடன் கேட்டாள்.
கேள்விக்கு விடையா? என் வெற்றிக்கு வழியே சிடைத்துவிட்டதே!
குதூகலமாகக் கூறினான் மந்திரவாதி. அம்மா! எத்தனை சிலாக்கியமான பலியை என் கண் முன் காட்டியிருக்கிறாய்! அந்தப் பிள்ளையின் முகத்திலேதான் எத்தனை ஞானம் ததும்புகிறது. இத்தனை இளம் வயதிலேயே இவ்வளவு பக்குவத்தை எட்டிய யோகிகளும் இக்காலத்தில் உண்டா? அத்துடன் அவன் நாடாளும் மன்னனாகவும் இருப்பது மேலும் சிறப்பு, அல்லவா! அவனை நிச்சயம் உனக்குப் பலியிட்டு உன்னை ஆனந்தப்படுத்துவேன், தாயே...
உற்சாகமாகக் கூறிவந்த மந்திரவாதி சற்றே தயங்கி நிறுத்தினான்.
என்ன, மந்திரவாதி! இயலுமா என்று சந்தேகம் வந்துவிட்டதோ?
அன்னை கேலியாகக் கேட்டாள்.
இந்த மஹாகாளி மைந்தனால் இயலாதது என்ற ஒன்றை இன்னும் பிரம்மன் படைக்கவில்லை, மாதா!
என்று கர்வத்துடன் கூறினான் மந்திரவாதி. நான் சிந்தித்தது எதைப் பற்றியென்றால், பரம்பரை பரம்பரையாகப் பாண்டிய மன்னர்கள் மகாவீரர்கள். பரம பக்தர்களாயினும் அவர்கள் சாமானிய மனிதர்களே. அவர்களுடைய பரம்பரையில் இந்த ஞானி எவ்வாறு வந்து தோன்றினான் என்றே யோசித்துக் கொண்டிருந்தேன்.
அது பெரிய கதை. அறிந்துகொள்ள விரும்புகிறாயா?
என்று காளியன்னை கேட்டாள்.
ஆம், விரும்புகிறேன், என் லட்சியத்தை அடைய உதவுமென்றால்.
கதையைக் கூறிவிடுகிறேன். கருத்தை நீ தான் கண்டுணர வேண்டும்
என்று கூறிய காளியன்னை மேலும் தொடர்ந்தாள்.
***
"பல ஆண்டுகளுக்கு முன்னால், த்ரிகுணாத்மர் என்று பெயர் கொண்ட சிற்றரசர் ஒருவர் இருந்தார். இவர் மாபெரும் வீரராக இருந்ததாலே, சேர, சோழ, பாண்டிய மன்னர்களும், ஏன், தெலுங்கு, கர்நாடகம் போன்ற பகுதிகளிலுள்ள மன்னர்களும் கூடப் போர்களில் இவருடைய சகாயத்தை விரும்பினர்.
"த்ரிகுணாத்மர் வீரர் மட்டுமல்ல, சிறந்த தர்மவான். போர்களில் தர்மத்தின் பக்கம் மட்டுமே நின்று உதவிகள் புரிந்துவந்தார். அவர் சகாயம் புரிந்த நாடு நிச்சயம் போரில் வெற்றி பெறும் என்ற புகழைப் பெற்றுவிட்டார். போர்களில் ஈடுபட்டதன் மூலம் தன் தேசத்தின் பரப்பை விஸ்தரித்தார். பெருஞ்செல்வமும் ஈட்டினார். அவரை நாடிவரும் வறியவர்களுக்கு வாரிவழங்கும் வள்ளலாகவும் விளங்கினார்.
"முப்பெரும் வேந்தர்களுக்கு இணையாகப் பலமும் புகழும் கொண்ட மன்னராக த்ரிகுணாத்மர் உருவெடுத்து வந்துகொண்டிருந்த அந்தக் காலகட்டத்தில்தான், பாண்டியர்களுக்கும் தெலுங்குப் பகுதியில் ஆண்டுவந்த சக்ரவர்த்தி ஒருவருக்கும் பெரும்போர் மூண்டது. அந்தச் சக்ரவர்த்தி பாரதத்தின் தென்பகுதி முழுமையையும் தன் ஆட்சியின் கீழ் கொணர விரும்பினார்.
"இப்போரில் பாண்டியர்களுக்கு ஆதரவாகப் போரிட்டார் த்ரிகுணாத்மர். பிறகு கேட்பானேன்! பாண்டிய வீர மறவர் படை தெலுங்கர்களின் படையைத் தோல்வியடையச் செய்தது.
"இப்போர் முடிவுற்றபோது, இரண்டு முக்கிய நிகழ்வுகள் நடந்தன. முதலாவது, அப்போதைய பாண்டிய மன்னனான ஜீவகப் பாண்டியனின் வீரத்தையும் போர்த்திறனையும்