Manamey Nee Magizhnthidu
()
About this ebook
இந்நூல் பலர் தங்கள் வாழ்க்கையில் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் அழுத்தங்களுக்கான கேள்விகளுக்கு பதிலளிக்கிறது. சரியான மனநிலையை உருவாக்குவது எவ்வாறு? எந்த மாதிரி புரிதல்களையும், உணர்தல்களையும் நாம் அடைவது? அமைதியான அனுபவம் மூலமாக நம் இலக்குகளை எப்படி அடைவது? என்பதை தெரிந்துகொள்ள வாருங்கள் வாசிப்போம்...!
Read more from A.T. Rajkumar
Maname Nee Unarnthidu Rating: 0 out of 5 stars0 ratingsManamey Nee Sinthanai Sei(yaathey)thidu Rating: 0 out of 5 stars0 ratings
Related to Manamey Nee Magizhnthidu
Related ebooks
Vetrikana Mugavari Rating: 0 out of 5 stars0 ratingsSaga Manithargalai Sariyaga Anugum Murai! Rating: 0 out of 5 stars0 ratingsVazhkaiyil Vetri Pera 38 Padigal Rating: 0 out of 5 stars0 ratingsEnnangal Tharum Abaara Vetri Rating: 3 out of 5 stars3/5Undhi Ezhu Rating: 0 out of 5 stars0 ratingsVaanam Vegu Thooramillai Rating: 0 out of 5 stars0 ratingsPrachanaigal... Theervugal Rating: 0 out of 5 stars0 ratingsThanimai, Muthumai, Thuyarangal Illai Ellam Sugamey Rating: 0 out of 5 stars0 ratingsVazhvil Vetri Pera Chinmayanatharin Bathilgal! Rating: 0 out of 5 stars0 ratingsThittamiduvom! Vetri Peruvom! Rating: 0 out of 5 stars0 ratingsKanavan - Manaivi Thambathiyam Inba Mayamaga! Rating: 0 out of 5 stars0 ratingsYethu Aanmai? Rating: 5 out of 5 stars5/5Nee Pathi... Naan Pathi...! Rating: 4 out of 5 stars4/5Agavarigal Rating: 0 out of 5 stars0 ratingsNokkathai Nokki Rating: 0 out of 5 stars0 ratingsUyarntha Sinthanaiye Vallamai! Rating: 0 out of 5 stars0 ratingsKesari + Poori = Magizhchi Rating: 0 out of 5 stars0 ratingsVazhkkai Payanathiley Rating: 0 out of 5 stars0 ratingsMaanava Manasu Rating: 0 out of 5 stars0 ratingsNeengale Vetrikku Pakkabalam Rating: 0 out of 5 stars0 ratingsKonjam Yosikkalame... Rating: 0 out of 5 stars0 ratingsஅறியாமை: Awareness Program, #1 Rating: 0 out of 5 stars0 ratingsManithaneya Maanbugale Unnatham! Rating: 0 out of 5 stars0 ratingsGreat Words Win Hearts Rating: 0 out of 5 stars0 ratingsDhyanam Rating: 0 out of 5 stars0 ratingsEn Vaazhkai En Kaiyil Rating: 0 out of 5 stars0 ratingsThathuvamedhai J.k.vum Manavargalum Rating: 0 out of 5 stars0 ratingsBagavath Geethai - Eliya Vilakkam Rating: 0 out of 5 stars0 ratingsVetrikana Vilai Rating: 0 out of 5 stars0 ratingsManam Ennum Mahashakti Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Manamey Nee Magizhnthidu
0 ratings0 reviews
Book preview
Manamey Nee Magizhnthidu - A.T. Rajkumar
https://www.pustaka.co.in
மனமே நீ மகிழ்ந்திடு
Manamey Nee Magizhnthidu
Author:
அ.தி. ராஜ்குமார்
மொழிபெயர்ப்பு: வல்லபா ஸ்ரீநிவாசன்
A.T. Rajkumar
For more books
https://www.pustaka.co.in/home/author/at-rajkumar
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
முகவுரை
மகிழ்ச்சியாய் இருத்தலும், மாற்றத்தைத் தழுவலும்
அடிமையாக்கும் பழக்கங்கள் மற்றும் சுயநாசப்படுத்தும் நடத்தைகளிலிருந்து விடுபடுதல்
மனிதர்களுடன் உறவுகளை சரிசெய்தல்/மேம்படுத்துதல்
அதிகமான சிந்தனை, பதட்டம், மனச்சோர்வு ஆகியவற்றைக் கையாளுதல்
கோபம், பயம், குற்ற உணர்வு, பொறாமை, தனிமை மற்றும் துக்கத்தை எதிர்கொள்வது
எண்ணங்கள் மற்றும் உணர்ச்சிகள் பற்றிய விழிப்புணர்வு
அசையாதிருப்பதையும், அமைதியையும் அனுபவித்தல்
முகவுரை
ஒவ்வொருவரும் வாழ்க்கையில் தங்களை மகிழ்ச்சியாக வைத்திருக்க சில லட்சியங்கள், குறிக்கோள்கள், ஆசைகள், இன்பங்கள் இவற்றை நிறைவேற்ற விரும்புகிறார்கள். பணம், புகழ், அதிகாரம் இவற்றை வைத்தே வாழ்க்கையின் வெற்றியை மனிதர்கள் வரையறுக்கிறார்கள். நம்மை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்வதற்கான இந்த இலக்குகளை, ஆசைகளை அடையும் பணியில் வெற்றி பெறுவதற்காக கூடுதல் கவனம் செலுத்துகையில், நம் ஆழ்மன மகிழ்ச்சி உணர்வையும், அமைதியையும் இழந்து விடுவது போலாகிறது.
நாம் சில எதிர்பார்ப்புகளை உருவாக்கிக்கொண்டு, விளைவுகள் நாம் நினைப்பதுபோலவே நடக்க வேண்டும் என விரும்புகிறோம். நாம் விரும்பிய விளைவுகளைக் காணாத போதோ சவால்கள், தோல்விகளை எதிர்கொள்ளும் போதோ, மன அழுத்தத்திற்கு ஆளாகிறோம். வாழ்க்கையின் உண்மையைக் காணத் தவறி, தொலைந்து போனதுபோல ஏமாற்றமடைகிறோம். ஒரு உண்மை என்னவென்றால், எப்போதும் வெற்றி பெறுவது மட்டுமே வாழ்க்கை அல்ல. பணம், அதிகாரம், புகழ் இவற்றை ஈட்டுவதும் அல்ல. வாழ்க்கைப் பயணம் என்பது சவால்கள், அடிபடுதல், தோல்வி மற்றும் இவற்றினால் ஏற்படும் அசெளகர்யம் அனைத்தையும் உள்ளடக்கியது.
இதன் அர்த்தம் என்னவென்றால் நம் ஆசைகள், குறிக்கோள்கள், லட்சியங்கள் மற்றும் ஆர்வங்கள் நிறைவேற வேண்டுமென்றால், நாம் நமது வசதி வட்டத்திலிருந்து வெளிவர வேண்டும். சோம்பேறித்தனமாக இல்லாமல் ஆபத்துகளை சந்திக்கவும், பொறுப்புகளை கையாளவும் தயாராக இருக்க வேண்டும்.
ஒருவரோடு ஒருவர் ஒப்பிட்டுக் கொள்வது, மனிதர்களின் மோசமான குணமாகும். இதுவே பொறாமை, பாதுகாப்பின்மை, பயம், ஈகோ, எதிர்மறைத் தன்மை, பேராசை போன்றவற்றிற்கு காரணமாகிறது. இந்த அனைத்து எதிர்மறை குணங்களுக்கும் வழிவகுக்கும் ஒப்பீட்டைக் கண்டு மக்கள் பயப்படுகிறார்கள்.
என் தந்தையார், தன் குழந்தைகளை இவ்வாறு ஒப்பிடுவதில் பிரபலமானவர். நாங்கள் குழந்தைகளாக இருந்தபோது, எப்போதும் என்னை சகோதரர்களுடன் ஒப்பிடுவார். இது எனக்கு மனச் சோர்வை ஏற்படுத்தியது. சில சகோதரர்களுடன் ஒப்பிடுகையில் நான் பயனற்றவன் என்று எப்போதும் என்னிடம் சொல்வார். நான் குழந்தைப் பருவத்திலும், பதின்ம வயதிலும் இருந்தபோது, அது எனக்குள் மன அழுத்தம், பயம், பதட்டம், பொறாமை, ஈகோ ஆகியவற்றை உருவாக்கியது. குடும்பத்தில் நானே மிகவும் திறமையில்லாதவன் என்பார். நான் காதல் திருமணம் செய்துகொண்ட போது, இந்தக் குடும்பத்திலேயே நீ மட்டும்தான் வித்தியாசமானவன்
என்றார். அந்த சமயத்தில் நான் மட்டுமே சரியான வேலையில் இல்லாமல் இருந்தேன். மற்றவர்கள் அனைவரும் வாழ்க்கையில் செட்டில் ஆகி இருந்தார்கள்.
திருமணமாகி வீட்டைவிட்டு வெளியேறும்வரை, அவருடைய வார்த்தைகளால் நான் புண்பட்டு மன உளைச்சலில் இருந்தேன். ஆனால், தொழிலில் எனக்கு வாய்ப்புகள் கிடைத்தன. நான் நன்றாக சம்பாதிக்க ஆரம்பித்தேன். வாழ்க்கையில் எல்லாம் அடைந்தேன். தேவையான பொருட்கள், வசதி, சந்தோஷம், முக்கியமாக எதையும் பொருட்படுத்தாத கலங்காத மனம் அனைத்தும் பெற்றேன். நான் முன்னேறிய பிறகு, என் அப்பா அவர் குழந்தைகளிலேயே நான்தான் பணக்காரன், மிகுந்த பாக்கியவான், திருப்தியடைந்தவன் என்றெல்லாம் சொல்ல ஆரம்பித்தார். ஆனால், அழகான மனதை ஆழமாக உணர்ந்ததால் இந்த முறை இதனால் நான் உற்சாகமடையவில்லை.
ஒப்பிடும் போது, ஒருவர் மனது எவ்வளவு வேதனைப்படும் என்று நான் அறிவேன். உண்மையில் என் தந்தையின் புகழ்ச்சியை நான் ஏற்கவில்லை. உண்மையில் நான் அதை நம்பவும் இல்லை. வாய்ப்புகள், சூழ்நிலைகள், சந்தர்ப்பங்கள் அமையும் போதுதான் ஒருவர் பெரியவராகிறார். மோசமானவர்களுக்கும் அதே வாய்ப்புகளும், சந்தர்ப்பங்களும் அமையும்போது, அவர்களும் பெரியவராவார்கள். அப்படி இருக்கும்போது ஒருவரை சிறந்தவர் என்றோ, கையாலாகதவர் என்றோ சொல்வதில் என்ன அர்த்தம் இருக்கிறது? நூறு மீட்டர் ஓட்டப் பந்தயத்தில், ஐம்பதாவது மீட்டரில் ஆரம்பித்தவரோடு, பூஜ்யத்தில் ஆரம்பித்தவரை ஒப்பிடுவது போன்றது இது.
இதைப் போன்ற மீண்டு எழுந்து வரவேண்டிய பல மனம் சார்ந்த விஷயங்கள் இந்தப் புத்தகத்தில் விளக்கப்பட்டிருக்கின்றன.
நாம் வெற்றி அடைவதோ, தோல்வி அடைவதோ உலகில் நடப்பதற்கு சம்பந்தம் இல்லாமல் நிகழாது என்பதைப் புரிந்துகொள்வதற்கு சரியான மனநிலையை உருவாக்கிக்கொள்ள வேண்டும்.
சரியான மனநிலை இருப்பின், பெரும்பாலும் நம் மனதைப் பற்றி நாம் கவலைப்பட வேண்டியதில்லை. அதுவே, தீர்வுகளைக் கொண்டதாக இருக்கும். மனதை அமைதியாக வைத்திருந்தால், பல பிரச்சினைகளைத் தாண்டி வர முடியும். மனதை அமைதியாக வைத்திருக்க தியானம் போன்ற மனப் பயிற்சிகளை செய்ய வேண்டும். இந்தப் பயிற்சிகள் ஒரு அமைதியான, சலனமற்ற, நடுநிலைத் தன்மையை வளர்க்க உதவுகின்றன. இது கோபம், அதிகப்படியான சிந்தனை, எதிர்மறைத் தன்மை, கெட்ட பழக்கங்கள், உணர்ச்சித் தடுமாறல்கள், பயம், பதட்டம் போன்ற மனம் தொடர்பான அனைத்து பிரச்சினைகளையும் தாண்டி பல புரிதல்களுக்கும், தீர்வுகளுக்கும் வழிவகுக்கிறது. வாழ்க்கையின் ஆரம்பத்திலேயே இந்த வழக்கங்களைக் கற்றுக்கொள்வதும், உண்மைகளை உணர்ந்துகொள்வதும் நல்லது. இது வாழ்க்கையை முழுமையாக அனுபவிக்கவும், நமது முழுத்திறனையும் அடையவும் உதவும்.
மனதில் கொள்
என்ற வரிசையில் ஏ.டி. ராஜ்குமார் அவர்களின் மூன்றாவது புத்தகம் இது. முந்தைய இரண்டு புத்தகங்களான Mind It... You don’t have to be a Swamiji
, மனமே நீ உணர்ந்திடு
ஆகியவை மிகப் பெரிய வெற்றியைப் பெற்றன. அதிகம் வேண்டப்பட்டதற்காகவும், அதிகப் பேரை சென்றடைவதற்காகவும், இவ்விரு புத்தகங்களும்கூட தமிழிலும், இந்தியிலும் மொழி பெயர்க்கப்பட்டு, நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன.
இப்புத்தகம், பலர் தங்கள் வாழ்க்கையில் சவால்கள் மற்றும் அழுத்தங்களை எதிர்கொள்ளும்போது, கேட்கும் கேள்விகளுக்கு பதிலளிக்கிறது. இந்தப் புத்தகம் எளிய நடைமுறை வாழ்க்கை உண்மைகளையும், மன அழுத்தத்திற்கு ஆளாகாமல் உணர்ச்சிகளை அமைதியாக வைத்து திறம்பட வாழ்வதற்கான வழிமுறைகளையும் உள்ளடக்கியது. எவ்வாறு சரியான மனநிலையை உருவாக்க வேண்டும். என்ன மாதிரி புரிதல்களையும், உணர்தல்களையும் நாம் அடைய வேண்டும், நம் மன எண்ணங்கள், நம்பிக்கைகள் மற்றும் உணர்வுகளில் என்ன மாற்றங்களைச் செய்ய வேண்டும். உறவுகளை வளர்த்து, சரி செய்து, ஆழ்ந்த நிச்சலனமான அமைதியான அனுபவம் மூலமாக, நம் இலக்குகளை எப்படி அடைவது என்பதை எல்லாம் பகிர்ந்து கொள்கிறது. படித்து மகிழுங்கள்!
- அ.தி. ராஜ்குமார்
மகிழ்ச்சியாய் இருத்தலும், மாற்றத்தைத் தழுவலும்
நம் வாழ்வை மகிழ்ச்சியாக்குவது எப்படி?
இதை விளக்க என் அனுபவம் ஒன்றை பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். என் வாழ்விலேயே மிக அழகான ஒரு அனுபவம், எனது எட்டாம் வகுப்பு முழு ஆண்டு விடுமுறையின்போது நிகழ்ந்தது. விடுமுறையில் நான் சீக்கிரம் எழுந்து, குளித்துவிட்டு, காலை உணவை உண்டு, குடியிருப்பில் (காலனியில்) வசிக்கும் நண்பர்களைச் சந்திப்பேன். நாங்கள் பிசினஸ் என்ற டிரேடிங் விளையாட்டை நாள் முழுவதும் விளையாடுவோம். அதை முடிக்கவே தோன்றாமல், சிலசமயம் மதிய சாப்பாட்டைக்கூட விட்டதுண்டு. அதே உற்சாகத்தோடு, அடுத்த நாளை எதிர்பார்த்தபடி படுக்கைக்குச் செல்வோம்.
இதே போன்ற உணர்வு, பத்தாவது விடுமுறையின்போது செஸ், கேரம், கிரிக்கெட் விளையாட்டுகளால் ஏற்பட்டது. அதைப்போலவே எங்கள் வாழ்க்கை நிறைய பொறுப்புகளில்லாமல், மகிழ்ச்சி நிறைந்ததாக எப்போதும் இருக்க வேண்டும் என்று விரும்பினோம். மகிழ்ச்சியான அனுபவம் மட்டுமே வாழ்க்கையில் குறிக்கோளாக இருந்தது. காலேஜ் படிப்பை முடித்ததும், காலை பத்து மணிக்கு சந்திப்போம். சினிமாவுக்குப் போவோம். மாலை பியர் அருந்துவோம், இதைப்போலவே, வாழ்க்கை முழுவதும் இருக்க ஏங்குவோம். யாராவது காதலில் இருக்கும்போது, ரம்மியமான இடத்திற்குப் போவோம். நீண்ட கார்ப் பயணம் போவோம். சினிமா பார்ப்போம். இப்படி அது அற்புதமான நாளாக அமையும். எல்லோருமே வாழ்க்கை முழுதும் இப்படி இருக்க விரும்புகிறோம். கல்யாணம் ஆன பின்பும் குடும்பத்துடனும், நண்பர்களுடனும் வெளியில் சுற்ற விரும்புகிறோம். வாழ்க்கை எப்போதும் உற்சாகமானதாக இருக்க விரும்புகிறோம்.
ஆனால், இவை எல்லாம் யாரால் முடிந்தது என்பதை உணர்ந்தோமா என்றால் இல்லை. குழந்தைப் பருவத்தின்போது பெற்றோர்கள் நமக்கு உணவு சமைத்து, நம் துணிகளைத் துவைத்து, பிசினஸ் கேம் நாம் வாங்குவதற்கான பணத்தையும் சம்பாதிக்கின்றனர். நம் மகிழ்ச்சியின், அனுபவத்தின் பின்னால் அவர்கள் இருக்கின்றனர். அவர்களும் மனிதர்கள், அவர்களுக்கும் இதே போன்ற உணர்வுகள் உண்டு என்பதை சிலசமயம் உணரத் தவறுகிறோம். அவர்களும் வாழ்க்கையை இதேபோல அனுபவிக்க விரும்புவார்கள். அவர்களை மகிழ்விக்க வேண்டியதும் உங்கள் கடமை, பொறுப்பு.
உற்சாகமான வார இறுதிக்குப் பின், திங்கள் காலை பள்ளிக்கோ, கல்லூரிக்கோ, வேலைக்கோ போவது ஒரு பயங்கரமான உணர்வு. ஆசிரியர்களுக்கும், மற்ற பணியார்களுக்கும் சம்பளமும், வாழ்வாதாரமும் அளிக்கும் ஒரு கல்வி அமைப்பின் ஒரு பகுதியாக உங்களை நினைத்துப்பாருங்கள். அதன் மூலம், அவர்கள் குழந்தைகளை அவர்கள் மகிழ்விக்க வேண்டும். இந்த பொறுப்புகளைப் பற்றி எல்லாம் யோசிக்காமல் பள்ளி செல்வதையோ, ஆபீஸ் செல்வதையோ ஒரு சிரமமாக நினைக்கிறோம். இதை உணர்ந்தோமானால், திங்கட் கிழமைகள் எப்போதும் உங்களுக்கு பயங்கரமாக இருக்கவே இருக்காது.
மேலும், எதுவுமே ஒரு கால கட்டத்திற்குப் பின் அயற்சி அளிக்கும். (போரடிக்கும்) ஒரு விளையாட்டை தொடர்ந்து விளையாடுவது, மணிக்கணக்கில் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருப்பது, அதே சுற்றுலாத் தலத்திற்கு மீண்டும் மீண்டும் செல்வது எதுவானாலும் அயற்சி தரும். காதலனையோ, காதலியையோ சந்திப்பதில் உள்ள இடையூறுகளால்தான் அந்த சந்திப்பு சுவாரஸ்யமாகிறது. எப்போதாவது, ஒரு முறை சந்திப்பதில் இருக்கும் மகிழ்ச்சியை வைத்து, கல்யாணம் செய்து கொண்டால் 24/7 - 365 நாட்களும், கிளர்ச்சியும் மகிழ்ச்சியுமாக இருக்கும் என்று கணக்குப் போடுகிறோம். ஆனால், எப்போதும் கூடவே இருக்கும்போது வாழ்க்கை போரடிக்க ஆரம்பித்துவிடுகிறது. அதிலிருக்கும் சலிப்பினால், இந்த அயற்சி ஏற்படுகிறது. இதை உணர்ந்து, வாழ்க்கையை சமநிலைப்படுத்த வேண்டும்.
கிளர்ச்சி ஏற்படும் விதமாக, முக்கியமானவர்களிடமிருந்து சிறிது விலகி இருந்து, உங்கள் வேலைகளையும் சமநிலைப்படுத்துங்கள். நீங்கள் ஒரு குறிப்பிட்ட வேலையில் ஆர்வமாக இருந்தால், அதிலேயே எப்போதும் இருக்காதீர்கள். மற்ற வேலைகளையும் சமநிலைப்படுத்தி, அவற்றிலும் நேரம் செலுத்துங்கள். மீண்டும் உங்களுக்குப் பிடித்த வேலைக்கு வரும்போது, அது சுவாரஸ்யமாக இருக்கும். விளையாட்டு, வேலை, குடும்பம், சமூக சேவை என்று வெவ்வேறு வேலைகளைக் கலந்து நேரத்தை செலவிடும்போது வாழ்க்கை இன்பமயமாகிறது. இப்படி வாழ்க்கையை நடத்தினீர்களானால், யாருடனும் சண்டையிடமாட்டீர்கள்.
மகிழ்ச்சியான, சமநிலைப் படுத்தப்பட்ட வாழ்க்கையை அடைவது எப்படி?
வாழ்க்கை என்பது சமநிலைப்படுத்துவதிலேயே இருக்கிறது. பெரும்பாலான விஷயங்களை சமநிலைப்படுத்தும் நுட்பம் இருந்தால் வாழ்க்கை அற்புதமாகிறது. உதாரணமாக நீங்கள் டென்னிஸ் விளையாடுவீர்கள், ஒருவருடன் ஒரு போட்டியில் விளையாடப் போகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அந்த போட்டியில் வெற்றி பெறும் நோக்குடன்தான் செல்வீர்கள். போட்டி ஆரம்பாகிறது. உங்களுக்கு எதிராக விளையாடுபவர் பல தவறுகளை, பிழைகளை செய்து நீங்கள் வெற்றி பெற்று விடுகிறீர்கள். நீங்கள் அந்த வெற்றியில் திருப்தி அடையவில்லை. ஏனென்றால், டென்னிஸ் என்பது பல முறை பந்தை சரியாக அடித்து, படிப்படியாக வெற்றி பெற்று பின், போட்டியில் வெற்றி அடைவதே. அடுத்த நாள் ஒரு போட்டி நடக்கிறது. அதில் நீங்கள் பலமுறை பந்தை அடித்து விளையாடுகிறீர்கள். ஆனால், உங்களுடன் போட்டியிடுபவர் பாயின்டுகளை குவிக்கிறார். நீங்கள் தோற்றுக் கொண்டிருக்கிறீர்கள். அவரை போட்டியில் வெல்ல முடியாத சூழ்நிலையில் உங்கள் எதிராளி தவறு செய்ய வேண்டும் என்று விரும்புகிறீர்கள். ஒரு நேரத்தில், வெற்றி உங்கள் பக்கம் வர வாய்ப்பில்லாத நிலையில், அவர் பந்தை அடிக்காமல் நிறைய பிழைகளை செய்ய வேண்டும் நினைக்க ஆரம்பிக்கிறீர்கள்.
இந்த இரண்டு நிகழ்வுகளையும் எடுத்துக்கொள்ளுங்கள். நீங்கள் பந்தை அடிக்கவும், வெற்றி பெறவும் விரும்புகிறீர்கள். எல்லாம் சமமாக நிகழ வேண்டும் என்று விரும்புகிறீர்கள். பந்தை அடிக்க வாய்ப்பில்லாதபோது அதை அடிக்கவும், வெற்றி பெற வாய்ப்பில்லாதபோது, பந்தை அடிக்காமலேயே வெற்றி கிடைக்கவும் விரும்புகிறீர்கள். இரண்டு விதமான திருப்தியையும் அடைய நினைக்கிறீர்கள். நம் வாழ்க்கையிலும் பல விஷயங்களுக்கு இதுவே பொருந்தும். எது கிடைக்கவில்லையோ அதையே மனம் விழைகிறது. வாழ்க்கையில் திருப்தி கிடைக்க எல்லாவற்றையும் சரி விகிதத்தில் அனுபவிக்க வேண்டி இருக்கிறது.
அமைதியையும் சந்தோஷத்தையும் அடைய, மற்றொரு வழி மனதை அலையாமல் அணைத்து வைப்பது. ஒரு நல்ல விஷயமோ, வெற்றியோ நிகழும்போது, கிளர்ச்சி அடையக் கூடாது. அமைதியைக் கடைப்பிடித்து அமைதியாக இருக்க வேண்டும். அமைதியாக இருப்பது ஒரு விதமான சந்தோஷம். நேர்மறையான ஒரு நிகழ்வு நடக்கும் போது, அமைதியாகவும் அலைபாயாமலும் இருப்பீர்களானால், எதிர்மறையான சூழ்நிலையின் போதும் உங்களால் அமைதியாக இருக்க முடியும். இதுவே மகிழ்ச்சியையும், துக்கத்தையும் சமன்படுத்தும் வழி.
நான் மகிழ்ச்சியாக இருப்பதற்கு அனுமதி வேண்டும் என்று ஏன் நினைக்கிறேன்?
உங்களுக்கு மூன்று விதமான பிரச்சினைகள் இருக்கின்றன என்று வைத்துக் கொள்வோம். முறையே x, y, z. உங்கள் மனது, எப்போதும் அவற்றையே நினைத்து மன அழுத்தம் ஏற்படுகிறது. அதற்குள், ஒரு மகிழ்ச்சியான சூழ்நிலை நிகழ்கிறது. சிறிது நேரம், உங்கள் மனது மகிழ்ச்சியாக இருந்துவிட்டு பின் நினைக்கிறது - நான் இப்போது மகிழ்ச்சியாக இருக்கிறேன். எனக்கு கவலைகள் எதுவும் இல்லாததுபோல தோன்றுகிறது.
அது உடனே கணக்கை சரிபார்த்து x, y, z பிரச்சினைகளை நினைவுக்குக் கொண்டு வருகிறது. திடீரென்று நீங்கள் அந்த பிரச்சினைகளை உணர்கிறீர்கள். அதனால், இந்த பிரச்சினைகள் இருக்கும்போது மகிழ்ச்சியாக இருக்கக் கூடாது என்று உங்கள் மனது சொல்கிறது. இந்த எல்லாப் பிரச்சினைகளும் தீர்ந்தால்தான், உங்களால் மகிழ்ச்சியாக இருக்க முடியும் என்று உங்கள் மனது நினைக்கிறது. இதைப் பற்றி எல்லாம் யோசிக்க ஆரம்பித்து அந்த மகிழ்ச்சியான தருணம் முழுவதும் காணாமல் போகிறது.
பிரச்சினைகள் முடிந்த பின்தான் சந்தோஷமாக இருக்க முடியும் என்பது இல்லை. நூற்றுக்கணக்கான பிரச்சினைகள் இருந்தாலும், இந்தப் பொழுதில் நடக்கும் ஒரு மகிழ்ச்சியான, நேர்மறையான நிகழ்வுக்கு மகிழ்ச்சி அடைய முடியும். நிகழ்காலத்தில் மனதைக் குவிக்கச் செய்து, தேவையில்லாத எதிர்மறையான எண்ணங்களை மறையச் செய்யவும். அதை சீர்செய்யவோ, சரிசெய்யவோ தோன்றினால், அதை எல்லாம் செய்யாதீர்கள். நிகழ்காலத்தில் மனதைக் குவித்து, தேவையில்லாத எண்ணங்கள் வரவர அவற்றை அழிக்கவும். கொஞ்ச நேரத்தில், அது உங்கள் மனிதிலிருந்து போய்விடும். அமைதியை உணர்ந்து அனுபவியுங்கள். அதை அனுபவிக்க நீங்கள் அந்த குறிப்பிட்ட தருணத்தில் இருப்பது அவசியம். நீங்கள் இந்த அணுகுமுறையைக் கடைப்பிடித்தால், எந்த ஒரு நேரத்திலும் உங்களுக்குப் பிரச்சினைகள் இருக்காது.
ஒவ்வொரு பிரச்சினைக்கும் ஒரு தீர்வு இருக்கிறது. தீர்வு இல்லாத நிலையில் அதை கையாளவோ, ஏற்றுக்கொள்ளவோ ஒரு வழி இருக்கிறது. அதை ஏற்றுக்கொள்வதே பெரிய தீர்வாக அமையும். இந்த அணுகுமுறையை வளர்த்துக் கொண்டால் மகிழ்ச்சியாக இருப்பதற்கு யாருடைய அனுமதியும், உங்களுக்கு தேவை இருக்காது. எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருக்கலாம்.
சட்டென்று மகிழ்ச்சியாக உணர்வதற்கான மனநிலையை அடைய வழிகள் என்ன?
இதோ நீங்கள் பயிற்சி செய்ய சில உத்திகள். நான்கு பிரச்சினைகள் உங்களை வருத்திக்கொண்டு இருப்பதாக வைத்துக்கொள்வோம். படுக்கையில் இருந்து எழுந்து, அமர்ந்தவுடன் கண்களை மூடியவாறு, அந்தப் பிரச்னைகளுக்கு தீர்வு கிடைப்பதுபோல காட்சிப்படுத்துங்கள். அவ்வளவுதான். அது உங்களுக்கு உடன் தீர்வு அளித்து, ஆவலுடன் நீங்கள் கிளம்பிவிடுவீர்கள். ஆக்கபூர்வமாக உணர்வீர்கள். காட்சிப்படுத்துதல் வழிகளையும், தீர்வுகளையும் உருவாக்கும்.
வழக்கமாக நம்மில் பெரும்பாலானவர்களுக்கு, ஒருவருக்கொருவர் அகங்காரப் பிரச்சினைகள் இருக்கும். உங்களை யாராவது புண்படுத்திவிட்டால், அவர்களை பழிவாங்கும் எண்ணங்களுக்கு பதிலாக அவர்கள் உங்களுடன் சமரசம் செய்துகொள்வது போலவும், நெருங்கிய நண்பராவது போலவும் காட்சிப்படுத்திக் கொள்ளுங்கள். இது மன அமைதியைத் தரும். பழிவாங்கும் எண்ணம் உங்களை மன அழுத்தத்திற்குத் தள்ளும். உண்மையில் நல்ல எண்ணங்கள் அவர்களையும் அடைந்து, நல்ல அதிர்வுகளை ஏற்படுத்தி அவரையும் உங்களுடன் நெருக்கமாகச் செய்யும்.
தற்போதைய தருணத்தில், வேலையில் மனதைக் குவிக்கச் செய்யுங்கள். அது உங்களுடைய பிடித்த வேலையாகவோ, உபயோகமான வேலையாகவோ, இசை கேட்பதாகவோ இருக்கலாம்.
தியானம் செய்து பழகுவது இவ்வாறு அந்தந்த தருணங்களில் மனதைக் குவிக்க சிறந்த உத்தியாகும். ஆன்மீகம் என்பதைவிட, அது ஒரு மனப்பயிற்சி என்பதே சரி. அது மனதை அமைதிப்படுத்த உதவுகிறது. தியானம் செய்வதில் இரண்டு பெரும் பலன்கள் உள்ளன. தியானத்தில் நாம் ஒரு உருவத்திலோ, மந்திரத்திலோ மனதைக் குவியச் செய்கிறோம். இதை வழக்கமாகத் தொடர்ந்து செய்யும்போது, ஒரு விஷயத்தில் மனதைச் செலுத்தவும், நிகழ்தருணத்தில் வாழவும் தொடங்குகிறோம்.
மற்றொரு பயன் என்னவென்றால் - ஒரு உருவத்திலோ, மந்திரத்திலோ மனதைக் குவிக்கும்போது, நம் மனது சம்பந்தமில்லாத எண்ணங்களில் பயணிக்கும். அப்படி உருவத்thiலிருந்தோ, மந்திரத்திலிருந்தோ மனம் அலைபாய்வதை உணரும்போது, மீண்டும் மனதை அதில் குவிக்க முயற்சி செய்வோம். இதை வழக்கமாகச் செய்யும்போது, மற்ற எண்ணங்களிலிருந்து விலகி, சுலபமாக மனதைக் குவியத்தில் கொணர முடியும். கடந்த காலத்தையோ, வருங்காலத்தையோ பற்றி கவலைப்படுவது போன்ற தேவையில்லாத எண்ணங்களை கடந்து வர முடியும். தொடர்ந்து தியானம் பழகுவதன் மூலம், இரண்டு பிரச்சினைகளுக்கும் தீர்வு காண முடியும்.
எதையும் முழுமனதுடன் ஏற்றுக்கொள்வது ஏன் முக்கியமானது?
சமீபத்தில் எங்கள் வீட்டில், பிளம்பிங் செய்வதற்கான கான்ட்ராக்டை ஒருவருக்குக் கொடுத்தோம். மூன்று பேர்களிடமிருந்து கொடேஷன் வாங்கி, 35,000 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்ட தொகைக்கு, வேலையைச் செய்ய இவரை முடிவு செய்தோம். நன்றாக வேலையைச் செய்து அது நல்லபடியாகவும் முடிந்தது. வேகமாகச் செய்ததால், சீக்கிரமாகவும் முடித்தனர். நாங்கள் மகிழ்ச்சியுடன் பணத்தைக் கொடுத்தோம்.
இதே மாதிரியான ஒப்பந்தம் செய்யும் வேலை 3 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் வந்தது. இந்த முறை ஆட்களை வேலைக்கு வைத்து தினக்கூலி மூலம் கொடுக்க நினைத்தோம். நாங்கள் ஒரு நாளைக்கு மூன்று நபர்களை வேலைக்கு அமர்த்தினோம். ஒவ்வொரு நாளும் மொத்த ஊதியம் ரூ.3000. ஆனால், அவர்கள் வேலையை மிக மெதுவாகச் செய்வதைப் பார்த்து, அவர்கள் வேலையை தேவையின்றி இழுக்கிறார்கள் என்று நாங்கள் புரிந்து கொண்டோம். என்ன செய்தாலும், தினக்கூலி கிடைத்துவிடும் என்பதே அவர்கள் எண்ணமாக இருந்தது. நாங்கள் சங்கடம் அடைந்து, ஒரு நாளைக்குத் தேவையான அதிகபட்ச வேலையை அவர்கள் செய்யும்படி கண்காணிக்க எங்கள் ஊழியர்களை அமர்த்தினோம். ஒரு குறிப்பிட்ட அளவு மட்டுமே வேலை வாங்க முடிந்தது. அந்த ஏழெட்டு நாட்களுக்கு நாங்கள் மன அழுத்தத்திற்கு வேறு ஆளானோம். தினக்கூலி அடிப்படையில் வேலை கொடுத்ததற்கு வருந்தினோம். கான்ட்ராக்ட்டிலேயே கொடுத்திருக்கலாம் என்று நினைத்தோம்.
மிகுந்த மன உளைச்சலுக்குப் பிறகு ஏழெட்டு நாட்களில் வேலை முடிந்தது. கடைசியாக கணக்கு பார்த்த போது கூலி ரூ 24,000 என்று வந்தது. இதே மாதிரியான முந்தைய வேலையுடன் ஒப்பிடுகையில் ரூ 11,000 சேமித்திருக்கிறோம். இதில் நாங்கள் சற்று திருப்தி அடைகிறோம். ஆனால், ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தப்பட்டதை ஒப்பிடுகையில், நாங்கள் அனுபவித்த மன அழுத்தம் அதிகமாக இருந்தது. செலவு அதிகமாக இருந்தாலும், மனதளவில் அதை ஏற்றுக்கொண்டதால் கான்ட்ராக்டே இரண்டில் சிறந்த வழி என்று நினைத்தோம்.
அதே போல நெருங்கிய உறவுகளும், நண்பர்களும் ஒவ்வொரு நாளும், குறிப்பிட்ட சில எதிர்பார்ப்புகளுடன், நீங்கள் விரும்பும் வண்ணம் நடக்க வேண்டும் என நீங்கள் நினைக்கும்போது, அது உங்களுக்கு மன அழுத்தத்தையும் கவலையையும் தருகிறது. சில நாட்கள் நன்றாக இருக்கும். ஆனால், மற்றவை நன்றாக இல்லாமல் போகலாம். எனவே, நீங்கள் எப்போதும் விளைவைப் பற்றிய மன அழுத்தத்துடனும், கவலையுடனும் இருக்கிறீர்கள். உங்கள் மகிழ்ச்சி அவர்களது செயல்களைப் பொறுத்து அமைந்துவிடுகிறது. எனவே, ஏன் மக்களை