Related to Vekkai
Related ebooks
Thi Janakiraman Sirukathaigal Rating: 5 out of 5 stars5/5Mouni Padaipugal Rating: 0 out of 5 stars0 ratingsThalaikeezh Vikithankal Rating: 0 out of 5 stars0 ratingsPulariyin Muthangal Rating: 0 out of 5 stars0 ratingsItharku Munbum Itharku Piragum Rating: 0 out of 5 stars0 ratingsPon Vilangu Rating: 0 out of 5 stars0 ratingsVisaranai Commission Rating: 3 out of 5 stars3/5Rajapudhana Ilavarasi Rating: 3 out of 5 stars3/5En Kathai Rating: 0 out of 5 stars0 ratingsOru Puliyamarathin Kathai Rating: 5 out of 5 stars5/5JJ Sila Kuripugal Rating: 0 out of 5 stars0 ratingsEzhuthin Kotpadu : Sujatha Rating: 5 out of 5 stars5/5Kathugal Rating: 0 out of 5 stars0 ratingsOru Ilakkiyavathiyin Kalaiulaga Anubavangal Rating: 4 out of 5 stars4/5Ainthum Moondrum Onpathu Rating: 1 out of 5 stars1/5Pandiya Nayagi Rating: 0 out of 5 stars0 ratingsSwarna Vetkai Rating: 0 out of 5 stars0 ratingsPaettai Rating: 0 out of 5 stars0 ratingsGopalla Gramam Rating: 1 out of 5 stars1/5Aboorva Manithargal Rating: 0 out of 5 stars0 ratingsVaadivaasal Rating: 4 out of 5 stars4/5Mathorubagan Rating: 5 out of 5 stars5/5Manalin Kathai Rating: 0 out of 5 stars0 ratingsSivappu Rikshaw Rating: 0 out of 5 stars0 ratingsPuyalilae Oru Thoni Rating: 3 out of 5 stars3/5Moga Mul Rating: 5 out of 5 stars5/5Thagappan Kodi Rating: 0 out of 5 stars0 ratingsEnna Mathiriyana Kaalathil Vazhgirom Rating: 0 out of 5 stars0 ratingsVandhiyathevan Vaal Rating: 4 out of 5 stars4/5Aaru Mani Nerangal Rating: 5 out of 5 stars5/5
Reviews for Vekkai
1 rating0 reviews
Book preview
Vekkai - Poomani
978-93-5244-158-7
ஆசிரியரின் பிற நூல்கள்
நாவல்
பிறகு (1979)
வெக்கை (1982)
நைவேத்யம் (1985)
வாய்க்கால் (1995)
வரப்புகள் (1995)
அஞ்ஞாடி . . . (2012)
சிறுகதை
வயிறுகள்
ரீதி
நல்லநாள்
நொறுங்கல்
பூமணி கதைகள்
கட்டுரை
ஏலேய்
திரைக்கதை - உரையாடல்
கருவேலம்பூக்கள்
மொழிபெயர்ப்பு
யானை (போலந்துக் கதைகள்)
விருது
திருவனந்தபுரம் தமிழ்ச் சங்கப் பரிசு (சிறுகதை)
இலக்கியச் சிந்தனைப் பரிசு (பிறகு - நாவல்)
சாந்தோம் விருது
பாரத ஸ்டேட் வங்கிப் பரிசு (வாய்க்கால் - நாவல்)
திருப்பூர்த் தமிழ்ச் சங்கப் பரிசு (வரப்புகள் - நாவல்)
விளக்கு விருது (அமெரிக்கா)
அக்னி விருது (நல்ல நாள் - சிறுகதை)
அமுதன் அடிகள் விருது
விஷ்ணுபுரம் விருது
கீதாஞ்சலி விருது (பிரான்ஸ்)
கொடூரமாகக் கொலையுண்ட
பொடியன்களுக்கு
முன்னுரை
கலைஞன் - பிரச்சாரகன்
தன் அண்ணனைக் கொன்ற வடக்கூரான் என்னும் செல்வாக்கு மிகுந்த மனிதனைக் கொன்று பழி தீர்த்த சிதம்பரம் என்னும் கரிசல்காட்டு எளிய விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த பதினைந்து வயதுச் சிறுவனைப் பற்றிய கதை 'வெக்கை.' வடக்கூரானைக் கொன்ற பிறகு தன் தந்தையுடன் எட்டு நாட்கள் குழந்தைப் பருவத்தின் விளையாட்டுகளோடு காடுகளில் தலைமறைவாக அலைந்து திரியும் சிதம்பரத்தின் நினைவுகளினூடாகக் கரிசல்காட்டு வாழ்வின் முரண்களைப் பற்றியும் பழியின் அரசியலைப் பற்றியும் ஆராய்கிறார் பூமணி. சிதம்பரம், அவனோடு தலைமறைவாக அலைந்து திரியும் அவனுடைய தந்தை ஆகிய இருவரைத் தவிர, வடக்கூரானால் கொல்லப்பட்ட சிதம்பரத்தின் அண்ணன், வடக்கூரான், மாமா, அத்தை, தாய், தங்கை, ஜின்னிங்பாக்டரி முதலாளி எனச் சொற்பமான சில பாத்திரங்களைக் கொண்டு பெரும்பாலும் உரையாடல்களால் நகர்ந்து செல்லும் இந்த நாவல் தன் வாழ்வாதாரங்களையும் கௌரவத்தையும் காப்பாற்றிக் கொள்ள முற்படும் எளிய மனிதர்களின் மூர்க்கமான போராட்டத்தைக் குறியீடாகக்கொண்டு வர்க்கப் போராட்டத்தின் அரசியல், அறம் ஆகியவை குறித்து விவாதிக்கிறது. சட்டம், காவல் துறை, நீதிமன்றங்கள் ஆகிய அரசின் முக்கிய உறுப்புகளின் செயல்பாடுகள், சார்புகள் குறித்து மேற்குறிப்பிட்ட எளிய மனிதர்களின் பார்வையில் முன் வைக்கப்படும் விமர்சனங்கள் இந்த நாவலைத் திட்டவட்டமான அரசியல் நாவலாகக் கருத வைக்கின்றன. அரசியல் நாவல்களின் அடிப்படைகளான சார்புத்தன்மையும் பிரச்சாரத் தன்மையும் வாசிப்பனுவத்திற்குப் பெரும் தடை. ஆனால் பூமணியின் நாவல் கலையின் நுட்பங்களைத் தக்க வைத்துக்கொள்வதிலும், சார்புகளுக்கப்பால் வாழ்வின் உண்மையைக் கண்டடைவதிலும் பெரும் வெற்றிபெற்றிருக்கிறது. சிதம்பரம் என்னும் சிறுவனின் பழி தீர்க்கும் ஆவேசத்தையும், குழந்தைமையின் குதூகலமான உலகையும் எதிரெதிராக நிறுத்தி பூமணி எழுப்பும் கேள்விகள் வலுவான அரசியல் விவாதங்களை உள்ளடக்கிய இந்த நாவலை ஒரு கலைப்படைப்பாக்குவதற்குத் துணை புரிந்திருக்கின்றன.
பூமணி பிரச்சாரகரல்ல. கலைக்கும் பிரச்சாரத்திற்கும் இடையேயான வேறுபாடுகளின் நுட்பங்களை அறிந்தவை அவரது படைப்புகள். பூமணியின் படைப்புச் செயல்பாடுகளை மொத்தமாக ஆராய முற்படும் யாராலும் அவரை ஒரு பிரச்சாரகராகக் கருதவும் முடியாது. ஒரு கலைஞனாக அவர் முன்வைக்கும் வாழ்க்கை முழுவதுமே அனுபவங்களால் செறிவூட்டப்பட்டது. கரிசல் இலக்கியத்தின் முன்னோடிகளில் ஒருவரான பூமணி தன் முதல் நாவலில் கரிசல் வாழ்வின் பல்வேறு கூறுகளைத் திட்டவட்டமான அடையாளங்களுடன் முன்வைத்திருந்தார். தமிழின் முதல் தலித் நாவல் எனக் கொண்டாடப்பட்ட அந்த நாவலின் அனைத்துப் பாத்திரங்களும் அவற்றுக்குரிய சாதிய அடையாளங்களுடன் படைக்கப்பட்டிருந்தபோதும் பூமணி சாதியம் குறித்த அரசியல் முடிவுகளை அந்த நாவலில் திணிக்கவில்லை. வாழ்வின் போக்குகளில் குறுக்கிடாமலும், மனிதர்களின் இயல்புகளைக் குலைக்காமலும் அதன் பயணத்தைத் தீவிரமான அரசியல் பிரக்ஞையோடு ஆராய்ந்திருந்தார். வாழ்வைப் பற்றிய பூமணியின் அக்கறைகள் கலை சார்ந்தவை. ஆனால் வாழ்வு முன்வைக்கும் உண்மைகளைப் பூமணியின் கலை ஒருபோதும் மறுப்பதில்லை. வாழ்வின் உருக்குலைவுகளிலிருந்து அதன் மீதான நம்பிக்கையை மீட்டெடுக்கும் கலை நுட்பம் கொண்டவை அவரது படைப்புகள்.
1970களில் தமிழின் முக்கியமான சிறுகதைக் கலைஞர்களுள் ஒருவராக அறிமுகமான பூமணி தன் காலத்தின்மீது தீவிரமான அக்கறை கொண்டவர். இந்த அக்கறைதான் அவரது அரசியல் என்றுகூடச் சொல்லலாம். கரிசல் வாழ்வின் முரண்களைப் பதற்றம் இல்லாமல் பரிசீலிக்கும் முனைப்பு கொண்ட பூமணியின் படைப்புகள் அவரின் சமகாலக் கரிசல் எழுத்தாளர்களின் படைப்புகளிலிருந்து முற்றாக வேறுபட்டிருந்தன. கரித் துண்டுகளைப் போன்ற மிக எளிய சொற்களைக் கொண்டு மிகவும் திடமான கோட்டுச் சித்திரங்களை உருவாக்கியவர் அவர். தன் பாத்திரங்களை மிக அமைதியாகப் பின்தொடர்பவர். அவற்றின் இயல்புகளைக் குலைக்கும் எந்தவொரு சிறு சத்தத்தையும் அவர் எழுப்புவதில்லை. அவற்றின் அசைவுகளில் அவர் எந்தக் குறுக்கீட்டையும் நிகழ்த்த விரும்புவதுமில்லை. தம் வாழ்வை எதிர்கொள்வதற்கு அவை அவரிடமிருந்து எந்த ஆலோசனையையும் கோருவதில்லை. அவை தாமே முடிவெடுக்கின்றன. தாமே போராடுகின்றன. தம் விதியைத் தாமே தேர்வு செய்கின்றன. பூமணி தொலைவிலேயே நின்றுவிடுகிறார். சில தருணங்களில் அவர் புன்னகைக்கிறார். சில தருணங்களில் பெருமூச்சுவிடுகிறார்.
அவரது சமகால எழுத்தாளர்களில் ஒருவரான பா. செயப்பிரகாசம் கரிசல் காட்டின் துயரார்ந்த வாழ்வைக் கவித்துவம் ததும்பும் சொற்களால் காட்சிப்படுத்த முற்பட்டிருந்தபோது பூமணி அதே கரிசல் வாழ்வைப் பற்றிச் சொல்வதற்கு மிக எளிய சொற்களைத் தேர்ந்தெடுத்தார். கரிசல் வாழ்வின் சகல கூறுகளையும் உள்வாங்கிக்கொண்ட இவ்விரு எழுத்தாளர்களும் ஒன்றுபடும் புள்ளியும் விலகும் புள்ளியும் கலைஞனும் பிரச்சாரகனும் சந்தித்து விலகும் புள்ளிகள் எனக் கொள்ளலாம். பா. செயப்பிரகாசம் படைப்புச் செயல்பாட்டை அரசியல் செயல் பாட்டின் ஒரு பகுதியாகக் கருதினார். அவரது பிந்தைய கால கட்டத்துக் கதைகளில் நேரடியான அரசியல் விவாதங்கள் இடம் பெற்றிருந்தன. தீவிரமான அரசியல் பிரக்ஞைகொண்டவர் பூமணி. ஆனால் கரிசல் வாழ்வைத் தன் அரசியல் புரிதல்கள் சார்ந்து அவர் ஒருபோதும் விளக்க முற்பட்டதில்லை. தன் படைப்புகளின் வழியே வர்க்க எதிரிகளையும் நண்பர்களையும் மூர்க்கமாக அடையாளம் காட்டும் முனைப்பு அவருக்கு இருந்ததில்லை. அவரது சம காலத்துப் புரட்சிகர எழுத்தாளர்களில் பலரையும் போல அவர் தீர்வுகளை முன்மொழியவுமில்லை.
1970கள் தமிழ் நவீன இலக்கியத்தின் மிக முக்கியமான காலகட்டம். அந்தக் கட்டத்தைப் போல வேறெந்தக் கட்டத்திலும் மரபுகள் கேள்விக்குட்படுத்தப்பட்டதில்லை. நம்பிக்கைகள் சிதறடிக்கப்பட்டதில்லை. ஒழுக்கம் சார்ந்த நியதிகள் துணிச்சலாக மீறப்பட்டதில்லை. இலக்கியம் உண்மையிலேயே ஒரு செயல்பாடாக மாறத் தொடங்கியிருந்த கட்டம் அது. நக்சல்பாரி எழுச்சி தமிழ் இலக்கிய உலகைத் தீவிரமாகப் பாதித்திருந்த அந்தக் கட்டத்தில் முற்போக்கு இலக்கியத்தின் முகம் அடியோடு மாறத் தொடங்கியது. அடித்தட்டு மக்களின் மிகப் பலவீனமான குரலாக விளிம்பில் கிடந்த முற்போக்கு இலக்கியத்தை மையத்திற்குக் கொண்டுவருவதில் எழுபதுகளில் அறிமுகமான இளந் தலைமுறை சிறுகதைக் கலைஞர்கள் வெற்றிபெற்றிருந்தனர். ஏற்கெனவே தமிழில் முக்கியத்துவம் பெறத்தொடங்கியிருந்த வட்டார வழக்கு இலக்கியத்தின் அடையாளத்தை அவர்கள் புரட்சிகரமானதாக மாற்றத் தொடங்கியிருந்தனர்.
விவசாயச் சமூகத்தின் விடுதலையை முன்னிறுத்தி உருவான நக்சல்பாரி எழுச்சியால் ஊக்கம்பெற்ற அந்த இளந்தலைமுறை, படைப்புச் செயல்பாடுகளை மிகச் சுதந்திரமாக மேற்கொள்வதற்கு ஏதுவாக அப்போதிருந்த சிற்றிதழ்ச் சூழல் இருந்தது என்பதையும் இங்கு குறிப்பிட வேண்டும். சிற்றிதழ்களில் பல சென்னைக்கு வெளியே, சிறு நகரங்களை மையப்படுத்தி, இலக்கிய அக்கறை கொண்ட சிறிய குழுக்களால் கொண்டுவரப்பட்டன. தாமரை, செம்மலர் போன்ற அதிகாரபூர்வமான முற்போக்கு இதழ்கள் தவிர விழிகள், தேடல், சதங்கை, மன ஓசை, சுவடு, நீலக்குயில், வாசகன், கண்ணதாசன், சிகரம், விழிப்பு என மிகச் சிறிய வட்டங்களிலிருந்து குறைந்த எண்ணிக்கையில் அச்சிடப்பட்டு வெளிவந்துகொண்டிருந்த மேற்குறிப்பிட்ட சிற்றிதழ்கள்தாம் இந்தப் புதிய தலைமுறை எழுத்தாளர்களுக்குக் களம் அமைத்துத் தந்தன. இந்தச் சுதந்திரத்தைப் பயன்படுத்திக்கொண்டு அவர்கள் ஏற்கெனவே கவனம்பெறத் தொடங்கியிருந்த கரிசல் இலக்கியத்தின் உள்ளடக்கத்தை அடியோடு மாற்ற முற்பட்டார்கள். விவசாயச் சமூகம் பற்றிய அதுவரையிலான அறிவுலக அக்கறைகள் தொன்மம், பண்பாடு ஆகிய எல்லைகளைத் தாண்டி விரிவடைந்திருக்கவில்லை. வட்டார வழக்கு என்பது நகரம்சார்ந்த வாசகனின் மேட்டிமைத்தனத்துக்குத் தீனிபோடும் ஒன்றாக இருந்து வந்த சூழலில் அவர்கள் கிராமங்களை அவற்றின் அரசியல், சமூகப் பொருளாதாரப் பின்புலங்களோடு பேசத் தொடங்கினார்கள். கிராம வாழ்வு தமிழ்ப் பண்பாட்டின் உறைவிடமாகப் புகழப் பட்டுக்கொண்டிருந்த தருணத்தில் அவர்கள் தம் படைப்புகளின் மூலம் அவற்றில் குறுக்கீடுகளை நிகழ்த்தினார்கள். பண்பாடு பற்றிய மரபான பெருமிதங்களில் விரிசல்களை உருவாக்கிய அவ்வுரையாடல்கள் அதுவரை இல்லாத அளவுக்கு வெளிப்படை யானவையாகவும் கூச்சநாச்சமற்றவை
யாகவும் இருந்தன. ஏலேய் சக்கிலித் தாயிளி, மாடு பாருடா படப்புல மேயிறத
என்னும் 'பிறகு' நாவலின் தொடக்கவரி இதற்கு உதாரணம்.
விவசாயச் சமூகத்தின் ஆதாரங்களாக விளங்கும் சாதிய மேலாதிக்கம், நிலவுடைமை சார்ந்த வன்முறைகள், சுரண்டல், ஆகியவை குறித்துத் திட்டவட்டமான அரசியல் பார்வையுடன் அவர்கள் முன்வைத்த சித்திரங்கள் தமிழ் அறிவுலகத்தின் சிந்திக்கும் போக்கையே மாற்றியமைப்பதற்குக் காரணமாக விளங்கின. பூமணி, பா. செயப்பிரகாசம் தவிர மு. சுயம்புலிங்கம், வீர. வேலுசாமி, அ. முத்தானந்தம், மேலாண்மை பொன்னுசாமி முதலான கரிசல்காட்டு எழுத்தாளர்கள் தமிழ் இலக்கியத்தைப் பீடித்திருந்த பாசாங்குகளிலிருந்து அதை மீட்டெடுக்க முற்பட்டார்கள். வேறொரு தளத்தில் புதுமைப்பித்தன், ஜெயகாந்தன், சுந்தர ராமசாமி, தி. ஜானகிராமன், ஜி. நாகராஜன் முதலான முன்னோடிகள் ஏற்கெனவே இதைச் செய்திருந்தார்கள்.
கரிசல் எழுத்தாளர்களிடம் தென்பட்ட திட்டவட்டமான அரசியல் பிரக்ஞை அவர்களை மேற்குறிப்பிட்ட முன்னோடிகளிடமிருந்து முற்றாக வேறுபடுத்தியது. இவர்களில் சிலர் பின்னாட்களில் தாம் சார்ந்திருந்த அரசியல் குழுக்களின் பிரச்சாரகர்களாகப் மாறினார்கள். பூமணி தன்னை ஒரு கலைஞனாக முன்னிறுத்திக் கொண்டார். அரசியல் பிரக்ஞை அவரது படைப்புப் பார்வையை ஒருபோதும் ஊனப்படுத்தியதில்லை. படைப்பு மொழி பற்றிய பரிசோதனைகளைத் தொடர்ந்து நிகழ்த்திக்கொண்டே இருப்பவர் பூமணி. மொழியின் சாத்தியங்களையும் நுட்பங்களையும் அறிவதில் அவர் தீராத வேட்கை கொண்டவர். முன்பொரு நாள் கேப்பைக் களத்தில் கதை சொன்ன சுடலை
யின் மொழி அது. பூமணி அந்த மொழியைக் கூர்மைப்படுத்திக்கொண்டே போனார். 'வயிறுகள்', 'ரீதி' ஆகிய அவரது முதல் இரண்டு சிறுகதைத் தொகுப்புகள் மூலம் அவர் அந்த மொழியின் எல்லாச் சாத்தியங்களையும் ஆராய்ந்திருக்கிறார்.
'பொறுப்பு' சிறுகதையை இத்தகைய அரசியல் பிரக்ஞை கொண்ட கதைக்கு உதாரணமாகச் சொல்ல முடியும். கரிசல் காட்டுக் கிராமமொன்றின் தொடக்கப்பள்ளி ஆசிரியருக்குத் தேசியக்கொடியில் காவி நிறம் மேலேயா, கீழேயா என்ற குழப்பம் வந்துவிடும். சுதந்திரம் என்னும் கருத்தியலை, அதன் அபத்தத்தைப் பற்றிய கூர்மையான கிண்டல் இழையோடும் அந்தக் கதை உலக அளவிலான சிறந்த அரசியல் கதைகளுள் ஒன்று. (அவருக்கு முன்னத்தி ஏர் பிடித்த கி. ராஜநாராயணனின் 'வேட்டி' இந்த வகையில் குறிப்பிடப்பட வேண்டிய சிறுகதை). பூமணியின் முதல் நாவலான 'பிறகு' கரிசல் கிராமமொன்றின் சுதந்திரத்திற்குப் பிந்தைய கால்நூற்றாண்டுக் கால வாழ்க்கையைப் பற்றிய நாவல். தமிழின் இலக்கியச் சாதனைகளில் ஒன்றாகக் கருதத்தக்க 'பிறகு' சுதந்திரத்தின் தோல்வியை மிக மிருதுவான சொற்களால் விமர்சித்தது.
'வெக்கை' நேரடியான ஓர் அரசியல் பிரதி. அதே சமயத்தில் அது ஒரு கலைப்படைப்பு.
பூமணியின் பாத்திரங்கள் அரசியலின் எல்லைகளைவிட்டு வெகுதூரம் விலகியிருப்பவை. மையநீரோட்ட அரசியலால் புறக்கணிக்கப்பட்டவர்கள், அதன் விளிம்புகளில் அடையாளமற்றவர்களாகத் திரிந்துகொண்டிருப்பவர்கள். அரசு ஒரு கருத்துருவமாக வெகுதொலைவிலிருந்து அவர்களை இயக்குகிறது. தங்களைச் சூழும் துயரங்களுக்கு யாரைக் குற்றம் சுமத்துவதென்றுகூட அவர்களுக்குத் தெரிவதில்லை. ஆனால் அரசு என்ற கருத்துருவம் எப்போதும் அவர்களைக் கண்காணிக்கிறது, கட்டுப்படுத்துகிறது, துரத்துகிறது, குற்றம்சுமத்துகிறது, தண்டிக்கிறது.
'வெக்கை' அரசு என்பதைத் திட்டவட்டமாகவும் திடமாகவும் முன்வைக்கிறது. அண்ணனைக் கொன்றவனைப் பழி தீர்ப்பது என்னும் எளிமையான கதைத் திட்டத்தினூடாக அரசு, அதன் சட்டம், நீதி, அதன் ஆயுந்தாங்கிய அமைப்புகள், அவற்றின் சார்புகள் ஆகியவற்றைப் பற்றிய மிக நுட்பமான உரையாடல்களுடன் நகர்ந்து செல்கிறது. அண்ணன் கொல்லப்படுவதற்கான காரணங்கள், பால்யத்தின் கனவுகளோடும் விளையாட்டுகளோடும் அண்ணனோடும் ஆடுகளோடும் நாயோடும் கரிசல்காட்டின் உலர்ந்த சருகுகளுக்குள் அலைந்து திரியும் சிதம்பரம் என்னும் சிறுவனின் பழி தீர்க்கும் உணர்வு, அதற்கான திட்டமிடல், அதை நடைமுறைப்படுத்துவதற்கு மேற்கொள்ளும் பிரயத்தனங்கள், கொலை, தலைமறைவு வாழ்க்கை என்னும் சிறுசிறு இழைகளால் பின்னப்பட்ட இந்த நாவல் கொலையின் அரசியலை, பழியின் அரசியலை, அதன் சரிதவறுகளை ஆராய்கிறது. வடக்கூரான், ஜின்னிங்பாக்டரி முதலாளி ஆகிய இருவரைத் தவிர அநேகமாக நாவலின் எல்லாப் பாத்திரங்களுமே பரிவுடன் உருவாக்கப்பட்டவர்கள். கொலையின் அரசியலைப் போல எளிமையானதல்ல பழியின் அரசியல். பழி ஒரு எதிர்வினை. அது ஓர் அறம். அது தவிர்க்க முடியாத, வலி மிகுந்த பயணம். சிதம்பரம், அவனது அய்யா, அம்மா, மாமா, அத்தை என எல்லோருக்குள்ளும் நிரம்பித் ததும்பிக் கொண்டிருக்கிறது பழி. சிதம்பரம் முந்திக்கொள்கிறான். இன்னும் பொன்வண்டுகளை மறக்க முடியாத, பூவரச இலையைக்கொண்டு ஊதல் செய்து விளையாடுவதைக் கைவிட முடியாத, கிளித்தட்டு விளையாடும் அந்தச் சிறுவனின் முன்னால் மற்றவர்கள் குற்ற உணர்வுடன் அலைகிறார்கள். மடியில் வெடிகுண்டுகளைக் கட்டிக் கொண்டு அரிவாளுடன் காடுகளுக்குள் அலைந்து திரியும் அந்தச் சிறுவனே பூமணியின் அக்கறைக்குரியவன். அவனை முன் வைத்தே பூமணி கேள்விகள் எழுப்புகிறார். போர்க்களத்தில் சிறார்களையும் பெண்களையும் முன்னிறுத்தும் போக்கு பெருகிக் கொண்டிருக்கும் நம் சூழலில் பூமணியின் கேள்விகள் கூடுதல் அர்த்தம் கொள்கின்றன.
நக்சல்பாரி எழுச்சிக்குப் பிறகு மார்க்சிய - லெனினியக் குழுக்களிடையே வர்க்க எதிரியை அழித்தொழித்தல் என்பது பற்றிய உரையாடல்கள் தீவிரம் பெற்றிருந்த