Venuvanavaasam
By Suka
()
About this ebook
ஆறு கட்டுரைகளும், ஆறு சிறுகதைகளும் அடங்கிய தொகுப்பு, வேணுவனவாசம். இணையத்தில் இப்போது புத்தகமாக வெளிவருகிற வேணுவனவாசத்தில் இடம்பெற்றுள்ள கட்டுரைகளும், சிறுகதைகளும் வெவ்வேறுகால இடைவெளியில் எழுதியவை. ஒரு கட்டுரைத் தொகுப்பாகவோ, சிறுகதைத் தொகுப்பாகவோ தனித்தனியாக இல்லாமல் இப்படி ‘ரெண்டும்கெட்டானாக’ இந்தப் புத்தகத்தை வெளியிடுவதற்குக் காரணம் இல்லாமலில்லை. பொதுவாகவே நான் எழுதுகிற கட்டுரைகளில் ஒரு புனைவுத்தன்மை இருப்பதாகப் பலரும் சொல்லியிருக்கிறார்கள். இன்னும் சிலர் நான் எழுதுகிற கட்டுரைகளுக்கும், சிறுகதைகளுக்கும் வித்தியாசம் தெரிவதில்லை என்று சொல்லியிருக்கிறார்கள். இந்தத் தொகுப்பில் கட்டுரை என்கிற பேரில் சில கதைகளும், சிறுகதை வேஷத்தில் சில கட்டுரைகளும் ஒளிந்திருக்கின்றன. அதைக் கண்டுபிடிக்கும் பொறுப்பை வாசகர்களிடம் ஒப்படைத்து விட்டு நான் விலகி நின்று வேடிக்கை பார்க்க உத்தேசம். இந்த விளையாட்டு நிச்சயம் நல்லதொரு வாசக அனுபவத்தைத் தரும் என்பதை மட்டும் என்னால் உறுதியாகச் சொல்ல முடியும். ஏனென்றால் எனது எழுத்துகளை முதலில் படிப்பவன், நான்தான். அவை என்னை ஏமாற்றியதில்லை.
‘வேணுவனவாசம்’ புத்தகத்தை இணையத்தில் வெளியிடும் ‘புஸ்தகா’ நிறுவனத்துக்கு என் நன்றிகள்.
சுகா
25 ஜூன் 2020
சென்னை-93
Read more from Suka
Upasaram Rating: 5 out of 5 stars5/5Thaayar Sannathi Rating: 0 out of 5 stars0 ratings
Related to Venuvanavaasam
Related ebooks
Panuval Pottruthum Rating: 0 out of 5 stars0 ratingsRangoon Periyappa Rating: 0 out of 5 stars0 ratingsAppavin Radio Rating: 0 out of 5 stars0 ratingsEnge En Kannan Rating: 0 out of 5 stars0 ratingsNappaasai Rating: 0 out of 5 stars0 ratingsRaasi Rating: 5 out of 5 stars5/5Kaaranamilla Kaariyangal Rating: 0 out of 5 stars0 ratingsKan Ketta Pin Rating: 0 out of 5 stars0 ratingsBhoomikku Kidaitha Puthayal Rating: 0 out of 5 stars0 ratingsSila Nerangalil Sila Anubavangal Part 3 Rating: 0 out of 5 stars0 ratingsNathiyin Pizhaiyandru Narumpunal Inmai Rating: 0 out of 5 stars0 ratingsSathuranga Kuthirai Rating: 0 out of 5 stars0 ratingsManaamiyangal Rating: 0 out of 5 stars0 ratingsSaagasa Mohini Rating: 2 out of 5 stars2/5Abitha Rating: 0 out of 5 stars0 ratingsArumugasamiyin Adugal Rating: 0 out of 5 stars0 ratingsPeriya Puranathil Pengal Or Aaivu Rating: 0 out of 5 stars0 ratingsNithilavalli Rating: 0 out of 5 stars0 ratingsHara Hara Sankara…. Rating: 0 out of 5 stars0 ratingsEzhavathu Kaadhal Rating: 0 out of 5 stars0 ratingsMercury Pookkal Rating: 0 out of 5 stars0 ratingsEnbilathanai Veyil Kayum Rating: 0 out of 5 stars0 ratingsKamba Ramayanam - Kishkindha Kandam Rating: 4 out of 5 stars4/5Kathugal Rating: 0 out of 5 stars0 ratingsMouname Kaadhalaga... Rating: 0 out of 5 stars0 ratingsBakkiyam Ramasamyin Nagaichuvai Kathaigal Rating: 0 out of 5 stars0 ratingsKi. Ra. 85 – Kaalathai Vendra Kathai Solli Rating: 0 out of 5 stars0 ratingsBuddha Jathaga Kathaigal Rating: 0 out of 5 stars0 ratingsMakkal Nenjil M.G.R Rating: 1 out of 5 stars1/5Pallavan Pandiyan Baskaran Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Venuvanavaasam
0 ratings0 reviews
Book preview
Venuvanavaasam - Suka
http://www.pustaka.co.in
வேணுவனவாசம்
Venuvanavaasam
Author:
சுகா
Suka
For more books
http://www.pustaka.co.in/home/author/suka
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
முன்னுரை
கட்டுரைகள்
காப்பிக்கடை
ரஹ்மான் என்ற ராஜசேகர்
விளி...
வாசக உறவுகள்...
திருநவேலி இன்று...
கிரிவலம்
கதைகள்
சஞ்சீவி மாமாவும் ஸ்மிதா பட்டீலும்
கன்னி
உள்காய்ச்சல்
ராயல் டாக்கீஸ்
பழைய பாடல்
பரமேஸ்வரி அத்தையின் மகள்
சமர்ப்பணம்
வண்ண நிலவனுக்கு...
முன்னுரை
எழுதுவதற்கு ஏதோ ஒன்று நம்மைத் தூண்ட வேண்டியிருக்கிறது. அந்த 'ஏதோ ஒன்று' என்னைப் பொருத்தவரை நண்பர்களாகவே இருக்கின்றனர். அவர்களில் சிலர் பத்திரி்கை நடத்துபவர்கள் அல்லது பத்திரி்கையில் பணிபுரிபவர்கள். இவர்கள் தூண்டாமல், கேட்காமல் நானாக எழுதுவது என்பது அபூர்வம். அதனால்தான் எழுதத் துவங்கிய இந்தப் பத்தாண்டுகளில் இதுவரை நான்கு புத்தகங்களே வெளிவந்துள்ளன. அவை அனைத்துமே கட்டுரைத் தொகுப்புகள். இலக்கியம் அறிந்தோர் நான் எழுதும் கட்டுரைகளை நடைச்சித்திரங்கள் என்று சொல்கின்றனர். அதில் புனைவுக்குரிய அம்சங்கள் இருப்பதாலும், அதன் சுவாரஸ்யமும் சேர்ந்து அவற்றை நடைச்சித்திரங்கள் ஆக்குவதாகவும் சொல்லிக் கேட்டிருக்கிறேன். எனக்கு அவர்கள் சொல்வதைப் பற்றியெல்லாம் ஒரு புண்ணாக்கும் தெரியாததால் மகிழ்ச்சியாக இருக்கிறேன். நண்பர்கள் கேட்கும்போது, முன்பே சொன்னது போல, நானாக அபூர்வமாக எழுதும்போது எதைப் பற்றியும் யோசிக்காமல் தோன்றுவதை மனம் போன போக்கில் எழுதுகிறேன். நான் எழுதுவது அநேகருக்குப் பிடித்திருப்பதாகவும் அறிகிறேன்.
இதில் இடம் பெற்றுள்ள சிறுகதைகளில் 'ராயல் டாக்கீஸ்' சிறுகதை 'விருட்சம்' விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டது. அந்தக் கதையும், அதன் முடிவும் படிக்கும்போதே வலியைத் தந்ததாகச் சொல்லப்பட்டது. எழுதுபவனுக்கு எழுதுவது எல்லாமே பிடித்தவைதான். பிடிக்காமல் எதையும் அவனால் எழுத முடியாது. ஆனால் ஒன்றிரண்டு அவனது மனதுக்கு நெருக்கமாக அமைந்து விடும். அப்படி என் மனதுக்கு நெருக்கமாக அமைந்த 'பரமேஸ்வரி அத்தையின் மகள்' சிறுகதை, இந்தத் தொகுப்பில் இடம் பெற்றுள்ளது. அந்தச் சிறுகதைக்கு என்னை வந்து சேர்ந்த எதிர்வினைகள் பெரும்பாலும் ஒரே மாதிரியாக இருந்தன. 'என்னுடைய கதையைத்தான் நீங்கள் எழுதி விட்டீர்கள், நீங்கள் எழுதியது என்னுடைய நெருங்கிய தோழியின் கதை, என் சகோதரியின் கதை உங்களுக்கு எப்படி தெரியும்?'... இதன் உச்சமாக, நான் மதிக்கும் ஒரு மூத்த மனிதர் அந்தக் கதையைப் படித்துவிட்டு என்னிடம் சொன்னதை மறக்க இயலாது. 'உன் கதைல வர்ற அந்த ஆளு நான்தான்' என்றார். விசித்திரமான ஆணின் மனம் பொதுவானதுதான் என்பதை அவரது சொற்களிலிருந்து நான் உறுதி செய்துகொண்டேன். 'பரமேஸ்வரி அத்தையின் மகள்' கதையில் வருகிற சந்தக்கா, ஒருத்தியல்ல. வாழ்வில் நான் சந்தித்த எத்தனையோ அக்காக்கள், அத்தைகள், மதினிகள், சித்திகள், பெரியம்மைகள். அவர்கள் அனைவரின் முகங்களும் சந்தக்காவில் ஒளிந்திருக்கின்றன. நியாயமாகப் பார்த்தால் இந்தத் தொகுப்பின் தலைப்பையே 'பரமேஸ்வரி அத்தையின் மகள்' என்றுதான் வைத்திருக்க வேண்டும். எந்தையும், தாயுமான திருநவேலியின் ஆதி பெயர் வேணுவனம். எனது வலைத்தளத்தின் பெயரும் அதுவே. 'பரமேஸ்வரி அத்தையின் மகள்' உட்பட்ட இதிலுள்ள சிறுகதைகள், கட்டுரைகள் வேணுவனத்தைச் சுற்றி நடப்பவை. அதனால் இந்தப் புத்தகத்தின் தலைப்பு, 'வேணுவனவாசம்'.
இதன் உருவாக்கத்துக்காக இதிலுள்ள சிறுகதைகளையும், கட்டுரைகளையும் படித்துப் பார்த்தபோது ஒரு வாசகனாக எனக்கு அது சுவாரஸ்யமான வாசிப்பனுபவத்தையே தந்தது. உங்களுக்கும் அதே அனுபவம் கிட்டும் என்று நம்புகிறேன்.
இந்தப் புத்தகத்தின் அட்டையில் அமரர் இசக்கி அண்ணாச்சி எடுத்த புகைப்படம் இடம் பெற்றுள்ளது. அவரது புகைப்படங்களை நான்கைந்து வருடங்களுக்கு முன்பே அவரது புதல்வர் அருண் மனமுவந்து எனக்கு வழங்கியிருந்தார். அவருக்கு இந்த சமயத்தில் நன்றி சொல்வது, இசக்கி அண்ணாச்சிக்கே நன்றி சொல்வது போல. 'வேணுவனவாச'த்தின் அட்டை வடிவமைப்பை ரசனையுடன் அமைத்துத் தந்தவன் என் பள்ளித்தோழன் தங்கதுரை. அவன் பெயரை நான் இங்கு சொல்ல வேண்டும். ஆனால் அவனுக்கு நன்றியெல்லாம் சொல்லப் போவதில்லை. இந்தத் தொகுப்பில் இடம் பெற்றுள்ள சிறுகதைகள், மற்றும் கட்டுரைகளைத் தமது பத்திரி்கைகளில் வெளியிட்ட ஆனந்த விகடன், குமுதம், வலம், அந்திமழை இதழ்களுக்கும், அதன் ஆசிரியர் குழுவுக்கும், 'வேணுவனவாசம்' புத்தகத்தை வெளியிடும் பதிப்பகத்தின் நண்பர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
சுகா
கட்டுரைகள்
காப்பிக்கடை
கோடை விடுமுறை காலங்களில் அம்மாவின் சொந்த ஊரான ஆழ்வார்குறிச்சிக்குப் போகும் போதெல்லாம், சாயங்காலக் காப்பி நேரத்தில் வாழையிலையில் சுற்றி சுடச் சுட பஜ்ஜி வாங்கி வருவார், தாத்தா. நான்கைந்து தினத்தந்தித் தாள்களை எண்ணெய்க்காக ஒற்றியெடுக்கத் தேவையில்லாத பஜ்ஜி. பஜாரில் உள்ள சண்முகம் தாத்தாவின் கடை பஜ்ஜியை அவர் எண்ணெய்ச் சட்டியில்தான் போட்டு எடுக்கிறாரா, இல்லை இட்லிக் கொப்பரையில் போட்டு அவித்துத் தருகிறாரா என்று சந்தேகமாக இருக்கும். சொட்டு எண்ணெய்யைப் பார்க்க முடியாத, சுவையான பஜ்ஜியும், தொட்டுக்கொள்ள ரெண்டு மிளகாய் கிள்ளிப் போட்டு அரைத்து, கடுகு உளுத்தம்பருப்பும், கறிவேப்பிலையும் போட்டுத் தாளித்த தேங்காய்ச் சட்னியும் கிடைக்கும். எப்போதாவது சண்முகம் தாத்தாவின் காப்பிக் கடைக்கும் செல்வதுண்டு.
'பேரப்பிள்ள திருநோலில பெரிய கிளப்லல்லாம் சாப்பிட்டிருப்பேரு! இங்கே தாத்தா கடைல காத்தாடி கூட கெடயாதவே!'
சண்முகம் தாத்தா சொல்லுவார். அவரது காப்பிக் கடையில் வெறும் காப்பி மட்டுமில்லாமல் பலகாரங்களும் கிடைக்கும். ஆனாலும் அது காப்பிக்கடைதான். அவர் சொன்னதுபோல திருநவேலியில் உள்ள ஹோட்டல்கள் அவரைப் பொருத்தவரைக்கும் கிளப்புக் கடைகள். பல சின்ன ஹோட்டல்களை ஹோட்டல்களாக அதை நடத்துபவர்களே நினைப்பதில்லைதான். திருநவேலி கீழப்புதுத் தெருவிலுள்ள ராமன் கடை முகப்பில் 'ராமன் டீ ஸ்டால்' என்றே போர்டு மாட்டப்பட்டிருக்கும். அங்கு காப்பி, டீ மட்டுமல்ல. இட்லி, தோசை, பூரி கிழங்கு உட்பட எல்லா டிஃபன் ஐட்டங்களும் கிடைக்கும். ஆனாலும் அது ராமன் டீ ஸ்டால்தான். கீழப்புதுத் தெரு, அம்மன் சன்னதி, கல்லத்தி முடுக்கு தெரு, சுவாமி சன்னதி மக்களுக்கு அது ராமன் கடை. கீழப்புதுத் தெருவிலேயே கண்ணன் மாமா நடத்துகிற காப்பிக் கடைக்குப் பெயர் 'ஐயர் கடை.'
திருநவேலி பகுதிகளில் சின்னச் சின்ன கிராமங்களில் நிறைய காப்பிக் கடைகள். பெரும்பாலும் சிறுநகரப் பகுதிகளில் இருக்கும் ஹோட்டல்களில் சாப்பிடாமல், பெயர்ப் பலகை இல்லாத கிராமத்துக் காப்பிக் கடைகளில் சாப்பிடுவது வழக்கம். ஒருமுறை ஸ்ரீவைகுண்டத் துக்கருகில் உள்ள சிவகளையில் ஓலைக்கூரை போட்ட காப்பிக் கடையில் மாலை வேளையில் நண்பர்களுடன் சென்றிருந்தேன். புகை படிந்த மர பெஞ்ச், மேசைகள். ஒரே ஒரு டேபிள் ஃபேன். கல்லாவில் அமர்ந்திருப்பவர், 'வாருங்க! என்ன சாப்பிடுதிய? காப்பியா, டீயா?' என்று கேட்டுவிட்டு, அவரே எழுந்து சென்று சின்னத் துண்டுகளாக நறுக்கிய வாழை இலைகளை மேசையில் விரித்து, 'தண்ணி தொளிச்சுக்கிடுங்க' என்றார். 'காப்பிதானே கேட்டோம்! எதுக்கு இலை?' என்று யோசிப்பதற்குள், ஒரு பெரிய தூக்குச் சட்டியிலிருந்து, எவர்சில்வர் கரண்டியில் பூந்தியை அள்ளி இலையில் வைத்தார். கூடவே ஒரு கரண்டி மிக்சர்.
'சாப்பிட்டுக்கிட்டிரிங்க. காப்பி போட்டு எடுத்துட்டு வாரேன்.'
'எல வெளங்குதா! சுவீட் காரம் காப்பி. மாமியா வீட்டுக்குப் போனாலும் நமக்கு இதெல்லாம் கெடைக்காது. போன ரெண்டாவது நாளே வெறும் கடுங்காப்பில்லா அரைமடக்கு தருவாளுவொ!' என்றான் சரவணன்.
எவர்சில்வர் வட்டகை தம்ளர்களில் நுரை பொங்க, சூடாக காப்பி வந்தது.
'சீனி காணுமா பாருங்கொ! இல்லென்னா இன்னும் ரெண்டு கரண்டி போடுதென்.'
மேல் சட்டையில்லாமல் வேட்டியை மடித்துக்