Sanga Ilakkiyathil Paazh Nila Payanam
By A. Selvaraju
()
About this ebook
Reviews for Sanga Ilakkiyathil Paazh Nila Payanam
0 ratings0 reviews
Book preview
Sanga Ilakkiyathil Paazh Nila Payanam - A. Selvaraju
http://www.pustaka.co.in
சங்க இலக்கியத்தில் பாழ் நிலப் பயணம்
Sanga Ilakkiyathil Paazh Nila Payanam
Author:
அ. செல்வராசு
A. Selvaraju
For more books
http://www.pustaka.co.in/home/author/a-selvaraju
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு. – 423
இரு முத்துக்களோடு என்னையும்
சொத்தாக நினைத்துக் காத்துவரும்
சகோதரிக்கு
***
நன்றிக்குரியோர்
தொல்காப்பிய உரையாசிரியர்கள் அகத்திணைக்குரிய உரைப் பகுதியில் ஒவ்வொரு நிலத்திற்கும் உரியோரை மக்கள் என்றும், தலைமக்கள் என்றும் பிரித்துக் காட்டியுள்ளனர். இப்பிரிப்பு முறை குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என்ற நான்கு திணைகளுக்கும் பொருந்துவதாக உள்ளது. ஆனால் இப்பிரிப்பு முறை பாலைத்திணைக்குப் பொருந்தவில்லை. இப்பொருத்தமின்மையை மையமிட்டு மேற்கொள்ளப் பெற்ற ஆய்வே இந்நூலாகும்.
வழக்கம்போல் நூலாக்கத்திற்குத் துணை நின்றவர் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகப் பேராசிரியர் இரா. அறவேந்தன் அவர்கள். என் பணியைத் தன் பணியாகக் கருதி உதவியவராவார்.
நூலை வடித்தெடுத்தவர் ஸ்ரீநிதி ஆப்செட் பிரிண்டர்ஸ் உரிமையாளர் திருமிகு செந்தாமரைக் கண்ணன் அவர்கள்.
இருவரும் என்றும் இதயத்தில்.
அ. செல்வராஜ்
உள்ளடக்கம்
முன்னுரை
1. பாலை நிலம் பற்றிய புரிதல்
2. பாலைப் பாடல்களில் ஆறலை கள்வர்
3. பாலைத் திணைப் பாடல்களில் தலைமக்கள்
4. பாலைத் திணையில் உடன்போக்கு
5. பாலைப் பாடல்களில் உப்பு வணிகர்
6. பாலைத் திணையில் பிரிவுப் பாடல்கள்
முடிவுரை
துணைநூற் பட்டியல்
பின்னிணைப்பு
முன்னுரை
சங்க இலக்கியத்தில் பிற திணைப் பாடல்களைக் காட்டிலும் பாலைத் திணைப் பாடல்களே மிகுதியாக உள்ளன. பாலை நிலம் எது என்று வரையறுப்பதில் முற்றும் முடிந்த கருத்து இன்னும் உருவாகவில்லை / உருவாக்கப் பெறவில்லை. பாலை எது என்பதற்குச் சிலப்பதிகாரத் தொடர்கள் மேற்கோள் காட்டப் பெறுதல் வழக்கம். இத்தொடர் தமிழ் மாணாக்கர்களிடம் பதிவாகியிருக்கும் அளவிற்குப் பாலைப் பாடல்கள் பற்றிய புரிதல் பதிவாகவில்லை. சங்க இலக்கியத்தில் பாலை நிலம், பாழ் நாடு என்றும், பாழ் நிலம் என்றும் பல்வேறு இடங்களில் குறிப்பிடப் பெற்றுள்ளது. இத்தொடர்கள் பாழ்பட்ட நிலம் என்றும், பாழ்படுத்தப்பட்ட நிலம் என்றும் இருபொருள் தருவனவாக உள்ளன. இதனடிப் படையில் பார்க்கும் பொழுது முல்லையும் குறிஞ்சியும் தம் இயல்பில் திரிந்த நிலம் மட்டு மல்லாமல் வேறு சில நிலப்பகுதிகளும் பாலை என அழைக்கப் பெற்றிருப்பதை அறிய முடிகின்றது.
தமிழக நில அமைப்பு முறையில் பாலை நிலம் கண்டுகொள்ளப் பெறாமல் விடப்பட்டுவிட்டதோ என்ற ஐயப்பாடு எழுகிறது. தமிழர்களுக்குரிய உடன்போக்கு, போர்மேற் செல்லுதல், பொருள்மேற் செல்லுதல் முதலியன பாலைத் திணையில் வைக்கப் பெற்றிருப்பினும் பிற திணைகளைப் போன்று இத்திணைக்கு நிலம் வரையறை செய்யாமல் சென்றிருப்பதும் இதற்குக் காரணமாக இருந்திருக்கலாம்.
பாலைத்திணைப் பாடல்களின் மீதான ஒரு புதிய தேடலே இவ்வாராய்ச்சியாகும். ஏறக்குறைய பாலைத் திணைப் பாடல்களின் பதிவுகள் யாவும் இங்குக் கவனத்தில் கொள்ளப் பெற்றுள்ளன.
பாலைப் பாடல்களில் அந்நிலம் பாழ்நிலம் என்றும், பாழ்நாடு என்றும் குறிப்பிடப் பெற்றிருப்பதாலும். பாலைப் பாடல்களில் உடன்போக்கு, போர், பொருள் உள்ளிட்ட மக்களது பயணங்களே சுட்டப் பெற்றிருப்பதாலும் இந்நூல் பாழ்நிலப் பயணம் எனப் பெயரிடப் பெற்றுள்ளது.
***
1
பாலை நிலம் பற்றிய புரிதல்
தொன்மை வாய்ந்த இலக்கணப் படைப்பாளரான தொல்காப்பியர், நிலத்தை நான்கு வகையாகப் பாகுபடுத்தியுள்ளார். முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல் என்பன தொல்காப்பியரின் நிலப்பாகுபாடாகும் (அகத்5), தொல்காப்பியரின் இப்பகுப்பில் பாலைக்கு இடமில்லை. பாலைக்கு நில வரையறை சுட்டப் பெறவில்லையே தவிர அந்நிலத்திற்குரிய பொழுதும், அந்நிலத்திற்குரிய உரிப்பொருளும் தொல்காப்பியரால் கூறப்பெற்றுள்ளன. தொல்காப்பியரின் இவ்வமைப்பு முறைக்கு வலுவான காரணம் ஏதேனும் இருந்திருக்க வேண்டும்.
தொல்காப்பியர் பாலைக்கென்று நிலம் வரையறுத்துச் சொல்லாததால் தமிழ்நாட்டில் பாலை நிலமே இல்லை என ஒரு சாரார் கருதுவர். இக்கருத்தை மற்றொரு சாரார் மறுத்துரைப்பர். பாலைக்கு நிலம் உண்டு என்போர் தொல்காப்பியத்தையும், சங்க இலக்கியத்தையும் தாண்டி, இளங்கோவடிகள் கருத்தைச் சான்றுகாட்டுவர்.
முல்லையும் குறிஞ்சியும் முறைமையில் திரிந்து
நல்லியல்பு இழந்து நடுங்கு துயருறுத்துப்
பாலை என்பதோர் படிவம் கொள்ளும்
என்பன சிலப்பதிகாரப் பாடலடிகளாகும்.
முல்லை நிலமும் குறிஞ்சி நிலமும் மழையின்மையால் திரிந்து தத்தமது இயல்பை இழந்து பாலையாக மாறும் என்பது மேற்கண்ட பாடலடிகளுக்குப் பொருளாகும். எனினும் இளங்கோவடிகளின் இக்கூற்றை நில இயல்பு கூறுவதாகக் கொள்வதைக் காட்டிலும் பருவ இயல்பு கூறுவதாகக் கொள்வதே பொருத்தமாகும் என்பர் பாண்டுரங்கன் (1986; 150-151). எவ்வாறாயினும் இன்றுவரை இளங்கோவடிகளின் பாடற் கருத்தே பாலை நிலத்திற்குரிய வரையறையாக எடுத்துக் காட்டப்பெற்று வருகிறது.
இளங்கோவடிகளின் பாடலடிகளோடு ஏறக்குறைய ஒத்துப் போகும் பாடலடிகளைச் சிறுபாணாற்றுப் படையில் காணமுடிகிறது. அப்பாடலடிகள் வருமாறு;
வேனி னின்ற வெம்பத வழிநாட்
காலை ஞாயிற்றுக் கதிர்கடா வுறுப்பப்
பாலை நின்ற பாலை நெடுவழி (9 - 11)
இத்தொடர்கள், ஞாயிற்றின் வெம்மையால் பாலை உருவானதைக் குறித்து நிற்கின்றன.
சிலப்பதிகாரம், சிறுபாணாற்றுப்படை ஆகிய இரு நூல்களும் பாலை நிலம் பற்றிய ஒரு பகுதியை மட்டுமே விளக்கியுள்ளன. இது மட்டுமின்றி வேறு சில தன்மை கொண்ட நிலப்பகுதிகளும் பாலை என அழைக்கப் பெற்றுள்ளன. இதனைச் சங்க இலக்கியங்கள் வழி நிறுவலாம். அவை பற்றிய புரிதலே இப்பகுதியாகும்.
சங்க இலக்கியத்தில் பிற திணைப் பாடல்களைக் காட்டிலும் பாலைத் திணைப் பாடல்களே மிகுதியாக உள்ளன. பாலைத்திணைக்குரியனவாக அகநானூற்றில் 200 பாடல்களும், நற்றிணையில் 102 பாடல்களும், குறுந்தொகையில் 90 பாடல்களும், ஐங்குறுநூற்றில் 100 பாடல்களும், பாலைக்கலியில் 35 பாடல்களும் என 527 பாடல்கள் உள்ளன. இப்பாடல்களில் இடம்பெற்றிருக்கும் கருத்துகளை அடிப்படையாகக் கொண்டு பாலை நிலத்தை