Maayak Kottai
()
About this ebook
Reviews for Maayak Kottai
0 ratings0 reviews
Book preview
Maayak Kottai - Gauthama Neelambaran
http://www.pustaka.co.in
மாயக் கோட்டை
Maaya kottai
Author:
கௌதம நீலாம்பரன்
Gowthama Neelambaran
For more books
http://www.pustaka.co.in/home/author/gauthama-neelambaran
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
முன்னுரை
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
அத்தியாயம் 16
அத்தியாயம் 17
அத்தியாயம் 18
அத்தியாயம் 19
அத்தியாயம் 20
அத்தியாயம் 21
அத்தியாயம் 22
அத்தியாயம் 23
அத்தியாயம் 24
முன்னுரை
சிறுவர் இலக்கியம் ஒரு தனிச் சிறப்புடையது. அது ராமாயண காவியமாக இருப்பினும் சரி. மஹாபாரத காவியமாயினும் சரி, அதைக் குழந்தைகளுக்குப் புரிகிற மாதிரி சொல்லுவது என்பது எளிதல்ல; அப்படிச் சொல்லும் போது, அது ஒரு தனி இலக்கிய அந்தஸ்தைப் பெற்றுவிடுகிறது.
ஆயிரம் கனவுகள் மலரும் வயது அது…
ஆயிரம் எண்ணங்கள் அரும்புகிற பருவம் அது;
ஆயிரம் சந்தேகங்கள் எழுந்து நிற்கிற பருவமும்கூட!
உலகம் முழுக்க உள்ள அனைத்தையும் அறிந்து கொண்டுவிடத் துடிப்பவர்கள் சிறுவர் - சிறுமியர் அவர்களுடைய கூர்த்த மதியும், கேள்விக்கணைகளும் கதை சொல்பவனைத் திக்கித் திணற அடித்துவிடும். இருப்பினும் நாம் அவர்களுக்கு சகலமும் புரிய வைக்கிற ஆர்வத்தோடுதான் இருக்கிறோம்.
தாத்தா, பாட்டிகளுக்கு என்றுமே குழந்தைகளுடன் உட்கார்ந்து கதை பேசுவது ரொம்பப் பிடித்த விஷயம். அப்படிச் சொல்கிற கதைகள் அமானுஷ்யமானவையாக, அதி பயங்கர – வீர சாகசம் மிக்கவையாக இருப்பின் குழந்தைகள் அடைகிற குதூகலமே தனி.
நான் எத்தனையோ வரலாற்று நவீனங்களை எழுதியிருக்கிறேன். பல்வேறு சமூகச் சிறுகதைகளையும் குறுநாவல்களையும் எழுதியிருக்கிறேன். அப்போதெல்லாம் இல்லாத ஒருவித உற்சாகம், சிறுவர் நாவல்களை எழுதும்போது என்னைப் பற்றிக் கொண்டு விடும். சிறுவர்களுக்கான கதைதானே, அதில் என்ன வேண்டுமானாலும் சரடு விடலாம் என்று எண்ணாமல், அதிலும் கொஞ்சம் பொறுப்புணர்வோடு, அன்பு, பண்பு, பாசம், வாழ்வின் நெறிமுறைகள், வீர உணர்வு, விவேகம் மிக்க சிந்தனைகள் என்று இதம் பதமாய்க் குழைத்து எழுதுவது என் வழக்கம். இந்த ‘மாயக்கோட்டை’யும் அப்படிப்பட்டதே என்று நான் எண்ணுகிறேன். கனவுகளை அள்ளிவந்து உங்கள் கண்ணுக்குள் பதியனிடும் அற்புதக் கதை இது. இதில் வரும் ஆன்மீக விளக்கங்கள் சில எதிர்காலத்தில் மிகுந்த வரவேற்புடன் பரவலாகப் பேசப்படும் என்பது என் நம்பிக்கை. சிந்தனை விதைகளை இளமனங்களில் தூவி வைக்கிறேன். இந்த சிறுவர் நவீனத்தை எழுத்தாள நண்பர் சேனையின் மாதவன், அழகிய நூலாக்கி வெளியிட்டிருக்கிறார். அவருக்கு என் அன்பின் நன்றி, உற்சாகத்துடன் இந்த ‘மாயக்கோட்டை’க்குள் நுழைகிற உங்களுக்கு வழிவிட்டு இதோ நான் ஒதுங்கி நிற்கிறேன்.
கௌதம நீலாம்பரன்
110, பாரதி சாலை,
ராயப்பேட்டை,
சென்னை – 600 014.
1
காவிரிப்பூம்பட்டினம் தெரியுமில்லையா உங்களுக்கு?
சிலப்பதிகார காப்பியத்தால் சிறப்படைந்த பூம்புகார் எனப்படும் அதே காவிரிப் பூம்பட்டினம்தான். அங்கேதான் இந்தக் கதை துவங்குகிறது.
அதோ அந்தக் கடலோர மாளிகையின் மேன்மாடத்தில் நின்றபடி, அழகிய மாலை வேளையில் தோட்டத்துப் பூஞ்செடிகளில் புகுந்து புறப்பட்டு வந்து உடல் தழுவும் தென்றலில் சுகம் கண்ட போதும்; கவலை தோய்ந்த முகத்துடன் கடல் நோக்கிப் பார்வையைச் செலுத்தியபடி நிற்கிறாளே அந்த இளம் பெண்ணின் பெயர் ரூபிணி.
அவளருகில் வந்து நின்று. அக்கா, நம் தந்தை நேற்று முன்தினமே வந்திருக்க வேண்டும். அப்படி அவர் வராதது என் மனத்தை மிகவும் வேதனையடையச் செய்கிறது. தந்தை எப்போது வருவார்… நீயாவது பதில் சொல்லேன்…
என்று சிணுங்கும் குரலில் கேட்கிறாளே, அந்தப் பெண் பெயர் ராகினி.
ரூபிணிக்கு எதனாலோ சினம், தங்கையிடம் எரிந்து விழுந்தாள்…
எனக்கு மட்டும் என்ன சோதிடமா தெரியும்? நானும் உன்னைப் போலத்தான் கவலையோடு இருக்கிறேன். நீ பெரிய அக்கா ரோகிணியிடமும் என்னிடமும் மாறிமாறி இதே கேள்வியை நொடிக்கு நூறுதரம் கேட்டுக் கொண்டே இருக்கிறாய். உன் தொணதொணப்பே பெரிய தொல்லையாக இருக்கிறது. பேசாமல் வாயை மூடிக் கொண்டு கிடக்கத் தெரியாதா உனக்கு?
அப்போது அங்கே வந்து சேர்ந்த, அவர்களின் பெரிய அக்கா ரோகிணி, ஏன்டி ரூபிணி நம் தங்கையைக் கோபித்துக் கொள்கிறாய்…? அவள் அப்பாவின் செல்லப்பெண். அவரும் நம் இருவரையும் விட ராகிணியிடம்தான் பாசம் பொழிவார். அதனால்தான் அவளால் தந்தையின் பிரிவைக் காண முடியவில்லை. ஏதோ கேட்டால் கேட்டுவிட்டுப் போகிறாள். அவளை எதற்கு கடிந்து கொள்கிறாய்…?
என்று பரிந்து பேசினாள்.
ஆனால், அந்தப் பரிவிலும் ஒரு குத்தல் இருப்பதாக உணர்ந்த ராகினி, பெரியக்கா, நீயும் சின்னக்காவும் என்னை வெறுக்கிறீர்கள். அப்பாவுக்கு மட்டும்தான் நான் செல்லப்பெண்ணா… அப்படியானால் நான் உங்களுக்கு செல்லத் தங்கை இல்லையா…? அப்பா எப்போது வருவார்’ என்று நான் கேட்பதே உங்களுக்குப் பெரிய தொல்லையாக இருக்கிறதா…? நான் எங்காவது போய்த் தொலைக்கிறேன். நீங்கள் இருவரும் என் தொல்லையின்றி நிம்மதியாக இருங்கள்…
என்று கூறியபடியே சட்டென்று மாளிகையின் பின் கட்டுக் கதவைத் திறந்து கொண்டு வெளியேறினாள்.
பின்னால் பெரிய தோட்டம் விரிந்து கிடந்தது மா, பலா, வாழை என பழ மரங்கள் ஏராளம் இருந்தன. அங்கே ஒன்றிரண்டு புளிய மரங்களும் உண்டு. அவற்றின் கிளைகள் தாழப் படர்ந்து கிடக்கும். ராகினி அடிக்கடி அங்கே சென்று ஊஞ்சல் விளையாடுவாள். வெறும் கிளைகளில் ஏறி உட்கார்ந்து கொண்டும் ஆடுவாள். சற்று உயரமான கிளையில் அவளுக்காகவே அங்கு ஓர் கயிற்று ஊஞ்சலும் கட்டித் தொங்க விடப்பட்டிருந்தது.
தோட்ட முடிவில் பெரிய வேலி உண்டு. அதற்கு அப்பால் கீழைக்கடல் விரிந்து கிடந்தது.
என்னடி ரூபிணி, நாம் ஒன்று சொன்னால் அவள் ஒன்று தப்பர்த்தம் செய்துகொண்டு ஓடுகிறாள். போ… போய் அவளை சமாதானப் படுத்தி அழைத்துவா…
என்றாள் கவலையுடன் ரோகிணி.
விடு அக்கா… உன் செல்லக் குட்டித் தங்கையை ஒன்றும் காக்கா தூக்கிக் கொண்டு போய் விடாது. எங்கே போய் விடப் போகிறாள்… பின்னால் கடல்தானே இருக்கிறது… அவளுக்குப் பிடிவாதமும் வீம்பும் அதிகமாகி விட்டது. போய் எங்காவது தோட்டத்தில் சுற்றித் தொலைத்துவிட்டு வரட்டும். தொண தொணப்பு இல்லாமல் சிறிது நிம்மதியாக இருக்கலாம்…
என்றாள் ரூபிணி.
என்னடி இப்படிப் பேசுகிறாய்? என்னதான் பெரியவள் என்றாலும் நீயும் ஒரு தங்கை. அவளும் ஒரு தங்கை. இரண்டு தங்கைகளும் போட்டி போட்டுக் கொண்டு சின்னஞ்சிறுமிகள் போல் சண்டைச் சச்சரவில் ஈடுபடுகிறீர்கள். உங்களைக் கட்டுப்படுத்தவும் முடியாமல் கண்டிக்கவும் முடியாமல் நான் கிடந்து திண்டாடுகிறேன். இந்த அப்பா வேறு எப்போது ஊர் திரும்புவாரோ தெரியவில்லை…
என்றாள் மூத்தவள் ரோகிணி.
ஐயோ அக்கா… ராகினி என்ன சின்ன பாப்பாவா…? பதினாறு வயது நிறைந்த பருவ மங்கை அவள்! அப்பாவின் செல்லப் பெண் என்பதற்காக நம்மைப் போட்டு நோக அடிக்கிறாளே… நமக்கு மட்டும் கவலை இல்லையா? பாவம், அப்பா… அவர் என்ன பக்கத்து ஊருக்கு கோவில் திருவிழா பார்க்கவா சென்றுள்ளார்? கலம் ஏறிக் கடல்கடந்து, கடாரம் - காழகம் - ஸ்ரீ விஜயம் போன்ற நாடுகளுக்கு வாணிபம் செய்யவல்லவா சென்றுள்ளார்… திரும்பி வரும் போது ஒன்றிரண்டு நாட்கள் தாமதம் ஆகத்தான் செய்யும். பாய்மரக்கப்பல் பயணம் என்பதே காற்றின் போக்கை வைத்துத் தீர்மானிப்பது தானே… சூழ்நிலைகளைச் சமாளித்துதான் வரவேண்டும். இது புரியாமல் அவள்தான் பேசுகிறாள் என்றால் நீயும் வீணாகக் கவலைப்படுகிறாயே!...
என்றாள் ரூபிணி.
இந்த மூன்று சகோதரிகளின் தந்தை கனகேசர் காவிரிப்பூம்பட்டினத்தில் பெரிய வணிகர். கடற்குதிரை என்கிற பெரிய மரக்கலத்திலேறி ஒருசில மாதங்களுக்கு முன் வாணிபத்திற்காக வெளிநாடு சென்ற அவர் இன்னும் ஊர் திரும்பவில்லை.
அரண்மனைப் போன்ற வீடு இருந்தாலும், கனசேகரின் மனைவி உயிருடன் இல்லை. மூன்று பெண்களுக்கும் தாயில்லாத குறை தெரியாமல் வளர்த்து வருவது அத்தைதான்.
கனசேகர் இந்தமுறை கீழைக்கடல் நாடுகளில் பெரும் பொருள் திரட்டி வந்து, மூன்று பெண்களுக்கும் நல்லபடியாகத் திருமணம் செய்து வைத்துவிட வேண்டுமென்று திட்டமிட்டிருந்தார்.
ஆனால், என்ன போதாத காலமோ தெரியவில்லை. அவரது திட்டம் அனைத்தும் பாழாகி விட்டது. வாணிபம் என்னவோ நன்றாகத் தான் நடந்தது. அதுவும் மணிபல்லவத் தீவில் குறைந்த விலையில் கொள்முதல் செய்திருந்த ரத்தினங்களும் மாணிக்கங்களும் கனக புஷ்பராகக் கற்களும் செவ்வந்திக் கற்களும் சாவகத்தில் கொள்ளை விலைக்கு விற்றன. ஏராளமான பொன்னும் பொருளும் குவிந்தன.
மகிழ்வோடுதான் கூடாத்தில் மரக்கலமேறிப் பயணத்தைத் துவக்கினார். ‘கடற்புரவி’ என்னும் அந்த பிரம்மாண்டமான மரக்கலம் மாநக்காவரம் தீவுகளைக் கடந்து வரவேண்டிய தருணத்தில் கடற்கொள்ளையர்கள் சூறாவளிபோல் சூழ்ந்து தாக்கினர். நிதிக் குவியல்களைக் கொள்ளையிட்டதோடு நில்லாமல் மரக்கலத்திற்கும் தீவைத்து விட்டுச் சென்று விட்டனர். மெல்ல மெல்ல அந்த மரக்கலம் தீக்கிரையாகிக் கடலில் மூழ்கிக் கொண்டிருந்த போது அதிலிருந்து தப்பி, ஒரு மரக்கட்டையைப் பிடித்து மிதந்த படி கரை வந்து சேர்ந்து மயங்கிக் கிடந்தார் கனகேசர்.
அவர் கண் விழித்த போது, நள்ளிரவு நேரம் எங்கோ நரிகள் ஊளையிட்டன. ஆந்தை அலறியது. பசியும் பயமுமாக அவர் தவித்து நின்ற வேளையில் அங்கே நான்கு புரவிகள் பூட்டிய ஒரு ரதம் வந்து நின்றது. அதை ஒட்டி வந்த மனிதன் இருளோடு இருளாக இருந்தான். சரியாகப் பார்க்க முடியவில்லை. குரல் மட்டும் கேட்டது.
பாதுகாப்பான இடம், பசிபோக்க உணவு வேண்டுமானால் எதிர்கேள்வி எதுவுமில்லாமல் ரதத்தில் ஏறு
என்று அந்தக் குரல் கட்டளையிட்டதும், கனசேகர் மறுபேச்சின்றி அந்த ரதத்தில் ஏறி அமர்ந்தார்.
அடுத்த சில கணப்போதுகளில் அவர், தன்கண்களையே நம்பமுடியாத அளவு ஆடம்பரமான ஒரு மாளிகையில் இருந்தார்.
ராஜமாளிகையோ என பிரமை தட்டியது. எங்கும் வண்ண விளக்குகள் ஜாலம் காட்டின. பூங்கொத்துகள் போல் சில சரவிளக்குகள் மேலிருந்து தொங்கின. பளிங்குத்தரை பளபளத்து கூடத்திலும் மாடப் படிகளிலும் ரத்தினக் கம்பளங்கள் விரிக்கப்பட்டிருந்தன.
கூடத்தில் அழகிய ஆசனங்கள் போடப்பட்டிருந்தன. எதிரே விதவிதமான விருந்துணவுகள் அழகிய தங்க-வெள்ளிப் பாத்திரங்களில் பரிமாறப்பட்டிருந்தன. ஒரு பெரிய கிண்ணம் நிறைய திராட்சை கொய்யா, மா போன்ற பழ வகைகள் அடுக்கப்பட்டிருந்தன.
கனகேசருக்கு விபத்து நடந்த பிறகு என்ன நடந்தது என்பதோ – அந்த இடத்துக்கு யாரோ முன் பின் அறிமுகமில்லாத ஒருவன் ரதத்தில் அழைத்து வந்ததோ – அவன் பிறகு என்ன ஆனான்.எங்கே போனான் என்பதோ பற்றியெல்லாம் ஒரு சிந்தையும் இல்லை. பசி மட்டுமே அவரைப் பெரிதாக ஆக்ரமித்திருந்தது. ‘காய்ந்த அந்த உணவு மேடை முன் விழுந்தடித்துக் கொண்டு ஓடி அமர்ந்து, வகை வகையான உணவுகளை வயிறுபுடைக்க தின்று தீர்த்தார். பழரசங்கள் குவளை குவளையாக அருந்தினார்.
பசிதீர்ந்து ஏப்பம் விட்ட அவர் கண்களில் அங்கே கிடந்து அழகிய மஞ்சம் ஒன்று தென்பட்டது. உண்ட மயக்கம் ஆளை அசத்தியதால் பேசாமல் எழுந்து சென்று அந்த மஞ்சத்தில் சாய்ந்து கொண்டார். மஞ்சத்தின் இரு பக்கமும் நின்ற அழகிய பெண் சிற்பங்கள் தங்கள் கையிலிருந்த மயிலிறகு விசிறிகளை அசைத்து அவர் மீது இதமான காற்கைப் பொழிந்தனர். அந்த அற்புதத்தைக் கூட அவர் கவனிக்கவில்லை. சுகமான உறக்கம் அவரை ஆட்கொண்டது. சிறிது நேரம் கழித்து இடி முழக்கம் போல் ஒரு சிரிப்பொலி அந்தக் கட்டடத்தையே அதிரச் செய்தது. திடுக்கிட்டுக் கண் விழித்த அவரிடம் ஒரு மாயக்குரல் பேசத் துவங்கியது.
என்ன வணிகரே, சுவையான சாப்பாடும் சுகமான மஞ்சமும் கிடைத்ததும் ஆனந்தமாக அனுபவிக்கத் துவங்கி விட்டீரோ… இனி உமக்கு ஒரு கவலையும் இல்லையல்லவா…?
பெரு வணிகர் கனகேசர் உளக்குமுறலுடன் சொன்னார் -
யாரப்பா நீ? எங்கிருந்து பேசுகிறாய்? என் கவலை எப்படி மறையும்? சோறும் தூக்கமுமா சுகம்? என்னுடைய பெருஞ்செல்வம் கொள்ளை போய் விட்டதே… நான் எப்படி திரும்புவேன்… என் செல்ல மகள்களுக்கு எப்படித் திருமணம் செய்து வைப்பேன்? மூழ்கிய கப்பலோடு என் வாழ்வே முழுகிப் போய் விட்டதே அப்பா…
கவலை வேண்டாம் வணிகரே! உமக்கு பெரும் செல்வம் நான் தருகிறேன்… இந்த வாழ்வு முழுக்க நீர் வாணிபம் செய்தாலும் அவ்வவு செல்வம் சம்பாதிக்கவே முடியாது. அவற்றை நீர் இப்போதே எடுத்துச் செல்லலாம்
என்றது அந்தக் குரல்.
மறுகணம்;