Charulatha
()
About this ebook
திரு மு.க.ஸ்டாலின், பத்மஸ்ரீ கமல் ஹாசன் மற்றும் பலர் வெளியிட்ட தொகுப்புகளோடு, கவிதை சிறுகதை புதினம், கட்டுரை, திரைப்பாடல்கள் என சிறகு விரிக்கும் பன்முகப் படைப்பாளி.
அவனின் திருமதி, தீ, தோஷம், பூஜை, கழிவு - முத்திரைச் சிறுகதைகளாக ஆனந்த விகடன் வைர விழாவில் பரிசு பெற்றவை.
உயரிய இலக்கிய விருதுகள் பெற்ற இவரின் படைப்புகள் கல்லூரிப் பாடமாகவும், ஆராய்ச்சி மாணவர்களின் முனைவர் பட்டப் பாதையாகவும் சிறக்கின்றன.
பல சாதனைகளுக்குப் பிறகும், தன் அடுத்தக் கட்டத்தை நோக்கிப் பயணம் செய்கிறார். திரைப்படப் பாடல்களும், கதை வசனமும் எழுதிவருகிறார்.
Reviews for Charulatha
0 ratings0 reviews
Book preview
Charulatha - Andal Priyadarshini
http://www.pustaka.co.in
சாருலதா
Charulatha
Author :
ஆண்டாள் பிரியதர்ஷினி
Andal Priyadarshini
For other books
http://www.pustaka.co.in/home/author/andal-priyadarshini
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
சாருலதா
சின்னவள்
கானல் சொர்க்கம்
சாருலதா
1
எனக்கென்று பூமியிலே கடமைகள் உண்டு! அதை எனக்காக என் கையால் செய்வது நன்று!
-வாய் விட்டுக் குயிலாய்ப் பாடினாள் சாருலதா.
சின்னச் செவ்வகமாய் ஃப்ரேம் ஓரத்தில் லேசாய்த் துருப்பிடித்திருந்த கண்ணாடியை முகத்துக்குப் பக்கத்தில் கொண்டுவந்து பொட்டின் வட்டத்தைச் சீர்ப்படுத்தினாள்.
உனக்கேன்டி இந்தத் தலையெழுத்து? ரசம் போன கண்ணாடியிலே மூஞ்சியைத் தவிர எல்லாம் தெரியுது. நீ மட்டும் சரின்னு சொன்னால் போதும். ஆள் உயரக் கண்ணாடி - வீடு முழுதும் பதிச்சுத் தர அவரு காத்திருக்காரு....
கமலா - கொஞ்சம் ஆதங்கத்தோடு சொன்னாள்.
எடுத்து வளர்த்த சின்னம்மாதான்.
ஆனாலும் - இது நாள் வரைக்கும், தன் பெண்களுக்கு வெண்ணெய் - சாருலதாவுக்குச் சுண்ணாம்பு என்று ஒரவஞ்சனை செய்ததேயில்லை.
அதனாலேயே, கமலா மனசு நோகும்படி ஒரு வார்த்தை கூடச் சொல்ல மாட்டாள் சாரு.
‘அம்மா... அம்மா...’ என்றுதான் உருகுவாள்.
ஆனால், இந்த விஷயம் ஆரம்பித்த நாளிலிருந்து சுத்தமாய் மாறிவிட்டாள் கமலா.
"சரி என்று சாரு தலையாட்ட வேண்டும் என்று. எழுந்ததிலிருந்து, படுக்கும் வரைக்கும் ஏன், பக்கத்தில் படுத்திருக்கும், தூங்கும் வரைக்கும் வாய் ஓயாமல் வேத மந்திரமாய்ச் சொல்லி வருகிறாள்.
கவலையே படாதேம்மா. இன்னும் ரெண்டே மாசத்திலே வேலைக்குப் போயி, முதல் சம்பளத்திலே உனக்கு ஆள் உயரக் கண்ணாடி வாங்கி தர்றேன்...
க்கும்... அப்பன் மாதிரியே இந்த வெட்டிப் பேச்சுக்கு ஒண்ணும் குறைச்சலில்லே. நீயும் போயி மாசச் சம்பளத்துக்கு நாக்கு வழிச்சுட்டு நில்லு...
-எரிச்சலாய் உள்ளே போனாள் கமலா.
மெல்லிசாய் சிரித்த சாரு - சாட்டையாய்த் தொங்கும் பின்னலை முன்னே இழுத்துப் போட்டாள்.
அலமாரியில் கையகலக் கண்ணாடி, பவுடர், சின்ன தகரடப்பாவில் ஹேர்பின் ஊக்கு, கண்மை, சாந்து, ரப்பர் பேண்ட் என்று ரகவாரியாய் ரங்கநாதன் தெரு சமாச்சாரங்கள்.
கட்டியிருந்த மஞ்சள் பெங்கால் கைத்தறிப் புடவைக்குத் தோதாய் மஞ்சள் ரப்பர் பேண்டைக் கீழே மாட்டினாள் சாருலதா.
பாதாம் பருப்பு, பிஸ்தாவும், பாலுமாய்ச் சேர்த்துக் குடிக்கும் அவள் கல்லூரித் தோழிகளுக்கு எலிவாலாய்ப் பின்னல்.
காலையில் பழையது...
மத்தியானம் நீர்த்த மோர்சாதம்...
ராத்திரி வெடவெடவென்று ஒடும் ரசம் சாதம்... இப்படிச் சாப்பிடும் சாருவுக்கு, அடர்த்தியாய், கருகருவென்று மினுமினுப்பாய் முழுங்காலுக்குக் கீழே பின்னல்...
இந்தாம்மா சாரு... பூவை வச்சுக்க. காலையிலேயே வாங்கி வச்சேன்...
- வெள்ளை ஈரத்துண்டில் சுத்தியிருந்த மல்லிகைப் பூவைக் கொடுத்தாள் கமலா.
அந்தத்துண்டைக் குடும்மா...
-மூக்கருகில் வைத்து மூச்சை ஆழமாய் உள்ளே இழுத்தாள் சாருலதா.
சொக்க வைக்குதும்மா வாசனை...
-துண்டினில் இறங்கியிருந்த மணத்தில் கிறங்கிப் போய்ச் சொன்னாள்.
இந்த மாதிரியான சின்னச் சின்ன ரசனைகள் சாருவுக்கு ரொம்பவே உண்டு.
திரும்பு சாரு..வச்சு விடறேன்.
தங்கச்சிக்கெல்லாம் பூ….
ப்ச. அதுங்க வெளியிலேயா போகப் போறாங்க? இந்த இணுக்குப் பூவுக்கே பத்து ரூபாய் செலவு. சாயங்காலம் பால் கிடையாது. உங்கப்பாவுக்கு மட்டும் காலைப் பால் அரை டம்ளர் இருக்கு. காப்பி குடிக்கல்லேன்னா மண்டை வெடிச்சிடுமே அவருக்கு...
-மூணு முழம் பூவையும் நீளமாய், சரம்சரமாய்த் தொங்குவது மாதிரி வைத்த கமலா சாருலதாவை முன்பக்கமாய்த் திருப்பினாள்.
"அ...அட... என்னடி இது கண்ணுல தண்ணி? ஏன் இப்ப அழுகை...?
வச்சால், ரெண்டு மணி நேரத்திலே வாடப்போற பூவுக்காக சாயங்கால காப்பியை எல்லாரும் விட்டுட்டீங்களே, என்னம்மா இது?
-குரல் தழுதழுத்தது சாருலதாவுக்கு.
"காலேஜ் லீடரு... நாலு பெரிய மனுஷங்க வருவாங்க, சந்திப்பாங்க. பார்க்க பளிச்சுன்னு இருக்க வேண்டாமா? ம்? என்ன இப்ப, இந்தக் காப்பியையும் சேர்த்து நாளைக்குக் குடிச்சுக்கலாம். விழா நாளைக்கு வருமா என்ன?
-ரொம்பவும் யதார்த்தமாய்ப் பேசினாள் கமலா.
இந்த தரித்திரம், இந்த கஷ்டமெல்லாம் விடியட்டுமேன்னுதான் உன்னைக் கெஞ்சறேன். நல்ல பதிலாய்ச் சொல்லு. பாலிலேயே குளிக்கலாம். உன்னாலதான் சாரு இந்த வீட்டிலே விளக்கெரியணும், நீ சொல்ற பதில்லதான் உன் தங்கச்சிங்களோட எதிர்காலமே அடங்கியிருக்கு. எல்லாரும் தடவித்தடவி கஞ்சி குடிக்கணுமா? வயிறாரசோறு திங்கனுமான்னு நீதான் முடிவு பண்ணனும்..
-சுவரிலிருந்த விளக்கு அலமாரியில், உடம்பெல்லாம் வைர வைடுர்யமாய், தங்க நகையாய் ஜொலித்த திருப்பதி சாமியிடம் அடுத்த முறையீடு.
ஏழுமலையானே... எம் பொண்ணுக்கு நல்ல புத்தி குடுப்பா... அவ மூலமா எங்களுக்கு விடியவை...
-கையெடுத்து கும்பிட்டாள் கமலா.
"நா கிளம்பறேம்மா. மணி மூணு. நாலுமணிக்கு காலேஜ்ல இருக்கணும். ஆறுமணிலேயிருந்து ஃபேஷன் பரேட்.
நான்தான் நிகழ்ச்சித் தொகுப்பாளர். எல்லாம் முடிஞ்சு வீடு வர பத்தாயிடும். அப்பாவை பஸ் ஸ்டாண்டிலே நிக்கச் சொல்றியாம்மா?
அத்தனை நேரத்துக்கப்புறம் - நீ பஸ் புடிச்சு வரவேணாம். இந்தா...
சமையலறையிலிருந்து கைப்பிடி அளவிருந்த கடுகு டப்பாவைக் கொண்டு வந்தாள் கமலா.
திறந்து உள்ளே மடித்து வைக்கப்பட்டிருந்த அழுக்கு ரூபாய் நோட்டைப் பிரித்தாள்.
முழுநூறு ரூபாய் நோட்டு.
இதை வச்சுக்கோ சாரு. இப்பவும், வர்றப்பவும் ஆட்டோலேயே போய் வந்திடு. இன்னிக்கு ஒரு நாள் தானே....?
-கசங்கியிருந்த தாளை நீவி ஒழுங்காய் மடித்து சாருவின் கையில் திணித்தாள்.
"வேணாம்மா. திருமங்கலம் போனா - வரிசையாய் 27 எல், வரும். ரெண்டே ரூபாய்ல முடிஞ்சிடும். ஆட்டோவிலே அனாவசியமா முப்பது ரூபாயாகும். இதை மளிகைக்கு வச்சுக்கோ...?
அதுக்குண்டான காசுதான் இது. ரேஷன் அரிசியும் மத்த சாமானும் வாங்க அப்பா குடுத்தாரு பரவால்ல, பக்கத்து வீட்டு மோகனாக்கா கிட்ட கடன் வாங்கிக்கறேன். நீ வெயில்ல வேர்த்து வழியாமப் போயிட்டு வா...
-வீட்டுக்கு வெளியே வந்து ஆட்டோ. எத்திராஜ் காலேஜ் போகணும்...
-அம்மாவே கூப்பிட்டாள்.
மீட்டருக்கு மேலே அஞ்சு ரூபா போட்டுத் தாங்கம்மா...
-என்றபடியே மீட்டர் கட்டையைக் கீழே தள்ளினான் ஆட்டோ டிரைவர்.
‘ஏறிக்கோசாரு... அவர் வருவாரில்லே....?’
ம்...ம்..
அவர்ட்ட நிதானமாப் பேசு. எடுத்தெறிஞ்சு பொரியாதே. பெரிய மனுஷன். ஊர்ப் பெண்ணுங்கள்லாம் நினைச்சு நினைச்சு உருகற மனுஷன் - உன்னை நினைச்சு உருகறார்… உன் பதிலுக்குக் காத்திருக்காரு... இந்த மாதிரி வாய்ப்பு வருமான்னு ஒவ்வொருத்தி ஏங்கறா... நீ என்னடான்னா...
-முகம் முழுதும் கவலையும் வேதனையுமாய்க் கமலா சொன்னாள்.
சரி டயமாறது வர்றேம்மா. நீ போப்பா...
-சட்டென்னு கிளம்பியது ஆட்டோ.
ஒரு வாரமாய் அம்மாவுக்கு இதே பேச்சுதான். இதே ஸ்வாசம்தான்
எப்படியாவது சாருவை சம்மதிக்க வைத்துவிட வேண்டு மென்று முனைப்புதான்.