Andhi Nerathu Udhayam
By GA Prabha
5/5
()
About this ebook
Reviews for Andhi Nerathu Udhayam
4 ratings0 reviews
Book preview
Andhi Nerathu Udhayam - GA Prabha
http://www.pustaka.co.in
அந்தி நேரத்து உதயம்
Andhi Nerathu Udhayam
Author:
ஜி.ஏ.பிரபா
G.A.Prabha
For more books
http://www.pustaka.co.in/home/author/ga-prabha
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
அத்தியாயம் 16
1
நல்வரவு.
கோலம் வரவேற்றது. பசுஞ்சாணம் போட்டு மெழுகிய தரையில், கோலமாவு பளிச்சென்று மின்னியது. அதன்மேல் வண்ணப்பொடி தூவியதும் இன்னும் கவர்ந்தது.
வராந்தாவின் குண்டு விளக்கு வெளிச்சம். கோலத்தை இன்னும் அழகுமயமாகக் காட்டியது. சுற்றிலும் தீபத்தை வரைந்து வண்ணங்களால் விளிம்பு கட்டியதும், அம்சம் இன்னும் கூடியது.
கார்த்திகா, கோலத்தை ரசித்தபடி நின்றாள்
ஒவ்வொரு நாளும் அவளின் பொழுதைத் திருடிக்கொள்ளும் அதிகாலைப் பொழுது, பனி விலகாமல் நின்றது.
காலைப்பனி குளுமையாய் உடல் தடவிச்சென்றது.
அதிகாலை இருள் விலகாத நேரம். வராந்தா விளக்கு எதிர்வீடு வரை நீண்டிருந்தது. வாசலில் இருந்த பவழமல்லி மரம், பூக்களை உதிர்த்திருந்தது. வீட்டு சுற்றுச்சுவர் ஓரமாய் ராமபாணப் பூக்கள் செடியிலேயே மலர்ந்திருந்தன. அதன் மணம் மனதை மயக்கியது.
கார்த்திகா உள்ளே போக மனமில்லாமல் வராந்தா விளக்கை அணைத்துவிட்டு, அங்கிருந்த மூங்கில் நாற்காலியில் அமர்ந்தாள்.
இருள் பாதி, வெளிச்சம் பாதி கலந்திருந்த இந்த விடியற்காலையில் எந்த இலக்குமின்றி அமர்ந்திருப்பது சுகமாகத் தெரிந்தது. ‘பேப்பர்’பையன் செய்தித்தாளை வராந்தாவில் விட்டெறிந்துவிட்டுப் போனான்.
பால் ‘கேன்’ சுமந்து - இரண்டு சைக்கிள்கள் போனது.
ஓம் நமோ நமோ, ஓம் நமோ நமோ
– சப்தமாக ஜெபித்தபடி பண்டாரம் கடந்துபோனார்.
"உயிர்ப்பும், உல்லாசமுமாய் பொழுது விடிய ஆரம்பித்தது.
இந்த நேரம் நகராமலேயே நின்றுவிடக்கூடாதா?
வழக்கமான ஏக்கம்!
‘விடியும் ஒவ்வொரு நாளும் நம்மை இறுதியை நோக்கி அழைத்துச் செல்கிறது’ என்பார் அப்பா. அப்படியெனில் ஏன் ஒவ்வொரு நிமிடமும் ரசனையும், லயிப்புமாய் நகர்கிறது?
‘மரணத்தைக் கண்டு அஞ்சாதே. அதுவும் ரசிக்க வேண்டிய விஷயம். ஒவ்வொரு நிமிஷமும் ரசனையுடன் வாழ்ந்து கழித்திடுன்னு உணர்த்தத்தான்’– என்று அப்படியே வாழ்ந்த அப்பாவும் இறந்து பல ஆண்டுகள் ஓடிவிட்டன. ஏன்… பதினெட்டு முடிந்திருந்தது.
அப்பா இருந்திருந்தால் அவளுக்கும் முன்னே எழுந்து காப்பி போட்டிருப்பார். கைநிறைய பூவுடன் அவளை எழுப்பி,‘அம்மாடி… பிறந்தநாள் வாழ்த்துக்கள்’ என்பார்.
ஏக்கங்கள், வேதனைகள் நிரம்பிய பாத்திரமாகத்தான் இருக்கிறது வாழ்க்கை. இருந்தாலும் இதன் மீதான ஆர்வம் குறையவில்லை.
சுவாரசியம் குறையாமல்தான் வாழ்கிறாள்.
அதனால்தான் இன்று தனது நாற்பதாவது பிறந்தநாளை உற்சாகத்தோடு கொண்டாடுகிறாள்.
கார்த்திகா எழுந்து உள்ளே வந்தாள்.
கூடத்தில் விடிவிளக்கு எரிந்தது. அதை அணைத்துவிட்டு சமையலறைக்குள் வந்தாள். இரவே காய்கறிகள் நறுக்கி வைத்திருந்தாள். மடமடவென்று குளித்துவிட்டு வந்து, சமையலை ஆரம்பித்தாள்.
இரண்டு அடுப்பையும் பற்ற வைத்து, வெண் பொங்ல் - சாம்பார் வைத்தாள். பாயசத்துக்குப் பாலை கொதிக்க வைத்துவிட்டு, சட்னி அரைக்கையில் அம்மா குரல்கேட்டது.
என்னம்மா? சீக்கிரம் சமையலை முடிச்சிட்டியா?
ஆமாம்மா. நாலரைக்கு எழுந்துட்டேன்.
என்னை எழுப்பி இருக்கலாம்ல.
ஏம்மா? எழுந்து என்ன பண்ணப்போறே? பி.பி. மாத்திரை போட்டு தூங்கிட்டிருந்தே. நான் வேலைக்கு கிளம்பறதுக்கு முன்னாடி எல்லாம் செஞ்சு எடுத்துட்டுப் போகணும்.
நீ நகரு, பாயாசம் நான் பண்ணுகிறேன். நீ போய் புதுசு கட்டிட்டு சாமி விளக்கு ஏத்து
– கார்த்திகாவை அம்மாவை உள்ளே விரட்டினாள்.
இறைவா! என்றும் என் மனகு நல்லதையே நாடட்டும். வாழ்வின் ஒவ்வொரு துளியையும் ரசித்து-ருசிக்கும் மனசையும், நல்லவளாக வாழும் சந்தர்ப்பத்தையும் எனக்கு தொடர்ந்து அருள்.
மனசு பிரார்த்தனை செய்தது.
கண்மூடிநின்றாள்.
மெல்ல மெல்ல இதம் பரவியது. நிறைந்த மனத்துடன் வெளியில் வந்தாள்.
அம்மா பிரசாதங்களை கொண்டுவந்து வைத்தாள். நைவேத்தியம் செய்து, முதலில் பாயாசத்தை அம்மாவுக்குத் தந்தாள்.
நீ குடிம்மா முதல்ல
– அம்மா.
நான் பொறக்க நீதாம்மா காரணம். குடிம்மா.
உங்க அண்ணன் எழுந்துட்டானா?
அவன் சர்க்கரை நோயாளி. மெதுவா இறங்கி வரட்டுமேம்மா. ஏன் அவனை எழுப்பணும்?
எழுந்தாச்சு. எழுந்தாச்சு
– அண்ணன் குரல்.
கார்த்திகா நீ குளிச்சிட்டியா?
சமையலே ஆச்சு. நீ இங்க சாப்பிடு.
முதல்ல நீ இதைச் சாப்பிடு
– அண்ணி ஒருதம்ளருடன் வந்தாள். சுடச்சுட நெய் வழிந்தது.
என்ன அண்ணி இது?"
சுரைக்காய் அல்வா. உனக்கு ரொம்ப பிடிக்கும்னு காலையில் எழுந்து செஞ்சேன்.
வாவ். சூப்பர்.
இது என்னோட பரிசுப்பொருள்
– அண்ணன் நீட்டிய சின்னப்பெட்டியில் மோதிரம்.
நன்றிண்ணா. நன்றி
– பூரித்துப் போனாள் கார்த்திகா.
தன்மேல் எத்தனை பிரியம்? அப்பா இல்லாத குறையை அண்ணன்தான் போக்குகிறான். அவன்தான் அப்படி என்றால், வந்த அண்ணி அதைவிட மேல், பாசமழையில் மூச்சுத் திணறுகிறது.
எதுக்குண்ணா இத்தனைச் செலவு?
என்னம்மா செலவு? என் குலதெய்வம் நீ.
மோதிரத்தை போட்டுக்கம்மா
– அண்ணி.
எவ்வளவுண்ணா ஆச்சு?
உனக்கு ஏன் அது?
சும்மா சொல்லுண்ணா.
பதினைஞ்சாயிரம் ஆச்சா
– அண்ணன், அண்ணியிடம் கேட்டார்.
ம்…மேல நூறு
– என்றான் அண்ணி.
அப்பா! இவ்வளவு அதிகமான விலையில் தேவையா?
ஒண்ணும் பேசக்கூடாது. என் தங்கை, விலை மதிப்பில்லாத தங்கச்சிலை. அவளுக்கு இதே குறைவு.
ரொம்ப ஜாஸ்திண்ணா?
என்ன ஜாஸ்தி? என் தங்கை எனக்கு உசத்தி.
சரி. பிறந்தநாள் வாழ்த்து கூறி சுவரொட்டியெல்லாம் அடிச்சுடு
கார்த்திகா சிரித்தாள்.