Thalaimuraigal
3.5/5
()
About this ebook
Reviews for Thalaimuraigal
4 ratings0 reviews
Book preview
Thalaimuraigal - Neela Padmanabhan
http://www.pustaka.co.in
தலைமுறைகள்
Thalaimuraigal
Author:
நீல. பத்மநாபன்
Neela. Padmanabhan
For more books
http://www.pustaka.co.in/home/author/neela-padmanabhan
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
முன்னுரை
நானும் என் 'தலைமுறைகளும்
முகவுரை
அத்தியாயம் ஒன்று
அத்தியாயம் இரண்டு
அத்தியாயம் மூன்று
அத்தியாயம் நான்கு
அத்தியாயம் ஆறு
அத்தியாயம் ஏழு
அத்தியாயம் எட்டு
அத்தியாயம் ஒன்பது
அத்தியாயம் பத்து
அத்தியாயம் பதினொன்று
அத்தியாயம் பனிரெண்டு
அத்தியாயம் பதிமூன்று
அத்தியாயம் பதினான்கு
அத்தியாயம் பதினைந்து
அத்தியாயம் பதினாறு
அத்தியாயம் பதினேழு
அத்தியாயம் பதினெட்டு
அத்தியாயம் பத்தொன்பது
அத்தியாயம் இருபது
அத்தியாயம் இருபத்தி ஒன்று
அத்தியாயம் இருபத்தி ரெண்டு
அத்தியாயம் இருபத்தி மூன்று
அத்தியாயம் இருபத்தி நான்கு
அத்தியாயம் இருபத்தி ஐந்து
அத்தியாயம் இருபத்தி ஆறு
அத்தியாயம் இருபத்தி ஏழு
அத்தியாயம் இருபத்தி எட்டு
அத்தியாயம் இருபத்தி ஒன்பது
அத்தியாயம் முப்பது
முன்னுரை
1970இல் முதல்முதலாகத் தலைமுறைகள்’ நாவலை வாசித்தேன். நாற்பத்து மூன்று ஆண்டு களுக்கு மேலாகிவிட்டன. சுதந்திரத்துக்குப் பின் வெளிவந்த நாவல்களில் மிகப் பெரியது தி. ஜானகி ராமனின் 'மோகமுள்', "தலைமுறைகள் இரண்டா வது பெரிய நாவல். இதைத் தனது நான்காவது நாவல் என்று ஆசிரியர் குறிப்பிடுகிறார்.
'தலைமுறைகள் வெளிவருவதற்கு முன்பே நீல. பத்மநாபனின் பெயர் தமிழ் இலக்கிய உலகில் அறிமுகமாகிவிட்டது என்றாலும், தலைமுறைகள்’ நாவல்தான் நீல. பத்மநாபனைத் தமிழின் தவிர்க்க முடியாத நாவலாசிரியராகவும், இலக்கியகர்த்தா வாகவும் ஆக்கியது. 1970இல் இந்த நாவலை முதல் முதலாகப் படித்தபோது ஏற்பட்ட பிரமிப்பு, இந்த 2013இலும் ஏற்படுகிறது.
நவீனத் தமிழ் உரைநடை நாவல் இலக்கியம் எப்படியிருக்க வேண்டும் என்பதற்குத் தலைமுறை கள் ஒரு முன்னுதாரணமாகத் திகழ்கிறது. லீனியர், நான் லீனியர் என்றெல்லாம் எழுத்து முறைகள் வகைப்படுத்தப்படுகிற இந்த நாட்களிலும் தலை முறைகள் தனித்துவத்தோடு சுடர்கிறது.
'நாவல்’ என்பது நவீன இதிகாசம். வாழ்வை இதிகாசம் போல் சித்தரிப்பவனே உயர்ந்த படைப்பாளி, உன்னதமான இலக்கியகர்த்தா. நீல. பத்மநாபனிடம் இந்த அம்சம் மேலோங்கி யிருக்கிறது. வாசகனுக்கு இதிகாச உணர்வைத் தரும் நவீனத் தமிழ் நாவல்கள் வெகு சொற்பம். விபூதி பூஷன் பந்தோபாத்யாவின் பதேர் பாஞ்சாலி’, ‘வனவாசி, தாராசங்கர் பானர்ஜியின் கவி, சிவராம காரந்தின் ‘மண்ணும் மனிதரும்", தகழியின் நாவல்களிலும் இந்த இதிகாசத் தன்மை உள்ளது. இந்த மகத்தான நாவலாசிரியர்களோடு வைக்கத் தகுந்தவர் நீல. பத்மநாபன். தலைமுறைகள் ஒரு நவீன இதிகாசம். குமரி மாவட்டத்திலுள்ள இரணியல் செட்டியார் என்ற ஒரு சமூகத்தின் சமூக, கலாசார வாழ்வை வெகு விஸ்தாரமாகச் சொல்கிறது தலைமுறைகள். திரவி' என்ற திரவியத்தின் பார்வையில் நாவல் சொல்லப்படுகிறது. இந்த நாவலில் விவரிக்கப்பட்டுள்ளது போல் எனக்குத் தெரிந்தவரை எந்த இந்திய நாவலிலும் ஒரு சமூகத்தின் பிறப்பு முதல் இறப்பு வரையிலான சடங்குகள், சம்பிரதாயங்கள் இவ்வளவு சவிஸ்தார மாகச் சொல்லப்படவில்லை. குமரி மாவட்டத்தின் வட்டார வழக்கு மொழியில் ஒரு இசை நயமிருக்கிறது. இதை உரைநடையில் முதல் முதலாகப் பதிவு செய்தவர் நீல. பத்மநாபன்தான். அவரைத் தொடர்ந்து பொன்னிலன் முதல் இன்றைய குமரி மாவட்ட இளம் எழுத்தாளர்கள்வரை இதைத் தங்கள் படைப்புகளில் பதிவு செய்துள்ளனர். 'தலைமுறைகள் ஒரு குடும்பத்தின் கதை மட்டுமல்ல, ஒரு சமூகத்தின் கதையும்கூட. நாவல் விரிய விரிய உண்ணா மலை ஆச்சி, கூனாங்காணிப் பிள்ளை பாட்டா, நாகருபிள்ளை, திரவி, சாலம், நாகம்மக்கா, சிவானந்தபெருமாள், குற்றாலம் என்று கதாபாத்திரங்களும் விரிகின்றன. யுகயுகாந்திரமாகக் காப்பாற்றப்பட்டுவரும் சடங்கு, சம்பிரதாயங்களைக் காப்பாற்ற முடியாமல், அவற்றின் செலவுகளுக்கு ஈடு கொடுக்க முடியா மல் திணறும் நாகருபிள்ளையும் அவரது குடும்பமும் நாவல் முழுவதும் வியாபித்து நிற்கின்றனர். 1950, 60களில் குழந்தைப் பேறு இல்லை என்பதற்காக மனைவியைத் தள்ளிவைத்த குடும்பங்கள் பல உண்டு. இப்போது குழந்தைப் பேறு கிடைக்க மாற்று முறைகள் பல வந்துவிட்டன. ஆனால் ஒரு காலத்தில் இதற்கெல்லாம் வழி யில்லை. மனிதாபிமானமற்ற முறையில், குழந்தைப் பேறு இல்லை என்பதற்காக வாழாவெட்டியாகப் பிறந்த வீடுகளைத் தஞ்சமடைந்த பல பெண்கள் அக்காலத்தில் இருந்தனர். குறை நாகம்மையிடம் இல்லை. அவள் கணவனிடம்தான். பழமைக் கும் நவீனத்துக்கும் ஏற்படும் போராட்டத்தில் திரவி முன்னால் நிற்கிறான். அக்காவுக்கு மறுமணம் செய்து வைக்க முயல்கிறான்.
நாகம்மையின் கணவனுக்குப் பித்துப்பிடிப்பது, அவனும் குத்தாலமும் அடுத்தடுத்துக் கிணற்றில் விழுந்து மாண்டு போவது போன்ற சம்பவங்கள் நாவலின் இறுதிப் பகுதியில் மிக விரைவாகச் சொல்லப்படுகிறது. இது ஒரு சிறு குறைபோல் தோன்றுகிறது. இந்தக் குறையைப் பெரிதுபடுத்த வேண்டிய தில்லை. தலைமுறைகள்’ நாவல் இதையெல்லாம் தாண்டி மிக உன்னதமான இலக்கியமாகவும், நவீன இதிகாசமாகவும் உயர்ந்து நிற்கிறது.
சென்னை 24
வண்ணநிலவன்
25.11.2013
நானும் என் தலைமுறைகளும்
இது என் நான்காவது நாவல். (புத்தக வடிவில் பிரசுரமாகும் இரண்டாவது நாவல்.)
1966 பிப்ரவரி இரண்டாம் தேதி எழுதத் தொடங்கிய இந்நாவல், அதே ஆண்டு செப்டம்பர் மூன்றாம் தேதியோடுதான் எழுதி முடிக்கப்பட்டதே யாயினும், அந்த எட்டுமாத காலத்தில் தொடர்ந்தும் இடைவிட்டும் மொத்தம் முப்பத்தியேழு நாட்கள் தான் வேலை செய்திருக்கிறேன். அதே ஆண்டு டிசம்பர் எட்டாம் தேதி நகல் எடுக்கத் தொடங்கியது 1967 மார்ச் முப்பதோடு முற்றுப்பெற்றது.
நகல் எடுத்து முடிந்ததற்கும் இப்போது புத்தக மாய் வெளியாவதற்கும் இடையில் பின்னிட்ட இந்த ஓராண்டுக்கும் மேலான காலகட்டத்தில் இந்நாவல் வெளியீடு சம்பந்தமாக நான் அடைய நேர்ந்த முக்கால் பங்கு கசப்பும் கால் பங்கு இனிப்பும் கொண்ட நிஜ அனுபவங்கள் ஒரு முழுநீள நாவலுக்கு இருக்கிறது என்பதால் தற்போதைக்கு அவை பற்றி ஒன்றும் குறிப்பிடாமல் விட்டுவிடுவது தான் பொருத்தம் !
இந்நாவலின் தயாரிப்பில், மேலே சொன்ன வாறு பட்டறை (workshop) வேலைக்கு ஏறத்தாழ ஓராண்டு காலம்தான் ஆனதே ஆயினும், இதை முழுவதும் என் அகநோக்கில் தியானம் (meditation) பண்ணி, மானசீகமாய் வார்த்தெடுக்க எனக்கு எட்டாண்டு காலம் வேண்டிவந்தது என்பது மிகைப்படுத்தும் கூற்றல்ல! ஆம் எட்டாண்டு காலம் நோன்போடு சூல் கொண்டு நான் பெற்றெடுத்த பிள்ளை இது! இன்னொரு விதத் தில் கூறுவதானால், எனக்கு அறிவு வந்த ஆதிநாட்களின் அனுபவ முத்திரைகளுடைய அரைகுறை ஞாபகமண்டலத்தில், 1958இல் அகஸ்மாத்தாக வந்து விழுந்து உறுத்தத் தொடங்கிய கதைவித்தின் எட்டாண்டு கால விளைச்சலின் அறுவடைச் சாட்சாத்காரம்தான் இந்த நூல். சென்ற தலைமுறையும் வருங்காலத் தலைமுறையும் வந்து சங்கமிக்கும் இன்றைய தலைமுறையில் கொஞ்சம் அழுத்தமாகவே காலூன்றி நின்றுகொண்டு, கலைத்தன்மைக் குக் களங்கம் வராது சுற்றுவட்டாரத்தைச் சூக்குமமாய்ப் பார்க்க ஆத்மார்த்தமாக நான் எடுத்துக்கொண்ட முயற்சிதான் இது. காலங்காலமாக வந்தடைந்த பழக்கவழக்கங்களின் காரண காரியம் தெரியாத கல்லறையாகத்தான் - அவசியம் அனாவசியம் புரியாத சுமைதாங்கியாகத்தான் - மனித சமூகமே இதுநாள்வரைக்கும் வளர்ந்து வந்திருக்கிறது என்பது எவ்வளவு தூரத்திற்குச் சரியோ தெரியாது. ஆனால் குறை நிறைகளோடு அவை மதிப்பிடப்படுவதில்லை என்பது மட்டும் என்னவோ வாஸ்தவம்! சமூகத்தைப் பார்க்கும் கலைஞன், ஒன்றில் சீர்திருத்தவாதியாகி, புதுமைக்கு வக்காலத்து வாங்கிக்கொண்டு, பழமையைச் சாடுகிறான். இல்லாவிடில், தலைக்கு மேல் வந்து அழுத்தும் இயந்திர யுகத்தை ஸ்தம்பிக்கச் செய்வதாய் ஒரு போலி வேட்கைக்கு ஆளாகி, பழமை முழுதையும் இந்த மண்ணின் ஆன்மீகத்தில் லயிக்கச் செய்ய அவை அனைத்தை யுமே வேதாந்திகரித்துக் (philosophizing) காட்ட அரும்பாடுபடும் நவீன புராணப் பிரசங்கியாக மாறிவிடுகிறான். சீர்திருத்தவாதி யின் பார்வையோ புராணப் பிரசங்கியின் நோக்கையோ இரவல் வாங்காமல், நூறு சதவிகிதமும் கலைப் பிரக்ஞையோடு, சமூகத்தை நெருங்கிப் பார்க்க நான் செய்திருக்கும் மனப்பூர்வ முயற்சிதான் இது என்றும் சொல்லாம்.
ஆதலால்,
வெறும் கதைப்பிரியர்களுக்கு நான் சொல்வதெல்லாம், கதையின் கருவை எப்படியாவது வருந்திக் கக்கிவிட்டுத் தப்பி னோம் பிழைத்தோம் என்று தப்பித்துக்கொள்ள வேண்டுமென்ற குறைந்தபட்சக் குறிக்கோளோடு எழுதப்பட்ட நாவல் அல்ல இது. நான் பிறந்து வளர்ந்து இன்றைய என் வயது அத்தனைக்கு எனக்குப் பழக்கமான ஒரு சமூகத்தின் நாடித் துடிப்புகள், பூர்வீக வரலாற்று விளக்கங்கள், ஆசார அனுஷ்டானங்கள், சடங்கு -பிரதாயங்கள், விழாக்கள், விளையாட்டுக்கள், வாழையடி ழயாய் வந்தடைந்த கதைகள், பாடல்கள், பழமொழிகள், தியக் கொச்சை வார்த்தைகள், பேச்சு வழக்குகள், தொனி சஷங்கள், வாக்கிய அமைப்புகள் - இத்யாதி இத்யாதி இவைகளை எல்லாம் கூடியமட்டும் சிந்தாமல் சிதறாமல் காபூர்வமாய் வெளிப்பிரகடனம் பண்ண இங்கே கதை வித்தானது பக்கபலமாய்ப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்பது தான்!
முற்றிலும் எனக்கு அறிமுகமில்லாத ஒரு உலகிற்குக் கற்பனை என்ற மண்குதிரையை மட்டும் நம்பிக்கொண்டு குதித்து, வையத்தில் ஓரிடத்திலும் காணக்கிடைக்காத கொஞ்சம் உருவங்களை மொழுமொழுவென்று படைத்துவிட்டு ஓய்ந்து விடுவது எனக்குச் சம்மதமில்லை. எனவே எனக்கு முழுக்க முழுக்கப் பரிச்சயமான - தெரிந்த - ஒரு களத்தைப் பூசி மெழுகாமல் அதன் குறை நிறைகளோடு ஒரு மனித இயலாள ரின் குறுகுறுப்போடு அப்படியே தேர்ந்தெடுத்த நான், விதி விலக்கென்று ஒன்றுகூட இல்லாது, வாழ்க்கையில் ஒவ்வொரு காலகட்டத்தில் நான் கண்டு, கேட்டு, அனுபவித்தவர்களைத் தான், அவர்கள் முகங்களை எல்லாம் கடும் வர்ணத்தைக் குழைத்துப்பூசி அடையாளம் தெரியாமல் உருமாற்றிக் காட்ட வீண்வேலை செய்யாமல் இங்கே உலவவிட நேர்ந்திருக்கிறது. ஆனால், ஒரு தனிப்பட்ட சமூகத்தையோ ஜாதியையோ மனிதர் களையோ குறைகூறிப் புண்படுத்தும் உத்தேசம் துளிகூட எனக் கில்லை என்பதையும் இங்கே நான் தெளிவுபடுத்தியாக வேண்டும்.
நின்று நிதானிக்கக்கூட எனக்குச் சாவகாசம் தராமல் இந்தக் கதாபாத்திரங்கள் நாலா திசைகளிலும் வலுக்கட்டாய மாய்ப் பிடித்திழுத்து, என்னைத் திக்குமுக்காட வைத்துத் திணற அடித்து விட்டிருக்கிறார்கள். தங்கள் இஷ்டப்படியெல்லாம் என்னை ஆட்டி வைத்திருக்கிறார்கள். என் சுதந்திரம் வெகு வாகப் பாதிக்கப்படுகிறதே என்று எனக்குச் சிரமமாகத் தோன்றும் அளவுக்கு அவர்கள் இழுத்த இழுப்புக்கெல்லாம் பாத்திரங்களுடன் பாத்திரமாய், சித்தன் போக்கு சிவன் போக்கென்று நானும் ஒழுகியிருக்கிறேனேயன்றி, ஓரிடத்தில் கூட என் எண்ணங்களின் சுமைதாங்கிகளாகவோ என் விருப்பு வெறுப்புகளை வெளியிடும் சாதனங்களாகவோ (Mouth piece) அவர்களை நான் வேலை வாங்கவில்லை.
நாவலில் நடமாடும் சகலமான பேர்களுடையவும் அந்தரங்கங்களிலும் எக்ஸ்ரேயாக என் பேனா ஊடுருவிப் பாய்ந்துக் குதறி வெளியே வர விரும்பவில்லை என்பதால் அத்தியாவசியக் கதைக் தகவல்களும் ஒரு சில வர்ணனை களும் தவிர, நாவல் முழுக்க முழுக்கத் திரவியம் என்ற ஒரே ஒரு பாத்திரத்தை மையமாக்கி - பின்பற்றி அவனுடைய பதினைந்து வயதிலிருந்து இருபத்தைந்து வயதுவரை என்ற ஒரு காலவரையறைக்குள் அவனது சரீர, மானசீக வளர்ச்சியின் போது நிகழும் அவன் சம்பந்தப்பட்ட ஒரு சமூகத்து மனிதர் களின் பிரச்சனைகளின் பரிணாம வளர்ச்சிகளையும், அவனை வந்தடையும் முந்தியத் தலைமுறைகளின் வாழ்க்கைக் காதை களையும் எல்லாம் அவன் பார்வையின் ஊடே வரைத்துக் காட்ட முயன்றிருக்கிறேன். இப்படிப் பார்க்கையில் ஒரு தனி மனிதனின் நேர்முகப் பார்வையாகத்தான் இந்நாவல் வளரவிடப்பட்டிருக் கிறது என்பதை எளிதில் புரிந்துகொள்ள முடியும். ஆதலால், திரவியத்தின் பார்வையைக் கதாசிரியன் கூற்றாகத் தவறாகப் புரிந்துகொண்டு வாசகர்கள் குழம்பலாகாது என்று கேட்டுக் கொள்கிறேன்.
சம்பாஷணைக்கு இருக்கும் வடிவம் என்ற ஒன்று, எண்ணங்களுக்கு அறவே கிடையாது என்பதை நாமறிவோம். எனினும் நமது செளகரியத்திற்காக வார்த்தைகளையும் வடிவங் களையும் கொடுக்கிறோம். ஆனால் அதற்காக, அந்தக் கதா பாத்திரத்தினுள் கதாசிரியனின் பண்டித மூளைதான் கன ஜோராய் வேலை செய்கிறது என்ற காவிய லைஸன்சோடு, ஒரு பதினைந்து வயது கிராமீயச் சிறுவனின் சம்பாஷணைகளில் மட்டும், போனால் போகட்டுமென்று யதார்த்தச் சுவைக்காக, கொஞ்சம் பிராந்தியச் சொற்களைக் கையாண்டுவிட்டு, அதை விட இன்னும் தாறுமாறாய், தனிப் பிராந்தியமாய் இருக்கும் அவன் அக நோக்கை, அவனால் அணுகவோ கற்பனை பண்ணிப் பார்க்கவோகூட முடியாத, வருந்தியழைத்துக் கொண்ட இலக்கணத் தூய்மையை இட்டுக்கட்டி இயம்பிக் காட்டி என் மொழிப் புலமையை, பாவம், அவன் முகாந்திரம் உங்களிடம் தம்பட்டமடித்து விளம்பரப்படுத்திக் காட்ட நான் அனாவசிய மாக ஆசைப்படவில்லை. எனவே இந்நாவலில் நடமாடுபவர் களின் நாக்குகளுக்கும் நடை உடை பாவனைகளுக்கும் மட்டு மல்ல, நவீனத்தின் நடுநாயகமாய் நின்று கதையை வளர்த்திச் செல்லும் திரவியத்தின் எண்ணங்களுக்கும் பார்வைக்கும்கூட, நான் ஒரு அணியென்று கருதும் வட்டாரக் கொச்சையின் நிஜமணத்தைக் கொஞ்சம் தாராளமாகவே கமழவிட்டிருப்பதை இங்கே நான் ஒப்புக்கொண்டாக வேண்டும்! ஆனால் அவன் வளர்ச்சிக்கேற்ப அவன் எண்ணம், பார்வை, செய்கை எல்லா தும் படிப்படியாக இயற்கையாகவே நிகழும் பரிணாமப் _ வளர்ச்சியானது மொழியையும் பாதிக்காமலிருக்க _ என்பதை நாவலில் இருந்து கண்டுகொள்ள முடியும்.
- நடையழகு தனித்தன்மைக் கொண்டதாக இருக்க இம் என்பதற்காக, கிடைப்பதற்கரிய சொற்களையும் பதப் பாகங்களையும் உச்சரித்தால் நாக்குத் துண்டுபட்டுப் போய் வார்த்தைச் சேர்க்கைகளையும் அகராதியில் இருந்தோ _ இலக்கிய அட்டவணை (index)யில் இருந்தோ, அரசியல் _பொழிவாளரிடமிருந்தோ ஆவேசமுடன் சம்பாதித்து அவைகளை இட்டுக்கட்டிய வக்கிரமான - வக்கணையான ஒரு பெரிய மனுஷ நடையில் இங்கே நாவலில் நான் பேச வர _லை!
மொழி பாண்டித்யத்தையும் ஜோடனைத் திறமையையும் பட்டும் முதலாய்ப் போட்டு வார்த்தைகளால் கொஞ்சம் சிலம்பம் விளையாடவோ சர்க்கரைப் பந்தல் எழுப்பி மேஜிக் அப்பியாசம் பண்னவோ நான் இந்நாவலை எழுதத் துணியவில்லை!
உருண்டோடும் பாதரசத் துளிகளைப் போல் ஓராயிரம் ளபளக்கும் சொற்கோவைகளை வாரி இறைத்துச் சித்திர விசித்திரம்பண்ணி வாசகர்களின் கண்களைக் கூசச் செய்து வர்கள் கலைப்பிரக்ஞையின் எடைபோடும் வலுவை தம்பிக்கச் செய்துவிடுவதும் என் உத்தேசமல்ல!
எனவே,
கதை நடக்கும் சமூகத்தின் இயற்கையான - தன்னிச்சை யான ஒரு யதார்த்த நடைதான் இந்நாவலுக்கு நிதானம். கதை நிகழும் சமூகத்தின் நடைமுறையிலிருக்கும் வாக்கிய அமைப்பு களையும் வார்த்தை விசேஷங்களையும் தொனி முறைகளையும் பழமொழிகளையும் எல்லாம் தேனியைப் போல் கவனமாய்ச் சேகரித்துக் கலாபூர்வமாக உலவவிடுவதைவிட, வாழும் சமூகத்தை அறியாமல்கூடப் பார்த்துவிடாமலிருக்க, வாசல்களை யும் சாளரங்களையும் எல்லாம் செப்புப் போல் அடைத்து பந்தோபஸ்து செய்துகொண்டு கட்டாந்தரை, நாற்சுவர்கள், மேற்கூரை - இப்படியொரு காற்று பதமாக்கப்பட்ட பெட்டகத் திற்குள் வசதியாக உட்கார்ந்துகொண்டு முழுக்க முழுக்கத் தூய்மை சொட்டும் கனகம்பீரமான ஒரு படாடோப நடையில் ஒரு காப்பியம் நெய்தெடுத்து விடுவது என்பது எப்படிப் பார்த்தா லும் அப்படியொன்றும் சிரமமான காரியமில்லை என்பதுதான் இவ்விஷயத்தில் என்னுடைய அபிப்பிராயம் !
நான் கையாள எடுத்துக்கொண்டிருக்கும் ஒரு மனித சமூகத்தின் பேச்சிலும் சிந்தனைகளிலும், ஏன் வாழ்க்கை முறைகளிலும் இருக்கும் தனித்தன்மையைச் செளகரியமாக உதாசீனம் பண்ணிவிட்டு - பலிகொடுத்து விட்டு, நான் ஒரு மனிதாபிமானி, மொழி அபிமானி என்றெல்லாம் வீம்பாய்ச் சுயப்பிரதாபம் அடித்துக்கொண்டால் அது வெறும் கேலிக் கூத்தாகி விடாதா?
இந்நாவலில் வரும் மக்கள் சமூகத்தினர்களிடம் இருக்கும் பிராந்திய வாடையிலிருந்து இவர்கள் மலையாளிகள் என்று பேதம் காட்டித் தீண்டாமை கற்பித்துப் பிரித்து வைத்து விடுபவர் களுக்குத் தனித்தன்மை கொண்ட வெவ்வேறு வார்த்தை அமைப்புகளும் உச்சரிப்பு முறைகளும் கொண்ட செட்டிநாடு, நெல்லை, தஞ்சை, கொங்கு நாடு, இலங்கை, மலேஷியா - இங்கெல்லாம் வாழும் தமிழர்களைப் போலத்தான் குமரி மாவட்டத்திலும் கேரள மாகாணத்தில் பல இடங்களிலும் வாழும் இவர்களும் அசல் தமிழர்கள்தான் என்று அறிவிக்கக் கூடத்தான் இந்த நடை. இவர்களின் தமிழில் மலையாளத்தின் பாதிப்பு அறவே இல்லை என்று நான் வாதிட வரவில்லை. ஆனால் முதலில் மலையாளமோ என்று தோன்றினாலும் உண்மையில் மலையாளத்திலோ தூய தமிழிலோ இன்று பழக்கத்தில் இல்லாத எத்தனை எத்தனையோ வழக்கொழிந்த சொற்கள் இவர்களின் அன்றாடப் பேச்சு வழக்கில் அனாயாச மாகக் கையாளப்படுகின்றன. வார்த்தைகள் புதிதாய்ச் செய் தெடுக்க முயற்சிகள் நடக்கும் இக்காலத்தில், நம் பழந்தமிழ் மக்கள் சமூகத்தில் கொஞ்சம் பேர்களுக்கிடையிலாவது, வாழையடி வாழையாய் இப்போதும் வழக்கில் இருந்துவரும் சில சொற்களைச் சுவீகரித்துக்கொள்வதால் நம் மொழியின் தூய்மையோ புனிதமோ ஒன்றும் கற்பழிந்து போய்விடாது என்பதுதான் என் தாத்பரியம். மேலும் ஒரே பொருளில் பல வார்த்தைகள் இருப்பது என்பதும் மொழிக்குச் செழிப்பேயன்றி குறைவோ அழிவோ அல்லவே! ஆதலால், இந்நாவலில் நடமாடு கிறவர்கள் சுத்தத் தமிழர்களா? இவர்கள் பேசுவது சுத்தத் தமிழா? என்றெல்லாம் ரத்தப் பரிசோதனைக்கு வருகிறவர்கள், இவர்களையும் இவர்கள் பேசும் தமிழையும் பொறுத்தருள்வார் கள் என்று நம்புகிறேன்.
இந்நாவலை முழுதும் மிகுந்த அக்கறையோடு வாசித்துப் பார்த்துவிட்டு நாவலையும் என்னையும் மனம் திறந்து வெகு வாகப் பாராட்டிய என் அருமை நண்பர் திரு. டி.கே. துரைசாமி (நகுலன்) அவர்களுக்கு என் மனப்பூர்வமான நன்றி.
தற்காலத் தமிழ் சிருஷ்டி இலக்கியத்தில் அசாதாரண மான ஈடுபாடும் ரஸனையும் மிக்க தமிழ்ப் பேராசிரியர் திரு. செ. ஜேசுதாசன் அவர்கள் மிகுந்த ஆர்வத்தோடு இந்நாவலை வாசித்துப் பார்த்துவிட்டு மனம் திறந்து என்னை வெகுவாகப் பாராட்டி ஊக்குவித்ததோடு, என் விருப்பத்திற்கிணங்கி ஒரு முகவுரையும் அளித்து என்னைக் கெளரவித்தமைக்கு என் உள்ளங்கனிந்த நன்றியை அவர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.
திருவனந்தபுரம் 1
நீல. பத்மநாபன்
26 பிப்ரவரி 1968
(
முதல் பதிப்பில் இடம்பெற்ற முன்னுரை)
முகவுரை[1]
கேரளக் கரையைச் சார்ந்த தமிழர்களுக்கு இது ஒரு நல்ல அறுவடைக் காலம். இல்லாம லிருந்தால் 1964க்குப் பின் நான்கு நாவல்கள் வெளி வந்திருக்க முடியுமா? அறுவடை இன்னமும் நடந்து கொண்டேதான் இருக்கிறது. வெகு சீக்கிரத்தில் மூன்று நாவல்களாவது வெளிவருவதற்குரிய அறிகுறிகள் காணப்படுகின்றன. அவைகளில் ஒன்று தலைமுறைகள்.
-
திரு. நீல. பத்மநாபன் எழுதிய சிறுகதைகள், கட்டுரைகள் முதலியவற்றை இதற்கு முன் வாசித் திருக்கிறேன். முக்கியமாக 'நான் என்ற சிறுகதை யைக் குறிப்பிட வேண்டும். அவருடைய கை எழுதி எழுதிப் பாகம் வந்த கைதான். ஆனால் அவர் இப்போது எழுதியிருக்கும் தலைமுறைகளை வாசித்தபோது, அது எனக்கு ஒரு பிரமிப்பையே உண்டாக்கிவிட்டது. நாவல் என்று சொன்னால் போதுமா? அசலான நாவல்.
ஒரு சமுதாயத்தாரின் வாழ்க்கையை, ஒரு குடும்பத்தை மையமாக வைத்து யதார்த்த ரீதியில் சித்திரிப்பதுதான் தலைமுறைகள். ஒரு சமுதாய மென்றால் அதற்கென்று தனியான ஆசாரங்கள், கட்டுப்பாடுகள், நம்பிக்கைகள், மூடநம்பிக்கைகள் என்னவெல் லாமோ இருக்கும். அதற்குள்ளே கலியாணம், இழவு, விளையாட்டு, விழா என்று பல சம்பவங்கள் நடக்கும். ஆட்கள் அப்பாவிகள், பொல்லாதவர்கள், பிள்ளைகள், பெரியவர்கள் என்று பலர் இருப்பார்கள். இப்படி ஒரு வகைமையை (variety) தன்னுள் கொண்டு முழுமை அல்லது பூரணத்துவம் பெற்று விளங்குகிறது நாவல். பாத்திர சிருஷ்டியிலும் சம்பவ வர்ணனைகளிலும் ஓர் அழுத்தத்தையும் நுண்மையையும் கண்ணாடியில் கீறிய வண்ணக் கோடுகள் போல் காணலாம். பாத்திரங்கள் நாம் வாழ்க்கையில் பார்க்கும் சாதாரண மனிதர்களாய், குறை நிறை உள்ளவர்களாய், உயிருள்ளவர்களாய் நடமாடுகிறார்கள். அவர் கள் பேசும் மொழியோ இரணியல் செட்டிமார்கள் இன்று பேசி வரும் மொழியாக இருக்கிறது. அதனால் கதை உண்மையாகவே நடந்தது என்ற பிரமை உண்டாகிறது. உணர்ச்சிகளையும் மிகை படாமல் அமர்ந்த குரலில் வெளியிட்டிருப்பது இன்னொரு சிறப்பு. கதையைச் சொல்லும் முறையிலும் அதாவது பார்வை விஷயத் திலும் பெரும்பாலும் திரவி' என்னும் கதாபாத்திரத்தின் நினைவோட்டமாகவும் கூற்றாகவும் சில இடங்களில் ஆசிரியர் கூற்றாகவும் அமைத்து ஓரளவு உத்தி விசேஷத்தையும் காட்ட முயன்றிருக்கிறார் ஆசிரியர்.
இவ்வளவோடு விட்டிருந்தால் ஒரு நல்ல கதை என்று சொல்லி நாமும் விட்டுவிடலாம். கதை இரணியல் கீழத்தெரு வில் நடக்கிறது. கதை நடந்த காலமும் கூடிப்போனால் எழுபது வருஷ எல்லைக்குள்தான். அதாவது திரவியின் ஆச்சி பிறந்து இறப்பதுவரை. கதையும் இரணியல் ஊரிலுள்ள கீழத்தெரு வாசி களான செட்டிமார்களைப் பற்றியதே. மொழியும் அவர்கள் பேச்சு மொழிதான். இந்தக் காரணங்களால் நாவல் குறுகிய எல்லைக் குள் நின்றாலும் அதற்கு ஓர் அகண்ட தன்மை இருக்கிறது. கருப்பொருளாலும் தனிப்பட்ட ஒரு வாழ்க்கைத் தரிசனத்தாலும் கனத்தாலும் (பரிமாணம்) இது ஒரு நல்ல நாவல் மட்டுந்தான் என்ற தன்மையைக் கடந்து நிற்கிறது.
சீர்கெட்ட ஒரு சமுதாயத்திலிருக்கும் அப்பாவிகளுக்கு, அதிலிருந்து வெளியேறினாலல்லாமல் விடுதலை இல்லை என்பதுதான் கதையின் கருப்பொருள். இது இரணியல் கீழத் தெருவுக்கு மாத்திரம் உரியதல்ல. கதை நடக்கும் காலம் சுமார் எழுபது வருஷங்களோயானாலும் கதையின் ஆதி - ஆணிவேர் பழங்காலத்தைச் சேர்ந்த, காவிரிப்பூம்பட்டினம்வரை ஆழமாகப் போகிறது. கதையின் முடிவாகிய நுனிக்கிளையும் தேசங்கடந்து செங்கோட்டைக்குச் சென்றுவிடுவதாலும் கதையின் முடிவென்ன என்று கூறாததாலும் எதிர்காலம் எல்லையற்று நிற்கிறது. காவிரிப் பூம்பட்டினத்துச் செட்டிமார்கள் வந்து தங்கிய ஏழுர்களில் மட்டு மல்ல, அந்த இடங்களையுந் தாண்டி செங்கோட்டையிலும் கதை கிளை வீசுகிறது. செட்டிமார்கள் மாத்திரமல்ல அவர்களோடு நாயர், நாடார் முதலிய பல இனத்தவர்களும் இங்கு பிணைக்கப் படுகிறார்கள்.
மனித சமூகத்தில் நல்லவர்களும் இருக்கிறார்கள், கெட்டவர் களும் இருக்கிறார்கள்; நல்லவர்கள் கஷ்டப்படுகிறார்கள்; கெட்டவர்கள் நல்லவர்களை நலியச் செய்கிறார்கள், வாழ்கிறார் கள்; மனித சமூகம் இதைச் செயலின்றிப் பார்த்துக்கொண்டிருக் கிறது என்று சொல்லத் தோன்றுகிறது கதையை மேலெழுந்த வாரியாகப் பார்க்கும்பொழுது. ஆனால் மனித இனம் அப்படி ஒன்றும் சீர்கெட்டுப் போய்விடவில்லை. தேங்கிக் குட்டையாகக் கிடக்கும் சமூகத்தைவிட்டு நீங்கி வெளியேறினால், நல்வர்கள் இருக்கிறார்கள், நன்மை உண்டு என்ற நம்பிக்கை, எதிர்பார்ப்பு இவற்றில் கதை முடிகிறது. உண்மையில் நல்லவர்கள் இருக்கி றார்களா, அவர்களால் நம்பிக்கை உண்டா என்பது வேறு விஷயம். ஆனால் ஆசிரியர் வாழ்க்கைக் காட்சி இதுதான் என்று எனக்குத் தோன்றுகிறது. பாப்பாத்தியின் புருஷன் குஷ்டரோகி. அதனால் பாப்பாத்திக்கும் அவர் வேண்டாம், அவர் மகனுக்கும் அவர் வேண்டாம். அவர் சமூகத்துக்கு வெளியே வைத்திருந்த அச்சி, கிருஷ்ணக்காரத்திதான் அவருக்கு அடைக்கலம் கொடுத்தாள் என்று காட்டுகிறார் ஆசிரியர். வேறு சமுதாயத்தவ ரான மோசஸ் வாத்தியார் வழியாகத்தான் திரவிக்கு ஒருவகை யான ஆறுதலும் செங்கோட்டைக்குத் தப்பிப்போக ஒரு போம்வழியும் கிடைத்தது என்பதும் இதையே குறிப்பாக உணர்த்துகிறது. ஆனால் இந்தக் காட்சி கலாரூபமாக நன்றாக அமைந்துவிடுகிறது.
இவ்வளவும் இப்போதைக்குப் போதுமானது, இந்த நாவல் ஒரு நல்ல நாவல் என்ற தன்மைக்கு அப்பால் சென்று நிற்கிறது என்பதைச் சுட்டிக்காட்ட.
இந்த நாவலை வாசித்ததை எனக்கு வாய்த்த ஒரு நல்ல அநுபவமாகக் கருதுகிறேன்.
திருவனந்தபுரம்
செ. ஜேசுதாசன்
06.07. 1967
தமிழ்ப் பேராசிரியர்
யூனிவர்ஸிற்றி காலேஜ்
ஒன்று
சிங்க வினாயக தேவஸ்தானத்துப் பிள்ளையார் கோயில் நிர்மால்ய பூஜையின் தீபராதனையில் எழும்பிய மணியோசைச் சிதறல்கள் மார்கழிமாத வைகறைக்குளிரின் ஊடே கன்னங்கரு இருளில் பிரவகித்துக் கிழக்கு நோக்கி நின்ற கோவிலை சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கி, கிழக்கு மேற்கில் கிடந்த நெடுந்தெரு முனையில் சென்று சேருகையில், ஆன்மீகத்தின் அடக்கத்தொனி மட்டுமே மிஞ்சியிருந்தது.
தெருவில் எதிரும் புதிருமாய் நின்ற வீடுகளில் அதிகமும் பழைய காலத்துச் சின்ன வீடுகள்தான். இடைஇடையே ஒரு சில வீடுகளில் நாகரீகம் அழமாட்டாக் குறையாகத் தன் கைவண்ணத்தைக் காட்டிவிட்டுச் சென்றிருந்த போதிலும் மின்சாரம் போன் வசதிகள் இன்னும் அந்தத் தெருவினுள் நுழையவில்லை.
தெருமுனையில் வடக்குப் பார்த்து ஒரு சின்னப் பழங்கால வீடு. காலப்பழக்கத்தினால் கறுத்துச் செல்லரித்துவிட்ட ஒன்றை வெளிக்கதவு, உள்ளே கதவைத்தாண்டி வெளி முற்றத்திற்குப் போகும் வழிபோக இரு பக்கங்களிலும் படிப்புரை, அதாவது ஒட்டுத்திண்ணை, வலப்புறம் சாணி மெழுகி விஸ்தாரமாகக் கிடந்த ஒரு வெளித் திண்ணை… அதில் ஒருக்களித்துப் படுத்திருந்த உண்ணாமலை ஆச்சி, கோவில் மணியோசையின் அடக்க அரவத்தில் வழக்கம் போல் விழித்துக்கொண்டு,
ஆண்டவனே…. எம் பெருமானே… சிங்கவினாயகா!
என்றெல்லாம் தன் சோம்பல் முறிப்பு, அடுக்கடுக்கான கொட்டாவி இவைகளின்கூட சொல்லிவிட்டு. எழுந்து இரண்டு கால்களையும் தரையில் நீட்டிக்கொண்டு உட்கார்ந்து கொண்டாள்.
வீட்டின் பின்பக்கக் களத்தில் காலூன்றி இன்னும் வெளிச்சம் வராத திறந்த முற்றத்தின் மேலே தெரிந்த கருமையான ஆகாசப் பிண்ணணியில் பூதாகரமான தலையை மட்டும் எட்டிக் காட்டும் தென்னை மர ஓலைப் பீலிகளை, மறக்காமல் இருகண்களையும் நன்றாகத் திறந்து வைத்துப் பார்த்துக் கொண்டாள். காலையில் ஏதாவது தரித்திரத்தின் முகத்தில் விழித்து, அனர்த்தங்களை வரவழைக்க அவளுக்கு சம்மதமில்லை.
தெங்கு கற்பக விருட்சமல்லவா? காலம்பரக் கண்விழிக்க அதைவிட ஐசுவரியமானது வேறே என்னத்தெ இருக்க முடியும்?
என்பதுதான் உண்ணாமலை ஆச்சியின் திடமான நம்பிக்கை!
குளிரால் விறைத்துப்போய்க் கிடந்தது கால். இடதுகாலில், ‘சின்னப்புள்ளையில் வள்ளியாற்றில் குளிச்சதில் கிடைச்ச சம்பாத்தியம்’ என்று ஆச்சி பெருமைப்பட்டுக் கொள்ளும் ‘மந்து’, அதாவது யானைக்கால் வியாதி. மாசமொருமுறை வரும் ‘வாதப்பனி’யால் அது விருத்தியாகி, நாளொருமேனியும் பொழுதொரு வண்ணமுமாகப் பெருகிவிட்டிருந்தது. ஆச்சியின் சிகப்பு நிறத்தாலும் இடைவிடாத எண்ணெய் அபிஷேகத்தாலும் அது மினுமினுவென்றிருந்தது.
இன்றுவரை இடைவெளியில்லாது தொடர்ந்துகொண்டிருக்கும் அசுர உழைப்பின் தீட்சண்யத்தில், தள்ளாமை காரணமான வாதத்தின் தொல்லையும் தன்பங்குக் கடனைச் செய்துகொண்டிருந்ததால் சுள்சுள் என்று உளைந்துகொண்டிருந்த கால்களை ஒன்று மாற்றி ஒன்றாக இருந்த இருப்பிலேயே, வெருவிரல் நுனிமுதல், ஒரு காலத்தில் இரட்டை நாடியாக வாட்டசாட்டமாக இருந்து ஆட்சிபுரிந்து, இப்போது குச்சு போலாகிவிட்டபோதிலும், கொஞ்சம் நஞ்சம் சதையின் அம்சம் மீதியிருந்த தொடைவரை தடவிவிடத் தொடங்கினாள். ஆச்சி உறங்கினாள் என்றால், உறங்கின ஆச்சி விழித்தாள் என்றால், வழக்கமான இந்த ஆசன அப்பியாசமும் தவறாமல் நடைபெற்றிருக்கும் என்று அர்த்தம்..!
ஆச்சியின் பக்கத்தில் போர்வைக்குள் முடங்கிக் கிடந்தவாறு குளிரோடு மல்லிட்டுக் கதகதப்புச் சுகத்தை அனுபவித்துக் கொண்டிருந்த ஆச்சியின் அருமாந்தப் பேரன் திரவியம், ஆச்சீ அதுக்கிடேலெ மணி அஞ்சாயிட்டா?
என்று போர்வையில் வாய்வரை மட்டும் இடைவெளி கொடுத்துக் குளிரில் உறைந்த சத்தத்தை வெளியேற்றினான்.
ஆமலே! எந்தி கண்ணூ, எந்திச்சுப் பொஸ்தகத்தை எடுத்துப் பாடி மக்கா!
என்று தன் அப்பியாசத்தைச் சற்று நிறுத்திப் பேரனுக்கு மிகுந்த பாசத்தோடு ஆலோசனை கூறிவிட்டு மீண்டும் கர்மத்திலேயே கண்ணாயினாள் ஆச்சி.
என்ன வெறயிலு! ஒனக்கு வெறைக்கல்லையா ஆச்சி? உம்…உம்…
என்று மார்கழி மாதக் குளிரின் தாக்குதலை எதிர்கொள்ள முடியாத தன் அசத்த நிலைமையைப் பாட்டியிடமும் வெளியிட்டான் பேரன் திரவியம்.
லே….லே… இது முத்தின தேகம்லே! நேத்தைக்குப் பெஞ்சமழைலே இண்ணைக்க மொளச்ச குருத்தில்லே நீ!
என்று ஆதங்கத்தோடு சொல்லுவதற்கிடையில் தன் கருமத்தைக் கொஞ்சம் நிறுத்திப் பேரனின் தேகத்திலிருந்து சிறிது விலகிக்கிடந்த போர்வையை இழுத்துப் போர்த்தினாள் ஆச்சி. பின்தடவும் படலம் மீண்டும் தொடர்ந்து நடைபெறுகிறது.
இப்படி குறைந்தது கால் மணி நேரமாவது தடவிவிட்டு விட்டு எழுந்துவிட்டாளானால், பின் ராத்திரி பதினொன்று மணிக்கோ பன்னிரண்டு மணிக்கோ சில சமயங்களில் ரெண்டு மணிக்கோ.
கடவுளே… சிங்க வினாயகா!
என்று வந்து தலைசாய்ப்பது வரையில் ஆச்சிக்கு வேலை, வேலை! ஒழியாத ஒரே வேலைதான்!
ஒன்று பாக்கியில்லாமல் நரைத்து வெளுத்துப்போன தலையில் அப்பப்போ உதிர்ந்ததெல்லாம் போக, ஏதோ கொஞ்சம் முடிதான் பாக்கி இருந்தது. திருநீறு போட்டுப் போட்டு, அதன் சாம்பல் கலவையின் நிறமும் வரியும் சுத்தமாய்ப் பதிந்துபோன நெற்றியும் குழிந்த கண்களும் உலர்ந்து ஓடாகிப்போன உதடுகளும் இதையெல்லாம் மீறி ‘என்னைப் பார்’ என்று பழைய கம்பீரம் குறையாமல் எழுந்து நின்ற பெரிய மூக்கும் அதன் விஸ்தாரமான துவாரங்களும் எப்பவோ சின்ன வயசில் வந்து போன அம்மை நோயின் ஞாபகர்த்தமாக முகத்தில் அங்கங்கே சிதறிக்கிடந்த அம்மைத் தழும்புகளும் இதுவரை ஆடி அசையாமல் நிச்சலமாக ஒரு நொடிப்பொழுதாவது இருந்திருக்குமா என்று சந்தேகம் வரும்படி, வடிந்த காதில் சதா ஆடிக்கொண்டிருக்கும் பாம்படங்களும், சேர்க்கையில் - அதுதான் உண்ணாமலை ஆச்சியின் முகம்! மொத்தத்தில், ஆண்டுக் கணக்கில் ஊறப்போட்டு இலையில் எடுத்து வைத்த வடுமாங்காயைத்தான் ஆச்சியின் முகத்தைப் பார்க்கும்போது திரவியத்துக்கு ஞாபகம் வரும்!
எனக்கு ஓர்மை வந்தது முதல் இந்த ஆச்சி இப்படி வெள்ளைச் சீலைதானே உடுக்காள்!
என்று ஆச்சரியப்படும் திரவியத்தின் மனம், ஆச்சி குனிஞ்சு, வீட்டு வேலைகள் செய்யும்போது அவள் நெஞ்சு படும் அவஸ்தையான அவஸ்தையை எல்லாம் பார்க்கையில், இவளுக்கும் ஏன் அம்மையை, அக்காளைப் போல ஜம்பர் போடப்படாது?
என்று எத்தனையோ தடவை கேட்டிருக்கிறது.
வெளித் திண்ணையைத் தாண்டி விஸ்தாரமான முற்றம். முற்றத்தைத் தாண்டி முற்றத்தின் இந்தப் பக்கம் இருப்பதைக் போலப் படிப்புரை – ஒட்டுத்திண்ணை. அதில் கறுகறுவென்று இரண்டு மரத் தூண்கள், அரிப்பு எடுக்கும் வீட்டில் உள்ள அத்தனைபேர்களுடைய முதுகுக்கும் முதுகு வேர்வைக்கும் எல்லாம் பதில் சொல்லிச் சொல்லி மொழு மொழுவென்று அம்மிக் குழவி மாதிரி இருந்தன அவை.
அந்தத் திண்ணையில் விரித்த பாயில் கிடந்த திரவியத்தின் அப்பா நாகருபிள்ளை, கடவுளே… விக்கினேஸ்வரா!
என்று சொல்லி சோம்பல் முறித்துவிட்டுப் பாயில் எழுந்து உட்கார்ந்தார்.
வயது நாற்பத்தி அஞ்சு ஆகியும், இன்னும் கருமையை இழக்காத தலைமயிர். கசப்பையும் விரக்தியையும் மீறி நின்ற சாந்த பாவம் அந்த முகத்திலிருந்து தெறித்தது.
அவன், தொரைக்க தேகமும் மொகமும் எல்லாம் எனக்கப் போல இல்லை. எல்லாம் அவன் ஐயாவைப் போலத்தான்!
என்று உண்ணாமலை ஆச்சி அடிக்கடி பெருமிதப்பட்டுக் கொள்ளும் உழைப்பால் கட்டுப்படுத்தப்பட்ட சரீரம். நாகருபிள்ளை என்ற பெயர் தன் மாமனாருடைய பெயர். ஆதலால் தொரை என்று செல்லப் பெயரில்தான் ஆச்சி தன்மகனை அழைப்பது வழக்கம்.
அம்மா… தெரவி இன்னும் எந்திக்கிலையா? அவனை எளுப்பி விடு. எந்திச்சு படிக்கச்சொல்லு.
பாயிலிருந்து கீழே முற்றத்தில் இறங்கித் தூக்கக் கிறக்கத்தில் இடுப்பிலிருந்து நடுவிப்போய்விட்ட வேட்டியை உதறி உடுப்பதற்குள் கிழவி இருந்த திசையைப் பார்த்து, காலையில் முதலில் பேசுவதால் தொண்டையில் எழும் கரகரப்போடு சொன்னார் நாகருபிள்ளை.
உம்… அவனுக்கு வெறைக்காதா? புள்ளை கொஞ்சம் கூட ஒறங்கட்டும்லே
என்று ஆச்சி பேரனுக்காக முணுமுணுத்தது அவர் செவியில் விழுந்ததோ என்னமோ.
அவர் வீட்டினுள் தாழ்ப்பாள் போட்டிருந்த நடுக்கதவை தட்டினார்.
அந்தக் கதவு இருந்தது நிரைப்பலகையால் ஆன திண்ணைச் சுவரில். அந்தக் கதவின் இருபக்கங்களிலும் இரண்டு சிறு கதவுகள் வேறு உண்டு. அந்தச் சிறிய கதவுகளுக்குக் கூடிப்போனால் மொத்தம் இரண்டு அடி உயரம், இரண்டடி அகலம் தான் இருக்கும். அந்த இரு கதவுகள் வழியும் கீழே உட்கார்ந்தவாறு போக வேண்டுமானால்கூட சிரசை எத்தனைக்கு முடியுமோ அத்தனைக்கு நமஸ்கரிக்காவிட்டால் தலை தட்டும். ஜன்னலைவிடச் சிறிதான இம்மாதிரிக் கதவுகள் அந்தத் தெருவீடுகளில் ரொம்ப சாதாரணம். அதன் தாத்பரியம் இதுதான்.
வீட்டில் ஆண்களும் பிராயம் மிகுந்த பொம்பளைகளும் வெளியில் போய்விட்டால், ‘குமரிப்பிள்ளை’ எல்லாக் கதவுகளையும் உள்ளேயிருந்து அடைத்து, தாழ்ப்பாளையும் போட்டுக்கொண்டு பத்திரமாக இருக்கவேண்டும். அந்த நேரத்தில்