Manathil Sugam Malarum
By GA Prabha
4.5/5
()
About this ebook
Reviews for Manathil Sugam Malarum
7 ratings0 reviews
Book preview
Manathil Sugam Malarum - GA Prabha
http://www.pustaka.co.in
மனதில் சுகம் மலரும்
Manathil Sugam Malarum
Author:
ஜி.ஏ.பிரபா
G.A.Prabha
For more books
http://www.pustaka.co.in/home/author/ga-prabha
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
அத்தியாயம் 16
1
உன் செயல்கள், இனிமையோ
இனிமையற்றவையோ உன்னிடமே
திரும்பி வரும்.
பூக்களில் பனி தேங்கி நின்றது.
மெல்லிய இதழ்களில் வைரத் துணுக்குகளாய், துளிச்சுடராய் மின்னியது. தெரு விளக்கின் ஒளி பட்டுச் சுடர் விட்டது.
வெண்ணிலா, மார்பின் குறுக்கே கைகளைக் கட்டியபடி மெதுவாக நடந்தாள். தோட்டத்துக்கு நடுவில் கார் போகும் பாதை. பாதையின் இருபுறமும், சின்னச்சின்ன செங்கல் பதித்து, முடிவிலும், ஆரம்பத்திலும் மெர்க்குரி டூம் விளக்கு ஒளிர்ந்தது.
வெண்ணிலா கேட்டை நெருங்கினாள்.
கேட் திறந்திருந்தது.
வாட்ச்மேன் பக்கெட் தண்ணீரை வீசி, வீசி வாசல் தெளித்துக் கொண்டிருந்தான். கேட்டை ஒட்டி சின்ன சுவற்றில் பதித்த பிள்ளையார் சிலை.
வெண்ணிலா அதன் முன் விளக்கு ஏற்றினாள்.
"மூலக் கனலே முழுமுதற் பொருளே
ஞானக் கணபதியே நமஸ்காரம்"
கைகூப்பி வணங்கினாள். கண்மூடி நின்றாள்
வாட்ச்மேன் கேட்டை அகலத் திறந்தான்.
காய்கறிகள், பால்கேன் அடங்கிய மினிடோர் வண்டி உள்ளே போனது. பளீர் பளீர் என்று ‘அணுக்ரஹ’த்தின் முன்புற விளக்குகள் எரிந்தது. அதன் அருகே இருந்த வீட்டின் முன் வாயில் திறந்து பசுபதி வெளியில் வந்தார்.
குட் மார்னிங் அங்கிள்
- வெண்ணிலா
வெரி குட்மார்னிங்
- பசுபதி படி இறங்கி ஆஸ்ரமத்தின் முன்வாயிலை நெருங்கினார்.
எல்லாம் சரி பாத்துரு வெண்ணிலா
ஓ.கே. அங்கிள்.
ஏம்பா பசும்பால் ரெண்டு லிட்டர் இருக்கா?
இருக்கு ஸாமீ?
ஏன் அங்கிள் போதுமா? நாலு குழந்தைகள்
வெண்ணிலா சந்தேகமாக கேட்டாள்.
பத்து நாள் குழந்தைகள் ரெண்டு, மூணுமாசக் குழந்தைகள் ரெண்டு இருக்கே அங்கிள்
காலைல ரெண்டு லிட்டர் போதும்மா. பத்துமணிக்கு புதுசாக் கறந்து அஞ்சு லிட்டர் எடுத்துட்டு வருவான். பால் பவுடர் டப்பாவும் வாங்கி இருக்கேன்
அப்ப சரி
- வெண்ணிலா எல்லாவற்றையும் சரி பார்த்தாள். நாலு வேலையாட்கள் எல்லாவற்றையும் உள்ளே கொண்டு போனார்கள். வெண்ணிலா பின் தொடர்ந்தாள்.
மிகப்பெரிய ஹால், இரண்டு பக்கமும். மூன்று மூன்றாக ஆறு அறைகள். அறைகள் இரண்டிரண்டு பேராக பன்னிரண்டு முதியோர்கள். அறுபதுக்கு மேல் நான்கு பெண்மணிகள். எழுபதுக்கு மேல் ஆறு முதியவர்கள். எண்பது வயதில் படுத்த படுக்கையாய் இரண்டு பெண்மணிகள். எல்லாருமே விழித்திருந்தார்கள். அவர்களை கவனித்து, பணிவிடை செய்ய ஆதரவற்ற நடுத்தர வயதுப் பெண்கள் மூன்று பேர், வேலையாட்கள் நாலுபேர், சமையலுக்கு இரண்டு பேர் என்றாலும் எல்லாரும் எல்லாக் காரியங்களும் செய்வார்கள்.
பின்னாடி மிகப்பெரிய சமையல் கூடம். ஸகல நவீன வசதிகளுடன் இருந்தது. அதன் பக்கவாட்டில் குழந்தைகள் பிரிவு. சுற்றிலும் காற்றோட்டமும், வெளிச்சமும், வரக்கூடிய அமைப்பு. சின்னச் சின்ன கட்டில்கள் பத்து, தூளி ஆறு தொங்கியது. சிணுங்கும் குழந்தையை ஆட்டியபடி தேவகி.
பால் வந்துருச்சி தேவகி
இதோ போய் எடுத்தாறேன்.
நான் ஆட்டறேன். நீபோ
- வெண்ணிலா தூளியைக் கை மாற்றினாள். தேவகி சிறிது நேரத்தில் பால் பாட்டிலுடன் வர, வெண்ணிலா மாடி ஏறினாள்.
பத்து வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மாடிப் பகுதி. ஆறிலிருந்து பத்தாம் வகுப்பு வரை படிப்பவர்கள் இருபது பேர். கல்லூரி படிக்கும் பெண்கள் நாலு பேர். வேலைக்குப் போகும் பெண்கள் வெண்ணிலாவோடு சேர்ந்து மூணுபேர்.
பிளஸ்டூ தாண்டிய பசங்களை இங்கு வைத்துக் கொள்வதில்லை பசுபதி. பெண் குழந்தைகள் வளரும் இடம். சில பிரச்சினைகள் வரும் என்று தன் நண்பரின் ஆசிரமத்துக்கு அனுப்பி விடுவார். அங்கு ஆண், பெண் பகுதிகள் தனி.நூற்றுக்கு மேற்பட்டவர்கள் இருந்தனர். நிறைய நன்கொடைகள். அரசு ஆதரவுடன் செயல்பட்டு வந்தது. நிறைய வெளிநாட்டு ஆதரவு கிடைத்தது.
ஆனால் பசுபதி யாரிடமும் உதவி கேட்டதில்லை.
இந்த அணுக்ரஹமே அவருடைய சொந்த இடம். ஜமீன் பரம்பரை. இந்த பங்களா சுற்றி இடமும், சில லட்சங்களும் அவருடைய பங்காக வந்தது. பசுபதிக்கு புத்தக பதிப்பகம்.
சங்கரி பப்ளிகேஷன்ஸ் என்ற அவர் நிறுவனம்தான் தமிழ்நாடு முழுதும், பாடப்புத்தக விற்பனை செய்தது. பல மெட்ரிகுலேசன் பள்ளிகள் இவருடைய புத்தகங்களைத்தான் பின்பற்றியது. ஆறு ஆண்டுகளுக்கு முன், இனி புத்தக விற்பனை மூலம் சம்பாதித்தது போதும் என்று நிறுத்தி விட்டு, சுவாமி புத்தகங்கள், புராணங்கள், பழைய இலக்கியங்களை பதிப்பிக்க ஆரம்பித்து கோவை ஆர்.எஸ்.புரத்தில் கடை போட்டார்.
சுவாமி விக்கிரகங்கள், பூஜா பொருட்கள், ஸ்லோக புத்தகங்கள் என்று விற்பனை அமோகமாகப் பெருகி, பக்தி டிரேடர்ஸ் என்ற அந்த கடையின் கிளை இன்று சேலம், சென்னையிலும் கிளை பரப்பியிருந்தது. ஒரே மகன் ராஜன் சி.ஏ. படித்துவிட்டு, ஆடிட்டராக தொழில் புரிகிறான்.
காலி இடத்தில் தன் குடும்பத்திற்கு வீடு கட்டிக் கொண்டு, மீதி பங்களாவை சிறிது மாற்றம் செய்து, அனாதை இல்லமாக்கினார். அவருடைய அத்தை முதலில் வந்தாள். கோவில் வாசலில் வெண்ணிலாவை கண்டெடுத்து தூக்கி வந்தார். இருபது வருடங்களில் பலரின் உதவியால் வளர்ந்த நல்ல நிலையில இருக்கிறது.
நேர்மையான நிர்வாகம், தரமான, கவனமான, அக்கறையான பராமரிப்பு என்று மிக நன்றாக வளர்ந்து வருகிறது. அன்பான அண்ணா, அப்பா, தாத்தா என்று ஸகல உறவாய் பசுபதி - அவர் மனைவி சங்கரி, மகன் ராஜன்.
குடும்பம் என்ற அமைப்பின் அன்பும், அனுசரணையும் இங்கு கிடைக்கிறது.
வெண்ணிலா இங்கேயே வளர்ந்து, பி.எஸ்.ஸி முடித்தாள். ஒரு வெளிநாட்டு வங்கியில் வேலை. உடன் வேலை பார்க்கும் ஜெகனும், இவளும் ஒருவரை ஒருவர் விரும்புவதால், திருமணம் பேசி முடிக்க பசுபதி இன்று ஜெகன் வீட்டிற்குச் செல்கிறார்.
வெண்ணிலா குளித்து, காலை பிரார்த்தனையில் கலந்து கொண்டாள். சுடச்சுட இட்லியும், கோதுமை உப்புமாவும் இருந்தது. பசுபதி வீட்டிற்கும் இதே சாப்பாடுதான்.
வெண்ணிலா கொண்டுபோய் தந்துடறியா?
- சமையல் அம்மா.
கொடுங்க
- வாங்கிக் கொண்டாள்.
சாப்பாடு வந்தாச்சா
- பசுபதியின் மனைவி சங்கரி. புன்சிரிப்போடு எல்லாவற்றையும் வாங்கி டைனிங்க் டேபிளில் வைத்தாள். புன்சிரிப்புடன் களையான முகம்.
ராஜன் எங்கே ஆண்டி!
நாளைலேர்ந்து குழந்தைகளுக்க காலாண்டுத் தேர்வு. டெஸ்ட் வைக்கிறேன்னு போனான்.
தினசரி காலை ஏழு முதல் எட்டு மணிவரை ராஜன் டியுசன் எடுப்பான். மாலை வெண்ணிலாவும், மற்றொரு பெண்ணும் வகுப்பு எடுப்பார்கள்.
ராஜன் டென்ஷனோடு இருந்தான்.
ஏன் அடுப்புல உட்கார்ந்த மாதிரி இருக்கே?
வெண்ணிலா செட்டுக்குள் நுழைந்தாள்.
"நாளைக்கு குவார்டர்லி எக்ஸாம்.