Thalaa Oru Thota
By Devibala
4.5/5
()
About this ebook
Reviews for Thalaa Oru Thota
2 ratings0 reviews
Book preview
Thalaa Oru Thota - Devibala
http://www.pustaka.co.in
தலா ஒரு தோட்டா
Thalaa Oru Thota
Author:
தேவிபாலா
Devibala
For more books
http://www.pustaka.co.in/home/author/devibala
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
அத்தியாயம் 16
அத்தியாயம் 17
அத்தியாயம் 18
1
அ
வளை ஒரு அதிர்ச்சியுடன் பார்த்தான் பாலாஜி.
நி…நித்யா நீ… நீ… நிஜம்மாவா சொல்றே?
அவள் தலைகுணிந்து நின்றாள். நீட்டிய அவளது கைகளில் அந்தத் திருமண அழைப்பிதழ் இருந்தது. கன்ன மேடுகளில் கண்ணீர் நீளமாகக் கோடுபோட்டது.
நீ… நீ… கூடவா இதைத் தடுக்க முயற்சி செய்யலை?
சற்றே ஆவேசத்துடன் நிமிர்ந்தாள் அந்த நித்யா.
எப்படித் தடுக்க முடியும் பாலா நான்? உன்னை மூணு வருஷமாக் காதலிக்கிறேன். என் காதலைக் கூட வீட்ல எதிர்க்கலை. என்னோட எந்த ஓர் ஆசைக்கும் எங்கப்பா அணை போட்டதில்லை. அவர் கேட்டதும் நியாயம் தானே?
பாலாஜி அவளை நிமிர்ந்து பார்த்தான்.
தன் மகளுக்குக் கணவனா வரப் போறவன் நாட்டை ஆளணும்னு எங்கப்பா ஆசைப்படலை. அட ஒரு பெரிய அதிகாரியா இருக்கணும்னு கூட நினைக்கலை. குறைஞ்ச பட்சம் ஒரு குமாஸ்தா… அதுகூட வேண்டாம்… ஒரு ப்யூன் வேலையாவது உனக்கு வேண்டாமா பாலா?
நானும் பட்டம் வாங்கி அஞ்சு வருஷமா வேலை தேடி அலையறேன் நித்யா. கிடைக்கலையே! நான் படறபாடு உனக்குத் தெரியாதா?
தெரியும் பாலா! உனக்காக இன்னும் பத்து வருஷங்கள் கூட நான் காத்திருக்கலாம். ஆனா அதுவரைக்கும் அப்பாவால எப்படி பாலா பொறுமையா இருக்கமுடியும்?
நீ சொல்லக்கூடாதா நித்யா?
ஸாரி பாலா. எதுக்குமே ஒரு லிமிட் உண்டு. எங்கப்பாவும் அந்த எல்லைக்கு வந்தாச்சு. இத்தனை காலம் என் பேச்சை அவர் மதிச்சார். இனி அவர் எண்ணங்களை நான் ஏத்துக்கணும். அதுதான் அந்த உறவுக்கு நான் தரக்கூடிய மரியாதை. அவர் தீர்மானிச்ச வரனுக்கு கழுத்தை நீட்ட நான் தயாராயிட்டேன்.
நித்யா…!
என்னை மன்னிச்சிரு பாலா. இந்தா என் கல்யாணப் பத்திரிக்கை. மனசுல தெம்பு இருந்தா, வந்து என்னை வாழ்த்து. எனக்கு வேற வழி தெரியலை.
நீ ஒரு துரோகி!
இல்லை பாலா. யதார்த்தமா யோசிக்கற பெண். காதலிச்சுட்டு, கவிதையை சுவாசிக்க முடியாது. நிஜத்துக்குத் திரும்பும் போது வாழ்க்கை நரகமாயிடும். ப்ளீஸ்… புரிஞ்சுக்கோ!
இன்னொருத்தன் கூட நிம்மதியா உன்னால வாழ முடியுமா நித்யா?
நிச்சயம் முடியும் பாலா! மனசுல தெளிவு இருந்தா எதுவுமே சாத்தியம்தான். நான் வர்ரேன்.
பதிலை எதிர்பாராமல் நித்யா போய்க் கொண்டிருந்தாள். இருட்டத் தொடங்கிவிட்டது. கடல் அலைகள் கருநாகம்போல் புஸ்புஸ்ஸென சீறிக்கொண்டிருக்க, பாலாஜி தொய்ந்த நடையுடன் சாலைக்கு வந்துகொண்டிருந்தான்.
உயிருக்குயிராய்ப் பழகிய நித்யா நாளை மாற்றான் மனைவி. அவள் ஒருத்திதான் என்னைப் புரிந்து கொண்டவள். அவளும் விலகிவிட்டாள்.
மனசு வெறுத்துப் போனது. ஆத்திரம் வந்தது. அழுகை வந்தது. மார்புக் கூட்டில் அமிலம் கொட்டியது போல பற்றி எரிந்தது. வெகுநேரம் சாலையோரம் நின்றான்.
பல்கலைக்கழகம், விளக்குகளை அணிந்து கொண்டிருந்தது. ஆவேசமாக வந்தது பாலாஜிக்கு.
இங்கு பட்டம் பெற்று என்ன லாபம் எனக்கு? பணமில்லை! சிபாரிசில்லை. ஐந்து வருடங்களாக அலைந்து திரிந்தும் ஒரு வேலை… ஒரு வேலைகூட கிடைத்தபாடில்லை.
பத்தரை மணிக்கு வீட்டுக் கதவைத் தட்டினான்.
திறந்தவள் அண்ணி.
உள்ளே போய் கை, கால், முகம் கழுவிக்கொண்டு உணவு மேஜைக்கு வந்தான் பாலாஜி.
தட்டை வைத்துச் சோற்றைப் பரிமாறினாள் அண்ணி. பிசைந்து ஒரு கவளம் வாய்க்கு பாலாஜி கொண்டு போக
ஒரு நிமிஷம்!
குரல் கேட்டு நிமிர்ந்தான்.
அண்ணன் தான்.
உன்னால ஒரு வேலையைத் தேடிக்க முடியலை. அஞ்சு காசுக்கு உபயோகமில்லை. அட, உன் பணம் வந்து நாங்க மாளிகை கட்டப்போறதில்லை. உதவி இல்லைன்னாலும் உபத்ரமாவது செய்யாம இருக்கக் கூடாதா?
என்னங்க. சாப்பிடற புள்ளையை…
நீ இருடி! ஏண்டா! அப்படி என்ன தலை போற வேலை உனக்கு! ஆடி அசைஞ்சு ராத்திரி பத்து மணிக்கு மேல வீட்டுக்கு வர்ற? ஒரு நாளைப் போல உனக்கு சோறு போட்டு, அந்தப் பாத்திர வகையறாக்களை சரிப்படுத்தி, உங்கண்ணி, படுக்க வரும்போது நடுராத்திரி. காலைல சீக்கிரம் எழுந்திருக்கணும் அவளுக்கு. உடம்பு தாங்குமா?
நீங்க பேசாம இருக்கமாட்டீங்களா?
இனிமே என்னால பொறுத்துக்க முடியாது. தலைக்கு உசந்துட்டா. ஆம்பளைக்கு அதிகபட்சம் இருபது வயசுதான் கெடு. எத்தனை நாள் பிறத்தியார் கால்ல நிக்கறதா உத்தேசம்?
தட்டில் கைகளைக் கழுவினான் பாலாஜி.
ரோஷம் இந்தச் சாப்பாட்ல மட்டும் இருந்தாப் போதும்னு நினைப்பா?
அய்யோ! என்னாச்சு உங்களுக்கு? ஏன் இப்படியெல்லாம் பேசறீங்க இன்னிக்கு?
பாலாஜி சடாரென அங்கிருந்து விலகி, மொட்டை மாடிக்குப் போய்விட்டான். ஒற்றை நட்சத்திரம் அவனைப் பார்த்துக் கண்ணடித்தது.
தரையில் மல்லாந்து படுத்தான். காற்றில் குளிர் இருந்தது. ஓரிரு மழைத் துளிகள் மார்பை விசாரித்தன.
ஆரம்பம் முதலே அண்ணனிடம் பாசம் கிடையாது. அண்ணி என்ற தெய்வம்தான் அவனுக்கு ஆதரவு. எத்தனைக் காலம் அவளுக்குப் பாரமாக நான் இருப்பது?
ஒவ்வொரு வேலைக்கும் விண்ணப்பித்து, அது தொடர்பான தேர்வு எழுத, நேர்முகம் காண இப்படிச் சகல செலவுகளுக்கும் அண்ணிதான் பணம் தருகிறாள். ஒவ்வொரு முறையும் பணத்துக்கு அவள் கையை எதிர்பார்க்கும்போது கூசுகிறது.
பேப்பர் போடுவது, பால் சப்ளை என்று சற்று கீழே இறங்க, குடும்ப கௌரவமும் பட்டப் படிப்பும் அனுமதிக்க வில்லை.
இரண்டுங்கெட்டான் நிலையில் தத்தளிப்பு.
‘என்னை விட மிகக் குறைவான மதிப்பெண்கள் பெற்ற ரமணிக்கு எப்படி வங்கியில் வேலை கிடைத்தது?’
கொஞ்சம்கூட ஆங்கில அறிவு இல்லாத அரவிந்தனுக்கு ரயில்வே உத்யோகம்.
‘அதெல்லாம் போகட்டும். காதலி கழற்றிக் கொண்டாயிற்று. அண்ணனும் அவமானப்படுத்தத் தொடங்கி விட்டான். என்ன செய்யப் போகிறாய் பாலா இனி?’
‘இனிமேல் இந்த வீட்டில் இருப்பது உசிதமல்ல. நாளை விடியலில் வெளியேறிவிட வேண்டும்!’
சட்டென விவேக்கின் ஞாபகம் வந்தது. ஒய்.எம்.சி.ஏ. விடுதியில் தங்கியிருக்கும் அவனது நண்பன். இருவரும் ஒன்றாகப் படித்தவர்கள். உயிருக்குயிராய் பழகியவர்கள்.
விவேக்கைப் பார்த்துப் பல மாதங்களாகி விட்டன. முகம் சுருங்காமல் பிரியம் காட்டும் தோழன் அவன் ஒருவன் தான்.
அதிகாலை மூன்று மணி வரை கொட்டக் கொட்ட விழித்திருந்தான் பாலாஜி.
எழுந்து குளித்து, தன் உடைகளை ஒரு பெட்டியில் அடுக்கத் தொடங்கினான்.
பாலா கிளம்பற நீ?
அண்ணியின் குரலில் பதட்டமிருந்தது.
தெரியலை அண்ணி.
இது என்ன பதில் பாலா?
இனிமே இந்த வீட்ல இருக்கறது சரியில்லை!
நான் உன்னை எதுவும் சொல்லலையே பாலா!
நீங்களும் பேசற நாள் ஒண்ணு வரலாம். அதற்குள் நான் வெளியேறிட்டா எனக்கு மரியாதை இல்லையா?
பாலா உங்…
ப்ளீஸ் அண்ணி! என்னைத் தடுக்காதீங்க. ஒருவேளை சமூகத்துல நான் நிமிர்ந்துட்டா முதல்ல உங்களைப் பார்க்கத் தான் வருவேன். இல்லாம போயிட்டா சேதி வரும். எனக்காக அழவும் நீங்க மட்டும்தானே? வரட்டுமா?
அண்ணன் உறங்கிக் கொண்டிருந்தான் உள்ளே. அண்ணி அவனை எழுப்புவது காதில் விழ, தெரு முனையைக் கடந்து கொண்டிருந்தான் பாலாஜி.
கூட்டமில்லாத பல்லவன்கள் சோம்பல் முறித்துக் கொண்டிருக்க, ஏறி உட்கார்ந்தான். கையிருப்பு நாலே ரூபாய்கள். மனது சூம்பிப் போனது.
ஒய் எம் சி.ஏ. வாசலில் இறங்கிக் கொண்டான். விவேக்கின் அறையில் விளக்கெரிவது தெரிந்தது. கதவு சாத்தியிருந்தது. ஓசைப்படுத்தினான். விவேக் திறந்தான்.
அட பாலாஜி! என்னடா இந்த நேரத்துல? உன்னைப் பார்த்து மாசக் கணக்கா ஆகுது. வா! வா!
என்ன இவ்வளோ சீக்கிரமா ஆபீஸ் கிளம்பிட்டியா?
இல்லை பாலா! ஊருக்குப் புறப்படறேன்.
அப்பா அம்மா சௌக்யமா? தங்கச்சி எப்படி இருக்கு விவேக்?
விவேக்கின் முகம் சட்டென இருண்டது.
என்னடா ஆச்சு?
வேணாம் பாலா இப்பத்தானே நீ வந்திருக்கே? என்னை எதுவும் கேக்காதே! ப்ளீஸ்.
பாலா குழப்பத்துடன் அவனைப் பார்த்தான்.
சரி கேக்கலை.
சொல்லு பாலா! நீ எப்படி யிருக்கே? எங்கே வேலை பாக்கறே?
இன்னும் எனக்கு வேலை கிடைக்கலை விவேக். என்னைத் தவிர எல்லா ஆண்களுக்கும் இந்தியாவுல வேலை கிடைக்கும் விவேக்!
ஷ்! விட்ரா! அப்செட் ஆகக் கூடாது. உனக்கும் நல்லது நடக்கும். அண்ணன் வீட்லதான் இருக்கே?
இதுவரைக்கும் இருந்தேன்!
அப்படீன்னா?
நேற்று நடந்த சம்பவங்களைச் சொல்லத் தொடங்கினான் பாலாஜி.
தாள முடியாம வெளில வந்துட்டேன் விவேக். இந்த நிமிஷம் என் கையிருப்பு மூணு ரூபாய் இருபது காசு! பிரியம் காட்ட நீ இருக்கறதா நம்பறேன். நீயும் வெறுத்துட்டா, வெளியே போயிடறேன்!
என்ன பேசற நீ? முதல்ல உட்காரு! காபி வரவழைக்கறேன்!
நீ ஊருக்குக் கிளம்பிட்டு இருக்கே. நான் வந்தது உனக்கு இடைஞ்சலாப் போச்சா விவேக்?
அதெல்லாம் ஒண்ணுமில்லை நான் இந்த ரூமை வெகேட் பண்றதா தீர்மானிச்சிட்டேன். ஆனா இனிமே அது வேண்டாம். தொடர்ந்து இதுல நீ இரு! பணத்தை நான் கட்டிர்றன்!
அப்ப நீ?
எனக்குக் கல்யாணம் நிச்சயமாகி இருக்கு பாலா!
கங்கிராட்ஸ்! இதை ஏன் முன்னமே சொல்லலை? அதனாலதான் ஊருக்குப் போறியா? எப்பக் கல்யாணம்?
ஒரு மாசம் இருக்கு இன்னமும். நான் லீவு போட்டாச்சு. ஊர்ல கொஞ்சம் வேலையிருக்கு. எனக்கு இப்பக் கல்யாணம் செஞ்சுக்க இஷ்டமில்லை. அப்பா-அம்மாவோட காயங்களுக்கு ஒரு மருந்தா என் கல்யாணம் அமையட்டுமேன்னுதான் சம்மதிச்சேன்.
தங்கச்சிக்குக் கல்யாணம் ஆயாச்சா?
முகம் சிவந்தது விவேக்குக்கு.
ஏண்டா பேசலை?
……
சரி! உனக்கு இஷ்டமில்லைனா சொல்ல வேண்டாம்!"
இல்லை பாலா! உங்கிட்ட சொல்றதுக்கென்ன? வீட்டை விட்டு ஓடிப் போயிட்டா கிரிஜா. கிராமத்துல அப்பாவால தலைநிமிர்ந்து நடக்க முடியலை. தற்கொலை செஞ்சுக்கப் போயிட்டார் அப்பா. நான் தடுத்து நிறுத்திட்டேன். வர வர அப்பா-அம்மாவை வீட்ல தனியா விடவே எனக்கு பயம்மா இருக்கு பாலா. அதனாலதான் கல்யாணத்துக்கு நான் சம்மதிச்சேன். வரப்போற என் மனைவியால குடும்பத்துல ஒரு மாற்றம் உண்டாகட்டுமே!
அப்பா-அம்மா இங்கே வரப் போறாங்களா?
ஆமாம். வீடு கூட நான் பார்த்தாச்சு. அவங்களைக் கூட்டிட்டு வரத்தான் போறேன் இப்ப. எப்படியும் ரூமை நான் காலி பண்ணப்போறேன். இனி வேண்டாம். இதுல நீ இருந்துக்கோ.
எனக்காக செலவு செய்யறது உனக்கு அவசியம்தானா விவேக்?
வாயை மூட்ரா! அது என் விருப்பம்!
வரப்போற உன் மனைவி…
எதுவும் சொல்ல மாட்டா. என் சுதந்தரத்துல ஒரு பெண் தலையிடற அளவுக்கு நான் மௌனமா இருக்க மாட்டேன். புரியுதா?
பாலாஜி மௌனமாக இருந்தான். காபி வந்தது. பருகினார்கள்.
நான் புறப்படறேன் பாலா. ரூம்ல நீ இரு! இந்தா! இதுல முன்னூறு ரூபா இருக்கு! மெஸ் டிக்கெட் இந்த பீரோல இருக்கு. சாப்பாடு கிடைக்கும். பத்து நாள் நிம்மதியா இரு. நான் வந்து பேசிக்கறேன். ஆங்… உனக்கு இன்விடேஷன் தர மறந்துட்டேன் பார்த்தியா?
"எனக்கெதுக்குடா அழைப்பு? நான் உன்னோட இருக்கப் போறவன்தானே?
இருந்தாலும்?
ஒரு அழைப்பிதழை எடுத்து பாலாஜியிடம் தந்தான்.
பொண்ணு இதே ஊர்தானா?
"ம்! போட்டோகூட வச்சிருக்கேன். நீ பார்த்துச் சொல்லேன்.
பீரோவைத் திறந்து புகைப் படத்தை எடுத்தான் விவேக்.
இந்தா புடி. எனக்கு ரயிலுக்கு நேரமாச்சு. மிச்சத்தை வந்து பேசிக்கலாம். வரட்டுமா?
வாசல்வரை வந்து வழியனுப்பினான் பாலாஜி ஆட்டோ பிடித்து விவேக் விலகியதும் உள்ளே