Krishnadaasi
()
About this ebook
Related categories
Reviews for Krishnadaasi
0 ratings0 reviews
Book preview
Krishnadaasi - Indira Soundarrajan
http://www.pustaka.co.in
கிருஷ்ணதாசி
Krishnathaasi
Author:
இந்திரா செளந்தர்ராஜன்
Indira Soundarrajan
For more books
http://www.pustaka.co.in/home/author/indira-soundarajan
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
முன்னுரை
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
அத்தியாயம் 16
அத்தியாயம் 17
அத்தியாயம் 18
அத்தியாயம் 19
அத்தியாயம் 20
அத்தியாயம் 21
அத்தியாயம் 22
அத்தியாயம் 23
அத்தியாயம் 24
அத்தியாயம் 25
முன்னுரை
இ
ந்திரா சௌந்தர்ராஜன் பதினைந்து ஆண்டுகளில் படிப்படியாக வளர்ந்து முன்னணி எழுத்தாளர் வரிசையில் தனக்கென ஓர் இடம் பெற்றுவிட்டார்.
கற்பனை வளத்திலும், கதை சொல்லும்திறத்திலும் பாத்திரப் படைப்பிலும் தம் புதினங்களில் அவர் புதுப்பாதையை வகுத்துக் கொண்டுள்ளார் என்று சொல்லலாம்.
அவர்தம் விடாமுயற்சி அவருக்கு எழுத்துலகில் நல்லதொரு இடத்தைப் பெற்றுத் தந்துள்ளது .
‘கிருஷ்ணதாசி’ – புதினம் ‘தமிழ் அரசி’யில் ஏறத்தாழ ஆறு மாதங்களுக்குத் தொடர்கதையாக வெளிவந்து.
தொடர்கதையைத் தொடங்குவதற்கு முன்பாக கிருஷ்ணதாசி தொடரைப் பற்றி என்னிடம் விவாதித்தார் . கதைச் சுருக்கம் கூறினார்.
கதைச் சுருக்கத்திலிருந்தோ, அல்லது முழுக் கதையைச் சொல்வதிலிருந்தோ அந்தக் கதையின் சிறப்பை முடிவு செய்துவிட முடியாது.
கிருஷ்ணதாசி கதை நடைபெற்ற கால கட்டத்தைப் பற்றியே நான் அவருடன் விவாதித்தேன்.
பெண்களுக்கு இழைக்கப்பட்ட பல கொடுமைகளுள் அவர்களைப் போகப் பொருளாக ஆக்கியது. ஆண்களின் ஆசைக்கும் பசிக்கும் தீர்வு காணுவதற்காக சமுதாயத்தில் அப்படி ஒருவகை இனத்தை மனிதன் படைத்தான் . இதில் கடவுளை வேறு சாட்சிக்கு அழைத்தான்.
சோழ மாமன்னார் இராசராசன் காலத்தில் திருக்கோயிலில் இறைவன் சந்நிதியில் நடனமாட, கோயில் திருப்பணிகளில் பங்கேற்க, கலை அறிவுமிக்க பெண்களைக் காளத்தியிலிருந்து அழைத்து வந்து தஞ்சையில் குடியேற்றி அவர்கள் எந்தவிதத் தொல்லையும் துன்பமுமடையாமல் இருக்க சகலவித வசதிகளையும் செய்து கொடுத்தார். அவர்கள் பணி இறைத்தொண்டே, இறை நினைவே, ‘பதியிலாதார்" என்ற சிறப்புமிக்க பெயரோடு அவர்கள் அழைக்கப் பட்டனர்.
சமூகம் சும்மாயிருக்குமா? கலைத் தொண்டாற்றும் இளம் பெண்களைக் கொஞ்சம் கொஞ்சமாகத் தங்கள் ஆசைக்கு உரியவர்களாக ஆக்கிக்கொள்ள வழி வகை செய்தனர்.
புராண காலத்திலும் விலைமாதர்கள், தாசிகள், அரசவை நாட்டியக் கணிகைகள் என்றெல்லாம் இருந்தனர். ஆனால் தேவதாசிகள் தேவர் அடியார்கள் ‘தேவடியாள்’ களாக இழிபொருளானது முன்னூறு ஆண்டுக்கால கட்டத்தில்தான்.
கங்கிரஸ் ஆட்சிக் காலத்தில், பல சமூக சேவகிகளின் இடையறாத போரட்டத்தினால் ‘தேவதாசி’ முறை ஒழிக்கப்பட்டது . பணவசதி படைத்த பெருந்தனக்காரர்களின் ‘வைப்புகளாக’ இருந்து, சமூகத்தில் அவப்பெயரைச் சுமந்து வந்தவர்களுக்கு விடுதலை கிடைத்தது. அந்த இழிதொழில் சட்ட விரோதமாக்கப் பட்டது.
கதாசிரியர்திரு. இந்திரா சௌந்தாராஜன் தேவதாசிகள் ‘நடமாடிய’ காலகட்டத்தில் நடைபெற்ற சம்பவத்தைத்தான் கதைக் கருவாக எடுத்துக் கொள்ள முடிவு செய்தார். சேற்றில் ஒரு செந்தாமரையைப் படைக்க முன்வந்தார். சிப்பிக்குள் முகத்தை ஒளிவிடச் செய்ய, கதைக் கருவை உருவாக்கினார்.
மேலகுடி ஆண்மகனையும், இழிதொழில் செய்யும் குலத்துதித்த பெண்ணையும் கதைப் பாத்திரமாக்கி எழுதப்போவதாக அவர் கூறியவுடன் கூர்மையான கத்திமுனையில் நடக்கப்போகிறாரே, வென்றுவிடுவார என்ற அச்சம் எனக்கிருந்தது. ஆனால், கதையில், கற்பனையில் எள்ளளவும் விரசமில்லாமல் கதையை நடத்திச் சென்றுவிட்டார்.
புராணக்கதை சொல்லும் தீட்சதர், அவர் மகன், வேணி, மீனாட்சி, சின்னைய்யா, மனோன்மணி, கோபாலன், ராஜம், ஜம்புலிங்கம் - போன்ற பல்வேறு குணங்களையுடை பாத்திரங்களைத் தன் பேனாத் தூரிகையால் ஓவியமாக்கி இந்தப் புதினத்திற்குத் தனிப் பெருமை சேர்த்துவிட்டார்.
கதையைச் சொல்லி வரும் முறை, பாத்திர வர்ணனை, திருப்பங்கள், முடிவு என்று – ஒரு சிறந்த புதினத்திற்குரிய அத்தனை தகுதிகளும் ‘கிருஷ்ண தாசிக்’ கதையில் இருக்கின்றன.
ஓவ்வொரு அத்தியாயத்தின் தலைப்பிலும் புதிய கவிதை ஒன்றைத் தேடி அளித்திருக்கும் ஆசிரியரின் ஆற்றலைப் புகழ வேண்டும் உதாரணமாக:
"உலகம் முழுவதும்
கடல் நீர்தான்!
முக்கால் பாகம் தான் - நம்
கண்களில் தெரிகிறது,
கால்பாகம் - நம்
கண்களில் வழிகிறது !
உலகம் முழுவதும்
கடல் நீர்தான்!
* * * *
"ஆதியிலே ஓர் ஆணும் பெண்ணும்
ஆடிய ஆட்டமிது!
அவன் அவளுக்குள்
ஒளிந்து கொண்டான் - அவள்
அவனுக்குள் ஒளிந்து கொண்டாள்!
அவனுக்கவளோ – அவளுக்கவனோ
அகப்படவே இல்லை!
ஆட்டம் இன்னும் தொடர்கிறது
அந்த ஆட்டம் முடியவில்லை!...."
இதுபோன்று அற்புதமான கவிதைகள்.
எளிய நடை, அளவான வர்ணனை, சிந்திக்க வைக்கும் சம்பவங்கள் - இவற்றையெல்லாம் கொண்ட ‘கிருஷ்ணதாசி’ அந்தக் காலத்துப் பிரச்னையை இநதத் தலைமுறைக்குத் தெரிவிக்கும் சிறந்த புதினம்.
- விக்கிரமன்
கிருஷ்ணதாசி
‘பஞ்சுப் பொதிகளைப் பத்திரப்டுத்திக் கொண்டியிருக்கிறது அணில்.
கந்தல் துணிகளைக் கண்டால், விட மறுக்கிறது காகம். சணல் பிரிகளைத் தூக்கிவந்து ஒரு பந்தாக்கிவிட்டது சிட்டுக்குருவி.
இடம் தேடிக்கொண்டிருக்கிறது எங்கள் வீட்டுப் பூனை ….(குட்டி போட).
ஆஸ்பத்திரி வாசலில் மட்டும் அபார்ஷனுக்காக வரிசையில் அன்பே உருவான அம்மாக்கள்!’
‘மறுபடியும்’ நூலில்
பத்மாவதி தாயுமானவன்
1
முதல் அத்தியாயம்
ஆ
டி பதினெட்டு!
காவேரியில் புதிய வெள்ளம், ஒரு ராஜ புரவியைப் போல் பாய்ந்து வரும் வேகத்திற்கு, நாமக்கல் வேலூரின் அகண்ட மணல்வெளிகளால் கூட ஈடு கொடுக்க முடியவில்லை – கரையை மீறி, பக்கத்து வாழைத் தோட்டம் வரை விஸ்தரிப்படைந்து சுழன்று அது ஓடும் அழகை, ஊரே பாலத்தின்மேல் நின்று, பார்த்து ரசிக்கிறது!
-நொப்பும் நுரையுமான நீர்த்தாரைகள்!
-சமுத்தரத்துக்குக் கால் முளைத்து, அது ஊரைச் சுற்றிப் பார்க்க ஒடிவந்தால் எப்படி இருக்கும்? – அப்படி இருக்கிறது. ஏக நாட்களுக்குப் பிறது விஸ்வநாதபுரத்து ஜனங்களின் முகங்களில் சந்தோஷ வண்ணங்கள்.
- பரஸ்பரத்தில் உற்சாகமான சிலாகிப்புகள்.
இந்த தரக்க கரும்பு முப்போகம் தாண்டும்.
ஏன், நெல்லு தாண்டாதோ? ஆத்தா பொன்னியை இப்படி அமக்களமா பார்த்து எத்தினி வருஷமாயிருச்சு? இந்த தரக்கையாச்சும் நாங்க ஏத்தி மிதக்க விடற மண்விளக்கு, அணையாம முக்கம்பு போய்ச் சேரணும் வெள்ளாமையும் வீடு வந்து சேரணும்.
சர்க்கரைச் செட்டியார் ஆயிரம் விளக்கு போடப் பேறாராம்ல? ஆறே தீபஜோதியோட அசைஞ்சு ஒடப்போவது. காவேரி ஆத்தாளை இப்படி அலையும் தண்ணியுமா, எண்ணெயும் தீபமுமா பார்த்து எத்தினி வருஷமாச்சு…?
தீபக் கூட்டம் பார்க்க என் மாமன் மகன் மெட்ராஸ்ல இருந்து வந்திருக்கான். ஆறு மணிக்கே பாலத்துமேல நிக்கறதுக்குப் போய், இடத்தை ரிசர்வ் பண்ணாட்டி அவ்ளோதான்…
அக்கம் பக்கம் நாமக்கல், ஜோடர்பாளையம், கரூர், குஜிலயம்பாறையிலிருந்து எல்லாம், இந்த தபா ஆடிக்கூட்டம் நெட்டிமுறிக்கத் தொடங்கிருச்சு.
தங்கக் குடத்துக்குப் பொட்டு வெச்ச மாதிரி, நம்ம ஊர் ஜலபாணேஸ்வரர் கோயில்ல, தீட்சதர் சாமியோட கதாகாலட்சேபம் வேற . இந்த தபா சாமியோட அவர் மகன் சுந்தரேசனும், காலட்சேபம் செய்யப்போகுதாம்ல?
வாஸ்தவம்தான்….!
காவிரியின் கரை மீறிய விளிம்பெல்லாம் ஜன நடமாட்டம் எங்கும் தலைமுழுக்கு போட்ட ஈர தேகங்கள்!
சாயங்காலச் சூரியன், அதோ காவிரிநீர்ப் படுகையைத் தங்கத் தகடாக்கியே தீருவது என்று ஆனமட்டும் போராடிக் கொண்டிருக்கிறான்.
கரையோர விஸ்வநாதபுரத்துத் தென்னந் தலைகளில், காற்றின் கோதல் விளையாட்டு வேறு.
ரசிக்கத் தெரிந்தவர்களுக்குத்தான் என்னமாய் ஒரு ரசமான காட்சி!
ஜலபாணேங்வரர் கோயில் மணி ஆமோதிப்பாய் இழைகிறது. ஏழு மணி வாக்கில் காவிரியில் சுமங்கலிப் பெண்கள் விடும் தீபத் தெப்பம்.
அதன்பிறகு, எட்டு எட்டரை வாக்கில் கோயிலில் ‘உபன்யாச சக்கரவர்த்தி, ‘பிரவசன கேசரி‘ என்றெல்லாம் பட்டங்களைக் குவித்திருக்கும் கணபதி ராமதீட்சதரின் திகட்டாத உபன்யாசம் கூட. இன்று அவரது ஒரே மகன் சுந்தரேசனும் சேர்ந்து கொள்ளவிருக்கிறான். அதிசயமான ஒரு காட்சி.
தீட்சதர் இந்த ஆடி பதினெட்டாம் தேதி மட்டும் வேறு எங்கும் உபன்யாசத்திற்கு ஒப்புக் கொண்டதாக சரித்திரமில்லை.
பிறந்து வளர்ந்து விஸ்வநாதபுரத்து மண்ணில் தன் பிரவசனத்திற்காகவே அந்தத் தேதியை ஒதுக்கிவிட்டார்.
தெய்வ ஸ்வரூபியான தீட்சதருக்கு இந்தியா முழுக்க ரசிகர்கள், பக்தர்கள், தொண்டர்கள், சிஷ்யர்கள் என்று பலதரப்பட்டோர் உண்டு.
அவர்களில், விஸ்வநாதபுரத்துச் சுற்று வட்டாரங்களுக்கு மட்டும் ஆடி பதினெட்டுதான் ஒரு மறக்க முடியாத நாள்.
மாலை ஆறு மணிக்கே ஜலபாணேஸ்வரர் கோயிலுக்கு வந்துவிடும் தீட்சதரைக் குடும்பம் குடும்பமாக வந்து பார்த்து, குசலம் விசாரித்து விழுந்து சேவித்து ஆசி பெறுவதிலிருந்து, அந்யோன்யத்தை நிலை நிறுத்தி கொள்வது வரை எல்லாமே, அவர்களைப் பொறுத்து அப்பொழுதே நடக்கும் .
மற்ற நாட்களில் தீட்சதரை உள்ளுரில் பார்ப்பதே அபூர்வம், அத்தனை ‘பிஸி’யான மனிதர். தீட்சதர் உபன்யாசம் என்றால், நீதிபதிகளே முன் வரிசையில் அமர்ந்து கேட்பது என்பது சாதாரண விஷயம்.
சுரஸ்வதி தன் பத்மபீடத்தை தீட்சதர் நாவில் அமைத்துள்ளதாக, பல பத்திரிகைள் பாராட்டியுள்ளதும் மிகையில்லாத உண்மை.
இதனால் எல்லாம், தீட்சதருக்கு இந்த தேசத்தில் ஒரு கௌரமான பெயரும் புகழும் இருப்பது ஈஸ்வரக்ருபை.
இதை தீட்சதர் அப்படித்தான் சொல்வார். அந்தக்ருபை அவருக்கு மட்டுமில்லாமல், அவரது ஒரே பிள்ளையான சுந்தரேசனுக்கும் இருப்பதுதான் ஆச்சரியம்!
இந்த மைக்கேல் ஜாக்சன் யுகத்திலும் இருபத்திநாலு வயசு சுந்தரேசன் திருப்புகழை அப்படியே ராகதாளத்தோடு பாடிச் சொல்வதை என்னென்று சொல்ல?
தீட்சதரின் ஐம்பது வயதுச் சாதனையை சுந்தரேசன் இருபத்தி ஐந்து வயதிலேயே முறியடித்து விடுவான் - என்று மக்கள் சொல்லத் தொடங்கிவிட்டனர்.
தீட்சதருக்கும் இதனால் மகாபெருமை . ஆனால் தன் மகன் சி.ஏ. எம்.பி.ஏ என்று படித்து, தனக்குச் சுட்டுப் போட்டாலும் வராத கணக்குப் படிப்பில், அவனைப் புலியாக்கிப் பார்க்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார்.
படிக்கிற வயசுல உனக்கெதுக்கு இந்த உபன்யாச ஆசை? முதல்ல பட்டம். அப்புறம்தான் பிரவசனம்
என்று அவனைத் தன் அன்பு வட்டத்தில் அடைத்தும் வைத்திருக்கிறார்.
வரிசையாய்ப் பெண்கள். ஒருவரல்ல இருவரல்ல… ஆறு பேர்! – ஆறும் பெண்ணாகிப் போக, ஏழாவதாவது ஆணாக இருக்க வேண்டுமே என்று தீட்சதரும் அவரது சுகதர்மிணி ராஜமும் தவமிருந்து பெற்ற பிள்ளையாயிற்றே சுந்தரேசன்!
அவர்கள் எதிர்பார்ப்பைப் பொய்யாக்காமல் சுந்தரேசனும் எம்.காம் வரை படித்துவிட்டு, ஆடிட்டர் ஒருவரிடம் சி.ஏ. படிப்புக்காக பயிற்சியும் பெற்று வருகிறான்.
அந்தப் பயிற்சியோடு, உபன்யாசப் பயிற்சிக்கும் இன்று அவனுக்கொரு சந்தர்ப்பம்.
அதோ, சுந்தரேசன்…! பட்டு வேட்டியும் ஜிப்பாவும் தளதளக்க, படிய வாரிய தலையும் அழுந்தப் பூசிய திருநீறுமாக, பக்திப் பழமாகத் தெரிகிறான்! - இரட்டைச் சுடர் தங்கக் குத்துவிளக்காக, முகத்தில் தேஜஸ்!
சம வயதுக்காரர்கள் கை குலுக்க, பெரியோர்கள் ஆசீர்வதிக்க, உபன்யாச நேரத்தை நோக்கி கடிகார முட்கள் வேகமாக அசைந்து கொண்டிருக்கின்றன.
அவனுக்கு அருகில் பெருமிதத்தோடு தெரிகிறார் கோபாலன் - சொந்தத் தாய் மாமன்!
ஆகாயத்தில் மிதக்கும் பாவனை அவரிடம். சுந்தரேசனைப் பார்த்துப் பார்த்து தீட்சதரை விட அதிகம் பூரிப்பவராக அவர் இருப்பதைக் கூட்டத்தில்கூட சிலர் ஆச்சரியமாக உணர்கின்றனர்.
காலட்சேபம் தொடங்க நாழியாகுமோ?
காவேரிக் கூட்டம் தீபத் தெப்பத்தை முடிச்சிண்டு வர வேண்டாமா?
கோபாலனின் கருத்துக்கு இசைவான சூழ்நிலையில் கோவிலை ஒட்டி வளைந்து திரும்பும் காவேரி.
படித்துறையைச் சுமங்கலிப் பெண்களின் கூட்டம் ஆக்கிரமித்துக்கொண்டு, ஏற்றிய தீபங்களைப் பக்குவமாகக் காவிரியில் நீந்த விட்டுக் கை கூப்பியிருந்தது.
அகண்ட தாமரை இலையில் எண்ணெய் தடவி, அதன் மேல ஆறு ஆறாய் அகல் விளக்கேற்றி இடுப்பளவு நீரில் நின்று, மெல்ல அந்தத் தீபக் கூட்டத்தை மிதக்க விட்டு வழி அனுப்ப – அது ஆடி அசைந்து பாலத்தைக் கடப்பதைப் பார்க்க, பாலத்தின் மேல் கூட்டமான கூட்டம்.
சுமங்கலிங்களோட தாலி நிலைக்கவும், கன்னிப் பெண்களுக்கு நல்ல இடத்தில் கல்யாணம் நடக்கவும், இந்த பதினெட்டாம் பெருக்குல தீபம் போட்டா, காவேரி ஆத்தா கருணையால எல்லாம் மங்களமா நடக்கும்….
அறுபதைக் கடந்த ஒரு சுமங்கலிக் கிழவி தன் பேத்தியோடு வந்து தீபமேற்றி வழிபட்டுவிட்டு பேசிய பேச்சை, கூட்டம் உணர்ச்சியோடு கேட்டுக்கொண்டது. குலவை போட்டுக் கரையில் ஏற்றிய குத்து விளக்கைச் சுற்றி வந்து, கும்மியெல்லாம் கொட்டியது.
கும்மிப் பாட்டில் காவேரியின் பெருமை….
"ஆடிப் பெருக்கெடுத்து ஓடி வரும் காவேரி….
பாடிக் களிக்கும் எங்கள் பருவப் பெண்டுகளை
நாடி வந்து காப்பாத்து – தாலிக்கொடி
தந்த ராசாக்கள் உசுருக்கு
கோடி நான் ஜீவிதத்தைக் குறையாம நீ வழங்கு..!"
பாட்டுக்கு ஏற்ற ஆட்டம் - ஆட்டத்திற்குகேற்ற பாடல் என்று கலகலத்துக் கிடக்கும் அந்த இடத்தில், தீடீரென்று சலசலப்பு!
படித்துறையை ஒட்டிய தோப்புச் சாலைமேல், வில்வண்டி ஒன்று ஜல்ஜல் என்று சப்தம் தேய வந்து நிற்க, கூட்டத்தின் கவனம், வந்து நிற்கும் வில்வண்டியை நோக்கிச் செல்ல – வண்டியிலிருந்து காவிப் புடவை தரித்த ஒரு பெண் தயங்கித் தயங்கி இறங்குகிறாள்….!
அடே, வேகமா இறங்கும்மா. வீசற காத்து, பாயற தண்ணி, மேகம் மிதக்கிற இந்த ஆகாயமெல்லாம் எல்லார்க்கும் பொதுவான விஷயம்மா. இங்க வந்து போக இப்படித் தயங்கறியே?
-ஒர் இளவயதுப் பெண் அவளைப் பின் தொடர்ந்து இறங்கியபடி பேசும் பேச்சு எல்லோர் காதிலும் விழுகிறது. அவர்கள் முகத்தில் தீப்பிடித்தாற்போல் துளி திகைப்பு.
ஆருடி அது? விராலிமலைக்காரி கிருஷ்ணவேணியா, அவ?
அவளேதான். காவிப்புடவை கட்டுனாப்பல, தாசி, கற்புக்கரசியாயிடலாம்னு நெனைச்சிட்டா போல இருக்கு. இவளெல்லாம் எதுக்கு ஆடிப்பெருக்குக்கு ஆத்துக்கு வரா?
சத்தம் போட்டுப் பேசாதடி… இவகிட்ட வாயைக் கொடுத்த மீளவே முடியாது. அதுலையும் அவ மவ – மீனாட்சி இருக்காளே, வெடாசுக்காரி! அப்பம் பேரு தெரியாதப்பவே இவளுக்கு இந்த ராங்கி! சரி… சரி… நகரு, வந்துட்டா வந்துட்டா….
-கூட்டத்தின் விமர்சனத்தில் சிக்கிவிட்ட அந்த இரண்டு பேரும் கைவசம் தாமரை இலைத் தீபத்தட்டுடன் ஜில்லிடும் நீர்ப்பரப்பில் காலை வைத்து நின்றனர்.
மெள்ள காவிப் புடவையின் தலை மறைப்பைத் தளர்த்தி நிமிர்ந்து, ஆற்றைப் பார்க்கிறாள் - விராலி மலைக்காரி என்று கூட்டத்தால் வர்ணிக்கப்பட்ட கிருஷ்ணவேணி.
அடேயப்பா….!
எத்தனை வருடமாகி விட்டது இந்தக் கோலத்தில் காவிரியைப் பார்த்து?
அவளுக்குள் வருத்தக் கொப்பளிப்பு….
உள்ளுரிலேயே இருந்தாலும் சகஜமாக வந்து போக இடம் இல்லாத தன் நிலைக்காக வருந்துவதா? இல்லை. வெளியேயே போகக் கூடாது என்று வைராக்கியமாக இது நாள் வரை இருந்துவிட்ட முடிவுக்கு வருந்துவதா? அனைத்தையும் தகர்த்துவிட்டு ‘நீ வந்துதான் தீரவேண்டும்‘ என்று தன்னை இழுத்து வந்த தன் மகளின் துணிவான முடிவுக்காக வருந்துவதா….?
அவளுக்குள் காவிரியின் பெருக்கைவிட, அதிகமான சலனப் பெருக்கு . மீன்கள் காலைக் கடிக்கத் தொடங்கிவிட்டன. வெளியில் மனித உதடுகள்.
இவளோ தாசி…! எந்தப் புருஷனுக்குன்னு இவ தீபம் போடுவா?
அது சரி, இவ மக எதுக்கு தீபம் போடறா….? என்னமோ ஜாதகம் பார்த்து, நாள் நட்சத்திரம் பார்த்து, குலம் கோத்திரமெல்லாம் பார்த்து, நல்ல மாப்பிள்ளையைப் பிடிச்சு தாலிகட்டிக்க போறவளாட்டம்ல தீபம் போடறா. ஆசை நாயகியா போகப் போறவளுக்கெல்லாம் தீபம் போட ஆசை வந்தால், அப்புறம் இந்தத் தீபத்துக்கெல்லாம் ஏதுடி மதிப்பு?
- உரக்கவே சிலர் பேசுவது அவர்கள் இருவரின் காதுகளிலும் விழுகிறது! - இதனால் கிருஷ்ணவேணியின் கண்களில் நீர் கோத்தது. அதைப் பார்த்த அவர்கள் மகள் மீனாட்சியின் முகத்தில் கோபத்தின் வியாபிப்பு. பதிலுக்குக் கொட்டித் தீர்க்கும் ஆவேசம் நரம்புகளில் நர்த்தன மிடுகிறது.
ஆனாலும், வீட்டை விட்டுக் கிளம்பும்போதே யாரிடமும் சண்டை போடக்கூடாது என்று அம்மா வாங்கிய சத்தியம், அசுரத்தனமாக மறிக்கிறது. மளமளவென்று தீபத்தை மிதக்க விட்டவள், தாயின் கையைப் பிடித்து இழுத்தபடி கரை ஏறி, வில்வண்டியை நெருங்குகிறாள். வண்டிக்காரன் சின்னையா இருவரையும் வெறிக்கிறான் .
அங்கிருந்தபடியே ஓடும் காவிரியைப் பார்க்கிறாள் மீனாட்சி. மிதக்கும் தீபத் தெப்பங்களோடு, மெல்லிய இருளில் காவிரி ரம்மியமாகத் தெரிகிறாள்! ஜலபாணேஸ்வரர் ஆலயத்தில் தொடங்கிவிட்ட தீட்சதரின் உபன்யாசக் குரல் ஒலபெருக்கி மூலமாகக் காதில் வந்து விழுகிறது.
தெய்வீகமான அந்தச் சூழ்நிலையை மீறி மனத்தில் குதர்க்கமான கோபச் சிந்தனைகள்.
ஏம்மா… இந்தக் காவேரி ஒரு புண்ணிய நதி. இதுல குளிச்சா நம்ம பாவமெல்லாம் போயிடும்னு சாஸ்திரம் சொல்லுதே….? நாம பண்ணின பாவம் இந்தக் காவிரிக்கே கடுக்கா கொடுத்திடிச்சோ?
நீ இப்படியெல்லாம் பேசுவேன்னு தெரிஞ்சுதான், நான் இங்க வரமாட்டேன்னு சொன்னேன். நீ கேக்கலை….
வாஸ்தவம் தாம்மா…. நான் இன்னும் அந்த முக்கியமான கேள்வியை உன்கிட்ட கேக்கலைதான்…
கோபம் குறையாமல் பேசத் தொடங்கிவிட்டாள் மீனாட்சி.
மீனாட்சி, நீ என்ன சொலறே?
என்னை ஏம்மா பெத்தே?
"இதை